إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالنَّصَارَى وَالصَّابِئِينَ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (62) وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ (63) ثُمَّ تَوَلَّيْتُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَكُنْتُمْ مِنَ الْخَاسِرِينَ (64) وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ (65) فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ (66) وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ (67) قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا هِيَ قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَا فَارِضٌ وَلَا بِكْرٌ عَوَانٌ بَيْنَ ذَلِكَ فَافْعَلُوا مَا تُؤْمَرُونَ (68) قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا لَوْنُهَا قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ صَفْرَاءُ فَاقِعٌ لَوْنُهَا تَسُرُّ النَّاظِرِينَ (69)
முஸ்லிம்களே , மேற்கண்ட வசனங்களில் இஸ்ரவேலர்கள் தமது தவறான செயல் பாடுகளினால் இறை முனிவுக்கு ஆளானார்கள் என்பதை எடுத்துக்கூறப்பட்டுள்ளது , அது அவர்களின் செயல்களால் அவர்கள் தேடிக்கொண்ட சாபமே தவிர அவர்கள் யூதர்கள் என்பதாலோ, இஸ்ராயீலின் சந்ததியினர்கள் என்பதாலோ இல்லை , எனவே உலக மனிதர்கள் யாராக இருந்தாலும் சரி , செயல்களில் பழுது இருக்குமானால் அவர்களுக்கும் யூதர்களுக்கு ஏற்பட்ட அதே சாபம்தான் ஏற்படும் , இதே விதிதான் இறைவனின் அன்பை பெறுவதற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது , நிச்சயமாக முஸ்லிம்களானாலும், யூதர்களானாலும், கிறிஸ்தவர்களானாலும், அல்லது சாயிபீன் எனும் கூட்டத்தினர்களானாலும், உலகில் வேறு எந்த இனத்தவரை , ஜாதியினரை , நாட்டவரை சார்ந்தவர்களானாலும் எவராக இருப்பினும் அவர்கள் அல்லாஹ்வைக் கொண்டும், மறுமை நாளைக் கொண்டும் , நம்பிக்கை கொள்ள வேண்டிய இன்னும் பிற அம்சங்களான வேதங்கள், தூதர்கள், மலக்குகள், விதி போன்ற யாவற்றையும் உண்மையான உள்ளத்துடன் முறையாக விசுவாசம் கொண்டு , அந்நம்பிக்கையின் அடிப்படையில் நற்காரியங்கள் புரிந்து வாழ்ந்தால் அவர்களே இறைவனின் அருளுக்கும் , கருணைக்கும் தகுதி பெற்றவர்கள் , அவர்களுக்கு மறு உலகில் எவ்வித பயமும் இருக்காது. அவர்கள் அங்கே நிம்மதியாக இருப்பார்கள். அங்கே அவர்கள் எவ்வித கவலையும் கொண்டிருக்க மாட்டார்கள். சந்தோசமாக இருப்பார்கள். அவர்களுக்கு நிரந்தரமான சுவன வாழ்வு உண்டு ,
இங்கே யூதர்கள், கிறிஸ்தவர்களுடன் முஸ்லிகளையும் இணைத்து குறிப்பிட்டிருப்பது நமக்கெல்லாம் ஓர் பெரும் படிப்பினையும், எச்சரிக்கையுமாகும். நாமெல்லாம் முஸ்லிம்கள் , நமக்கே சுவனம் என வீண் கற்பனை கனவில் மிதக்காமல் , தனது நம்பிக்கையை சரி செய்து கொண்டும் , நற்கருமங்கள் புரிவதில் கவனம் செலுத்திக்கொண்டும் இருக்க வேண்டும். அல்லாஹ்விடத்தில் பெயருக்கு மதிப்பில்லை , செயலுக்குத்தான் மதிப்பு என்ற இந்த உண்மையை நாம் விளங்கி வாழ இறைவன் தௌபீக் செய்வானாக – ஆமீன்.
அல்குர்ஆன் முற்காலத்து மனிதர்களின் வரலாறுகளை கூறும் போது இடையிடையே மனிதர்களுக்கு உபதேசத்தையும் நினைவூட்டிக்கொண்டே வரும் , இது அல்குர்ஆன் கடைபிடிக்கும் ஒரு நடையாகும் , இங்கேயும் இஸ்ரவேலர்கள் பற்றி கூறிக்கொண்டு வரும் போது சற்று அந்த பேச்சை நிறுத்தி வைத்து விட்டு இடையில் உபதேசம் செய்தது , இப்போது மீண்டும் இஸ்ரவேலர்கள் குறித்து தனது பேச்சை தொடர்கிறது ,
இஸ்ராயீலின் சந்ததியினர்களே! நீங்கள் அந்த தருணத்தையும் நன்கு சிந்தித்து பாருங்கள் , அல்லாஹ்வுடைய வேதம் தவ்ராத் உங்களுக்கு எத்தகைய தருணத்தில் அருளப்பட்டது ? பிர்அவ்னுடைய கொடுமைகளிலிருந்து நீங்கள் விடுதலைப் பெற்ற பின்பு உங்களின் வாழ்வை சிறக்கச் செய்ய அல்லாஹ்வின் வழி காட்டுதல்கள் அடங்கிய ஓர் உயர்வான வேதம் உங்களுக்கு மிகவும் தேவையாக இருந்தது, அதை பெறுவதற்காக உங்களின் தூதர் மூஸா(அலை) நாற்பது நாட்கள் வரை நோன்பிருந்து வணக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள் , அதன் பின்னர் தான் தவ்ராத் வேதம் அருளப்பட்டது. அத்தகைய வேதத்தை உங்களிடம் மூஸா (அலை) கொண்டு வந்த போது அதை போற்றியிருக்கவும் , கண்ணியம் செய்யவும் கடமைப்பட்ட நீங்கள் அவ்வாறு செய்யாமல் சாக்கு போக்குகளை கூறி அதை புறக்கணிப்பதற்கு வழி பார்த்தீர்களே , அது எவ்வளவு அபத்தமானதும், தவறானதுமாகும்? ஆதலால் நாம், தவ்ராத் வேதத்தின் கட்டளைகளை ஏற்று நடக்க உங்களை வலியுறுத்தி உங்களிடம் பலமான உறுதிமொழி வாங்கினோம் , அதற்காக தூர் எனும் மலையையே அதன் இடத்திலிருந்து பெயர்த்து உங்களின் தலைகளுக்கு மேல் தூக்கி நிறுத்தினோமே அது நினைவிருக்கிறதா ? நாம் உங்களிடம் பெற்ற உறுதி மொழிகள் என்னென்ன ? . நீங்கள் யாவரும் நாம் உங்களுக்கு அருளிய தவ்ராத் வேதத்தை ஏற்றுக்கொண்டு , அதன் கட்டளைகளை முறையாக நடை முறைப்படுத்துவதன் மூலம் மிக வலுவாக அதை பிடித்துக் கொள்ள வேண்டும் . மேலும் அவ்வேதத்திலுள்ள கருத்துக்களை நன்கு சிந்தித்து பாடம் பெற வேண்டும் . இவ்வாறு நீங்கள் செய்வீர்களானால் நீங்கள் இறைவனை அஞ்சுபவர்களாக, அவனுடைய தண்டனையை விட்டும் தப்பியவர்களாக ஆவீர்கள். இந்த வாக்குறுதி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது ? அம்மக்களிடம் சாதாரணமாக உறுதிமொழி வாங்காமல் ஒர் மலையையே பெயர்த்து அதை தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்து இவ்வேதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையேல் இம்மலை உங்களின் மீது விழுந்து அழிந்து போவீர்கள் என மறக்க முடியாத ஓர் நிகழ்வை நடத்திக் காட்டி அவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குறுதி அது , சகல சக்தி படைத்த அல்லாஹ்வுக்கு அவர்கள் கொடுத்த வாக்குறுதி அது , இத்தனை வலுவான வாக்குறுதியை பாதுகாப்பதில் அவர்கள் எந்தளவு ஈடுபாடும், முனைப்பும் காட்டியிருக்க வேண்டும் ? ஆனால் அவ்வாறு நீங்கள் நடந்து கொள்ள வில்லை , ஆம்! சிறிது காலம் தவ்ராத்தை எடுத்து நடந்தீர்கள் , அதன் பின்னர் பழைய படி அதனை புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் , அதன் சட்ட திட்டங்களை ஏற்று நடப்பது ஒரு புறம் இருக்கட்டும், அல்லாஹ் அருளிய மேலான அவ்வேதத்தை எவ்வித கலப்புமில்லாமல் பாதுகாக்க கூட உங்களால் முடியவில்லை , அதனால் அல்லாஹ்வின் வேதம் தன் அசல் வடிவத்தையே இழந்து பலரின் கையாடலுக்கு உட்பட்டு போனது, இன்றும் தவ்ராத் வேதம் உலகில் இருக்கிறது , ஆனால் மாற்றப்பட்ட வடிவத்தில். அதனையும் கூட எத்தனை இஸ்ரவேலர்கள் எடுத்து ஒழுகுகிறார்கள் ? மாற்றப்பட்டு போன தவ்ராத்திலும் கூட நம்முடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி தூதர், அவர்களை நபியாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தும் சான்றுகள் காணக்கிடைக்கின்றன. அதைக் கண்டு முஹம்மது (ஸல்) அவர்கள் மீது ஈமான் கொண்டு , உண்மையான முஸ்லிம்களாக எத்தனை யூதர்கள் மாறிவிட்டார்கள் ? என்ற வினாவுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் . நபி ஸல் அவர்கள் உலகில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த பொற்காலத்திலும் கூட அக்காலத்து யூதர்கள் நபியவர்களை நம்பாமல் சிலர் நயவஞ்சகத்தனமான செயல்களில் ஈடுபட்டார்கள் என்பது மட்டுமின்றி , நபியவர்களையே கொலை செய்ய துணிந்தார்கள் என்பதுதான் வரலாறு . இவ்வாறு தவ்ராத்தை எடுத்து நடப்பதாக அல்லாஹ்விடத்தில் அளித்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டதால் அல்லாஹ்வின் தண்டனைக்கு உரித்தானவர்களாக நீங்கள் முன்னமே ஆகிவிட்டீர்கள். இருப்பினும் அல்லாஹ்வுடைய அருளும் அவனுடைய கருணையும் உங்கள் மீது இல்லாது போயிருந்தால் நீங்கள் அல்லாஹ்வுடைய வேதனையை அடைந்து மறுமையில் நிரந்தர கைசேதத்திற்கும், நஷ்டத்திற்கும் உள்ளாகியிருப்பீர்கள். அல்லாஹ்வுடைய அருள் உங்கள் மீது இருப்பதால் தான் தந்த உறுதி மொழிக்கு நீங்கள் இந்தளவு மாறு செய்தும் , அல்லாஹ் உங்கள் மீது உடனடியாக எவ்வித வேதனையும் இறக்காமல் நீங்கள் இனியாவது திருந்துவீர்கள் என்று உங்களுக்கு சந்தர்ப்பத்தை தந்து வைத்துள்ளான். அல்லாஹ் அவனின் வாக்குறுதிகளுக்கு மாறு செய்வதை விட்டும் தற்காத்து அவனின் கோபத்திலிருந்து நம் அனைவரையும் பாதுகாத்திடுவானாக – ஆமீன்!
இங்கு முஸ்லிம்களாகிய நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் , இஸ்ரவேலர்கள் தமது வேதத்தை பற்றிய வாக்குறுதியை மீறியது போன்றுதான் நாம், நம் வேதமான குர்ஆனைப் பற்றிய வாக்குறுதியை மீறிக்கொண்டு வாழ்ந்து வருகிறோம் , குர்ஆனை இறுக்கமாக பற்றிப் பிடித்து அதன் கடமைகளையும் , அது கற்றுத்தரும் ஒழுக்கங்களையும் வாழ்வில் கடைபிடிப்பது , மேலும் அதை சிந்தித்து படிப்பினை பெறுவது , அதன் மூலம் தன் வாழ்வை பயபக்தி நிறைந்ததாக ஆக்கிக்கொள்ள முயல்வது ஆகியவை நாம் குர்ஆனுக்கு செய்ய வேண்டிய கடமை என்பதை மறந்து விடக்கூடாது .
வாக்குறுதிக்கு மாறு செய்தும் அல்லாஹ் அவர்களை தண்டிக்காமல் விட்டது அவனின் கருணை, மனிதர்களின் பாவங்களுக்கு அல்லாஹ் தண்டிக்க ஆரம்பித்து விட்டால் அந்த தண்டனையும் கடுமையாக இருக்கும் என்பதற்கு பின் வரும் வசனம் சான்றாகும்.
இஸ்ரவேலர்களே! உங்களுக்கு உங்களின் மூதாதையர்களில் நிகழ்ந்த பின் வரும் சம்பவத்தைப் பற்றி நன்கு தெரியும் , இச்சம்பவம் பற்றிய குறிப்புகள் அவர்களின் நூல்களில் காணக் கிடைக்கின்றன. மேலும் அவர்களின் முன்னோர்கள் வாயிலாகவும் அவர்கள் இதைக் கேட்டு தெரிந்து வைத்திருந்தார்கள். அச்சம்பவம் சனிக்கிழமையில் மீன் ஏதும் பிடிக்கக் கூடாது என்ற அல்லாஹ்வின் கட்டளையில் வரம்பு மீறி நடந்தார்களே அத்தகையவர்களைப் பற்றியதாகும். வாரத்தில் ஒரு நாள் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை வணக்கத்திற்காக உள்ளதைப் போல , ஜும்ஆவிற்கு பாங்கு கூறப்பட்டு விட்டால் வியாபாரம் செய்வது ஹராமாகி விடுவதைப்போல யூதர்களுக்கு சனிக்கிழமை முழுவதும் அவ்வாறு தரப்பட்டிருந்தது. அவர்களுக்கு சனிக்கிழமை அல்லாஹ்வின் வணக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நாளாகும் , வாரத்தின் ஆறு நாட்கள் தம் தொழில்களில் ஈடுபட்டுக் கொள்ளலாம். சனிக்கிழமை மட்டும் எந்த தொழிலிலும் ஈடுபடக் கூடாது. வணக்கத்தில் மட்டுமே கழிக்க வேண்டும். இது அவர்களுக்கு அல்லாஹ் இட்ட கட்டளையாகும். அம்மக்கள் மீன் பிடித் தொழில் செய்பவர்களாக இருந்தார்கள் . அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு நேரடியாக மாறு செய்யாமல் தந்திரமாக குறுக்கு வழியில் சென்று மாறு புரிந்தனர். சனிக்கிழமை மீன் பிடிக்கச் செல்லாமல் கடலை ஒட்டி வாய்க்கால்கள் போல் அமைத்து கொள்வர் , அவற்றில் கடல் அலைகள் மீன்களை தள்ளிவிடும் , அம்மீன்களை இவர்கள் ஞாயிற்றுக் கிழமை சென்று பிடித்து வருவார்கள். இவ்வாறு தந்திரமாக அல்லாஹ்வின் கட்டளையை மீறினார்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் அத்து மீறள்கள் எல்லை மீறி போய்விட்ட போது அல்லாஹ்வின் கோபத்திற்கு அவர்கள் ஆளானார்கள். ஆதலால் நாம் அவர்களை நோக்கி கூறினோம் நீங்கள் நம் கட்டளையை மதிக்காது மீறியதால் நீங்கள் இழிவடைந்த குரங்குகளாக உருமாறிப் போகுங்கள் என்று சாபமிட்டோம் , அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தவர்களை விட்டும் விலகி பிற மக்கள் இருந்து வந்தார்கள் , ஒரு நாள் குற்றமிழைத்தவர்கள் பகுதியில் முற்றிலும் அமைதி நிலவியது , என்னவென்று இவர்கள் அவர்களைச் சென்று பார்த்தபோது அவர்கள் யாவரும் அல்லாஹ்வின் சாபத்தின் காரணத்தால் குரங்குகளாக உருமாற்றப்பட்டு போயிருந்தார்கள். வருத்தமும் , கவலையும் அம்முகங்களில் நிரம்பி காணப்பட்டன , மற்றபடி மனிதர்களைப்போல அவைகளால் பேசவோ செயல்படவோ முடியவில்லை , இறுதியில் குரங்குகளாக மாறியவர்கள் யாவரும் மூன்று நாட்களுக்குள் செத்து மடிந்து போனார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அழகான மனித தோற்றத்தைக் கொடுத்திருந்தான். ஆனால் அவர்களோ தம் குரங்குச் சேட்டைகளால் அத் தோற்றத்தையே இழந்து போனார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்வதோ அதில் தந்திரங்களை கையாள்வதோ மாபெரும் குற்றமாகும். ஆதலால் இதனை உணரச் செய்வதற்காக இந்நிகழ்வினை அது நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்த, அதற்குப் பின்னால் வர இருக்கின்ற பாவிகளுக்கும், வரம்பு மீறுபவர்களுக்கும் படிப்பினையாகவும் , இறையச்சம் கொண்டவர்களுக்கு நல்லுபதேசமாகவும் ஆக்கிவிட்டோம். அல்லாஹ் இச்சம்பவத்தினை நமது படிப்பினைக்காக கூறி இருக்கிறான். அல்லாஹ் யாவற்றிற்கும் சக்திபடைத்தவன், அவன் தண்டனை தர நினைத்துவிட்டால் அது எந்த ரூபத்திலும் வரலாம். நமக்கு உயிரையும் தந்து, மனித உடலமைப்பையும் கொடுத்திருக்கிறான். இது அவனின் அருட்கொடை, அவன் நினைத்து விட்டால் அதை நம்மிடமிருந்து பிடுங்கிடவும் செய்யலாம், அல்லாஹ் அவனின் அனைத்து வித வேதனைகளை விட்டும், சோதனைகளை விட்டும் நம்மை பதுகாப்பானாக.
இன்று நாம் நம்முடைய வாழ்விலே ஏராளமான இறைக் கட்டளைகளை மீறுகிறோம். அதற்கு நாமாகவே பல்வேறு காரணங்களை கூறி அதனை அனுமதிக்கப்பட்டதாக ஆக்க முயற்சிக்கிறோம். இந்நிலைகளை விட்டு நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும். பிறர் நிலை கண்டு நாம் படிப்பினை பெறா விட்டால் நம் நிலை கண்டு பிறர் படிப்பினை பெறும் நிலமை ஏற்படும். அல்லாஹ் பாதுகாப்பானாக ஆமீன்.
இறைக்கட்டளையை மீறியதால் ஏற்பட்ட அழிவு மேற்கண்ட வசனத்தில் சொல்லிக்காட்டப்பட்டது , அதில் தயக்கம் காட்டியதால் ஏற்பட்ட சிரமம் அடுத்த வசனங்களில் கூறப்படுகிறது .
பனூ இஸ்ராயீல்களே ! நீங்கள் அந்த சந்தர்ப்பத்தையும் நன்கு சிந்தித்துப் பாருங்கள் . உங்களில் ஒரு கொலை குற்றம் நடந்துவிட்டது, கொலையாளி யாரென்று தெரிய வில்லை, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டித்திரிந்தீர்கள் , அது ஊருக்குள் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது, கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் முன் நிறுத்தப்பட்டால் தான் ஊரில் அமைதி திரும்பும் என்று ஒரு பதட்டமான சூழல் நிலவியது . இந்நிலையில் அவர்கள் தம்முடைய தூதர் மூஸா (அலை) அவர்களிடம் இவ்வழக்கை கொண்டு சென்றனர். நபி மூஸா(அலை) கொலையாளியை காட்டித்தரும் படி அல்லாஹ்விடத்தில் இறைஞ்ச, அல்லாஹ் கொலையாளியை கண்டு பிடிக்க ஓர் முறையை கையாளச் சொன்னான். ஏதேனும் மாடு ஒன்றை அறுத்து அதன் ஏதேனும் ஒரு பகுதியால் கொலையுண்டவனின் மீது அடித்தால் , அவன் உயிர் பெற்றெழுந்து தன்னை கொன்றவனை அடையாளம் காட்டிவிடுவான். கொலையாளியும் பிடிபடுவான். ஊரில் பிரச்சினையும் ஓயும். இது தான் அல்லாஹ் கூறிய வழி. இதையே மூஸா (அலை) தம் சமுதாய மக்களிடம் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் ஏதேனும் மாடு ஒன்றை அறுக்கும் படி உத்தரவிடுகிறான். எனவே மாட்டை அறுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று தெரிவித்தார்கள் , இந்த நடைமுறையில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை, முதலாவது , உயிர் பிரிந்தவன் மறுமுறை உயிர் பெற்றெழுவது என்பது அசாத்தியமான விஷயம், அதிலும் அவனை உயிர் பெறச் செய்வதற்காக அவன் மீது தண்ணீரைத் தெளிப்பதற்கோ, அல்லது மருந்து ஏதேனும் கொடுப்பதற்கோ சொல்லாமல் மாடு ஒன்றை அறுக்க உத்தரவிடுவது அறிவுக்கு சற்றும் பொருந்தாத விஷயம் என்றுதான் அவர்களின் சிந்தனை சென்றதே தவிர , உத்தரவிடுவது அகிலத்தின் இரட்சகனும் , சர்வ வல்லமை படைத்தவனுமான அல்லாஹ் எனும் போது அதை செயல் படுத்துவதில் சிறிதும் தாமதிக்க கூடாது என அவர்கள் யோசிக்க தவறி விட்டார்கள், முடியும், முடியாது என்பது மனிதர்களுக்குத்தான், அல்லாஹ்வைப்பொருத்த வரை யாவுமே சாத்தியம்தான், அவன் இடும் கட்டளை நம் குறுகிய அறிவுக்கு புலப்பட்டாலும் சரி, புலப்படாவிட்டாலும் சரி அதை ஈமான் கொண்டு செயல்படுத்துவதே நம் கடமை. அதில் ஆற்றலை வெளிபடச் செய்வது அல்லாஹ்வை சார்ந்தது. இது தான் ஈமானின் தத்துவம். அல்லாஹ்வின் மீது உண்மையான ஈமான் கொண்ட ஒவ்வொருவரும் இவ்வாறு தான் சிந்திப்பார்கள் , ஈமானில் குறை கொண்டவர்கள், தம் அறிவை தூக்கிப் பிடிப்பவர்கள் தான் அதில் சந்தேகப்பட்டு அதை செயல் படுத்துவதில் தயக்கம் காட்டுவார்கள். நபி மூஸா(அலை) இறைக்கட்டளையை அவர்களிடத்தில் கூறிய போது அவர்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை , இறந்தவன் உயிர் பெற்றெழுவதற்கும், ஏதோ ஒரு மாட்டை அறுப்பதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? என்ற தடுமாற்றத்திலேயே இருந்தனர், ஆதலால் அவர்கள் நபி மூஸா(அலை) கூறிய இறை உத்தரவுக்கு பதிலாக மூஸாவே(அலை)! நீங்கள் எங்களை கேலி செய்கிறீர்களா? என்றே கேட்டு விட்டார்கள். அல்லாஹு அக்பர் ! அல்லாஹ்வுடைய உண்மையான தூதர், அவர்களுக்கு முன்னர் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவர் , இறைவனுடன் உரையாடியவர், இத்தகைய அந்தஸ்து பெற்ற ஓர் நபி அல்லாஹ்வுடைய கட்டளை இது என கூறியதை கேலி, தமாஷ் என எண்ணுவது எவ்வளவு அவமரியாதையான செயல், ஒரு நபி இறைக்கட்டளை விஷயத்தில் கேலி செய்வாரா ? கேலி பேசுவது , தமாஷ் பண்ணுவது, இவை யாவும் மடையர்களின் செயல். ஒரு நபி கண்டிப்பாக இவ்வாறு இருக்க மாட்டார். மூஸா(அலை) கூறினார்கள் நான் ஒரு நபி , நபியாக இருந்து அவ்வாறு நான் கூறுவேனா ? மடையர்களில் ஒருவனாக நான் ஆகுவதை விட்டு அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகிறேன். அல்லாஹ் என்னை பாதுகாக்க வேண்டும், நான் கூறுவது யாவும் அல்லாஹ்வின் கட்டளைகளை மட்டும் தான். எனவே நான் கூறியதை செயல்படுத்த தயாராகுங்கள் என்று மூஸா(அலை) அவர்களிடம் உரைத்தார்கள்.
உள்ளத்தில் உண்மையான நம்பிக்கையும் வலுவான ஈமானும் இருந்திருந்ததால் மூஸா(அலை) அவர்கள் அவர்களுக்கு கூறிய வார்த்தைகளே போதுமானது, ஆனால் அவர்களுக்கு அப்போதும் முழு நம்பிக்கை ஏற்படவில்லை. அது எப்படி ஓர் மாட்டை அறுத்து அதன் ஒரு பகுதியைக் கொண்டு மரணித்தவரை அடிப்பதால் அவனுக்கு உயிர் வந்து விடும் என நம்புவது ? அதை நடைமுறைப்படுத்துவது ? ஆதலால் அறுக்கச் சொல்லப்பட்ட மாடு சாதாரணப்பட்டதாக இருக்க முடியாது , ஓர் விசேஷ சக்தி கொண்டதாக இருக்கும் போல தெரிகிறது , ஆகவே அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம் மூஸாவே எங்களுக்காக உம்முடைய இரட்சகனிடத்தில் இறைஞ்சுங்கள், அவன் எங்களுக்கு அந்த மாடு எப்படி இருக்கும் என்பதை விளக்கிச் சொல்லுவான் என்றார்கள் , மூஸா(அலை) அவர்கள் மறுபடியும் அல்லாஹ்விடத்தில் வேண்டினார்கள். யா அல்லாஹ் அந்த மாடு எப்படி இருக்கும் என்பதையும் நீயே தெளிவுப்படுத்துவாயாக என்று இறைஞ்சினார்கள் . பின்னர் அல்லாஹ் கூறியதாக மூஸா(அலை) தம் சமுதாயத்திடம் அந்த மாடு கிழடுமல்ல, இளங்கன்றுமல்ல. இரண்டுக்கும் இடைபட்ட மத்தியதரமான ஓர் பசுமாடாகும். ஆதலால் அதை தேடிப்பிடித்து உங்களுக்கு உத்தரவிடப்பட்டதை செய்து விடுங்கள் , இதற்கு மேல் அதில் ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள் என்று சொன்னார்கள் , ஏதோ ஒரு பசுமாடு என்ற நிலை மாறி மத்தியதரமான பசுமாடு என ஆகிவிட்டது. இப்போதாவது அவர்கள் தம் தடுமாற்றத்தை, தயக்கத்தை விட்டுவிட்டு கொன்னதை செய்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இன்னமும் திருப்தி படவில்லை. அறுக்க சொல்லப்பட்ட பசு மாடு வித்தியாசமான நிறம் கொண்டதாக இருக்குமோ என யோசிக்கலானார்கள் , ஆதலால் மீண்டும் அவர்கள் நபி மூஸா(அலை)விடம் வந்து மூஸாவே(அலை) உங்களின் இரட்சகனிடத்தில் எங்களுக்காக இறைஞ்சுங்கள் அவன் எங்களுக்கு அந்த மாட்டின் நிறமென்ன என்பதையும் நன்கு விளக்கமாக கூறவேண்டும் என்று கூறினார்கள். சமுதாயத்தின் மீது பரிவு கொண்ட கருணை நபியவர்கள் அவர்களின் இவ்வேண்டுகோளையும் ஏற்று அதனை அல்லாஹ்விடத்தில் கேட்டு இறைஞ்சினார்கள். பின்னர் தம் சமுதாயத்திடம் வந்து அந்த மாடு நன்கு மஞ்சல் நிறத்தில் இருக்கும், கட்டி நிறம் கொண்டதாக, பார்ப்பவர்களைக் கவர்ந்து ரம்மியத்தை மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும் என்று அல்லாஹ் கூறுவதாக கூறினார்கள். இந்த வர்ணணை அவர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. அவர்களின் அவநம்பிக்கையும் விலக வில்லை, அது எப்படி இத்தகைய மாட்டிற்கு மரணித்தவரை உயிர்ப்பிக்கும் சக்தி இருக்க முடியும் ? என்றே யோசித்துக்கொண்டிருந்தார்கள் , ஆதலால் அவர்கள் மறுபடியும் மூஸா(அலை) அவர்களிடம் வந்து மூஸாவே(அலை) எங்களுக்காக உங்களின் இரட்சகனிடத்தில் மீண்டும் இறைஞ்சுங்கள் அவன் எங்களுக்கு அந்த மாடு என்னது என்பதை முற்றிலுமாக விளக்கி கூறிவிடுவான். நாங்கள் மீண்டும் மீண்டும் வந்து கேட்பதற்கு காரணம் அந்த மாடு எங்களை கடுமையாக குழப்பி விட்டது . நீங்கள் மீண்டும் ஒரு முறை அதைப் பற்றி கேட்டு தெளிவு படுத்திவிட்டால் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ் நாடிவிட்டால் வழி பெற்றிடுவோம் என்று கூறலானார்கள் , மூஸா(அலை) மீண்டும் அல்லாஹ்விடத்தில் இறைஞ்சிய பின் தம் சமுதாய மக்களிடம் வந்து அந்த மாடு வயலில் ஏர் இழுத்து, உழவடித்து தேய்ந்து போனதுமல்ல, பயிருக்கு தண்ணீர் பாய்ச்சும் கடினமான வேலை வாங்கப்பட்டதுமல்ல. எல்லா குறைகளை விட்டும் அப்பாற்பட்டது. எந்த ஒரு வேலையையும் உழைப்பையும் மேற்கொண்டதற்கான எவ்வித வடுவும் அதன் உடலில் இருக்காது அந்த அளவிற்கு உயர்ரகமான மாடாகும் அது என்று அல்லாஹ் கூறியதாக கூறினார்கள். இது அவர்களுக்கு சிறிது திருப்தியை தந்தது. இத்தகைய மாடு உண்மையிலேயே ஓர் விசேஷ ஆற்றல் கொண்டதாக இருக்கலாம் என்றெண்ணி மூஸா(அலை) அவர்களிடம் வந்து இப்போது தான் நீங்கள் சரியான விஷயத்தை சொல்லியுள்ளீர்கள் நாங்கள் அதை தேடிப்பிடித்து கொண்டு வருகிறோம் என்று கூறி சென்றனர். தேடித்திரிந்து இறுதியாக ஒருவனிடம் அத்தகைய மாடு இருப்பதை கண்டு கொண்டு மாட்டுத் தோல் நிறம்ப தங்க காசுகள் அதற்கு கிரயமாக தருவதாக பேசி அதை வாங்கி வந்து இறுதியாக அதை அறுத்தார்கள். இன்னமும் அவர்கள் அதை மனமுவந்து செய்வதற்கு நெருங்கவில்லை. இனி கேட்பதற்கு எந்த கேள்வியும் இல்லை , எல்லா கேள்வியும் கேட்டாகி விட்டதே என்று அரை குறை மனதுடன் தான் அதனையும் செய்ய முன் வந்தனரே தவிர திருப்தியாக செய்ய அப்போதும் முன் வரவில்லை , முன்னதாகவே அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையில் உடனடியாக காரியத்தில் இறங்கியிருந்தால் இது போன்ற சிரமங்களுக்கும், செலவுகளுக்கும் உள்ளாகியிருக்க மாட்டார்கள்.
ஒரு விஷயம் அல்லாஹ்வின் கட்டளை என்பது ஊர்ஜிதமாகி விட்டால் அதில் எவ்வித தடுமாற்றமும் கொள்ளாமல் செய்து விட வேண்டும் , மீண்டும் மீண்டும் கேள்விக்கேட்டுக்கொண்டே இருப்பது நல்ல விஷயமல்ல .
No comments:
Post a Comment