يَابَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَوْفُوا بِعَهْدِي أُوفِ بِعَهْدِكُمْ وَإِيَّايَ فَارْهَبُونِ (40) وَآمِنُوا بِمَا أَنْزَلْتُ مُصَدِّقًا لِمَا مَعَكُمْ وَلَا تَكُونُوا أَوَّلَ كَافِرٍ بِهِ وَلَا تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا وَإِيَّايَ فَاتَّقُونِ (41) وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ (42) وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ (43) أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ أَنْفُسَكُمْ وَأَنْتُمْ تَتْلُونَ الْكِتَابَ أَفَلَا تَعْقِلُونَ (44) وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ (45) الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَاجِعُونَ (46)
சுவனத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்த மனிதனுக்கு இறைவனின் தரப்பிலிருந்து வழிகாட்டுதல்கள் அவனின் பரிசுத்த தூதர்கள் மூலம் வரும் , அந்த தூதர்கள் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள், அவர்கள் அந்த தூதுச்செய்திகளை எவ்வித கூடுதல், குறைதலுமின்றி மக்களிடம் எத்தி வைத்து விடுவார்கள் , அவர்கள் பிற மக்களுக்கு அதை எத்தி வைக்க வேண்டும் , இவ்வாறு தலை முறை தலைமுறையாக அந்த ஞானங்கள் கொண்டு செல்லப்படும் , இந்த வழியில்தான் உலகில் வாழும் கடைகோடி மனிதன் வரை இறைவனின் மார்க்கம் எத்தி வைக்கப்படும் , எனவே தமது வழிகாட்டிகளிடமிருந்து பெற்ற ஞானங்களை பிற மக்களுக்கு எத்தி வைக்க கடமைப்பட்டவர்களான மார்க்கம் தெரிந்தவர்கள் அதை எத்தி வைப்பதில் குறை செய்யக்கூடாது என்பது மிகவும் அவசியம் , அதை அமானிதமாக நினைத்து உள்ளதை உள்ளபடி எத்தி வைக்க வேண்டும் , அவர்கள் அதில் குறை செய்வார்களானால் அதன் விளைவு கடுமையாக இருக்கும் , அது அவர்களையும் தாண்டி அவர்களை பின்பற்றும் மக்களெல்லாம் வழிகேட்டிலே சென்று விழுவதற்கு காரணமாகிவிடும் , முற்காலத்து வேதங்கள் தன் உண்மையான தோற்றத்தை இழந்ததற்கு மிகப்பெரிய காரணம் அம்மார்க்க அறிஞர்கள் தடம் புரண்டு போனதே , மார்க்க அறிஞர்களில் பனூ இஸ்ராயீல்களுக்கு முக்கிய இடமுண்டு .அவர்கள் குறித்து முதலில் சில தெளிவுகளை பெற வேண்டும் .
ஆதம்(அலை) ஹவ்வா (ரலி) இருவரிலிருந்து தோன்றியவர்கள் தான் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ள அனைத்து மனிதர்களும் . அவர்கள் தான் பல்கிப் பெருகி பல நாட்டவர்களாக, பல இனத்தவர்களாக, பல மொழி பேசும் மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், இவர்களில் சிலருக்கு யாருக்கும் அமையாத சில குறிப்பிட்ட சிறப்புகள் இருக்கின்றன, அவர்கள் தான் பனூ இஸ்ராயீல்கள் என குர்ஆனுடைய மொழியில் அழைக்கப்படுகின்றவர்கள் . இஸ்ராயீல் என்பது யஃகூப் நபியின் பெயராகும். பனூ இஸ்ராயீல் என்றால் இஸ்ராயீலின் சந்ததியினர்கள் எனும் பொருள். இந்த இனத்தவர்கள் மனித வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெறுபவர்கள். அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை பிற மைந்தர்கள் வரை கொண்டு சேர்க்கும் மிகவும் உன்னதமான உயர்ந்த பணியான நபித்துவத்தின் பணி , இறைப்பணி இவர்களின் இனத்திலே தான் பெரும்பாலும் ஒப்படைக்கப்பட்டு வந்தது .
யஃகூப் நபி முதல் மூஸா, ஈஸா (அலை) வரை 400 ருக்கும் மேற்பட்ட பெரும் பெரும் நபிமார்கள் இவர்களின் இனத்தில் தான் தோன்றினார்கள். உலகில் குர்ஆனுக்கு முன் அருளப்பட்ட தவ்ராத், இஞ்ஜீல், ஜபூர் போன்ற உயர்ந்த வேதங்களும் இவர்களில்தான் இறக்கப்பட்டிருந்தன. முன் வேதங்கள் பற்றிய அதிகமான அறிவு கொண்டவர்களாக இந்த மக்கள் திகழ்ந்தார்கள் . முன் வேதங்களில் குர்ஆன் பற்றிய, முஹம்மது நபி(ஸல்) பற்றிய முன் அறிவிப்புகளும் இடம் பெற்றிருந்தன என்பதையெல்லாம் இவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள் . அவர்களில் மூஸா (அலை) அவர்களை ஏற்றுக் கொண்ட மக்களை யூதர்கள் என்றும், ஈஸா(அலை) அவர்களை ஏற்றுக் கொண்டவர்களை கிறிஸ்தவர்கள் என்றும் அழைக்கப்படுவர். இன்றளவிலும் முஸ்லிம்களைக் காட்டிலும் உலகில் பெரும்பான்மையாக உள்ளவர்களை வழிநடத்துபவர்கள் இவர்களே. இவர்களைத் தவிர்த்து உலகில் வாழும் ஏனைய மக்கள் யாவரும் பல்வேறுபட்ட மதங்களை பின் பற்றுவோராய் இருப்பினும் வானத்து வேதங்கள் பற்றிய தீர்க்கமான அறிவுகள் அவர்களிடத்தில் இல்லை . மேலும் பனூ இஸ்ராயீல்கள் இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளான அல்லாஹ், நபிமார்கள், வேதங்கள், சுவர்க்கம், நரகம் போன்றவற்றில் முஸ்லிம்களோடு நெருங்கிவருபவர்கள் . நபியவர்கள் தன் வாழ்நாளில் சந்தித்த மக்களில் இவர்கள் மட்டுமே முன் வேதத்து ஞானம் பெற்றவர்கள் , இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயல் பட்டிருந்தால் உலகில் கடவுளின் பெயரால் நடக்கும் பல அட்டூழியங்களுக்கு முடிவு பிறந்திருக்கும் , வழி கேடுகள் குறைந்திருக்கும் . ஆனால் அவர்கள் தமது பொறுப்பை உணர வில்லை என்பதை குர்ஆன் பக்கம் பக்கமாக விவரிக்கின்றது . எனவே மார்க்கம் அறிந்தவர்கள் , வேதத்தை கற்றவர்கள் , மக்களுக்கு மார்க்கத்தை போதிக்கும் இடத்தில் உள்ளவர்களின் வழிகேடுகள் , குறைகள் களையப்பட இவர்களையே குர்ஆன் உதாரணத்திற்கும் எடுத்துக்கொண்டது .
இஸ்ராயீலின் சந்ததியினர்களே! நான் உங்கள் மீது புரிந்த என்னுடைய அருள் பாக்கியங்களையெல்லாம் எண்ணிப்பாருங்கள். மார்க்கத்தின் விளக்கங்களை தந்து , அதன் மூலம் உங்களை பிற மனிதர்களை விட எவ்வளவு மேன்மைப்படுத்தி வைத்திருந்தேன் என்பதை யோசித்து பாருங்கள் , மேலும் நீங்கள் எனக்கு தந்த வாக்குறுதி என்ன ? தொழுகையை நிலை நாட்ட வேண்டும், ஜகாத்தை கொடுக்க வேண்டும், நான் அனுப்பிய அனைத்து, தூதர்களையும் விசுவாசம் கொள்ள வேண்டும், அவர்களில் இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் நம்ப வேண்டும் என்பவைதானே ? அந்த என்னுடைய ஒப்பந்தத்தை நீங்கள் நிறைவேற்றுங்கள் , பதிலுக்கு நான் உங்களின் பாவங்களையெல்லாம் போக்கி, உயர் ரக சுவர்க்கங்களில் உங்களை புகச் செய்வேன் என, நான் உங்களுக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் , நீங்கள் தந்த உறுதிமொழியை நிறைவேற்றாவிட்டாலும் உங்களுக்கு சுவனமுண்டு என வீண் கற்பனைகளில் மூழ்காதீர்கள் , மேலும் வேதங்களிலுள்ள உண்மைகளை பிறருக்கு எத்தி வைப்பதில் மனிதர்களுக்கு பயப்படாதீர்கள், என்னை மட்டுமே பயப்படுங்கள்.
மேலும் நான் இறக்கி வைத்துள்ள இந்த குர்ஆனை, அதுவும் உங்களுடனுள்ள உங்களின் வேதங்களான இஞ்ஜீல், தவ்ராத்தை உண்மைப்படுத்தக் கூடியதாக உள்ளது , இத்தகைய குர்ஆனையும் நீங்கள் விசுவாசம் கொ ள்ளுங்கள் , இதை மறுப்பதில் முதல் நபராக நீங்கள் இருக்காதீர்கள் , அதாவது குர்ஆனை ஏற்க மறுப்பதற்கு நீங்கள் முன்னுதாரணமாக திகழாதீர்கள் , அப்படி மறுப்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தால் உங்களைப்பார்த்து யாரெல்லாம் குர்ஆனை மறுப்பார்களோ அவர்கள் யாவரின் பாவங்களிலும் நீங்களும் பங்காகிவிடுவீர்கள் . எனவே நன்மைக்கு முன்னுதாரணமாக திகழுங்கள் , மேலும் உங்கள் வேதத்தில் கூறப்பட்டுள்ள முன்னறிவிப்பு படி அமைந்துள்ள இந்த குர்ஆனை ஏற்பதாலோ , அல்லது அதனை பிறருக்கு எடுத்துக்கூறுவதாலோ உங்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்த உலகம் சார்ந்த இலாபங்கள் பாதிக்கப்படும் என்றிருந்தாலும் அந்த நஷ்டத்தை நீங்கள் பொருட்படுத்தாதீர்கள். ஏனெனில் உலக இலாபங்கள் எத்தனை பெரிதாக தோற்றமளித்தாலும் அது உங்களுக்கு அல்லாஹ் தர இருக்கும் கூலிக்கு முன்னால் மிக மிக அற்பமானதே . எனவே என்னுடைய வசனங்களை எடுத்து செயலாற்றுவதை விட்டுக் கொடுத்து அர்ப்பமான கிரயத்தை பகரமாக வாங்காதீர்கள். அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்து நடப்பதால் நம்முடைய எவ்வளவு பெரிய இலாபத்திற்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தக் கூடாது . மேலும் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதால் ஏதேனும் இழப்பு ஏற்படுமென்ற பயம் இருப்பினும் நீங்கள் அதற்கு பயப்படாதீர்கள். எனக்கு மட்டுமே பயப்படுங்கள்,
மேலும் எவ்வித அற்பமான உலக இலாபத்திற்காகவும் உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள், சத்தியத்தை அசத்தியத்துடன் இணைக்காதீர்கள், மேலும் நீங்கள் இதுதான் சத்தியம் என தெரிந்து கொண்டே அதை மறைக்காதீர்கள்.
மேலும் நீங்கள் தொழுகையை அதன் முறைகள், ஒழுக்கங்கள், சுன்னத்துகள், நேரத்தை பேணுதல் போன்றவற்றை முழுமையாக பேணி நிரப்பமாக நிறைவேற்றுங்கள், மேலும் உங்களின் செல்வங்களுக்கான ஜகாத்தை கொடுத்துவிடுங்கள். மேலும் தொழுகையை தனியாக தொழாமல் தொழுபவர்களோடு சேர்ந்து தொழுங்கள்.
மேலும் நீங்கள் பிறர்களுக்கு உபதேசிக்கிறீர்கள் , நன்மையானவற்றை செய்யும்படி பிற மக்களுக்கு ஏவுகிறீர்கள், ஆனால் உங்களை மறந்து விடுகிறீர்களே ! அந்நன்மையை செய்வதை விட்டு நீங்கள் ஒதுங்கியிருக்கிறீர்களே ! இது முறையாகுமா ? இத்தனைக்கும் நீங்கள் வேதத்தை ஓதுகிறீர்கள், அதன் செய்திகளை உணர்கிறீர்கள், அதை பிறருக்கு போதிக்கிறீர்கள் , அதன் போதனைகளை எடுத்து நடக்க அதிக அருகதை உள்ளவர்கள் நீங்கள்தான் , அவ்வாறிருந்தும் நீங்கள் அதனை அமுல் படுத்தாமல் இருக்கலாமா ? இதை நீங்கள் யோசிக்க வேண்டாமா?
மேலும் நீங்கள் உங்களின் அனைத்து காரியங்களிலும் இரண்டு அம்சங்களை கடை பிடிப்பதன் மூலம் அல்லாஹ்வின் உதவியை எதிர்பாருங்கள் ,
1, பொறுமையின் மூலம் , பொறுமை என்பதற்கு விரிவான கருத்துக்கள் உண்டு , அல்லாஹ்வின் வரம்புக்குள் தன்னை கட்டுப்படுத்தி வைப்பதற்கு பெயர் பொறுமை , இது அல்லாஹ்விடமிருந்து உதவியை வாங்கித்தருகிறது ,
2, தொழுகையின் மூலம், தொழுகை , அல்லாஹ்வோடு மனிதனுக்கு தொடர்பை ஏற்படுத்தும் இணைப்பு பாலமாகும் . இதன் மூலம் தன் உலக , மறு உலக காரியங்களை இலகுவாக சாதிக்கலாம் , இருப்பினும் இத்தொழுகை பலமனிதர்களுக்கு பாரமாகத்தான் தெரியும், தம் மனங்களையும், உறுப்புகளையும் எவ்வித கட்டுபாடுமில்லாமல் சுதந்திரமாக இயங்கச் செய்பவர்களுக்கு தொழுகையில் அவற்றை அடக்கி வைப்பதென்பது சிரமமாகத்தான் தெரியும். ஆனால் பணிவானவர்களுக்கே தவிர , அவர்களுக்கு தொழுகை பாரமாக இருக்காது.
பணிவானவர்கள் யாரெனில் எவர்கள் தாம் ஒரு நாள் தம்மை படைத்த இறைவனை , தமது பரிபாலிப்பவனை கண்டிப்பாக சந்திக்க இருக்கிறோம். மேலும் அவன் பக்கமே தாம் உலக வாழ்வை முடித்து திரும்பி செல்ல இருக்கிறோம் என எவர்கள் உறுதிபட நம்புவார்களோ, இந்த எண்ணம் அவர்களின் வாழ்க்கையோடு பிணைந்து இருக்குமோ அத்தகையவர்களே பணிவானவர்கள் , அவர்களுக்கு தொழுகையிலும் மறுமை சிந்தனை ஏற்பட்டு அதில் தம் உள்ளத்தையும் உறுப்புகளையும் ஒருமுகப்படுத்தி தொழுதல் அவர்களுக்கே பாரமாக இருக்காது. இந்த பணிவு வந்துவிட்டால் தொழுகையில் உயிரோட்டம் வந்து விடும் , தொழுகை உயிர் பெற்று விட்டால் அல்லாஹ்வின் உதவி வாசல் திறந்து விடும் , அல்லாஹ்வின் உதவி இருந்தால் எதற்கும் , யாருக்கும் அஞ்சாமல் மார்க்கப்பணி செய்யலாம் , அதுதான் இக்காலத்திற்கு மிக அவசியம் என்பதை இவ்வசனங்கள் நன்றாக உணர்த்துகின்றன , அல்லாஹ் நம்மிடத்தில் பொறுமையையும், தொழுகையையும் நிரப்பமாக உண்டாக்குவானாக – ஆமீன்.
No comments:
Post a Comment