Sunday, December 4, 2016

சூரா பகரா (6)

يَابَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ (47) وَاتَّقُوا يَوْمًا لَا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنْصَرُونَ (48) وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَظِيمٌ (49) وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ (50) وَإِذْ وَاعَدْنَا مُوسَى أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ (51) ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (52) وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ (53) وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَاقَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنْفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنْفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِنْدَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ (54) وَإِذْ قُلْتُمْ يَامُوسَى لَنْ نُؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنْظُرُونَ (55) ثُمَّ بَعَثْنَاكُمْ مِنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (56) وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ (57) وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ (58) فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنْزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ (59)

                 இஸ்ராயீலின் சந்ததியினர்களே ! திரும்பவும் கூறுகிறேன் , நான் உங்கள் மீது புரிந்த என் அருள் பாக்கியங்களையெல்லாம் நினைவு  கூர்ந்து பாருங்கள். உங்கள் இனம் நபிமார்கள் வந்த இனம் , நபி என்றாலே உங்கள் இனத்தில் தான் வருவர் என்று உலகத்தார்களால் நம்பப்படும் அளவுக்கு  உங்கள் இனத்தவர்களை  நான் உலகத்தார்களை விட மேன்மைப்படுத்தியும் கண்ணியத்தையும் அளித்து வைத்திருந்தேனே , இவை சாதாரண சிறப்புகளா ? இவ்வளவு சிறப்பளிக்கப்பட்டவர்கள் , அல்லாஹ்வுடைய செய்தியை உலக மக்களுக்கு எத்திவைக்கும் உயர்ந்த பொறுப்பு தரப்பட்டவர்கள் , பிற மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டியவர்களுமான நீங்கள் பிற மக்களைக் காட்டிலும் எந்த அளவு அல்லாஹ்வுடன்  உண்மையானவர்களாகவும் விசுவாசத்துடனும் செயல்பட்டிருக்க வேண்டும் ? இதனை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டாமா ?
             மேலும் நீங்கள் உங்களை எதிர் நோக்கி வர இருக்கும்  ஒரு மாபெரும் நாளை அஞ்சிக்கொள்ளுங்கள் ,  அது தான் கூலி கொடுக்கப்படும் நாள் , அந்த நாள் உலக நாட்களைப் போன்றிருக்காது. உலகிலே ஒருவர் தர வேண்டியதை மற்றவர் கொடுத்து அவரை விடுவித்துவிடமுடியும் , ஆனால் அந்த நாளிலோ எந்த ஓர் ஆத்மாவும் பிற ஆத்மாவின் சார்பாக எதையும் நிறைவேற்ற இயலாது.  தொழுகையிலோ, பிற கடமைகளிலோ ஒருவர் செய்த குறைகளை மற்றவர் ஈடு செய்ய முடியாது , மேலும் உலகிலே பிறரின் பரிந்துரையை பெற்று தப்பித்துக்கொள்வது போல் அந்நாளில் யாரின் சார்பாகவும் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாது. மேலும் உலகிலே  நஷ்டஈடுகளை தர முன் வருவது போல் அந்நாளிலே எப்படிப்பட்ட நஷ்ட ஈட்டை ஒருவர் அளிக்க முன் வந்தாலும் அது வாங்கிக்கொள்ளப் படாது. மேலும் உலகிலே சிரமத்திலே சிக்குண்டவர் மீது இரங்கி பலரும் உதவ முன் வருவதுபோல அந்நாளிலே அவர்கள் பிறரால் எவ்வித உதவியும் செய்யப்பட மாட்டார்கள். மனிதர்கள் யாவரும் நிர்க்கதியற்றுப் போய் பரிதவிக்கும் அந்நாளை சந்திக்கும் முன் உலகிலே இறை விசுவாசத்தோடு நற்காரியங்கள் புரிந்து அந்நாளின் வேதனையை விட்டு தப்பிக்க முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் நம் யாவரையும் கியாமத் நாளின் அமலிதுமளிகளை விட்டும் பாதுகாப்பானாக – ஆமீன் ! 
               மேலும் இஸ்ராயீலின் சந்ததியினர்களே! நாம் உங்களை பிர்அவ்னுடைய கூட்டத்தார்களிலிருந்து காப்பாற்றிய அச்சந்தர்ப்பத்தை சற்று எண்ணிப்பார்த்து அல்லாஹ்வுடைய அருளையும், ஆற்றலையும் நினைவு கூருங்கள். இஸ்ரவேலர்கள் தம் வரலாற்றிலே கடுமையான சோதனைகளை சந்தித்து வந்துள்ளார்கள், அவற்றில் ஒன்று தான் பிர்அவ்ன் எனும் கொடுங்கோல் அரசனால் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகள் , இவன் தன் ஆளுகையின் கீழ் வாழ்ந்து வந்த இஸ்ரவேலர்களை  தம் நாட்டு பிரஜைகளாக அல்லாமல் கொத்தடிமைகளாக , தாழ்த்தப்பட்ட இனத்தவர்களாக நடத்தினான். அவன்  செய்த கொடுமைகளுக்கு உலக வரலாற்றில் உதாரணம் கிடைப்பது அரிது . அந்தளவு கொடூரமான வேதனையால் அவன் உங்களை கொடுமைப்படுத்தினான். அதன் உச்சகட்டமாக  உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் எந்தெந்த குழந்தைகள் ஆண் பிள்ளைகளாக பிறக்குமோ அவற்றை தேடிப்பிடித்து பாவமறியாத அந்த சின்னஞ்சிசுக்களை கூட எவ்வித ஈவு இரக்கமில்லாமல் அவனது ஆட்கள் கொன்று குவித்தார்கள் , பெண் குழந்தைகளாக இருந்தால் அவற்றை கொல்லாமல் விட்டு விடுவார்கள். இவ்வாறு ஆண் குழந்தைகளை கொல்வதற்கு காரணம் பிர்அவ்ன் கண்ட ஓர் கனவு என கூறப்படுகிறது. அக் கனவிற்கு விளக்கம் கூறியவர்கள் இஸ்ரவேலர்களில் ஓர் ஆண் குழந்தை பிறக்க இருக்கிறது, அது பிறந்து வளர்ந்து வந்து உன்னையும், உன் ஆட்சியையும் இல்லாமல் செய்து விடும் என விளக்கம் கூறினார்கள். அதை தடுப்பதற்காக அவன் ஆடிய ஆட்டம்தான் இது . இவ்வாறு , என்ன குழந்தை பெற வேண்டும் என்ற அடிப்படை உரிமைகள் கூட பிடுங்கப்பட்டு அடிமைப்பட்டு அவர்கள் கிடந்தார்கள் ,  தாம் ஆசை ஆசையாய் பெற்றெடுத்த குழந்தை தமது கண்களுக்கு முன்னால் துடிக்க துடிக்க வெட்டப்படுவதை கண்டு பெற்றோர்கள் துடிதுடித்துப்போவார்கள் , இது போன்ற துயரம் உலகில் வேறொன்றும் இருக்க முடியாது , இத்தகைய கொடூரங்களிலிருந்து அல்லாஹ் உங்களுக்கு விடுதலை தந்தானே அது எத்தனை பெரும் கருணை ? மேலும் இவ்வாறு அவர்கள் உங்களை கொடுமைப்படுத்தியதில்  உங்களின் இரட்சகனின் புறத்திலிருந்து உங்களுக்கு மகத்தான சோதனை இருந்தது . அல்லாஹ் பாவங்களின் காரணமாக சோதிக்க நினைத்து விட்டால் இவ்வளவு பயங்கரமான சோதனைகளும் வரலாம். அல்லாஹ் அவன் சோதனைகளை விட்டும் நம் அனைவரையும் பாதுகாப்பானாக 
                  இத்தகைய கொடூரங்களிலிருந்து விடுபடும் நேரம் வந்தது, இறை நாட்டப்படி மூஸா (அலை) பிறந்து வளர்ந்து அல்லாஹ்வின் தூதராக ஆக்கப்பட்டு பிர்அவ்னின் கொடுமைகளிலிருந்து இஸ்ரவேலர்களை விடுவித்து அவர்களை அழைத்துக்கொண்டு மிஸ்ர் தேசத்தை விட்டு வெளியேறினார்கள் , அதையறிந்த பிர்அவ்னும் தனது  படைபட்டாளங்களுடன் அவர்களை துரத்திக்கொண்டு வந்தான் ,  இஸ்ரவேலர்கள் சென்ற பாதையில் நைல் நதி குறுக்கிடுகிறது . அது கடலைப்போல் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது , எனவே அவர்களால் முன்னேற முடியவில்லை ,  பின் பக்கமோ பிர்அவ்னின் பட்டாளங்கள் கூரிய ஆயுதங்களுடன் இவர்களை நெருங்கிக் கொண்டிருந்தார்கள் , ஆதலால் பின்பக்கமும் நகர முடியாது , இஸ்ரவேலர்கள் நடுவிலே சிக்கிக்கொண்டார்கள் ,  ஒட்டுமொத்தமாக இஸ்ரவேலர்கள் யாவரும் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருந்தார்கள். அதனை இங்கே நினைவூட்டி அல்லாஹ் கூறுகிறான் , அந்நேரத்தில் நாம் உங்களுக்காக யாருமே எதிர்பார்க்காத விதத்தில்  அக்கடலையே இரண்டாக பிளக்கச் செய்து உங்களை காப்பாற்றினோம். நீங்கள் அக்கடலை கடந்த பின்பு , அது  பிளந்து வழி அமைந்த அதே பாதையில் பிர்அவ்னும், அவன் படையும் உங்களை பின் தொடர்ந்தனர். ஆனால் அவர்கள் யாவரையும் உங்கள் கண்களுக்கு முன்பாகவே நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அக்கடலில் மூழ்கடித்தோம். நிமிட நேரத்தில் உங்களுக்கு வர இருந்த அழிவு அவர்களுக்கு மாறிப்போனது . இவையெல்லாம் இஸ்ரவேலர்கள் மீது அல்லாஹ் புரிந்த எவ்வளவு பெரிய உபகாரங்கள்? இதை அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டாமா? 
                இந்த வசனத்தில்  சில படிப்பினைகள் உள்ளன. உலகிலுள்ள வஸ்துக்கள் யாவும் அல்லாஹ்வின் நாட்டப்படிதான் இயங்குகின்றன. கடல் ஆர்ப்பரிப்பதும், பொங்குவதும், அமைதி கொள்வதும் கூட அவன் உத்தரவுபடிதான். அல்லாஹ் நாடிவிட்டால் சில விநாடிகளிலேயே சாதகமான அம்சங்கள் பாதகங்களாகவும், பாதகங்கள் சாதகங்களாகவும் மாறிப் போகும். அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட அடியார்கள் எவ்வளவு சிரமங்களை எதிர் கொண்டாலும் இறுதி வெற்றி அவர்களுக்குத் தான்.
                பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டு இஸ்ரவேலர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பித்தார்கள் , அடிமை வாழ்வு முடிவுக்கு வந்து புதிய வாழ்வு பிறந்தது , இப்போது அவர்கள் மீது தனது அருளை நிறைவு படுத்துவதற்காக  ஷரீஅத் சட்டதிட்டங்கள் அடங்கிய இறை வேதம் தவ்ராத் அருளப்படுவதற்கான நேரம் வந்து விட்டது , அல்லாஹ்வின் வேதம் உலகிற்கு வருவது சாதாரண நிகழ்வல்ல, அவ்வேதம் அருளப்படுவதற்கு முன்பு மூஸா (அலை) அவர்களும் தம்மை மனரீதியாகவும் , ஆத்மீக ரீதியாகவும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகையால் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களை தூர்சினாய் மலைக்கு வந்து தன் வணக்கத்தில் 40 நாட்கள் ஈடுபடுமாறு கட்டளையிட்டான்,  மூஸா(அலை) அவர்களும் தவ்ராத் வேதத்தை பெறப்போகிறோம் என்ற சந்தோஷத்தில் சினாய் மலைக்கு புறப்பட்டுவிட்டார்கள், அவர்கள் அங்கு தங்கியிருந்த 40 நாட்களுக்குள் இங்கே இஸ்ரவேலர்களுக்கு மத்தியில் ஒரு பெரிய குழப்பமே ஏற்பட்டு போனது. ஸாமிரீ என்பவன்  இஸ்ரவேலர்களிடம் இருந்த தங்க நகைகளை உருக்கி அதிலே  காளைக்கன்று சிலை செய்து இதிலே இறைவன் புகுந்துவிட்டான், இது தான் இறைவன், இதை விட்டு விட்டு நபி மூஸா(அலை) எங்கோ சென்றுவிட்டார் என ஒரு வதந்தியை கிளப்பி விட அதை அம்மக்களும் நம்பி சிலர் அதை வணங்கவும்  ஆரம்பித்து விட்டார்கள், இது எவ்வளவு பெரிய மடத்தனம் ? யாராவது கடவுள் பெயரால் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தினாலும் , அல்லது ஏமாற்றினாலும் உடனே ஏமாந்து போகும் அளவுக்கு  இறை விசுவாசத்தின் விளிம்பு நிலையில்தான் அம்மக்கள்  இருந்து வந்தார்கள் , அல்லாஹ்வின் மிகப்பெரிய அத்தாட்சிகளையெல்லாம் அவர்களின் கண்ணுக்கு முன்னால் செய்து காட்டிய ஓர் உன்னதமான நபியின் சொல்லை புறக்கணித்து விட்டு ஏதோ ஓர் ஏமாற்றுக்காரனின் கூற்றை நம்ப ஆரம்பித்து  விட்டார்கள் , இது எத்தனை பெரிய துரோகம் ? எவ்வளவு பெரிய பாவம் ? இந்த பெரும் பாவத்தை கூட அல்லாஹ் மன்னிப்பது அவனின் மிகப்பெரிய கருணையாகும் . அல்லாஹ் கூறுகிறான் ,
             பிர்அவ்னின் கொடுமைகளை விட்டும் இஸ்ரவேலர்களுக்கு விடுதலை தந்தபின் அவர்கள் எடுத்து நடப்பதற்கான சட்ட திட்டங்களை உள்ளடக்கிய ஒரு வேதத்தை நாற்பது இரவுகளில் நாற்பது நாட்களில் மூஸா (அலை)வுக்கு அருளப்போவதாக நாம் வாக்களித்த அந்த தருணத்தை நினைத்துப் பாருங்கள், அவர் நாற்பது நாட்கள் நம்முடைய வணக்கத்தில் திளைப்பதற்காக உங்களை விட்டு வந்ததற்குப்பின் அவருக்குப் பிறகு நீங்கள் அற்பமான கன்றின் சிலையைப்போய் தம் தெய்வமாக நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள், இது விஷயத்தில் நீங்கள் நன்றி மறந்த அநியாயக்காரர்களாக இருந்தீர்கள். பின்பும் நீங்கள் இனியாவது அல்லாஹ்வுக்கு நன்றியோடு வாழும் நல் அடியார்களாக ஆவீர்கள் என்பதற்காக நாம் உங்களை உங்களின் குற்றத்தை மன்னித்தோம்.
            இந்த ஆயத்துகளில் நாம் பெற வேண்டிய சில படிப்பினைகள் யாதெனில் அல்லாஹ்வுடைய வேதம் உலகிற்கு திடீரென அனுப்பப்படாமல் அது அனுபப்படும் முன்பு அதனுடைய மகத்துவத்தையும், மேன்மையையும் உணரச் செய்யப்படுகிறது. நாற்பது நாட்கள் என்பதற்கும், மனம் பண்படுவதற்கும்  நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அடியார்கள் மாபெரும் பாவங்களை புரிந்து விட்ட போதிலும் அவர்கள் மனந்திருந்தி உண்மையான உள்ளத்தோடு பாவமன்னிப்பு தேடினால் அல்லாஹ் மன்னிக்க தயாராக இருக்கிறான்.
         கன்றுச்சிலையை வணங்குதல் என்ற பெரும் பாவத்தில் ஈடுபட்டுவிட்டாலும் அல்லாஹ் தன்னுடைய பேரருளான தவ்ராத் அருளப்படுவதை நிறுத்திக்கொள்ள வில்லை, அவர்களின் நேர்வழிக்காக அதனை மூஸா அலை அவர்களுக்கு அருளினான், அல்லாஹ்வின் வேதம் மனிதர்களுக்கான பிரகாசம் , கண்ணொளி பிடுங்கப்பட்டு விட்டால் எதையும் பார்க்க முடியாமல் போய் விடுவதைப்போல வேதம் அருளப்படாமல் போனால் நல்லது தீயதை பிரித்துணர முடியாமல் போய் விடும் , அது மனிதர்களை நரகத்தில் கொண்டு தள்ளி விடும் , எனவேதான் அல்லாஹ் அவர்களின் பாவங்களுக்காக வேதத்தை பிடுங்கிக்கொள்ளவில்லை , இதுவும் இறைவனின் உபகாரமாகும் .
         நாம் உங்களின் தூதரான மூஸா(அலை)வுக்கு நீங்கள் உங்களுடைய வாழ்வில் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக வேண்டி தவ்ராத் எனும் வேதத்தை , நன்மை தீமைக்கு மத்தியில் பிரித்துக் காட்டும் தீர்க்கமானதை நாம் அருளினோம். இவ்வாறு நாம் உங்களுக்கு பெரும் உபகாரம் செய்தோம் இதை நீங்கள் நினைத்துப் பார்த்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக் கூடாதா?
         மனிதர்கள் செய்யும் பாவங்கள் , பாவம் செய்த நபர்கள் , பாவம் நடந்த இடம் , சூழல் ஆகியவற்றை வைத்து அவற்றின் கடுமைகள் வித்தியாசப்படும் , ஆதலால் அதற்கான தண்டனையும் பாவங்களுக்கேற்ப கடுமையாக இருக்கும் . இங்கே ஒரு நபியை பார்த்த மக்களே பாவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் , அதுவும் சாதாரண பாவமல்ல, பெரும் பாவங்களில் முதன்மையான அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் என்ற கொடூர பாவத்தை புரிந்துள்ளார்கள் , அதுவும் அல்லாஹ்வின் தூதர் , அல்லாஹ்விடமிருந்து வேதத்தை வாங்கி வருவதற்காக சென்ற அப்புனிதமான நாட்களில் இப்பாவத்தை செய்துள்ளார்கள் , இதன் காரணமாகவே அவற்றிற்கான தண்டனையும் பிற மக்களெல்லாம் படிப்பினை பெரும் நோக்கில் கடுமையாக்கப்பட்டது , அல்லாஹ் கூறுகிறான்.
                 நபி மூஸா(அலை) தம் சமுதாய மக்களான பனூ இஸ்ராயீல்களிடம் கூறிய இச்செய்தியை சற்று நினைத்து பாருங்கள் , மூஸா(அலை) கூறினார்கள். என் சமுதாயமே! அல்லாஹ்வின் ஆற்றல்களை வல்லமைகளை கண் கூடாக கண்ட பின்பும் , நீங்கள் ஒன்றுக்குமே உதவாத, அற்ப கன்று சிலையை தெய்வமாக ஏற்றுக் கொண்டு, அதனை வழிபட ஆரம்பித்து , பாவங்களிலேயே மிகப் பெரும் பாவமான ஷிர்க் எனும் இணை வைத்தல் என்ற பெரும் பாவத்தை செய்ததன் மூலம் உங்களுக்கு நீங்களே அநீதமிழைத்து விட்டீர்கள். இதனால் அல்லாஹ்வை விட்டு நீங்கள் வெகுதூரம் விலகி விட்டீர்கள் , இந்த பாவத்தை நினைத்து வருந்துங்கள். உங்களை படைத்த அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் தவ்பா செய்து மீளுங்கள்.  அந்த தவ்பா உண்மையானதாக இருக்க வேண்டும் , எனவே மன்னிக்க முடியாத இக்குற்றத்திற்கு பரிகாரமாக நீங்கள் உங்களில் காளைக் கன்றை வணங்குவதில் ஈடுபட்டோரை , அதை விட்டும் ஒதுங்கிக் கொண்டோர் தம் கைகளால் தம் இனத்தவர்களுக்கு மரண தண்டனை தர வேண்டும். இதுதான் அம்மக்கள் செய்த இணைவைத்தல் குற்றத்திற்கு அல்லாஹ் கொடுத்த தண்டனை , முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஷரீஅத்திலும் மனிதர்கள் சில பாவங்கள் புரிந்துவிட்டால் அதற்கு நாவளவில் தெளபா செய்வது மட்டுமல்லாமல் பாவம் புரிந்தவர்கள் கொல்லப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. உதாரணமாக பிற முஸ்லிமை வேண்டுமென்றே அநியாயமாக கொலை செய்தால் அதன் தண்டனை கொலை செய்தவரும் கொல்லப்பட வேண்டும். திருமணமான ஆண், பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டால் இப்பாவத்திற்கான தண்டனையும் குற்றம் புரிந்தவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதாகும் , இது போலவே மூஸா(அலை)வுடைய ஷரீஅத்தில் ஷிர்க் போன்ற பெரும் பாவங்களுக்கு பாவம் புரிந்தவர்கள் கொல்லப்பட வேண்டும். அப்போது தான் அவர்களின் தவ்பா நிறைவு பெறும். இதையே அம்மக்களுக்கு மூஸா(அலை) கூறினார்கள். மேலும் சொன்னார்கள் , நீங்கள் இந்த கட்டளைக்கு மறுப்பு தெரிவிப்பதை விட  இவ்வாறு நீங்கள் கொலையுண்டு குற்றப்பரிகாரம் தேடுவதுதான் உங்களை படைத்தவனிடத்தில் சிறந்ததாகும். ஏனெனில் உலகத்துடைய தண்டனையை சகித்துக்கொள்ள முடியும் ,மறுமையுடைய தண்டனையை யாராலும் சகிக்க முடியாது. எனவே உலகத்திலேயே தமது தவறுகளுக்கு பரிகாரம் தேடிக்கொள்ளுங்கள், மூஸா(அலை) அவர்களின் கட்டளைக்கு ஏற்ப குற்றம் புரிந்தவர்கள் தம் உயிரை இழக்க தயாராகி தாம் செய்யும் தெளபா உண்மையானது என்பதை நிரூபித்தார்கள். மாபெரும் குற்றவாளிகளாக திகழ்ந்தவர்கள் ஒப்பற்ற இந்த தவ்பாவினால் புனிதர்களாக மாறிவிட்டார்கள் , எனவே நீங்கள் செய்த பாவங்களால் உங்கள் மீது கோபம் கொண்டிருந்த இறைவனும் உங்களின் பால் முன்னோக்கி உங்களை மன்னித்து விட்டான். ஏனெனில் அல்லாஹ் அவன் அடியார்களின் பாவங்களை அதிகம் மன்னிப்பவனாகவும், அவர்கள் மீது அதிகம் கிருபை கொண்டவனாகவும் இருக்கிறான். இதனால்தான் அவனது மன்னிப்பை வேண்டி தம் உயிரையே இழந்த அடியார்களை மன்னித்தது மட்டுமல்லாது அவர்களை நரக நெருப்பை விட்டும் பாதுகாத்து உயர்வான சுவர்க்கத்திலே புகச் செய்கிறான்.
             படிப்பினைகள்: மனிதர்கள் நேர்வழி பெறுவதற்கு அல்லாஹ்வுடைய வேதத்தை பற்றிப் பிடிக்க வேண்டும். மனிதர்கள் புரியும் பாவம் அது தமக்குத்தாமே இழைக்கும் தீங்குகளாகும், அதன் பாதிப்பு அவர்களையே தாக்கும். அல்லாஹ்வுக்கு இணையாக ஷிர்க்காக எவற்றையேனும் வணங்குவது பாவங்களிலேயே மிகப் பெரிய பாவமாகும் , பாவங்கள் நிகழ்ந்து விட்டால் உடனடியாக அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கோர வேண்டும். தாம் செய்யும் தவ்பாவில் தாம் உண்மையாளர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகள் யாவற்றிலும் அல்லாஹ்வுடைய அருளும், கிருபையும் தான் மறைந்திருக்கும். தான் செய்த பாவத்திற்கு உயிரை மாய்ப்பதுதான் பரிகாரம் என்றால் உயிரை மாய்ப்பதற்கும் தயாராக வேண்டும் , பாவக்கறைகளுடன் வாழ்வதை உயிரை விடுவதற்கு சமமாக வெறுக்க வேண்டும் .ஷிர்க் என்ற பாவத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதற்காகத்தான் அல்லாஹ் அம்மக்களுக்கு இவ்வாறான தண்டனை கொடுத்தான் , அல்லாஹ் நம்மை பாவங்களிலிருந்து முழுமையாக  பாதுகாப்பானாக   - ஆமீன்
              ஷிர்க்கிலிருந்து தவ்பா செய்வதற்காக ஷிர்க் செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது ,அதனால் ஏற்பட்ட சலசலப்பு அடங்கியதும் அல்லாஹ் ஹஜ்ரத் மூஸா அலை அவர்களுக்கு அருளிய புனித தவ்ராத் வேதத்தின் பால்  அவர்கள் கவனத்தை திருப்பினார்கள், மூஸா (அலை) தவ்ராத் வேதத்தை அவர்களுக்கு தெளிவாக போதித்தார்கள் , அம்மக்களை தவ்ராத்தின் மீது பரிபூரண ஈமான் கொள்ள ஆர்வப்படுத்தினார்கள்  , தவ்ராத் வேதத்தில் எவ்வித குறையும் இல்லை, அதை திறந்த மனதுடன் படித்துப்பார்த்து அது காட்டும் நேர்வழிப்படி நடந்திருந்தால் இருலோக வெற்றியை பெற்றிருக்கலாம் , ஆனால் அதைவிட்டு விட்டு  அம்மக்களிடையே இருந்த விதண்டாவாதம் பேசும் சிலர் இன்று திருக்குர்ஆன் குறித்து கேட்பது போல  ஓர் விபரீதமான கோரிக்கையை நபியிடம் முன்வைத்தார்கள் , “மூஸாவே” இந்த புத்தகத்தில் உள்ளவை யாவும் அல்லாஹ்வின் வார்த்தைகள் தான் என்பதை நாங்கள் எவ்வாறு நம்புவது ? ஆதலால் நீங்கள் அல்லாஹ்வுடைய பேச்சை செவியேற்றது  போல நாங்களும் அல்லாஹ் பேசுவதை செவியேற்க  வேண்டும் . அப்போதுதான் எங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை பிறக்கும் ” என்று கூறலானார்கள், ஒரு நபியோடு அவர்கள் இந்தளவு மிகவும் தரம் தாழ்ந்த முறையில் நடந்து கொண்டார்கள் , ஆனால் மூஸா அலை அவர்களோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் எப்படியாவது அவர்களிடம் விசுவாசத்தை ஏற்படுத்திட வேண்டும் என்ற நன்னோக்கிலே அல்லாஹ்விடத்தில் அதற்காக பிரார்த்தித்தார்கள் , அல்லாஹ்வும் தமது பிரியமான நபியின் பிரார்த்தனையை அங்கீகரித்து  அவர்களில் 70 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களையும் தன்னுடன் தூர்சினா மலைக்கு அழைத்து வருமாறு கட்டளையிட்டான். அவ்வாறே  70 நபர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டு நபி மூஸா அலை வுடன் தூர்சினா மலைக்கு அழைத்து வரப்பட்டார்கள், சிறிது நேரத்தில் மூஸா (அலை) அவர்களுடன் அல்லாஹ் பேச ஆரம்பித்தான். பரிசுத்த அல்லாஹ்வின் பேச்சை அங்கு வந்திருந்த 70 நபர்களும் தெளிவாகவே  செவியேற்றார்கள். அல்லாஹ்வின் பேச்சை கேட்பது என்ன சாதாரண விஷயமா ? எவ்வளவு பெரிய பாக்கியம் அது ? அல்லாஹ்வுடன் தனது உரையாடலை முடித்து திரும்பிய மூஸா அலை,  அம்மக்களை நோக்கி இப்போது திருப்தி தானே ?, இப்போதாவது இதனை நம்புகிறீர்களா ? என வினவினார்கள் , மூஸா அலை தனது  கேள்விக்கு அவர்களிடமிருந்து நிறைவான பதில் வரும் என்றுதான் எதிர்பார்த்திருந்தார்கள் , ஆனால் அம்மக்கள் கூறிய பதில் நபி மூஸா அலை அவர்களையே திகைக்க வைத்தது, அதனை அல்லாஹ் கூறிக்காட்டுகிறான் ,  
             அந்நேரத்தில்  நீங்கள் , மூஸா(அலை)வே! நாங்கள் பேச்சை கேட்டோம் தான், ஆனால் எங்களுக்கு ஒரு சந்தேகம் , இப்போது அல்லாஹ்தான் பேசினான் என்பதை எவ்வாறு நாங்கள் உறுதிப்படுத்துவது  ? ஆதலால் நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக பார்க்காத வரை உங்களை ஒருபோதும் நம்புவதாய் இல்லை என முடிவு செய்து விட்டோம்  என்று கூறினீர்கள் , அல்லாஹ்வை கண்கூடாக பார்த்ததற்கு பிறகு நம்புவதற்கு ஈமான் என்றே கூறப்படாது , அந்த ஈமானுக்கு அல்லாஹ்விடத்தில் எந்த மதிப்பும் இல்லை , அதனால்தான் மறுமை நாளில் பாவிகள் அல்லாஹ்வை கண்கூடாக கண்டதற்குப்பின் ஈமான் கொள்வதற்கு முன் வரும்போது அவர்களின் ஈமான் ஏற்றுக்கொள்ளப்படாது , மறுக்கப்பட்டு விடும் , ஆதலால் உங்களின் இந்த பதில் எல்லா அற்புதங்களை காட்டிய பிறகும் நபியை ஈமான் கொள்ள மறுப்பதற்கு சமமாகும் , ஒரு நபி அற்புதங்களை காட்டி தன்னை இறைவனின் தூதர் என நிரூபித்த பிறகும் அவரை ஏற்க மறுத்தால் அவர்கள் மீது இறைவனின் வேதனை இறங்கி விடும் , எனவே உங்களின் இவ்வொழுக்ககேடுக்கு தண்டனையாக நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பெரும் இடி முழக்க சப்தம் உங்களை தாக்கியது , அதனால் நீங்கள் யாவரும் மரணித்துப் போனீர்கள்,
          அதற்குப் பிறகும் மூஸா(அலை) மனந்தளரவில்லை , அம்மக்கள் புரிந்த அக்குற்றத்திற்காக அல்லாஹ்விடத்தில் மன்றாடி அவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டினார்கள். ஆதலால் அவர்களின் பிரார்த்தனையை அங்கீகரித்து உங்களை மரணிக்கச் செய்த பின்னரும் கூட  மறுமுறை உயிரூட்டி எழுப்பினோம். இனியாவது நீங்கள் அல்லாஹ்வின் உபகாரங்களை எண்ணிப் பார்த்து அவனுக்கு நன்றி செலுத்திவீர்கள் , அவன் விரும்பியவாறு வாழ்வீர்கள் என்பதற்காக உங்களுக்கு மறு வாழ்வு தந்தோம் . யா அல்லாஹ் நாங்கள் உன்னையும், உன் சத்திய தூதர்களையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டோம் , எங்களை உன்வேதனையை விட்டும் நிரந்தரமாக பாதுகாப்பாயாக – ஆமீன்
படிப்பினைகள் 1. அல்லாஹ்வுடனும் அவன் தூதர்களுடன் மிக ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும், சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டால் அந்த சந்தேகத்திற்கு எல்லையே இல்லாமல் போய்விடும் , ஆதலால் அத்தாட்சிகளை முன் வைத்து உறுதியாக நம்பிக்கை கொள்ள முன்வர வேண்டும். இன்று உலகில் ஏராளமானோர் இந்த சந்தேக பிணி கொண்டு தான் வாழ்ந்து வருகிறார்கள் – அல்லாஹ் நம்மை இந்திலையை விட்டும் பாதுகாப்பானாக. 
                இஸ்ரவேலர்களின்  சொந்த நாடு ஷாம் பிரதேசமாகும் . அங்கிருந்து வெளியேறிய பின் அந்நாட்டை அமாலிகா என்ற பெரும் வம்பர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அவர்களும் பூமியில் பெரும் அட்டூழியங்கள் செய்தார்கள் . எனவே  அல்லாஹ்வின் எதிரிகளான அவர்களுடன் போரிட்டு தம் நாட்டையும் திருப்ப வேண்டும், அத்துடன் அவர்களின் எல்லை மீறிய அட்டுழியங்களுக்கும் முற்றுப் புள்ளிவைக்க வேண்டும் என அல்லாஹ்வின் தரப்பிலிருந்து இஸ்ரவேலர்களுக்கு  கட்டளையிடப்பட்டது . ஆதலால் மூஸா (அலை) இஸ்ரவேலர்களின் படையுடன்  மிஸ்ரிலிருந்து ஷாம் நோக்கி புறப்பட்டார்கள், அல்லாஹ்வின் விரோதிகள் எத்தகைய வலிமை கொண்டவர்களாக இருப்பினும் முஃமின்கள் முழுமையான ஈமானுடன் போரிட்டால் அல்லாஹ்வின் உதவி கண்டிப்பாக வரும், இது தான் எல்லா காலத்திலும் அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கும் நியதி , பத்ர் , கன்தக் யுத்தங்களில் எதிரிகள் வலுவாக இருந்தும் முஸ்லிம்கள் தமது ஈமானுடைய வலிமையால்தான் வெற்றி பெற்றார்கள் , ஈமானுக்கு அவ்வளவு பெரிய சக்தி உண்டு ,  இஸ்ரவேலர்களுக்கு அந்த  ஈமான்தான் இல்லாமல் போனது  , அதனால்  அவர்கள் மிஸ்ரை நெருங்கியதும் அமாலிகாகளின் படை பலத்தையும், வலிமையையும் அறிந்ததும்  இவர்களுக்குள்  பீதி கிளம்பியது , போருக்கு புறப்பட்டு வந்த பின்பும் போர் செய்வதை விட்டு  பின் வாங்கினார்கள் , அது மட்டுமின்றி போர்களத்திற்கு அழைத்த தமது நபியிடம் நீங்களும், உம் இறைவனும் இரண்டு பேரும் போய் சண்டை செய்யுங்கள் , எங்களால் அவர்களோடு சண்டையிட இயலாது , நாங்கள் வரவும் மாட்டோம் , நாங்கள் இங்கேயேதான் இருப்போம் என திமிரான பதிலை கூறினார்கள், ஒரு நபிக்கு தரும் மரியாதையா  இது ? அல்லாஹ்வின் கட்டளைக்கு கொடுக்கும் மதிப்பா இது ? இறை கட்டளை அவமதிக்கப்படும் போது அல்லாஹ்வின் தண்டனை வரும் , ஆதலால் அல்லாஹ் அவர்களை அவர்கள் இருந்த இடத்திலேயே வைத்து தண்டித்தான் , ஷாம் தேசத்திற்கும் போக முடியாமல், மிஸ்ருக்கும் திரும்ப இயலாமல் இடையில் தீஹ் என்ற ஒரு பாலை வெளியில் நாற்பது வருடகாலம் நாடோடிகளாக அலைய விட்டான். இந்த தீஹ் மைதானம் ஒரு விசித்திரமானது, சுமார் 15 கிலோ மீட்டர் தூரம்தான் தான் இருக்கும், அதை கடப்பதற்கு அவர்கள் பகல் முழுவதும் நடப்பார்கள், இரவிலே ஓய்வெடுத்து காலையில் விழித்துப்பார்த்தால் நடக்க துவங்கிய அதே இடத்திலேதான் இருப்பார்கள் . இவ்வாறு 40 வருடங்கள் வரை அவர்களால் அப்பகுதியை விட்டு நகர முடியாமல் அதற்குள்ளேயே  சுற்றி சுற்றி வந்தார்கள், அந்த பாலைவெளியில் ஒதுங்க இடமும் இல்லை, உணவுக்கும்  வழி இல்லை. இத்தகைய சூழலிலும் அல்லாஹ் அவர்களை முழுமையாக கைவிடவில்லை , அவர்கள் மீது பல உபகாரங்கள் புரிந்தான் , அல்லாஹ் கூறுகிறான் 
            இஸ்ராயீலின் சந்ததியினர்களே! நீங்கள் தீஹ் பாலைவெளியில் வெயிலை விட்டு ஒதுங்குவதற்கு கூட வசிப்பிடமின்றி  தவித்தீர்கள், நாம் உங்களுக்கு மேகத்தையே நிழலாக ஆக்கிக் கொடுத்தோம், கடுமையான வெயில் அடிக்கும் போது சூரியனை மேகம் மறைத்துவிட்டால் வெயிலின் தாக்கம் இல்லாமல்  குளுமை ஏற்படும்,  அவர்களை விட்டு எப்போதுமே மேகம் விலகாத வகையில் மேகத்தை அல்லாஹ் நீடித்து இருக்கச் செய்தான். ஆதலால் வெயிலின் கொடுமையை விட்டு தப்பினார்கள். பின்னர் நீங்கள் உண்ணுவதற்கு கூட வழியின்றி தவித்தீர்கள் , நாம் உங்கள் மீது ‘மன்னு’ எனும் இனிப்பையும், ‘ஸல்வா’ எனும் பறவை இறைச்சியையும் இறக்கிக் கொடுத்தோம். அதாவது அப்பாலைவெளியில் இருந்த மரங்களில் நன்கு இனிப்பான, மதுரமான சுவைமிக்க ‘தரஞ்சபீன்’ எனும் வஸ்துவை அல்லாஹ் ஏராளமாக முளைக்கச் செய்தான். அதை சேகரித்து அம்மக்கள் உணவாக புசித்துக் கொள்வர். அதற்கு ‘மன்னு’ எனப்படும். மேலும் காடை, கௌதாரி போன்ற ஓர் பறவையினம் கூட்டம் கூட்டமாக இவர்களுக்கு அருகிலேயே  வந்து அமரும். மனிதர்களை கண்டு  அவை பறந்து ஓடாது ,  இவர்கள் இலகுவாக அவற்றை பிடித்து அறுத்து நெருப்பில் பொசுக்கி உட்கொள்வர் , இதை ‘ஸல்வா’ எனக் கூறப்படும். ஆக இவ்வாறு அல்லாஹ் உங்களின் உணவு தேவைகளுக்கு ஏற்பாடு செய்தான். ஆதலால் நீங்கள் நாம் அளித்த சுவைமிக்க இந்த உணவு வகைகளிலிருந்து நன்றாக புசியுங்கள். என்று கூறினோம். இவ்வாறே தீஹ் வெளியில் அவர்களின் வாழ்க்கை கழிந்தது , அவர்கள் தம் தவறான செயல்பாடுகளினாலும், இறைக் கட்டளைகளை அவமதித்ததினாலும் நமக்கு அவர்கள் எவ்வித அநீதமும் இழைக்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கு நாம் பிறப்பித்த கட்டளைகள் அவர்களை மேன்மைபடுத்துவதற்காகத்தான் , அவற்றை அவர்கள் செயல்படுத்தாத போது அதனால் நமக்கு என்ன நஷ்டம் ? , எவ்வித நஷ்டமும் அல்லாஹ்வுக்கு இல்லை ,  அல்லாஹ் எவ்வித தேவையுமற்றவன். யாருடைய வணக்கமும்  அவனுக்கு எவ்வித இலாபத்தையும் கொடுத்திடாது, யாருடைய பாவமிழைத்தாலும் அவனுக்கு எவ்வித நஷ்டத்தையும் தந்திடாது. ஆனால் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை மீறியதன் மூலம் தமக்குத் தாமே அநீதமிழைத்துக் கொண்டார்கள். தனக்கே அவர்கள் நஷ்டத்தை தேடிக் கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்வில் அனுபவித்த துன்பங்கள் யாவும் இதற்கு சாட்சியாகும். அல்லாஹ் அவனின் கட்டளைகளுக்கு மாறு செய்வதை விட்டும் நம்மை பாதுகாப்பானாக, ஆமீன்.
படிப்பினைகள்:  அல்லாஹ்வின் கட்டளைகள் மீறப்படுவதால் தான் வாழ்வில் சிரமங்கள் உண்டாகின்றன. சோதனைகள் வருகின்றன . அல்லாஹ்வின் சோதனையின் போது  கூட அவனுடைய அருள்கள் தான் மிகைத்து நிற்கும் . அல்லாஹ் நாடிவிட்டால் சிறிய காரியத்தையும் கஷ்டமாக்கிவிடலாம்.  வானில் தவழும் மேகங்களும் அல்லாஹ்வின் கட்டுபாட்டில்தான் இருக்கின்றன. பாவங்களின் தீயவினைகள் பாவம் புரிந்தோரையே தாக்கும்.
                இஸ்ரவேலர்கள் வரலாற்றில் முக்கிய நிகழ்வு அவர்கள் தம் மூதாதையர்களின் சொந்த நகரான புனித ஜெரூசலம் நகரில் பிரவேசிப்பதாகும் .ஜெரூசலம் ஓர் புனித நகர், பல்வேறு சோதனைகளையும , நெருக்கடிக்களையும் கடந்து அதில் பிரவேசிப்பது என்பது அல்லாஹ் அவர்கள் மீது புரியும் பேருபகாரமாகும் , ஆதலால் அதற்கு நன்றி செலுத்தும் வண்ணம் அந்நகரில் நுழைவதற்காக சில ஒழுக்கங்களை பேணும் படி அல்லாஹ் கட்டளையிட்டான்.ஆனால் அவர்கள் அதற்கும் முழுமையாக தலை சாய்க்க வில்லை , அல்லாஹ் கூறுகிறான்.
               இஸ்ராயீலின் சந்த்தியினர்களே! நீங்கள் தீஹ் பாலைவெளியில் நாற்பது வருடங்களாக திரிந்தீர்கள். அங்கே நீங்கள் விரும்பிய உணவுவகைகளை பெற முடியாமல் போனது. பாலை வெளியில் விவசாயம் செய்வது, செடிகள் நடுவது போன்றவை எவ்வாறு இயலும், ஆதலால் உங்கள் விருப்பப் படி உங்களுக்கு நாம் கூறினோம், நீங்கள் தீஹ் பாலைவெளியை விட்டு வெளியேறி ஜெரூசலம் எனும் இந்நகரில் பிரவேசியுங்கள். இது நாள் வரை மன்னு சல்வா எனும் ஒரே வகை உணவை மட்டுமே புசித்து வந்தீர்கள்,ஆதலால் அது உங்களுக்கு சலிப்பை தந்திருக்கலாம் ,   ஆதலால் இந்நகரில்    பிரவேசித்து அங்கே நீங்கள் விரும்பியவற்றை தாராளமாக புசித்துக் கொள்ளலாம். இருப்பினும் இந்நகருக்குள் நுழைவதற்காக சில ஒழுக்கங்களை பேணுங்கள். நகரின் வாசலுக்குள் நுழையும் போது பணிந்தவர்களாக, அடக்கமுள்ளவர்களாக நுழையுங்கள். ஆடிக் கொண்டும், நெஞ்சை நிமிர்த்திக் கொண்டும், பெருமையடித்துக் கொண்டும் இறைவனை மறந்தவர்கள் செய்வது போல செய்து கொண்டு நுழையாதீர்கள். மேலும் எங்கள் இறைவா எங்களை விட்டும் எங்கள் பாவச் சுமைகளை போக்கிடுவாயாக என்று கூறியவர்களாக தம் பாவங்களை எண்ணி வருந்தியவர்களாக நுழையுங்கள். நீங்கள் இவ்வாறு ஒழுக்கங்கள் பேணும் பட்சத்தில் நாம் உங்களின் அனைத்து தவறுகளையும் மன்னித்து விடுவோம். மென்மேலும் நன்மை புரிபவர்களுக்கு அவர்களின் நன்மைகளுக்கு ஏற்ப கூலியையும் அதிகப்படுத்துவோம்,  அவர்களின் பாவங்களை மன்னிப்பது மட்டுமல்லாது அவர்களை சகல உலக மறு உலக நலவுகளை அடையச் செய்வோம்.இவ்வாறு அல்லாஹ் அவர்களுக்கு ஒழுக்கங்களை போதித்தான் , ஆனால்  அவர்கள் அதற்கும் செவிசாய்க்க வில்லை ,
                   மாறாக அதை அலட்சியப்படுத்தினார்கள் , தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட அந்த பாவிகள் அவர்களுக்கு கூறும்படி சொல்லப்பட்ட வார்த்தையையே மாற்றிப் போட்டு விட்டார்கள். அவர்களுக்கு சொல்லப்பட்ட வார்த்தை எங்கள் பாவங்களை போக்கிடுவாயாக என்பது தான் , ஆனால் அவர்கள் அந்த வார்த்தயை  மாற்றி வித்துக்குள் தானியம் என்று சிறிதும் சம்பந்தமே இல்லாத வார்த்தையை கூறினார்கள். பணிவுடன் நுழையுங்கள் என்ற ஒழுக்கத்தையும்  சிதைத்து தமது பணிவை வெளிப்படுத்துவதற்கு பதிலாக முதுகுப்புறமாக திருப்பிக் கொண்டு , தம் பித்தட்டை ஒரு மாதிரி ஆட்டியவர்களாக நுழைந்தார்கள் , அல்லாஹ்வுடைய கட்டளைகள் பேணப்படவில்லை மாறாக அவமதிக்கப்பட்டது . கேலி செய்யப்பட்டது. ஆதலால் அநீதமிழைத்த அக்கூட்டத்தினர்கள் மீது அவர்கள் புரிந்த அத்துமீறலின் காரணத்தால் வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைத்தோம். தாம் விரும்பியவற்றை உண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதற்காக அந்நகருக்குள் நுழைந்தவர்கள் தம் ஒழுங்கீனத்தால் அதை இழந்தார்கள் , அங்கே பெரும் மழை பெய்து எங்கும் காலரா நோய் பரவி கொத்து கொத்தாக மனிதர்கள் இறந்து போனார்கள். ஒரு நாளில் மட்டும் 70 ஆயிரம் பேர் இறந்து போனார்கள் என்று கூறப்படுகிறது . அவர்கள் அல்லாஹ் ஏவிய படி செயல்பட்டிருந்தால் பெய்த மழை நன்கு விளைச்சலை தந்து சந்தோசத்திற்கு காரணமாக இருந்திருக்கும். மாறு புரிந்ததால் காலரா போன்ற கொடிய நோய் பரவுவதற்கும், அவர்களின் அழிவிற்கும் அந்த மழை காரணமாகி விட்டது. அல்லாஹ் அவனின் கட்டளைகளுக்கு மாறு செய்வதை விட்டும், அவனின் வேதனையை விட்டும் நம்மை நிரந்தரமாக பாதுகாப்பானாக- ஆமீன்.
படிப்பினைகள்:  இஸ்லாம் கூறும் அனைத்து கடமைகளும், ஒழுக்கங்களும் கடைபிடிக்கப்பட வேண்டும்.அவற்றிலே அலட்சியம் காட்டக்கூடாது ,  அல்லாஹ்வின் கட்டளைகளை கேலி செய்வது பெரும் பாவமாகும். அல்லாஹ் மனிதர்களின் வாழ்வு சிறப்பதற்கும். மேம்படுவதற்கும் தான் வழி கூறுகிறான். அல்லாஹ் கூறிய வார்த்தையை மாற்றுவது கூட பாவமாகும் , மனிதனின் பாவங்களே வானிலிருந்து வேதனையாக இறங்குகிறது.

No comments:

Post a Comment