Sunday, December 4, 2016

சூரா பகரா (4)


وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ (30) وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (31) قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ (32) قَالَ يَاآدَمُ أَنْبِئْهُمْ بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنْبَأَهُمْ بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنْتُمْ تَكْتُمُونَ (33) وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ (34) وَقُلْنَا يَاآدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ (35) فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ (36) فَتَلَقَّى آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ (37) قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (38) وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ (39) 

                    அடுத்து குர்ஆன் நம்மை மனித வரலாற்றின் துவக்கத்திற்கு இழுத்து செல்கின்றது , இன்று உலகெங்கும் பரந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனித சஞ்சாரம் எதுவுமே பிறந்திருக்காத ஒரு நேரம் , ஆனால் மனிதர்கள் வாழ்வதற்கேற்ப பூமியும் , வானும் படைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது ,  அந்த சந்தர்ப்பத்தில் உமது இரட்சகனான அல்லாஹ் தன்னுடைய பரிசுத்த படைப்புகளான மலக்குகளை ஒன்று திரட்டி , அவர்களுக்கு முன்  தன் திட்டத்தை முன் வைத்து பேசினான் . மலக்குகளே ! இப்பரந்த பூமியில் என் கட்டளைகளை நடைமுறைப்படுத்த கூடிய, என் விருப்பங்களின் படி செயல் படக் கூடிய ஒரு புது வகையான படைப்பை படைக்க இருக்கிறேன் . அது தான் மனித படைப்பு , மனிதர்கள் , உங்களைப் போன்று பாவமே புரியாத என் கட்டளைகளுக்கு மாறு செய்யவே முடியாத குணாதிசங்கள் கொண்டவர்கள் அல்ல. அவர்கள் தனி சுபாவம் கொண்டிருப்பார்கள்  , என் அதிகாரத்திலிருந்து , ஆற்றல்களிலிருந்து சிறிது அவர்களுக்கு தருவேன் . அவற்றை பயன்படுத்தி அவர்கள் பூமியில் என்னுடைய பிரதிநிதியாக வாழ்வார்கள் என்று அல்லாஹ் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினான். 
              இதைக் கேட்டதும் மலக்குகள் அதிகாரமளிக்கப்பட்ட படைப்பு எனில் அவர்களில் தன் அதிகாரத்தை தீய வழியில் பயன்படுத்துவோரும், பல அட்டூழியங்கள் புரிவோரும் , இறைவனின் அதிருப்தியை ஏற்படுத்துவோரும் இருப்பார்களே ?  இறைவனுக்கு பிரதிநிதியாக செயல் படுவது என்பது எத்தகைய உன்னதமான அந்தஸ்து ? மனிதனால் அதில் குறை ஏற்படலாமே ! அந்த அந்தஸ்தை பெறுவதற்கு  யாவரும் ஆசைப்பட வேண்டும் , இந்த நன்மையில் தான் முந்திக்கொள்ள வேண்டும் , என எண்ணி கொண்டு அதை அல்லாஹ்விடம் வெளிப்படுத்தினார்கள் , யா அல்லாஹ் ! அமைதியான அப் பூமியில் குழப்பங்கள், அட்டூழியங்கள் புரிவோரை , அதிலே ஒருவருக்கொருவர் குத்தி கொலை செய்து இரத்தம் ஓட்டித் திரிவோரையா நீ குடியமர்த்தப் போகிறாய்? உன்னுடைய பிரதி நிதித்துவத்திற்கு நாங்கள் தகுதி பெறமாட்டோமா ? நாங்கள் நொடி பொழுது கூட உனக்கு மாறு செய்யாமல் உன் கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்ற காத்திருக்கிறோம். உன்னுடைய புகழைக் கொண்டு உன்னை நாங்கள் துதிக்கிறோம், உன்னையே நாங்கள் பரிசுத்தப் படுத்துகிறோம். உன் கட்டளைகளை நாங்கள் மீறவே மாட்டோம். எங்களிடம் இத்தகைய தகுதிகள் இருக்கும் போது  பிறகு ஏன் அட்டூழியம் புரியும் ஓர் படைப்பு ? என தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தினார்கள் . அதற்கு அல்லாஹ் அளித்த ஒரே பதில் , நீங்கள் மனிதன் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புள்ளதே என்பதை மட்டுமே பார்க்கிறீர்கள். ஆனால் அவ்வதிகாரத்தை முறையாக பயன்படுத்தும் பொழுது என்னென்ன நலவுகள் உண்டாகும் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். நீங்கள் அறியாத எல்லா அம்சங்களைப் பற்றி நான் அறிந்தவனாக உள்ளேன். மனிதனை படைப்பதில் என்னென்ன இலாபங்கள் உள்ளன என்பதை நீங்களும் காணத்தான் போகிறீர்கள் என பதிலுரைத்தான்.
                 மேற்கண்ட வசனத்தில் நாம் எடுக்க வேண்டிய சில படிப்பினைக்குறிய அம்சங்கள் புதைந்து உள்ளன. அல்லாஹ் ஓர் உயர்ந்த நோக்கத்திற்காகவும், விருப்பத்துடனும் தான் மனிதனை படைத்துள்ளான். அவனை படைப்பதற்கு முன்னதாகவே தன் மலக்குகளோடு அவனைப் பற்றி பிரஸ்தாபித்திருக்கின்றான். மனிதனைத் தவிர வேறு எதைப் பற்றியும் அதை படைப்பதற்கு முன்னதாகவே பிரஸ்தாபித்துக் கொண்டதாக இல்லை. இதிலிருந்து மனிதனின் உயர்வும் மதிப்பும் வெளிபடுகிறது, மனித படைப்பு அந்த அளவுக்கு உயர்ந்தது , மனிதர்களில் அல்லாஹ்வுடைய கட்டளைகளை ஏற்றுக் கொண்டு அதன் படி தானும் நடந்து , பிறரையும் நடக்க வைப்பவர்களே பிரதானமாக இடம் பிடிக்கிறார்கள். மற்றவர்கள் அவர்களின் பெயர்கள் கூறப்படுவதற்கு கூட தகுதி பெற மாட்டார்கள்.  அவர்கள் அல்லாஹ்விடத்தில் சிறிதும் மதிப்பே இல்லாது போய் விடுகிறார்கள். ஒரு வஸ்துவிலுள்ள நல்ல அம்சங்களையே பார்க்க வேண்டும் , அதை வெளிக்கொணர்வதற்கு முயற்சிக்க வேண்டும். தீய அம்சங்களை கண்டு பின் வாங்கி விடக்கூடாது. ரோஜா , முற்களுக்கிடையே தான் முளைக்கிறது. முற்களுக்கு அஞ்சி ரோஜாவையே புறக்கணிப்பது அறிவுடமை அல்ல.
             பூமியில் அல்லாஹ்வுடைய பிரதி நிதித்துவத்திற்கு யார் தகுதி ? மலக்குகளா? மனிதர்களா ? அல்லாஹ்வுக்கு பிரதிநிதியாக இருப்பதன் பொருள் அல்லாஹ்வை வணங்குவது, துதிப்பது, தியானிப்பது என அவனுக்கு தனது பணிவை வெளிப்படுத்துவதுடன் பூமியில் வாழும் சக மனிதர்களோடு, ஜீவராசிகளோடு அல்லாஹ்வின் தன்மைகளான கருணை , அன்பு , நீதம் போன்றவற்றை பிரதிபலிக்க வேண்டும், கோழைத்தனம், நய வஞ்சகம், பொய், சூது, பொறாமை, புறம், கோள், பேராசை போன்ற தீய எண்ணங்களை கலைந்து வீரம், உண்மை, மனசுத்தம், பிறர் நலன் நாடுதல் போன்ற உயர்ந்த நற்குணங்களை தன்னுள் ஏற்படுத்தி வாழ்வதும் , அல்லாஹ் கொடுத்த அறிவை பயன்படுத்தி பூமியின் வளங்களை, ஆற்றல்களை கண்டறிந்து அதை தன்னுடைய, தன் சக மனிதர்களின் வாழ்க்கை உதவிக்காக, வசதிக்காக நியாயமான முறையில் ஈடுபடுத்துவதும் , தன்னுடன் வாழும் சக மனிதர்களுக்கிடையே நீதியை நிலை நாட்டி பூமியில் அமைதியையும், நிம்மதியையும் ஏற்படுத்த முயற்சிப்பதும் போன்ற பெரும் பணிகளை ஆற்றுவதற்கு அல்லாஹ்வின் பிரதி நிதித்துவம் எனப்படும். இவற்றில் பெரும்பாலானவற்றை மலக்குகளால் நிறைவேற்ற முடியாது . காரணம் அவர்களின் இயல்பான சுபாவமே அல்லாஹ்வை சதாவும் துதிப்பது, வணங்குவது, அவன் கூறுபவற்றை நிறைவேற்றுவது, போன்ற பரிசுத்தமான உயர்ந்த அம்சங்களாகும் , அவர்களால் அல்லாஹ்வுடைய கட்டளைக்கு மாறு செய்யவே முடியாது, அவர்களுக்கு ஊண், உறக்கம், இச்சை, போட்டி, பொறாமை, கோபம் , குடும்ப வாழ்க்கை போன்ற எவ்வித உணர்வுகளும் கிடையாது. ஆனால் பூமியில் வாழ்வதற்கு, பூமி மனிதர்களால் செழிப்படைவதற்கு, பூமியில் மனிதர்களுக்கிடையே அல்லாஹ்வின் கட்டளைகள் நிலை நாட்டப்படுவதற்கு இவ்வுணர்வுகள் அவசியம். அவற்றை ஆக்கப்பூர்வமான முறையில் அல்லாஹ்வுடைய விருப்பு, வெறுப்பை முன் வைத்து வெளிப்படுத்தப்பட வேண்டும். இவ்வகையில் மனிதர்களே இப்பணிக்கு தகுதியானவர்கள். மலக்குகளின் இயற்கை அமைப்பு இப்பணிக்கு ஒத்துழைக்காது, இதுவே அல்லாஹ்வின் இயற்கை நியதி, இதை யாரும் கேள்வி கேட்க முடியாது . இதனை அல்லாஹுத்தஆலா மலக்குகளுக்கு உணரச் செய்கிறான். அவர்கள் வழியாக நமக்கும் கற்றுத் தருகிறான். 

              அல்லாஹுத்தஆலா ஆதம் (அலை) அவர்களை படைத்து மனிதர் என்ற ரீதியில் பூமியில் அவர்கள் எதிர் கொள்ள இருக்கும் சகல வஸ்துக்களின் பெயர்கள் அவற்றின் குணாதிசயங்கள் தன்மைகள் யாவற்றையும் கற்றுக் கொடுத்தான். வர இருக்கும் அவர்களின் பின் தோன்றல்கள் யாவருக்கும் அதை அறிந்து , அதனை அடையும் வழிகளை கண்டறிந்து, அவற்றை பயன்படுத்திக் கொள்ளும் படியான அறிவு ஞானத்தையும் வழங்கினான். பின்னர் அவற்றை மலக்குகளுக்கு முன் வைத்து உங்களால் பூமியில் வாழ முடியும் என்ற உங்களின் கூற்றிலும், எண்ணத்திலும் நீங்கள் உண்மையாளர்களாக  இருந்தால் இவற்றிற்கு என்ன பெயர் சொல்லப்படும். இவையெல்லாம் என்ன என்று எனக்கு சொல்லிக் காட்டுங்கள் என அல்லாஹ் கேட்டான். உதாரணமாக பசி என்றால் என்ன? அது ஏற்படும் போது எப்படி இருக்கும்? இச்சை என எதற்கு சொல்வது? என்றெல்லாம் கேள்வி எழுப்பிய போது மலக்குகளால் பதில் கூற முடியவில்லை. காரணம் அது அவர்களின் இயற்கைக்கும் , படைப்புத்தன்மைக்கும் அப்பாற்பட்ட விஷயம். ஆதலால் அவர்கள் கூறலானார்கள், யாஅல்லாஹ்! நீ மகா பரிசுத்தமானவன்! எங்களுக்கு நீ கற்றுத் தந்தவற்றைத் தவிர வேறு எந்த அறிவும் எங்களுக்கு கிடையாது. நீயே சகல வஸ்துக்களைப் பற்றி முற்றிலும் அறிந்தவன் தீர்க்கமான அறிவுடையவன். உன்னுடைய ஒவ்வொரு செயலிலும் ஏதேனும் நுட்பம், தக்க காரணம் இருக்கும் என்று கூறி , பின் வாங்கிவிட்டார்கள். 
           அதன் பின்  அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை அழைத்து, ஆதமே! இதோ இன்னின்ன வஸ்துக்களின் பெயர்களை, அவற்றின் தன்மைகளை இவர்களுக்கு விவரியுங்கள் என்றதும் அவர்கள் அவை ஒவ்வொன்றின் பெயர்கள், அவற்றின் குணங்கள் யாவற்றையும் அவர்களுக்கு விவரிக்கலானார்கள். இந்த தகுதிதான் உலகிலே வாழ்வதற்கும்,  அதன் சக்திகளை தனது பயன்பாட்டிலே கொண்டு வருவதற்கும் தேவை. அதை ஹஜ்ரத் ஆதம் (அலை) சரியாக நிரூபித்தபோது அல்லாஹ் கூறினான் , நான் வானம் பூமியின் மறைவான வஸ்துக்களைப் பற்றியெல்லாம் முற்றிலும் அறிந்தவன் என்றும், நீங்கள் தெளிவாக வெளிப்படுத்திய கருத்துகள், வெளிப்படுத்தாது உள்ளுக்குள்ளேயே மறைத்து வைக்கும் ரகசியங்கள் யாவற்றை பற்றியும் முற்றிலும் அறிந்தவன் என்பதை நான் உங்களுக்கு கூறவில்லையா? ஆகவே நான் செய்பவற்றில் கூறுபவற்றில் கண்டிப்பாக தக்க காரணம் இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் கூறினான்.

         ஆக இப்பூமியில் அல்லாஹ்வுடைய பிரதி நிதியாக இருந்து செயல்படுவதற்கு மலக்குகள் தகுதி பெறுகிறார்களா ? அல்லது மனிதர்களா ? என்ற தகுதி போட்டியில் படைப்பு, அறிவு ஆகியவற்றை முன் வைத்து மலக்குகளைக் காட்டிலும் மனித இனமே தகுதி பெறுகிறது என்பதும் நிரூபணமாகிவிட்டது. மனிதன் உலகிலே வருவது தான்விரும்பிய வாழ்க்கை வாழ வரவில்லை. அல்லாஹ்வின் பிரதி நிதியாக , அவன் விரும்பும் வாழ்க்கை வாழ வந்துள்ளான் என்பதும் தெளிவாகிவிட்டது. அத்துடன் அல்லாஹ் நிறுத்திக் கொள்ளவில்லை, அல்லாஹ்வின் பிரதிநிதியாக உலகிற்கு செல்ல இருக்கும் மனிதன் அறிவளவில் பலமிக்கவனாக படைக்கப்பட்டிருந்தாலும் , உடலளவில் ஓரளவு மட்டுமே பலம் கொண்டவன், இவனை விட பலமிக்கவையும், வலிமை கொண்டவையும் பூமியில் உள்ளன. அவற்றை எதிர் கொண்டுதான்  மனிதன் வாழவேண்டும் . எனவே மனிதனின் வசதிக்காகவும், அவனுக்கு வேலையை எளிமைப்படுத்தவும் அல்லாஹ் ஓர் ஏற்பாட்டை செய்கிறான். அதுதான் உலகம் முழுவதிலுமுள்ள வஸ்துக்கள் மனிதனுக்கு அடி பணிய வேண்டும். வசமாக வேண்டும் , மனிதனுக்கு சேவை புரிய வேண்டும் , இந்த ஏற்பாட்டையும் அல்லாஹ் அப்போதே மனிதனுக்கு செய்து கொடுத்துவிடுகிறான். இதைப்பற்றியே அடுத்த வசனம் பேசுகிறது.
              மேலும் நாம் அப்போது எல்லா படைப்புகளுக்கும் ஓர் உத்தரவு பிறப்பித்தோம் , எந்த அளவுக்கு என்றால் பரிசுத்த படைப்பான மலக்குமார்களுக்கும் கூட நாம் கூறினோம் , நீங்கள் யாவரும் ஆதம் (அலை) அவர்களுக்கு அடிபணியுங்கள் , அவருக்கு முன்னால் உங்களின் உயர்வை காட்டாதீர்கள் , அவருடன் நேசம் பாராட்டுங்கள் ,  இது என்னுடைய திருக்கரங்களால் படைக்கப்பட்ட படைப்பு , இவருக்கு எல்லா வகையிலும் ஒத்தாசையாய் இருங்கள். அவருடைய காரியத்தில் உதவி புரியுங்கள் என்று நாம் கூறியதும் எல்லாமே அவருக்கு அடிபணிந்தன. வானம் , பூமி , சூரியன் சந்திரன், காற்று , நீர் , நெருப்பு என யாவுமே அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று தம் பணிவை மனிதருக்காக வெளிப்படுத்தின. அதன் வெளிபாடுதான் இன்று வரை உலகில் கோடிக்கணக்கான ஜீவராசிகள் இருப்பினும் அவை யாவற்றிற்கும் அரசனைப் போல் மனிதன் திகழ்கிறான். அவை யாவும் மனிதனுக்கு சேவை புரிகின்றன. நன்கு வலுவுள்ள திடகாத்திரமான ஒட்டகமும் கூட அதன் மூக்கிலே கயிற்றை மாட்டி ஓர் சிறுவன் அதனை இழுத்துச் சென்றாலும் அடிபணிந்து அவன் பின்னால் செல்லும், இவ்வாறே எல்லா பிராணிகளும் , பூமியுடைய வளங்களும் திகழ்கின்றன , அவற்றை மனிதன் எவ்வாறெல்லாம் தன் வசதிக்கு வளைத்துக் கொள்கிறான் என்பது கண்கூடே, இதே நிலைதான் ஒவ்வொன்றிலும் காணப்படும் , காரணம் அல்லாஹ் அவற்றை மனிதனுக்காக அடிபணியச் செய்திருக்கின்றான். படைப்புகள் யாவும் மனிதனுக்காக தன் பணிவையும், நட்பையும் வெளிபடுத்திய போது  ஒரு படைப்பு மட்டும் மனிதனுக்கு தன் வெறுப்பையும் விரோதத்தையும் வெளிப்படுத்தியது. அவன் தான் இப்லீஸ், ஆம் இப்லீஸைத் தவிர யாவும் பணிந்துவிட்டன. அவனோ பணியுங்கள் என்ற அல்லாஹ்வின் கட்டளையை மறுத்தான், பணியவில்லை , காரணம் அவன் பெருமை கொண்டான், ஓர் தாழ்ந்த படைப்புக்கு உயர்ந்த படைப்பான நான் எப்படி பணிவது? அது நடக்காது என அரசனுக்கெல்லாம் அரசனான அல்லாஹ்விற்கு முன் பெருமையடித்தான். மேலும் அவன் மறுப்பவர்களில், காபிர்களில் ஒருவனாக இருந்தான். 
              இதன் மூலம் மனித படைப்பின் ஆரம்ப புள்ளியிலேயே ஷைத்தான்  மனிதனுக்கு விரோதியாகிவிட்டான் , அந்த பரம விரோதியின் சூழ்ச்சி வலையிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள வேண்டுமென்று மனிதர்கள் யாவருக்கும் அல்லாஹ் உணர்த்துகிறான். ஆனால் மனிதர்களில் பெரும்பாலானோர் இதை காதில் போட்டுக் கொள்ளாமல் ஷைத்தான் இழுத்துப் போகும் வழிகளிலேயே செல்கின்றார்கள். அல்லாஹ் ஷைத்தானுடைய சூழ்ச்சியை விட்டும் நம்மை பாதுகாப்பானாக , அவனுக்கு முற்றிலும் அடிபணிந்த நல் அடியார்களில் நம்மை சேர்த்திடுவானாக – ஆமீன்
             முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களை படைத்து, அவர்களை தன் பிரதிநிதியாக ஆக்கப் போவதாக அறிவித்து , அதற்கான முழு தகுதிகளையும் அவர்களுக்குள் ஏற்படுத்தி , மலக்குகள் உட்பட பிற படைப்புகளையும் அவர்களுக்கு பணிய வைத்து மேன்மைப்படுத்திய இறைவன் , அவர்களை உடனடியாக பூமிக்கு அனுப்பிடவில்லை. அல்லாஹ்வுடைய விதியில் ஒவ்வொன்றிற்க்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் . அதன் பின்பே காரியம் நடை பெரும் , இது மனிதர்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்திய விதி, ஆதலால் அல்லாஹ் அவர்களுக்கு துணையாக ஹவ்வா (ரலி) என்ற பெண்ணையும் படைத்து இருவரையும் சுவனத்தில் ஜோடியாக இருக்கச் செய்தான். பின்னர் அவர்களிருவரும் எவ்வாறு அதிலிருந்து வெளியேற்றப்பட்டு பூமிக்கு வந்தார்கள் என்பதைப் பற்றியே அடுத்த வசனங்கள் விவரிக்கின்றன.
            மேலும் நாம் கூறினோம் , ஆதம் (அலை) அவர்களே!  நீங்களும் உங்கள் மனைவி ஹவ்வாவும் இந்த சுவனத்தில் தங்கியிருங்கள் , இதில் நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள் , உங்களுக்கு எவ்வித தடையுமிருக்காது. எங்கும் செல்லலாம், எப்படியுமிருக்கலாம், எதையும் உண்ணலாம் , ஆனால் இந்த மரத்தின் பழங்களை மட்டும் சுவைப்பது மட்டுமல்ல , அதன் அருகில் கூட சென்றுவிடாதீர்கள். இதைத் தவிர வேறு உங்களுக்கு எவ்வித கட்டுபாடும் கிடையாது. இம்மரத்தின் பக்கம் மட்டும் நெருங்காதீர்கள். அப்படி நெருங்கினீர்களானால் நீங்கள் அநீதமிழைத்தவர்களாகி விடுவீர்கள். கவனமாக இருங்கள் என அல்லாஹ் கூறினான்.
                 அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் இருவரும் எவ்வித கவலையும் , குறையுமின்றி சந்தோசமாக தம் நாட்களை சுவனத்திலே கழித்து வந்தார்கள். பல வருடங்கள் உருண்டோடியிருக்க வேண்டும். அல்லாஹ் எச்சரித்த எச்சரிக்கை மறந்து போனது. இன்னொரு புறம் ஆரம்ப நாள் முதல் இவர்களின் மீது விரோதமும், பொறாமையும் கொண்டிருந்த ஷைத்தான் இவர்களை எப்படியாவது சுவனத்திலிருந்து, அதன் இன்பத்திலிருந்து வெளியேற்றி விட வேண்டுமென்ற வெறியிலே அதற்கான சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து காத்திருந்தான். இந்நிலையில் ஒரு நாள் அவர்களிடத்தில் சென்று அம்மரத்தைப் பற்றிய பொய்யான சிறப்புகளையும், மேன்மைகளையும் எடுத்துக் கூறி அவர்கள் இருவரையும் நம்ப வைத்து இறுதியாக அம்மரத்தின் காரணமாகவே அவர்களை தடம் பிறழச் செய்து அவர்களிருவரும் இதுகால் வரை அனுபவித்து வந்த இன்பம், மகிழ்ச்சி நிரம்பிய அச்சூளலிருந்து அவர்கள் இருவரையும் வெளியேறச் செய்து விட்டான். சுவனம் என்பது அல்லாஹ்வுடைய சந்தோசத்திற்கும், பொருத்தத்திற்கும் அடையாளமாக திகழும் இடம் . அங்கே அல்லாஹ்வுடைய அதிருப்தியுடன் இருக்க இயலாது , எனவே நாங்கள் கூறினோம் நீங்கள் யாவரும் சுவனத்திலிருந்து பூமிக்கு இறங்கிவிடுங்கள். இனி சுவனத்தில் உங்களால் வசிக்க இயலாது ,  ஷைத்தானே ! நீயும் சேர்ந்து இவர்களுடன் பூமிக்கு சென்றுவிடு , பூமியில் உங்களில் சிலர் சிலருக்கு விரோதியாக இருப்பீர்கள். உங்களுக்கும், ஷைத்தானுக்கும் இடையேயான விரோதம் பூமியிலும் தொடரும் என்பதை நினைவில் கொண்டு அவனின் சூழ்ச்சி வலையிலிருந்து தப்பித்து இருங்கள். மேலும் நீங்கள் பூமியில் கவனிப்பாரற்று விடப்படமாட்டீர்கள். மாறாக உங்களுக்கு பூமியில் வாழ்வதற்கேற்ற தங்குமிடமும் , குறிப்பிட்ட காலம் வரை வாழ்வதற்கான  வசதியும் உண்டு. அங்கு போய் வாழுங்கள் என அல்லாஹ் மனித சஞ்சாரத்தையே பூமியில் இறங்கச்செய்தான் , இது நாள் வரை அல்லாஹ்வை அதிருப்தியுற்று கண்டிராத ஆதம் (அலை) மும் , ஹவ்வா (ரலி)வும் திடுக்கிட்டு போனார்கள். செய்வதறியாது திகைத்தார்கள் , ஷைத்தான் தம்மை நன்கு ஏமாற்றி விட்டதை உணர்ந்தார்கள் , தம் தவறை நினைத்து வருந்தினார்கள் . 
            தாம் சுவன வாழ்க்கையிலிருந்து , பூமியின் சிரமம் நிறைந்த வாழ்க்கைக்கு தள்ளப்பட்டு விட்டோமே என்ற துக்கத்தை விட அல்லாஹ் தம் மீது அதிருப்தி கொண்டு விட்டானே என்ற வருத்தத்தைதான் அவர்களால் தாங்க இயலவில்லை , முதலில் அல்லாஹ்வின் அதிருப்தியை போக்க வேண்டும் , அதற்கு என்ன வழி ? என்பதைதான் யோசித்தார்கள் , அல்லாஹ்வின் கருணையை பாருங்கள் , தன்னுடைய அதிருப்தியை போக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ்வே அவர்களுக்கு கற்றுக்கொடுத்தான்.
       எனவே ஆதம் அலை தன் தவறுக்காக இறைவனிடம் எவ்வாறு மன்னிப்பு வேண்ட வேண்டும் என்பதற்காக , தம் இரட்சகனிடமிருந்தே மன்னிப்பு வேண்டும் சில வார்த்தைகளை கற்று கொண்டு அல்லாஹ்விடத்தில் வருந்தி தம் தவற்றை மன்னிக்க வேண்டினார்கள். ஆகவே அல்லாஹ்வும் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டான். அல்லாஹ்வின் அதிருப்தியும் நீங்கியது . காரணம் அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவனும், அடியார்களின் நிலை கண்டு இரங்கக் கூடியவனுமாக இருக்கிறான். அவன் கல்நெஞ்சக்காரன் இல்லை, அவன் அதிருப்தியும் கொள்கிறான் , அடியார்கள் மன்னிப்பு வேண்டினால் அவர்கள் மீது இரங்கி அவர்களுக்காக கருணையும் கொள்கிறான் . இவ்வாறுதான் சுவனத்தில் வாழ்ந்த மனித சஞ்சாரம் பூமியில் வாழத்தொடங்கியது . இதுதான் மனிதன் பூமிக்கு வந்த வரலாறு .  
             இதில் நாம் சிந்தித்துணர வேண்டிய பல்வேறு படிப்பினைகள் உள்ளன. மனிதர்களின் சொந்த வீடு சுவனம் , உலகில் நற்காரியங்கள் புரிந்து மீண்டும் அவ்வீட்டை அடைய வேண்டும் . ஷைத்தான் பாவத்தை அதன் தோற்றத்தில் காட்டமாட்டான் நன்மையாகவும், இன்பமாகவும் காட்டி அதை செய்ய வைக்க முயற்சிப்பான். பாவத்திற்கு பின்னால் மறைந்திருப்பது வருத்தமும், கைசேதமும்தான், பாவம் நிகழ்ந்து விட்டால் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் நாமும் பிறரின் தவறை மன்னித்துவிடுகின்ற குணங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ் அமல் செய்ய தவ்பீக் செய்வானாக –ஆமீன் !
             சுவனவாழ்விலிருந்து பூமியின் சிரமங்கள் நிறைந்த வாழ்வுக்கு தள்ளப்பட்டது முதல் மனிதர் சந்தித்த எவ்வளவு பெரிய சோகம் அது ? இருப்பினும் அவர் சோர்ந்து விட வில்லை , சறுக்கி கீழே விழுந்த பின் மீண்டும் எவ்வாறு எழுந்து நிற்பது என யோசிக்கலானார் , எவ்வளவு பெரிய உயரத்திலிருந்து விழுந்தாலும் மீண்டும் ஏறி அந்த உயரத்தை அடைய முடியும் என்ற மன தைரியத்தை அல்லாஹ் முதல் மனிதருக்கு கற்றுக்கொடுத்திருந்தான் , அத்துடன் அதற்கு வழியும் காட்டினான் ,
             மனிதர்களே ! நீங்கள் யாவரும் சுவனத்திலிருந்து பூமிக்கு இறங்கிவிடுங்கள் என்று நாம் கூறினோம் , ஆகவே ஒட்டு மொத்த மனித சஞ்சாரமும் பூமிக்கு இறங்கிவந்து விட்டது , பூமியில் வந்துவிட்டதால் அவர்களுக்கும், படைத்தவனுக்குமிடையேயான தொடர்பு விட்டு போகாது , எனவே  பூமியில் நீங்கள் விரும்பிய கட்டுபாடில்லாத வாழ்க்கை வாழ இயலாது , மாறாக என்னிலிருந்து உங்களுக்கு வழிகாட்டுதல் வரும் , உங்களிலிருந்தே நல்ல மனிதர்களை தேர்ந்தெடுத்து , அவர்களுக்கு என்னுடைய தூதுச் செய்திகளை மலக்குகள் மூலம் தெரிவிப்பேன் , அவர் உங்கள் யாவருக்கும் என் செய்திகளை தெரிவிப்பார். பின்னர் உங்களில் யார் என்னுடைய வழிகாட்டுதலை பின்பற்றி உலகில் வாழ்வார்களோ அவர்களுக்கு எதிர் வரும் வாழ்வு பற்றிய  எவ்வித பயமும் கொள்ள வேண்டிய தேவை இருக்காது. மேலும் அவர்கள் கடந்து போன வாழ்வை எண்ணி  கவலைக்குள்ளாகவும் மாட்டார்கள்.  எந்த சுவனத்திலிருந்து பூமிக்கு வந்தாரோ மீண்டும் அதே சுவனத்தை பெற்று இன்புறுவர் , பின்பு அதிலிருந்து ஒரு காலும் வெளியேற்றப்பட மாட்டார்கள் .அதிலேயே அவர்கள் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள் . 
                மேலும் எவர்கள் என்னையே ஏற்றுக் கொள்ள மறுத்து, அவர்களுக்கு நான் காட்டிய வழிகாட்டுதல்களை, நமது உறுதியான அத்தாட்சிகளை பொய்ப்பித்து உலக வாழ்க்கையை தொலைத்து, என் வெறுப்புக்கும், கோபத்திற்குமுறிய விதத்தில் வாழ்வார்களோ அவர்கள் மரணத்திற்குப்பின் நரகில் நுழைவார்கள். அவர்கள் நரக வாசிகள், அதிலே அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
             பூமிக்கு வந்த பின் மனிதன் தட்டளிந்து கொண்டிருந்த போது அல்லாஹ் கூறிய இந்த முதல் செய்தி எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது ! என்பதை ஒவ்வொரு மனிதரும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளார் , ஆக இவ்வுலக வாழ்க்கை என்பது சுவனத்திற்கான தகுதிகளை பரிசோதிப்பதற்காக மனிதனுக்கு தரப்பட்டுள்ள வாழ்க்கையாகும் , எனவே மனிதர்கள் இவ்வுலகில் இறைவனின் வழிகாட்டுதல்கள் படி நடந்து தன்னுடைய தகுதியை நிரூபிக்க வேண்டும் , அல்லாஹ் இதை உணர்ந்து செயலாற்ற தவ்பீக் செய்வானாக , ஆமீன் . 

No comments:

Post a Comment