Wednesday, October 3, 2018

துட்சமாக பார்க்கப்படும் நன்மைகள் 1





முன்னுரை

      அல்லாஹுத்த ஆலா இவ்வுலகை படைத்ததன் காரணமே  அவனின் அடியார்கள் இப்புவியில்  வாழ்ந்து தம் நற்செயல்களால் தம்முடைய மறுமை வாழ்வை உருவாக்கி கொள்வதற்கும், அல்லாஹ்வுடைய சந்தோஷத்தை , திருப்தியை பெற்றுத்தரும் காரியங்களை ஆற்றுவதற்கும் தான்.
      ஆனால் நாமோ உலக அலுவல்களில்  கடும் ஈடுபாடு செலுத்துவதில் நம் வாழ்வின் இவ்வடிப்படை நோக்கத்தையே  மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய காலை முதல், மாலை வரை உள்ள நேரம் முழுவதும் இவ்வுலக வாழ்வை இன்னும் சிறந்ததாக, மென்மேலும் இன்பமாக ஆக்குவதற்கான முயற்சிகளில்தான் கழிந்து கொண்டிருக்கின்றது,  இந்த பரபரப்பில் அல்லாஹ்வின் மிக சொற்பமான அடியார்களுக்கு மட்டுமே தம் மறுவுலக வாழ்வை வளப்படுத்த  வேண்டுமென்ற எண்ணம் வருகிறது . பெரும்பாலானவர்களுக்கு இந்த எண்ணம் வருவதே இல்லை,  ஆனால் இந்த உலகைவிட்டு ஒரு நாள் செல்லவேண்டும் , அது எந்த நாள் என்பதும் தெரியாது, எப்போது அழைப்பு வருமென்பதையும் நாம் அறிய மாட்டோம் என்பவைகளெல்லாம் ஒரு நாத்திகன் கூட மறுக்க முடியாத அளவுக்கு முடிவு செய்யப்பட்டுப்போன விஷயங்களாகும்.
      மறு உலக வாழ்க்கையை உருவாக்கிகொள்ள  இஸ்லாம் காட்டித்தரும் வழி முறைகள் எந்த வகையிலும் கஷ்டமானது கிடையாது  என்பது மட்டுமல்ல, அவற்றை எடுத்து நடப்பதால் இவ்வுலக வாழ்வும் கூட நிம்மதி நிரம்பியதாக மாறி  போய்விடும் . ஆனால் இஸ்லாமிய நெறிபடி வாழ்வது சிரமம் , அதற்காக  உலகு சார்ந்த இலாபங்களை, இன்பங்களை, மகிழ்ச்சிகளை, சுகங்களை இழக்க வேண்டியதேற்படும் என்ற தவறான சிந்தனை இன்று பரவலாகி விட்டது . இதன் விளைவு பெரும்பாலானவர்கள்  மார்க்கப்படி நடப்பது சிரமம் என்று நினைத்துகொண்டே இப்பாதையில் சில அடி கூட எடுத்து வைப்பதற்கு மறுக்கிறார்கள் .
      ஆனால் இஸ்லாத்தின் கட்டளைகளில் சிரமங்கள்  கிடையாது , அல்லாஹ்வின் ஒரு அடியார் மார்க்க நெறி படி வாழ முனையும்போது அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அவருக்கு உதவியும் கிடைக்கிறது . மேலும் அவருடைய இருலோக வாழ்க்கையும் செழிப்படைகிறது.
      இரண்டாவது விஷயம், ஏதாவது ஒரு கட்டளையை எடுத்து நடப்பதில் ஏதேனும் சிரமமோ, கஷ்டமோ ஏற்பட்டாலும் கூட அச்சிரமம் மறுமையில் கிட்டும் நிரந்தர லாபத்திற்கு முன்னால் ஒன்றுமே இல்லை. மனிதன் பணம் சம்பாதிப்பதற்காகவும் சிரமம் எடுக்கிறான் . அதை பிரியப்படவும் செய்கிறான். ஏனெனில்  இந்த சிரமத்திற்கு பின்னால் ஊதியம்  கிடைக்கும் என்பது அவனுக்கு தெரிந்திருக்கிறது .  இதேப்போலத்தான் இஸ்லாமிய கட்டளைகள் படி அமல் செய்வதன் காரணமாக நாம் இப்போது கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு பெரும் பேறுகள் மறுமையில் கிடைக்க இருக்கின்றன எனும்போது இவ்வுயர்ந்த இலட்சியத்தை அடைவதற்காக சிறிது சிரமப்படுவதில் என்ன ஆகிவிடப்போகிறது ?
      மூன்றாவது விஷயம், இஸ்லாமிய நெறிமுறைகள்  சிலவற்றை எடுத்து நடப்பதில் கொஞ்சமோ , அதிகமோ சிரமப்பட  வேண்டியதுள்ளது என்றிருந்தாலும்  இப்படியும் சில அமல்கள் இருக்கின்றன , அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகம்  கஷ்டப்பட வேண்டியதில்லை,  மிகுதியான நேரமும் பிடிக்காது ,  காசோ பணமோ அதிகம் செலவழிக்க வேண்டிய தேவையும் இராது , கொஞ்சம் கவனம் மட்டும் செலுத்த ஆரம்பித்துவிட்டால் பெரிய கஷ்டமோ, செலவோ இல்லாமலேயே நம் செயல்களின் பட்டோலைகளில் நாம் நன்மைகளை அதிகரித்துக் கொண்டே போகலாம் , இப்படியும் சில காரியங்களை அல்லாஹ் நமக்கு காட்டித்தந்திருக்கின்றான், நாம் அச்செயல்களை பேணுதலாக செய்ய ஆரம்பித்து விட்டாலே போதும் , இன்ஷா அல்லாஹ் நாம் உட்கார்ந்த இடத்திலிருந்தே மறுமையின் பாக்கியங்களை குவித்து விடலாம்,
        செயல் பதிவேடுகளில் நன்மைகளை அதிகரித்து கொள்வதன் மதிப்பு என்னவென்பதை இன்று நாம்  முழுமையாக உணர மறுக்கிறோம் . ஆனால் எந்த நாளில் இந்த கண்கள் மூடி , அல்லாஹ்வுக்கு முன்பு நிறுத்தப்படுதல் , கேள்விகணக்கு, விசாரணை என்ற கட்டங்களெல்லாம் ஆரம்பித்து விடுமோ அப்போது தெரியும் ஒரு சிறிய நன்மையின் மதிப்பு என்ன என்பது பற்றி . அங்கே காசு, பணமோ, தங்கம், வெள்ளியோ உதவாது. நன்மைகள் மட்டுமே உதவும்,  உன் மடியில் எவ்வளவு நன்மைகள் வைத்துள்ளாய்? என்று தான் வினவப்படும் . நாம் உலகில் இருந்தபோது தம் செயல்களின் பட்டோலைகளில் நன்மைகளை ஏன் அதிகரிக்காமல் போனோம் என அந்த நேரத்தில் கைசேதமும் வருத்தமும் ஏற்படும், ஆனால் அப்போது அமல் செய்வதற்கான காலம் முற்று பெற்றிருக்கும் என்பதால் அந்த வருத்தமும் எந்த லாபத்தையும் தராது.
   நபித்தோழர்களுக்கு  நன்மையான காரியங்களின் மதிப்பு தெரிந்திருந்தது , அவர்கள் நன்மைகளில் பேராசைகொண்டிருந்தார்கள்.அல்லாஹ் இன்ன காரியத்தை செய்வதால் மகிழ்ச்சி அடைகிறான் என்பது அவர்களுக்கு தெரிந்துவிட்டால் உடனடியாக அதை செய்ய ஆரம்பித்து விடுவார்கள் . ஒரு செயலைப் பற்றிய நன்மை அவர்களுக்கு தாமதாமாக தெரியவந்தால் அந்தோ கைசேதமே! இது முன்பே தெரியாமல் போய்விட்டதே, தெரிந்திருந்தால் முன்பிருந்தே அதை செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாமே என அச்செயலை செய்யாமல் தவறி போனதற்காக தம் வருத்தத்தை வெளிப்படுத்துவார்கள்.
           ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒரு ஹதீஸினை சொல்லிக்காட்டினார்கள். எவர் ஒருவர் ஜனாஸாவுடைய தொழுகை தொழுவாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மை கிடைக்கும் , எவர் மைய்யித்தை அடக்கம் செய்யும் வரை அதனுடன் இருப்பாரோ அவருக்கு இரண்டு கீராத் நன்மை கிடைக்கும், அவற்றில் ஒவ்வொன்றும் உஹத் மலைக்கு சமமானதாகும் ,,
         ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) இந்த ஹதீஸ் குறித்து ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வினவியபோது அவர்களும் ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) கூறியது உண்மையான செய்திதான் என்றதும், ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) நாம் காரணமே  இல்லாமல் வீணாக பலகீராத் நன்மைகளை இழந்து விட்டோமே என ஏக்கத்தோடு சொன்னார்கள்  – (ஜாமிவுத்திர்மிதி )
      ஆக அல்லாஹ்வுடைய திருப்திக்கு காரணமாக இருக்கும் ஒவ்வொரு நற்காரியமும் பெரும் மதிப்பு வாய்ந்ததாகும். உலகில் வாழும் தருவாயில்தான் இதனை பயன்படுத்திக்கொள்ளமுடியும் . குறிப்பாக செய்து முடிப்பதில் எவ்வித சிரமுமில்லாத ஓர் நற்செயலை அலட்சியத்தாலும், பொடுபோக்காலும் விட்டுவிடுவது என்பது எத்தனை நட்டமான வியாபாரம் என்றால் அதனால் மறுமையில் ஏற்படும் கைசேதத்திற்கே அளவே இருக்காது , அதை நம்மால் தாங்கிக்கொள்ளவே இயலாது.
      எனவே எந்த அமல்களை செய்வதில் பெரிய முயற்சி தேவை படாமல் அதிக நேரமும் செலவாகாமல் சிறிது கவனத்தோடு செயல்பட்டாலே செயல்களின் பட்டோலைகளில் நன்மைகளை பெருக்கி கொள்ளலாமோ அத்தகைய எளிமையான நற்செயல்களின் அட்டவணைகளை ஒன்று திரட்டவேண்டுமென்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
       முஸ்லிமான எனது சகோதரர்களிடம்  வேண்டிக்கொள்வது யாதெனில் அவர்கள் மிகவும் மதிப்பு வாய்ந்த இந்த அமல்களை கவனத்தோடும், ஆர்வத்தோடும் படிக்கவேண்டும் , இவற்றை தம் வாழ்வின் அன்றாட காரியங்களோடு இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் . ஏனெனில் வெளிரங்கத்தில் சிறியதாக தெரியும் இச்செயல்கள் நம்முடைய வாழ்க்கையை அல்லாஹ்வின் கிருபையைக் கொண்டு அவனின் பொருத்தத்தோடு கூடிய வாழ்க்கையாக  மாற்றி , அதன் மூலம் நம்மை ஈடேற்றம் பெற செய்யும் செயல்களாக கூட இருக்கலாம்.
       அல்லாஹ் தன்னுடைய பேருபகாரத்தால் இச்சிறியோனுக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் இவற்றின் படி அமல் புரிவதற்கான பாக்கியத்தை தந்திடுவானாக, தன் சந்நிதானத்தில் இவற்றிக்கு அங்கீகாரம் அளித்து நம்முடைய முடிவை சிறப்பாக்கி வைப்பானாக.
                                             ஆமீன், ஆமீன்..
                                        சிறியோன்
                                                      முஹம்மது தகீ உஸ்மானி



முக்கியமான சில விஷயங்கள்

           செய்வதற்கு பெரிய சிரமமோ, முயற்சியோ தேவைப்படாத அதே நேரத்தில் நன்மைகளை அதிகம் பெற்றுத்தரும் அமல்களைப் பற்றி மட்டுமே இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது . இதன் நோக்கம் இந்த எளிமையான நற்காரியங்களை செய்து அவற்றை மறுமையின் சேமிப்பாக ஆக்க வேண்டுமென்ற உந்துதல் நம் உள்ளத்தில் ஏற்படவேண்டும் என்பதுதான், என்றாலும் இந்த நூலை படிக்கும் போது கீழ்காணும் விஷயங்களை கவனத்தில் கொள்வது  அவசியமாகும்.
1)   மிகவும் எளிதான , ஒவ்வொருவரும் பெரிய சிரமமேதுமில்லாமல் உடனடியாக ஆரம்பிக்க முடியுமான நற்செயல்களைப்பற்றி கூறுவது மட்டுமே இந்நூலின் தலைப்பு என்பதால் இதில் பர்ளுகள், வாஜிபுகள் மற்றும் இதர அவசியமான விஷயங்களைப் பற்றி கூறப்படவில்லை. எனவே இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள அமல்களோடு மட்டும் தீன் முடிந்து விட்டதாக யாரும் கருதக்கூடாது, மாறாக தீனுடைய சட்டங்கள் வாழ்க்கையின் அனைத்து துறைகளையும் வியாபித்துள்ளது , அந்த அனைத்து கடமைகள், பர்ளுகள், வாஜிபுகளையும் நிறைவேற்றுவதும், பாவங்களை விட்டு தவிர்ந்து கொள்வதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்  என்ற விஷயத்தை  நன்கு ஞாபகத்தில் வைக்கவேண்டும் . அத்துடன் இந்த நூலின் நோக்கம் இரண்டு.

³  முதலாவது , நீங்கள் முன்பிருந்தே பர்ளுகளை, வாஜிபுகளை முக்கியத்துவத்தோடு நிறைவேற்றி வருபவர்களாக இருந்தால் நீங்கள்  மேலும் எளிதாக தமது அமல்களின் பட்டோலைகளில் நன்மைகளை அதிகரித்துக்கொள்ளும் வகையிலான அமல்களையும்  உங்களுக்கு இந்த நூல் ஆர்வமூட்டும் வகையில் இருக்கும் .
³  இரண்டாவது , எவர்கள் தீனை சிரமமானது என எண்ணிக்கொண்டு அதை விட்டு முற்றிலும் கவனமற்று உள்ளார்களோ அத்தகையவர்களுக்காக ஆரம்பத்தில் சிரமமேதுமில்லாத எளிய அமல்களைப்பற்றி ஆர்வமூட்டப்படவேண்டும். அவற்றை மேற்கொள்வதன் மூலமாவது அவர்கள் மார்க்கத்தின் பக்கம் உடனடியாக அடியெடுத்து வைக்க ஆரம்பித்துவிடலாம் . அவர்கள் இந்த எளிமையான அமல்களை பேணுதலோடு      செய்து வந்தால் இன்ஷா அல்லாஹ் அவர்களின் உள்ளத்தில் சிறுக, சிறுக தீனுடைய அனைத்து சட்ட திட்டங்கள் மீதும் அமல் புரிவதற்கான ஆர்வம் உண்டாகி விடலாம் . இறுதியாக முழுமையான தீனுடைய வாழ்க்கையையே தனதாக்கிகொள்வது அவர்களுக்கு எளிதாகி விடலாம் என்ற நம்பிக்கையில்தான் இந்த நூல் தொகுக்கப்பட்டது .
2)   இரண்டாவது விஷயம் யாதெனில் சில எளிமையான அமல்களை மேற்கொள்வதால் பாவங்கள் மன்னிக்கப்படுவதாக வாக்கு தரப்பட்டுள்ள பல ஹதீஸ்கள் இந்த நூலில் பல இடங்களில் இடம் பெற்றுள்ளன . இப்படிப்பட்ட ஹதீஸ்களை படிக்கும் போது ஒரு விஷயத்தை சிந்தனையில் பதியவைத்துக்கொள்ளவேண்டும் , நற்செயல்களால் மன்னிக்கப்படும் பாவங்கள் சிறுபாவங்கள் மட்டும் தானே தவிர பெரும் பாவங்களைப் பொருத்த வரை அது முறையாக தௌபா செய்யாமல் மன்னிக்கப்படுவதில்லை , அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான். “     
إِنْ تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ
            உங்கள் மீது தடைவிதிக்கப்பட்டுள்ள பெரும்பாவங்களை விட்டும் நீங்கள் தவிர்ந்து கொள்வீர்களேயானால் நாம் உங்களின் சிறு பாவங்களையும் போக்கி விடுவோம்
  இதுபோலவே அடியார்களின் உரிமைகளோடு தொடர்புள்ள பாவங்கள் உரிமையாளருக்கு உரிமையை கொடுக்காத வரை அல்லது உரிமையாளர் மன்னிக்காதவரை அதற்கு மன்னிப்பு கொடுக்கப்பட மாட்டாது .
  எனவே சில நல் அமல்களின் காரணத்தால் பாவங்கள் மன்னிக்கப்படுவதாக இந்த நூலில் கூறப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு எந்த வகையான , எத்தனை பாவங்களை புரிந்திருந்தாலும் அவை யாவும் தௌபா இல்லாமலேயே சில எளிமையான நல் அமல்களை செய்து விட்டாலே மன்னிக்கப்பட்டுப்போகும் என யாரும் தவறாக விளங்கிக்கொள்ளக் கூடாது.
            அசலில் நபி (ஸல்) அவர்கள் சில நற்செயல்களால் பாவங்கள் மன்னிக்கப்படும் என குறிப்பிட்ட அந்த சூழல் ஒருவர் பெரும் பாவங்களை புரிந்து அதிலிருந்து தௌபா செய்யாமல் இருப்பார் என்பதை சிந்தித்து கூட  பார்க்க முடியாத சூழலாக இருந்தது . அப்புனிதர்களின் பெரும்பாலான பாவங்கள் சிறு பாவங்களாகத்தான் இருந்தன, அவற்றைத்தான் மன்னிக்கப்படுவதாக நபியவர்கள் கூறியுள்ளார்கள். இதனால் பெரும்பாவங்களின் கடுமையிலோ அதற்காக பாவமன்னிப்பின் அவசியத்திலோ எவ்வித குறை நிலையும் ஏற்படாது.
3)   இந்த விஷயங்கள் யாவற்றையும் முழுமையாக கவனத்தில் கொள்வதோடு
لا تحقِرنَّ شيئاً من المعروفِ
நற்காரியங்களில் எதனையும் இழிவாக எண்ணக்கூடாது என்ற நபி பெருமானார் (ஸல்) அவர்களின் இந்த பொன் மொழியையும் மறந்து விடக்கூடாது.
  எனவே , நாமே தீனுடைய பெரும் பெரும் கடமைகளை புரிவதைவிட்டு தூரமாக உள்ளோம் , ஆதலால் இந்த  சிறு சிறு நற்காரியங்களை பேணுவதால்  நமக்கு என்ன லாபம் கிடைத்து விட போகிறது ?  என்ற ஷைத்தான் ஏமாற்றத்தில் நாம் ஒரு போதும் சிக்கிக் கொள்ளக்கூடாது , எந்த ஒரு நற்செயலும் சிறியது கிடையாது என்பது தான் உண்மை , எந்த நேரத்தில் எந்த ஒரு நற்செயலை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதனை பெரும் பாக்கியமாக கருதி கண்டிப்பாக அதனை செய்து விட வேண்டும். அல்லாஹுத்தாலா அந்த நற்காரியத்தை ஏற்றுக் கொண்டால் அதன் பரக்கத்தால் நம்முடைய மீதமுள்ள வாழ்க்கையும் சீராகிவிடலாம்.
   இந்த உணர்வுகளோடு, இந்த நடு நிலை சிந்தனையோடு இந்நூலை படிப்பது இன்ஷா அல்லாஹ் பெரும் லாபமாக இருக்கும் . அல்லாஹுத்தாலா தனது அருளையும் கிருபையும் தன் சந்நிதானத்தில் இதற்கு அங்கீகாரத்தையும்  அளித்திடுவானாக. மேலும் தீனுடைய அனைத்து கட்டளைகளையும் அமல் செய்வதற்கான தௌபீக்கையும் நம் எல்லோருக்கும் தந்தருள்வானாக ஆமீன்! ஆமீன்!!

 1  , நல்லெண்ணம்

  நிய்யத் எனும் வடிவில் அல்லாஹுத்தஆலா ஈமானுடையவர்களுக்காக தந்துள்ள பொக்கிஷம் எத்தகையதென்றால் அதன் மூலம் ஒவ்வொரு முஸ்லிமும் சிறு  கவனத்தினால் மண்ணையும் தங்கமாக மாற்றிக்கொள்ள முடியும்,  நபி (ஸல்) அவர்களின் ஓர் பொன்மொழி  இவ்வாறு வந்துள்ளது எல்லாசெயல்களின் அடிப்படை எண்ணங்கள்தான் .
  சிலர் இந்த வாசகத்தை ,  நல்லெண்ணத்தால் தவறான காரியமும் நன்மையாக மாறிவிடுகிறது , பாவமும் நன்மையாக போய்விடுகிறது என விளங்கிக்கொள்கிறார்கள் , இது முற்றிலும் தவறான விஷயமாகும். பாவம் எல்லா நிலைமைகளிலும் பாவமாகத்தான் இருக்கும். எத்தனை நல்லெண்ணத்தில் அதை செய்யப்பட்டாலும் அது ஆகுமானதாக ஆகி விடப் போவதில்லை உதாரணமாக ஒருவர் ஒருவரின் வீட்டில் திருடுகிறார், அவருடைய எண்ணம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தான தர்மம் செய்வேன் என்பதுதான் , இந்த நிய்யத்தின் காரணமாக அவரின் திருட்டு குற்றம் மன்னிக்கப்படாது , ஆகவே நபி (ஸல்) அவர்களின் மேற்கூறப்பட்ட பொன்மொழியின் கருத்து இதுதான்,அதாவது
1)   ஒரு நற்காரியம் அதனை நல்லெண்ணத்தோடு செய்யப்படாதவரை அதற்கான நன்மை கிடைக்காது . தொழுகையுடைய நன்மை அல்லாஹ்வின் பொருத்ததிற்காக அத்தொழுகை தொழப்பட்டால் மட்டும் தான் கிடைக்கும். அதனை பிறருக்கு காட்டுவதற்காக தொழுதால்  அதன் நன்மை இல்லாமல் போகும், நன்மைக்கு பதில் பாவம் உண்டாகும்.
2)   இரண்டாவது கருத்து, இது தான் நாம் கூறவந்ததும் கூட, அது யாதெனில்  ஆகுமான அனுமதிக்கப்பட்ட செயல்கள் யாவற்றின் அசல்நிலை அவற்றை செய்வதால் நன்மையையும் கிடைக்காது , விடுவதால் தீமையும் ஏற்படாது என்பது தான், ஆனால் அந்த ஆகுமான காரியத்தையே நல்லெண்ணத்தோடு செய்யப்பட்டால் அவை வணக்கமாக மாறிவிடுகின்றன,  அவற்றிற்காக நன்மையையும் கிடைக்கின்றது , உதாரணமாக உணவு உண்ணுதல் ஆகுமான காரியங்களில் ஒன்று, யாரேனும் உணவை , நான் உணவு உட்கொண்டால் அதன் மூலம் ஆற்றல் கிடைக்கும், அந்த ஆற்றலை நான் அல்லாஹ்வின் வழிபாட்டு காரியங்களில் பயன்படுத்துவேன் என்ற எண்ணத்தோடு உணவு உட்கொண்டால் அதுவே நன்மையாக மாறிவிடும், அல்லது அல்லாஹ் என்னுடைய உடலுக்காகவும் நான் செய்ய வேண்டிய கடமைகள் சிலவற்றை வைத்துள்ளான் , அவற்றை நிறை வேற்றுவதற்காக நான் உண்ணுகிறேன் என்ற எண்ணத்தோடு அல்லது நான் உண்ணும் ருசியான இன்பமான உணவால் நான் உள்ளத்தால் இறைவனுக்கு நன்றி செலுத்துவேன் என்ற எண்ணத்திலோ அவ்வுணவை உட்கொண்டால் இந்த எண்ணங்களினால் உணவு உண்பதிலும் நன்மை கிடைக்கும்.
     ஆக வாழ்க்கையின் எந்த ஒரு ஆகுமான காரியமாக இருந்தாலும் அவற்றை நல்லெண்ணத்தின் மூலம்  வணக்கமாகவும், நன்மைக்குரியதாகவும் மாற்றி விட முடியும். நம் தினசரி வாழ்க்கையின் காரியங்களை நன்மையாக மாற்றிக் கொள்ளும் படியான நல்லெண்ண செயல்களின் சில உதாரணங்கள் கீழே தரப்படுகின்றன.
·         சம்பாதிப்பது அது வியாபார வடிவில் இருந்தாலும், கூலி வேலை வடிவில் இருந்தாலும், விவசாயமாக இருந்தாலும், வேறு எந்த தொழிலாக இருந்தாலும் இவைகளில் மனிதன் அல்லாஹ் என்னுடைய பொறுப்பில் என்னுடைய, என் குடும்பத்தார்களுடைய       கடமைகளை வைத்துள்ளான்,  அவற்றையெல்லாம் மிகச்சரியான முறையில் நிறைவேற்றுவதற்காக சம்பாதிக்கின்றேன் என நிய்யத் வைத்துக்கொண்டால் பொருளீட்டுவதின்  இந்த எல்லா துறைகளும் வணக்கமாக , நன்மையாக மாறிவிடும்.
·         மேலும் தான் சம்பாத்தித்ததை தனக்கும் தன் வீட்டார்களின் தேவைக்கும் செலவு செய்த பிறகு எது மிஞ்சுமோ அதிலிருந்து ஏழைகளுக்கு உதவி செய்தல் மற்றுமுள்ள நல் வழிகளில் செலவு செய்வேன் என நிய்யத்வைத்துக்கொண்டால் மேலும் நன்மைகள் கிடைக்கும்.
·         ஒருவர் இப்போது தான் கல்வி கற்றுக்கொண்டு இருக்கிறார், நான் இந்த கல்வியின் மூலம் மக்களுக்கு சேவை செய்வேன் என நிய்யத்வைத்துக்கொண்டால் உதாரணமாக ஒருவர் தீனுடைய கல்வியை கற்றுக் கொண்டிருந்தால் அவர் மக்களுக்கு தீனை எத்திவைப்பேன் என நிய்யத் வைத்துக் கொள்ளவேண்டும். மருத்துவ துறை , அறிவியல் துறை மாணவராக இருந்தால் அவர் மருத்துவத்தின் மூலம் நோயாளிகளுக்கு சேவை செய்வேன் என நிய்யத் வைத்துக்கொள்ளவேண்டும். பொறியியல் மாணவராக இருந்தால் நான் இக்கலையின் மூலம் சமுதாயத்திற்கு சேவை புரிவேன் என நிய்யத் வைத்துக்கொள்ளவேண்டும். வேறு எந்த விதமான தொழிலை கற்றுக் கொள்வதானாலும் அவற்றின் மூலம் தேவையுள்ள மனிதர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக கற்கிறேன் என நிய்யத்வைத்துக்கொள்ளவேண்டும். .     இவ்வாறெல்லாம் நிய்யத் வைத்துக் கொண்டு இவைகளில் ஈடுபட்டால் எத்தனை காலம் அவற்றில் ஈடுபட்டிருப்பாரோ அதற்கான நன்மைகளை அவர் பெற்றுக்கொள்வார்.
·         பின்னர் அவர் எந்த தொழிலை மேற்கொண்டாலும் அதில் அவர் இவ்வாறு எண்ண வேண்டும் , ரிஜ்க்வுடைய பொறுப்பை அல்லாஹ் தன் கையில் வைத்துள்ளான். ஏதாவது ஒரு வகையில் அது கண்டிப்பாக கிடைத்தே தீரும். அதை பெறுவதற்கு பல வழிகள் உள்ளன. நான் இந்த வழியை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இதன் மூலம் நான் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு சேவை செய்வதற்காகத்தான் என்று நிய்யத் வைத்தால் அவருடைய அந்த தொழிலும் நன்மைக்குரியதாக மாறிவிடும்.
·         உதாரணமாக ஒருவர் மருத்துவராகி தான், ரிஜ்க்வுடைய பல வழிகளில்  இந்த பாதையை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் இதன் மூலம் சிரமப்படும் மனிதர்களுக்கு  உதவி செய்வதற்காக என்று நிய்யத் வைத்துக்கொண்டால் , அவர் தான் செய்த மருத்துவத்திற்காக நோயாளிகளிடமிருந்து  நியாயமான கட்டணம் வசூலித்தாலும் கண்டிப்பாக இன்ஷா அல்லாஹ் அவருக்கு நன்மை கிடைக்கத்தான் செய்யும், உண்மையிலேயே அவருடைய எண்ணம் இவ்வாறு இருக்குமேயானால் ஏதேனும் எளிமைபட்டவரை கண்டு அவருக்கான மருத்துவத்தை எவ்வித கட்டணமும் பெறாமல் அல்லது பலத்த சலுகைகளோடு செய்வதற்கான சந்தர்ப்பங்களும் வரத்தான் செய்யும்.
·         மேலும் உதாரணமாக ஒருவர் துணி வியாபாரம் செய்ய விரும்புகிறார்,  அவர் நிய்யத் வைத்துக்கொண்டார் , ஒவ்வொரு மனிதனும் ஷரிஅத் அடிப்படையில் ஆடை அணிவது அவசியமாகும். நான் பல தொழில்களில் இந்த தொழிலை ஏன் தேர்ந்தெடுத்துள்ளேன் என்றால் இதன் மூலம் மக்கள் அந்த கடைமையை நிறைவேற்றுவதற்கு உதவி புரிவதற்குத்தான் என்ற எண்ணம் இருந்தால் இன்ஷா அல்லாஹ்  இந்த தொழிலும் நன்மைக்கு காரணமாகி விடும் .

,துஆ பிராத்தனை

                  அடியார்கள் துஆ செய்வது அல்லாஹ்வுக்கு பிடித்தமான அமலாகும். உலகத்தில் ஒருவரிடம் ஏதாவது ஒன்றை அடிக்கடி யாசிக்கப்படுமானால் அவர் எத்தனைதான் பெரிய வள்ளல் குணம் படைத்தவராக இருந்தாலும் இறுதியில் அவர் சலிப்புற்று கோபமடைவார், ஆனால் அல்லாஹ்வின் பழக்கம் யாதெனில் அவனிடம் அடியான் எவ்வளவு அதிகம் வேண்டுவானோ அவ்வளவு அதிகம் அல்லாஹ் சந்தோசப்படுவான், அதுமட்டுமல்ல எவர் அல்லாஹ்விடம் வேண்ட மாட்டாரோ அல்லாஹ் அவர் மீது கோபப்படுகிறான் என ஹதீஸிலே வந்துள்ளது, எனவே துஆ கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்,
  பின்னர் துஆ என்பது நாட்டங்களை நிறை வேற்றிக்கொள்ளும் ஓர் வழி என்பது மட்டுமல்லாமல் அது ஓர் தனிப்பட்ட வணக்கமாகும். அதாவது தன்னுடைய தனிப்பட்ட சொந்த, உலகு சார்ந்த நோக்கத்திற்காக துஆ செய்தாலும் அதுவும் வணக்கமாகவே கணிக்கப்படுகிறது. அதற்காக நன்மையும் கிடைகின்றது, எந்தளவிற்கு அதிகமாக துஆ கேட்கப்படுமோ அந்த அளவிற்கு அல்லாஹ்வுடன் கூடிய தொடர்பு அதிகரிக்கிறது ,  வெறும் நெருக்கடியான, சிரமமான சூழ்நிலைகளில் மட்டுமே துஆ கேட்கவேண்டும் என்பதில்லை, மாறாக நல்ல நிலைமை , சந்தோசமான நேரங்களில் கூட துஆ கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஹதீஸிலே வந்துள்ளது , சோதனையான, நெருக்கடியான நிலைமைகளில் தன்னுடைய துஆ அங்கீகரிக்கப்பட வேண்டுமென விரும்புபவர் சந்தோசமான நேரங்களில் அதிகம் துஆ செய்திருக்க வேண்டும். (ஜாமிவுல் உஸுல் , திர்மிதீ) அல்லாஹ்வுத்தஆலா திருக்குர்ஆனில் வாக்களித்துள்ளான்,  நீங்கள் என்னிடம் துஆ செய்யுங்கள் நான் அதனை ஏற்கிறேன். அல்லாஹ்வின் இந்த வாக்குறுதி தவறாக இருக்க முடியாது. எனவே கண்டிப்பாக என்னின் துஆ ஒப்புக்கொள்ளப்படும் என்ற உறுதியோடு துஆ செய்ய வேண்டும். ஆனால் துஆ அங்கீகரிக்கப்படும் விதங்கள் பல வகைகளில் உள்ளன. சில நேரங்களில் தான் வேண்டியதே கிடைத்து விடுகிறது அல்லது சில நேரங்களில் வேண்டப்பட்டது அடியானுக்கு ஒத்து வராது அல்லது லாபகரமானதாக இருக்காது  என அல்லாஹ்வுடைய இல்மிலே இருந்தால் அதை விட சிறந்ததை, லாபகரமானதை உலகிலோ, அல்லது மறுமையிலோ அல்லாஹ் தந்துவிடுகிறான். இப்படியாக ஒருவர் செய்யும் ஒவ்வொரு துஆவுக்கும் மூன்று பிரயோஜனங்கள்  ஏற்படுகின்றன.
1)   துஆ ஒப்புக்கொள்ளப்படுவதால் நாட்டங்கள் பூர்த்தியாகின்றன.
2)   செய்யும் ஒவ்வொரு துஆவுக்கும் நன்மை கிடைகின்றது.
3)   துஆவை அதிகரிப்பதால் அல்லாஹ்வுடன் கூடிய தொடர்பு அதிகரிக்கிறது .
              பின்னர் துஆ கேட்பதில் சில ஒழுக்கங்கள் உள்ளன. கிப்லாவை முன்னோக்கியிருந்து கைகளை உயர்த்தி நாவால் துஆ செய்ய வேண்டும். ஆரம்பமாக அல்லாஹ்வின் புகழையும், நபி (ஸல்) அவர்கள் மீதான சலவாத்தையும் ஓத வேண்டும். ஆனால் இவைகளெல்லாம் ஓதுவதற்கான சந்தர்ப்பம் இல்லாவிட்டால் இவைகளை ஓதாமலேயே  துஆ செய்வதற்கும் அனுமதி உள்ளது. ஆக இவ்விதம் துஆ செய்வதை அல்லாஹுத்தஆலா எவ்வளவு இலகுவாக்கித்தந்துள்ளான் என்றால் கிட்டத்தட்ட எல்லா நேரத்திலும்,  எல்லா இடத்திலும் துஆ செய்யலாம், நடமாடிக்கொண்டே, வேலையில் ஈடுபட்டுக்குக் கொண்டே துஆ செய்யலாம். நாவால் கேட்பதற்கு சந்தர்ப்பம் இல்லாவிட்டால் கழிவறை போன்ற இடங்களில் மனதுக்குள்ளாகவே கூட துஆ செய்யலாம், அந்தளவிற்கு துஆ எளிமையான  அமலாகும்.
          பின்னர் துஆவிலே பெரிய பெரிய காரியங்களைத்தான் கேட்க வேண்டுமென்ற கட்டாயமில்லை, மாறாக தன் சின்ன சின்ன தேவையை கூட அல்லாஹ்விடம் கேட்க வேண்டும் எந்த அளவுக்கென்றால் ஹதீஸிலே செருப்பின் வார் அறுந்தாலும் கூட அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று வருகிறது (திர்மிதி)
        எனவே சின்ன சின்ன தேவைகள் ஏற்பட்டாலும் கூட அதனையும் அல்லாஹ்விடம் வேண்டக் கூடிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் , மிக மிக சாதாரணமான சிரமங்கள் ஏற்பட்டாலும் கூட அதை நீக்குவதற்க்கும் அல்லாஹ்விடமே வேண்ட வேண்டும். எவ்வாறு ஒரு குழந்தை தன் சின்ன சின்ன தேவைக்கும், சிறு நோவினை ஏற்பட்டாலும் கூட தன் தாயை அழைக்கிறதோ அதே போல அடியான் அல்லாஹ்வை அழைக்கவேண்டும், அழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். நடமாடிய வண்ணம், உட்கார்ந்த வண்ணம் வேலையில் ஈடுபட்டிருக்கும் வண்ணம் என ஒவ்வொரு நேரத்திலும், ஒவ்வொரு நிலையிலும் ஏதாவது ஒன்றை அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இதனை பழக்கப்படுத்தி பாருங்கள் இன்ஷா அல்லாஹ் இதனால் மிக சீக்கிரமாக முன்னேற்றம் ஏற்படும்.

3  , சுன்னத்தான துஆக்கள்

  ஒவ்வொரு தேவைகளையும் அல்லாஹுத்தஆலாவிடம் தான் வேண்ட வேண்டும். ஆனால் இருலோகத்தின் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் இரவு, பகலில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சில குறிப்பான துஆக்களை கற்றுத் தந்துள்ளார்கள்.உதாரணமாக தூக்கத்திலிருந்து விழித்ததும் ஓத வேண்டிய துஆ, கழிவறைக்குள் நுழைவதற்கு முன்  ஓத வேண்டிய துஆ ,  அங்கிருந்து வெளிபடும் போது ஓத வேண்டிய துஆ ,  ஒழு செய்யும் போது, பள்ளியில் நுழையும் போது, உணவு உண்ணுவதற்கு முன் என பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு துஆக்களை கற்றுத் தந்துள்ளார்கள்.அவைகள் நம்முடைய உலகத்துடைய, தீனுடைய அனைத்து தேவைகளையும் உள்ளடக்கிய மிகப் பொக்கிஷமான துஆக்களாகும், நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ள இந்தத் துஆக்கள் எந்தளவு கருத்தாழமிக்கவை என்றால் நாம் நம் வாழ்நாளெல்லாம் யோசித்துக்கொண்டே இருந்தாலும்  கூட இப்படிப்பட்ட துஆக்களை நாமாக கேட்கமுடியாது.
         இந்த துஆக்களை ஓதுவதற்கு நேரமும் செலவாவதில்லை , கஷ்டப் பட வேண்டியதுமில்லை. இதை ஓதுவதற்காக ஒழு இருக்கவேண்டுமென்ற நிபந்தனையுமில்லை, கைகளை தூக்க வேண்டுமென்ற கட்டாயமும் இல்லை, எனவே இந்த துஆக்களை மனனம் செய்து பிறகு அவற்றை ஓதுவதில் கவனம் செலுத்தினால் போதும் , இதனால்  உலகத்துடைய, ஆகிரத்துடைய பெரும் பெரும் நோக்கங்களும் லாபங்களும் கிடைத்துவிடும், பெரிய உழைப்பேதுமில்லாமலேயே அமல்களின் பட்டோலையில் நன்மைகளின் குவியல்கள் சேர்ந்து கொண்டே செல்லும்.
      எனவே ஒவ்வொரு முஸ்லிமும் இந்த துஆக்களை கண்டிப்பாக மனனம் செய்ய வேண்டும். இந்த துஆக்கள் எழுதப்பட்டுள்ள பல நூல்கள் கிடைகின்றன.ஹகீமுல் உம்மத் மௌலானா அஷ்ரப் அலி சாஹிப் (ரஹ்) அவர்களின் முனாஜாத்தே மக்பூல் எனும் நூலில் இவ்வாறான பல துஆக்கள் திரட்டப்பட்டுள்ளன, அதைப்படித்து  இந்த துஆக்களை மனனம் செய்து கொள்ளலாம், தானும் மனனம் செய்ய வேண்டும், குழந்தைகளையும் மனனம் செய்ய வைத்து சிறு பிராயத்திலிருந்தே இவற்றை ஓதும் பழக்கம் கொண்டவர்களாக அவர்களை உருவாக்கி விட்டால் இன்ஷா அல்லாஹ் அவர்கள் செய்யும் துஆக்களின் நன்மையும் பெற்றோர்களுக்கு கிடைக்கும்.

4, மற்றவர்களுக்காக துஆ செய்தல்

  எவ்வாறு தன்னுடைய சொந்த தேவைகளுக்காக துஆ செய்ய வேண்டுமோ அதே போல தன்னுடைய குடும்பத்தார்கள், உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள் மற்றும் பொது முஸ்லிம்களுக்காக துஆ செய்வதும் மிகவும் சிறப்பு வாய்ந்த அமலாகும். ஹதீஸிலே வருகின்றது, ஏதாவது முஸ்லிமான அடியான் தன்னுடைய சகோதரனுக்காக அவன் இல்லாதபோது துஆ செய்தால் உனக்கும் அதுபோன்ற நலவு கிடைக்கட்டுமாக என்று மலக்குகள் அவருக்காக துஆ செய்கின்றார்கள்.
          எனவே ஏதேனும் முஸ்லிம் ஏதாவது கஷ்டத்தில் சிக்கியுள்ளார் , அல்லது மனஉளைச்சலில் சிக்கி  உள்ளார் அல்லது அவருக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டுள்ளது என்ற விஷயம் தனக்கு தெரிய வந்தால் அவருக்காகவும்  துஆ செய்ய வேண்டும். முஸ்லிம்கள் மட்டுமல்லாது காபிர்களுக்கும் யா அல்லாஹ்! அவர்களுக்கு இஸ்லாம் எனும் நேர்வழியை நஸீபாக்குவாயாக என்று துஆ செய்ய வேண்டும்.இதனால் துஆவுடைய நன்மையும் கிடைக்கிறது, பிறர் நலவை நாடியதற்கான நற்கூலியும் கிட்டுகிறது.

5, இஸ்திக்பார் செய்தல்

அல்லாஹுத்தஆலா இஸ்திக்பாரை பாவங்களை போக்கும் நிவாரணியாக ஆக்கியுள்ளான் . இஸ்திக்பார் என்பதன் பொருள் அல்லாஹ்விடம் மன்னிப்பு வேண்டுதல் என்பதாகும். அல்லாஹ்வுக்கு செய்யும் கடமைகளோடு சம்பத்தப்பட்ட எத்தனை கொடிய பாவமாக இருந்தாலும் இஸ்திக்பாரின் மூலம் அவை மன்னிக்கப்படுகின்றன. எனவே சிறு பாவமோ, பெரிய பாவமோ எது ஏற்பட்டாலும் உடனடியாக தௌபா, இஸ்திக்பார் செய்து அதற்கான பரிகாரம் தேட வேண்டும், அது மட்டுமின்றி ஏற்றத்திற்கு எதிரான செயல்களை செய்து விட்டாலும் கூட இஸ்திக்பார் செய்ய வேண்டும் , மேலும் வெளிப்படையாக எவ்வித பாவமும் ஏற்படாவிட்டாலும் கூட அப்போதும் அதிகமாக இஸ்திக்பார் செய்து கொண்டே இருக்க வேண்டும். இருலோகத்தின் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் பாவங்களை விட்டு முற்றிலும் பாதுகாக்கப்பட்டவர்கள், பரிசுத்தமானவர்கள் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தெரிந்த விஷயம், அப்படியிருந்தும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் " நான் அல்லாஹ்விடம் தினமும் எழுபதுக்கும் அதிகமான தடவை இஸ்திக்பார் செய்கிறேன் " . (புஹாரி)
ஒரு ஹதீஸில் இருலோகத்தின் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களின் ஒரு பொன்மொழி அறிவிக்கப்பட்டுள்ளது, எவர் சதாவும் இஸ்திக்பார் செய்து வருவாரோ அவருக்காக நெருக்கடியான சூழ்நிலைகள் ஒவ்வொன்றிலும் விடுபடும் வழியை அல்லாஹ் ஏற்படுத்தி தருகிறான், கவலைகள் யாவற்றையும் போக்குகிறான், அவர் நினைத்தே பார்க்காத புறத்திலிருந்து அவருக்கு ரிஜ்க் அளிக்கிறான் "( அபூதாவூத்)
         எனவே நடந்தவாறு, அமர்ந்தவாறு, எழுந்தவாறு என எல்லா நிலைகளிலும் இஸ்திக்பார் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தினமும் குறைந்தபட்சம் ஒரு தஸ்பீஹ் ( நூறு தடவை ) இஸ்திக்பார் செய்து கொண்டால் மிகவும் சிறப்பானது.

சைய்யிதுல் இஸ்திக்பார்  ) இஸ்திக்பாரின் தலைவன்(   
  இஸ்திக்பாரை எந்த மொழியிலும் செய்யலாம், ஆனால் அதன் சுருக்கமான     அரபி வாசகம் இதுதான் 
أَسْتَغْفِرُ اللَّهَ رَبِّي مِنْ كُلِّ ذَنْبٍ وَأَتُوبُ إِلَيْهِ
   நான் எனது இரட்சகனான அல்லாஹ்விடம் அனைத்து பாவங்களுக்காகவும் மன்னிப்பு வேண்டுகிறேன் , மேலும் அவன் பக்கமே மீளுகிறேன்.
  ஆனால் ஹதீஸிலே இஸ்திக்பாருடைய ஒரு குறிப்பிட்ட துஆவுக்கு அதிகமான சிறப்புகள் சொல்லப்பட்டுள்ளன, அதனை சைய்யிதுல் இஸ்திக்பார் ( இஸ்திக்பாரின் தலைவன் )  என கூறப்பட்டுள்ளது அது இதுதான்.
"اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ بِنِعْمَتِكَ وَأَبُوءُ بِذَنْبِي، فَاغْفِرْ لِي، إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ"
              யா அல்லாஹ்! நீயே என்னுடைய இரட்சகன், உன்னைத்தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை , நீயே என்னைப்படைத்தாய், நான் உன்னுடைய அடிமை, நான் என்னால் இயன்றளவு உனக்கு தந்த வாக்குறுதியை, ஒப்பந்தத்தை நிறைவேற்றி வருகிறேன், நான் செய்த பாவங்களின் தீங்கை விட்டு உன்னிடமே பாதுகாவல் தேடுகிறேன், நீ என் மீது புரிந்துள்ள உபகாரங்களை ஒத்துக்கொள்கிறேன், நான் செய்த பாவத்தையும் ஏற்கிறேன், என் பாவத்தையும் மன்னிக்க உன்னையே நம்புகிறேன். என் பாவங்களை நீ மன்னித்தருள்வாயாக ஏனெனில் பாவங்களை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை.
         ஹதீஸிலே வந்துள்ளது  "   ஒருவர்  இந்த  வார்த்தைகளை முழு உறுதியோடு காலை நேரத்தில் ஓதி மாலையை அடைவதற்குள்  இறந்துவிட்டால் அவர் சுவர்க்கவாசிகளில் கணிக்கப்படுவார், எவர் இரவு நேரத்தில் இவ்வார்த்தைகளை முழு உறுதியோடு ஓதியிருந்து காலைக்குள் இறந்து விட்டால் அவர் சுவனவாசிகளில் ஒருவராகி விடுவார்             "(புஹாரி).
          குறிப்பாக இரவு தூங்குவதற்கு முன்னர் திறந்த உள்ளத்துடன்,  தான் பகல் முழுவதும் செய்த குறைபாடுகளை எண்ணிப்பார்த்து அவை யாவற்றை விட்டும் பாவமன்னிப்பு தேடி இஸ்திக்பார் செய்ய வேண்டும்.

6 , அல்லாஹ்வை திக்ரு செய்தல்

            அல்லாஹ்வை திக்ர் செய்வதும் எத்தனை இன்பமான இலகுவான வணக்கம் என்றால் மனிதன் அதிலே  சிறிது கவனம் செலுத்தினாலேயே போதும், எந்நேரமும் அதை செய்யலாம், அதன் சிறப்புகளும் பலன்களும் ஏராளமாக உள்ளன. அல்லாஹுத்தஆலா குர்ஆனில் அடிக்கடி தன்னை திக்ர் செய்வது பற்றி வலியுறுத்தி கூறுகிறான்.
உதாரணமாக: அல்லாஹ் கூறுகிறான்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا
  " ஈமான்கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்யுங்கள்" .
             நாம்  திக்ர் செய்தவதால் அல்லாஹ்வுக்கு எந்த இலாபமும் இல்லை. அவன் அடியார்கள் நினைவு கூறுவதை விட்டு முற்றிலும்  தேவையற்றவன் என்பது நன்கு தெளிவான விஷயம் ,  ஆதலால் திக்ர் செய்வதால் அடியார்களுக்குத் தான் இலாபம்,  திக்ரை அதிகப்படுத்துவதால் அல்லாஹ்வுடன் கூடிய தொடர்பு வலுபெறுகிறது, மனிதனின் ஆத்மாவுக்கும் இரை கிடைக்கிறது, அதனால் உயிரில் வலிமையும், சக்தியும் உண்டாகிறது, இந்த ஆத்மீக பலத்தின் மூலம் ஒருவர் தனது நப்ஸ் மற்றும் ஷைத்தானை எதிர்கொள்வது இலகுவாகிறது , பாவங்களை விட்டும் தப்பிப்பது சுலபமாகிறது, மேலும் திக்ர் செய்வதால்  அமல்களின் பட்டோலைகளில் நன்மை அதிகரித்துக்கொண்டே போகிறது.
       ஒரு ஸஹாபி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.  "  அல்லாஹ்விடம் மிகமிக சிறந்த , கியாமத் நாளில் உயர் அந்தஸ்துமிக்க வணக்கம் எது ? அல்லாஹ்வின் தூதர்  " அல்லாஹ்வுடைய திக்ர் தான்  " என பதிலளித்தார்கள் (ஜாமிவுல் உஸூல்)
     ஒரு ஸஹாபி ஒரு தடவை நபி (ஸல்) அவர்களிடம்  "   யாரசூலுல்லாஹ்! நன்மைகளின் வகைகள் ஏராளமாக உள்ளன , அவை யாவற்றையும் செய்து முடிப்பது என்னால் இயலாத ஒன்று , எனவே நான் உறுதியாக பற்றிப்பிடித்துக் கொள்ளும் வகையில் ஏதேனும் ஒரு அமலை சொல்லித்தாருங்கள். அதிகம் சொல்லாதீர்கள் , நான் மறந்து போவேன் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உம்முடைய நாவு சதாவும் அல்லாஹ்வுடைய தியானத்தில் மூழ்கி இருக்கட்டும் என பதிலளித்தார்கள். (திர்மிதீ)
       ஹஜ்ரத் அபூமூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் , அல்லாஹ்வை திக்ர் செய்யப்படும் வீட்டிற்கும், திக்ர் செய்யப்படாத வீட்டிற்க்கும் உதாரணம் உயிருள்ளவர், இறந்தவர் போன்றதாகும் அதாவது திக்ருள்ள வீடு உயிருள்ளவர் போன்றதும், திக்ரற்றவர் வீடு மரணித்தவர் போன்றதுமாகும். (புஹாரி, முஸ்லிம்)
          மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒருவர் அல்லாஹ்வை நினைவு கூறப்படாத சபையில் கலந்து , பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றால் அது செத்த கழுதையின் அருகே அமர்ந்து கலைந்து செல்வதற்கு ஒப்பானதாகும். இந்த சபையில் கலந்தது கியாமத் நாளில் அவர் கைசேதப்படுவதற்க்கு காரணமாகும். அதாவது  இவ்வளவு நேரத்தை நாம் வீணடித்து விட்டோமே என்று வருத்தம் ஏற்படும்.
          இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒவ்வொரு சபை முடிந்து எழும் போது கீழ்காணும் வார்த்தைகளை ஓதிக்கொள்ளவேண்டும் .
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، لا إلهَ إِلاَّ أنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتوبُ إلَيْكَ
         யாஅல்லாஹ் நீ பரிசுத்தமானவன், புகழுக்குறியவன், உன்னைத்தவிர வணக்கத்திற்குறியவன் யாருமில்லை, நான் உன்னிடம் மன்னிப்பு வேண்டுகிறேன், மேலும் உன் பக்கமே மீளுகிறேன்,
  இதனை ஓதுவதால் அச்சபையில் ஏற்பட்ட பாவங்களுக்கு பரிகாரம் கிடைத்து விடுகிறது.
        அல்லாஹ்வை தியானிப்பதற்கு  இத்தனை பெரும் சிறப்புகள் இருந்தும் கூட அல்லாஹுத்தஆலா இந்த அமலை செய்வதற்கு எவ்வித நிபந்தனையும் விதிக்கவில்லை, ஒழு செய்து கொண்டு, கிப்லாவை முன்னோக்கி இருந்து ஓர்முக  சிந்தனையோடு திக்ர் செய்வது  மிகவும் நல்லது , அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் நடந்தவாறு , சுற்றியவாறு, உட்கார்ந்தவாறு, நின்றவாறு என எல்லா நிலைமைகளிலும் இந்த வணக்கத்தை செய்யலாம். இதற்க்காக ஒழு இருக்க வேண்டுமென்ற நிபந்தனையும் இல்லை மாறாக குளிப்பு கடமையான நிலைமை, மாதவிடாயுடைய நிலைமைகளிலும் கூட திக்ர் செய்வது கூடுமானதாகும். ஆடைகளில்லாமல்  மறைவிடங்கள் திறந்த நிலையில்  அல்லது அசுத்தமான இடங்களில் மட்டும் நாவினால் திக்ர் செய்யக்கூடாது, அந்நிலைகளிலும் உள்ளதுக்குள்ளேயே திக்ர் செய்து கொள்ளலாம். எனவே இப்பெரும் வணக்கத்தை மனிதன் பெரிய கஷ்டமோ, உழைப்போ இல்லாமல் இலகுவான முறையில் செய்து பெரும் நன்மைகளை அடைந்து கொள்ள முடியும், இருப்பினும் சிறந்தது என்னவென்றால் இரவு, பகலில் ஏதாவது சிறிது நேரம் ஒதுக்கி அதில் பேணுதலோடு, கிப்லாவை முன்னோக்கி இருந்து , மன ஓர்மையோடு திக்ர் செய்ய வேண்டும் , மற்ற நேரங்களில் நடந்தவாறு , அமர்ந்தவாறு தம் வேலைகளில் ஈடுபட்டவாறு, படுத்தவாறு என எவ்வளவு திக்ர் செய்யும் சந்தர்ப்பங்கள் அமைந்தாலும் அது பாக்கியத்திலும் பாக்கியமான செயலாகும் .
  குறிப்பிட்ட திக்ர்களுக்காக கீழ்காணும் நூல்களை படிப்பது லாபகரமானதாக இருக்கும்
1)   திக்ருடைய சிறப்புகள், - ஷைகுல் ஹதீஸ் மௌலானா ஜகரிய்யா (ரஹ்) -
2)   திக்ருல்லாஹ், - )மௌலானா ஷபீஃ (ரஹ்) -
3)   மஃமூலாத்தே யவ்மிய்யா, -  ஹஜ்ரத் அப்துல் ஹை ஆரிபீ (ரஹ்) -
          சில சுருக்கமான திக்ருகள் கீழே தரப்படுகின்றன , அவற்றை நடந்தவாறு, திரிந்தவாறு ஓதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
1)   ஒரு ஹதீஸிலே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ,  அல்லாஹ்விடம் மிக மிக பிரியமான வார்த்தைகள் நான்கு கலிமாக்களாகும். (முஸ்லிம்)
سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَر
2)   ஒரு ஹதீஸிலே வருகிறது, இரண்டு வார்த்தைகள் ரஹ்மானுக்கு மிகப் பிரியமானவை, சொல்வதற்கும் எளிதானவை, ஆனால் அமல்களை நிறுக்கப்படும் தராசிலோ மிகவும் கனமானவைஅவை
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ"
3)   மற்றொருஹதீஸிலேவருகிறது                                                                  
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّه
                    வை அதிகமாக ஓதி வாருங்கள், ஏனெனில் இவை சுவனத்தின் கருவூலங்களில் ஒன்றாகும்.(மிஷ்காத்)
4)   لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ،
ஹதீஸிலே வருகிறது எவர் காலை நேரத்தில் இந்த கலிமாக்களை ஓதுவாரோ அவருக்கு இஸ்மாயில் (அலை) அவர்களின் சந்ததிகளைத் சார்ந்த பத்து அடிமைகளை உரிமையிட்ட நன்மை கிடைக்கின்றது. அத்துடன் பத்து நன்மைகள் கிடைக்கின்றன. பத்து பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன, பத்து அந்தஸ்துகள் உயர்த்தபடுகின்றன. அவர் ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாக்கப்படுகிறார். இதே வார்த்தைகளை மாலையில் கூறுவதால் காலை வரை அவருக்கு இதே பலா பலன்கள் கிடைகின்றன. (அபூதாவுத்)

5)   حَسْـبِيَ اللهُ، لَا إِلهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ، وَهُوَ رَبُّ الْعرشِ العظيمُ،                     
       

7, நபியின் மீது ஸலவாத் கூறுவது

                        நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவதின் சிறப்புகள் பற்றி கூறப்பட்டுள்ள ஹதீஸ்களை மட்டும் தொகுத்து ஒரு தனி நூலையே தயார் செய்து விடலாம். அதிகமான அறிஞர்கள் இதுபற்றி தனி நூலையே எழுதியுமுள்ளார்கள் .
   ஒரு ஹதீஸிலே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்னிடம் என் இரட்சகனின் புறத்திலிருந்து ஒரு வானவர் வந்தார். உங்கள் சமுதாயத்தைச் சார்ந்த எவரேனும் உங்கள் மீது ஒரு தடவை ஸலவாத் கூறுவாரினால் அவருக்காக அல்லாஹ் பத்து நன்மைகளை எழுதுகிறான். பத்து பாவங்களை மன்னிக்கின்றான், பத்து பதவிகளை உயர்த்துகிறான் என்ற நற்செய்தியை கூறினார். (நஸயீ, அஹ்மது)
            ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒருவருக்கு முன் என் பெயர் கூறப்பட்டால் அவர் என் மீது ஸலவாத் கூறட்டும். எவர் என் மீது ஒரு தடவை ஸலவாத் கூறுகிறாரோ அல்லாஹ் அவர் மீது பத்து தடவை தன் கிருபைகளை பொழிகின்றான்.(நஸயீ, அஹ்மத்)
  ஸலவாத்தில் மிகச்சிறப்பானது தொழுகையில் ஓதப்படும் தரூதே இப்ராஹீம் எனும் ஸலவாத்தாகும். மிகச் சுருக்கமானது صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ என்பதாகும். இதை ஓதினாலும் ஸலவாத்துடைய நன்மை கிடைத்துவிடும். நபி (ஸல்) அவர்களின் முபாரக்கான பெயரை எழுதும் போது முழுமையாக صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ என எழுதப்பட வேண்டும். எவரும் (ஸல்) என மட்டும் எழுதுவது போதுமானதாகாது.

8 , நன்றி செலுத்துதல்

அல்லாஹுத்தஆலாவின் கணக்கிலடங்காத அருட்பாக்கியங்கள் ஒவ்வொரு நொடியும் மனிதன் மீது பொழிந்து கொண்டே உள்ளனஅல்லாஹ் கூறுகிறான்
وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا
அல்லாஹ்வின் அருட்பாக்கியங்களை விரல் விட்டு நீங்கள் எண்ண ஆரம்பித்தால் உங்களால் அவற்றை எண்ணி முடிக்கவே இயலாது.
  ஷைகு ஸஃதீ (ரஹ்) கூறுகிறார்கள், இறைவனின் மற்ற பாக்கியங்களை விட்டுவிட்டு வெறும் வாழ்க்கை என்ற  பாக்கியத்தை   மட்டும் சிந்தித்து பார்த்தால் அதுவே எண்ணிடலடங்காத அளவுக்கு உள்ளன , ஆம், மனிதன் உயிர் வாழ்வதற்காக சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சுக்குள்ளேயே இரண்டு பாக்கியங்கள் மறைந்துள்ளன, மூச்சு உள்ளே செல்வது ஒரு நிஃமத், வெளியே வருவது மற்றொரு நிஃமத்தாகும், ஏனெனில் உள்ளே சென்ற மூச்சு வெளியே வரவில்லையென்றாலும் சிரமம், வெளியே வந்த மூச்சு உள்ளே செல்லவில்லையென்றாலும்  சிரமம். அந்த சிரமமேதுமில்லாமல் இலகுவாக அல்லாஹ் நமக்கு மூச்சு விட , வாங்க செய்துள்ளான் , எனவே ஒவ்வொரு மூச்சிலும் இரண்டு நிஃமத்துக்கள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு பாக்கியத்திற்க்கும் நன்றி செலுத்துதல் வேண்டும் என்ற அடிப்படையில் மூச்சுக்கு மூச்சு மனிதன் நன்றி செலுத்திக்கொண்டே இருந்தாலும் கூட வெறும் மூச்சு என்ற பாக்கியத்திற்க்கே நன்றி செலுத்தி முடிக்க முடியாது என்றால் மற்ற ஏனைய பாக்கியங்களுக்கான  நன்றியை  எப்படி நிறைவேற்ற முடியும்?
        எனவே அல்லாஹ் பொழிந்துள்ள பாக்கியங்களுக்கெல்லாம் மிகச் சரியாக நன்றி செலுத்தி முடித்தல் என்பது மனிதனால் இயலாத காரியம் என்றாலும் அதிகமாக நன்றி செலுத்திக்கொண்டே இருப்பது மிகவும் பிரியமான அமலாகும். அதற்கு நன்மையும் கணக்கில்லாமல் கிடைக்கின்றது. அதனால் பாக்கியங்களும் அதிகரிக்கின்றன. அல்லாஹ்வுடன் கூடிய தொடர்பிலும், அன்பிலும் முன்னேற்றம் ஏற்படுகின்றது. அல்லாஹுதஆலா கூறுகிறான்.
                           فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ
  நீங்கள் என்னை நினைவு கூறுங்கள், நான் உங்களை நினைவு கூறுகிறேன், எனக்கு நன்றி செலுத்துங்கள் , நன்றி மறவாதீர்கள்.
  மற்றொரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்
وَسَنَجْزِي الشَّاكِرِينَ
                நாம் நன்றி செலுத்தக்கூடியவர்களுக்கு சிறந்த கூலியை தருகிறோம்.
  மேலும் அல்லாஹ் கூறுகிறான்,.
                            لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيد      
          நீங்கள் நன்றி செலுத்தினால் நான் உங்களுக்கு மேலும் தருவேன், நீங்கள் நன்றி மறந்து செயல்பட்டால் என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாகும்.
   ஆதலால் நன்றி செலுத்தும் அடியார் அல்லாஹுத்தஆலாவுக்கு மிகவும் பிரியமானவர், நன்றி மறந்த மனிதன் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானவராவார், ஏனெனில் நன்றி மறந்த நிலை குறுகிய கண்ணோட்டத்தின்  அடையாளமாகும். நன்றி கெட்ட மனிதனுக்கு சிறியதொரு சிரமம் ஏற்பட்டு விட்டால் அதையே பெரிதாக எடுத்துக் கொண்டு அமர்ந்து விடுகின்றான்.அந்த சிரமங்களுக்கு நடுவிலும் அவன் மீது கணக்கில்லாமல் பொழிந்து கொண்டிருக்கும் பாக்கியங்கள் அவனுடைய கண்களுக்கு தெரிவதில்லை. சிறிய சிரமத்தை மலையாக ஆக்கிக்கொண்டு  அதைச் சொல்லிச் சொல்லியே அழுகிறான். இதற்கு நேர் மாற்றமாக நன்றியுள்ள அடியாரின் நிலைமை எவ்வாறிருக்கும் எனில் சிரமங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கூட அவருடைய பார்வை அல்லாஹ்வின் இதர பாக்கியங்களை நோக்கி இருக்கும். அவர் அந்த பாக்கியங்களுக்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டு இருப்பார், அத்தோடு கஷ்டத்தை நீக்குவதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக்கொண்டும் இருப்பார்.
  உதாரணமாக ஒரு மனிதருக்கு ஏதோ ஒரு வியாதி ஏற்பட்டு விட்டது. அவர் நன்றி மறந்தவராக இருந்தால் அவர் அல்லாஹ்வின் இதர அனைத்து பாக்கியங்களையும் மறந்துவிட்டு தனக்கு பெரிதும் அநீதமிழைக்கப்பட்டு விட்டதாக நினைத்துக் கொள்வார், நன்றி கெட்ட வார்த்தைகளை வெளிப்படுத்துவார். அதே நேரத்தில் அவர் நன்றியுள்ள அடியாராக இருந்தால் வியாதியின் காரணமாக பெரும் கவலையும், வருத்தமும் ஏற்பட்டும் கூட அவர் இவ்வாறு சிந்திப்பார். வாழ்க்கையின் பெரும்பான்மையான நாட்களில் அல்லாஹ் அவருக்கு அளித்திருந்த ஆரோக்கியம் எத்தனை மகத்தானதாக இருந்தது? நான் நோய்வாய் பட்டிருக்கும் நிலையிலும் கூட என்னை கவனித்துக்கொள்பவர்கள், வைத்தியம் செய்பவர்கள் , என் வியாதிக்கான மருந்துகள் ஆகியவற்றின் வடிவில் நான் ஆறுதலடைவதற்கென எத்தனை அம்சங்களை அல்லாஹ் எனக்கு அளித்துள்ளானோ  இவைகளெல்லாம் எத்தனை பெரும் பாக்கியங்கள்? மேலும் தன்னைக்காட்டிலும் மோசமான நோய்களில் பீடிக்கப்பட்டவர்களை சிந்தித்துப் பார்த்து அது போன்ற வியாதியிலிருந்து அல்லாஹ் தன்னை பாதுகாத்தானே என்று அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிப்பார். மேலும் தன் வியாதி நீங்குவதற்கும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார். ஆனால் முறையிடும் தொனியில் இல்லாமல், தன் இயலாமையை, பலகீனத்தை அல்லாஹ்விடம் வெளிப்படுத்திக் காட்டும் தொனியில் இறைஞ்சுவார்சிரமங்களால் அல்லல்படும்  அந்த சூழ்நிலையில் கூட நன்றி கெட்ட அல்லது அல்லாஹ்வின் தீர்ப்பை  கடிந்து கொள்ளும்படியான ஒரு சிறு வாடை கூட அவருடைய பேச்சிலே  இருக்காது.
          மனிதன் மீது ஷைத்தான் கையாளும் முதல் தாக்குதலே அவனை நன்றி கெட்டதனத்தில் தள்ளி விடுவதுதான். சங்கையான குர்ஆனில் உள்ளது. ஷைத்தானுக்கு கியாமத் நாள்வரை உயிர்வாழ்வதற்க்கான சலுகை கிடைத்த போது அவன் அல்லாஹ்விற்கு முன்னிலையில் தன் திட்டத்தை  வெளிப்படுத்தினான். நான் உன்னுடைய அடியார்களை வழிகெடுப்பேன், எல்லா புறத்திலிருந்தும் அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பேன், இதனால் ஏற்படும் விளைவு
وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِين
அவர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி விசுவாசம் கொண்டவர்களாக உனக்கு கிடைக்க மாட்டார்கள் என்றான்.
  இதிலிருந்து தெரிகிறது, ஷைத்தானின் மிகப்பெரிய ஆசையும், முயற்சியும் அவன் அல்லாஹ்வின் அடியார்களை நன்றி எனும் வணக்கத்தை விட்டு தூரப்படுத்தி அவர்களை நன்றி கெட்டவர்களாக மாற்றுவதாகத்தான் இருக்கும். இதற்கு மாற்றமாக எந்த நல்லடியார் நன்றியுள்ளவனாகத்தான் தான் இருப்பேன் என உறுதி கொள்வாரோ அவர் மீது ஷைத்தானின் சூழ்ச்சி எடுபடாது.
   ஆக அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிப்பது மிகப் பெரிய வணக்கமாகும். இந்த பெரிய வணக்கத்தை சில நொடிகளிலேயே செய்து முடித்து விடலாம். ஹதீஸிலே வந்துள்ளது
                           الطَّاعِمُ الشَّاكِرُ بِمَنْزِلَةِ الصَّائِمِ الصَّابِر
  உணவை உண்டு, அதற்கு நன்றி செலுத்தும் அடியார் நன்மையிலே , உணவருந்தாது நோன்பு நோற்ற பொறுமையாளருக்கு சமமாவார்.
  எனவே இரவு, பகல் வாழ்க்கையில் சிறிய , பெரிய பாக்கியமோ, சுகமோ ஏதேனும் கிட்டினால் அதற்கு நன்றி செலுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். வீட்டில் நுழைந்து வீட்டினர்களை ஆரோக்கியமான நிலையில் பார்த்தால் உடனே அதற்கு நன்றி தெரிவிக்கவேண்டும். சிறந்த சுவையான  உணவு முன்னால் வந்தது என்றால் நன்றி தெரிவிக்கவேண்டும். காற்று இன்பமளித்தால் நன்றி சொல்லவேண்டும். தனது குழந்தை விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்தால் நன்றி சொல்ல வேண்டும். ஆக தனக்கு மகிழ்ச்சியையோ, சுகத்தையோ தரும் ஒவ்வொரு விஷயத்திற்கும் நன்றி செலுத்தக்கூடிய, செலுத்திக் கொண்டே இருக்கக்கூடிய பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாவால் இல்லாவிட்டாலும் உள்ளத்துக்குள்ளேயாவது நன்றி தெரிவிக்க வேண்டும்.
  மேலும் நமது பெரியார்கள் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டுள்ளார்கள். இரவிலே படுக்கைக்குச் சென்று தூங்குவதற்கு முன்னதாக சிறிது நேரம் அல்லாஹ்வின் பாக்கியங்களையெல்லாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஒவ்வொரு பாக்கியத்தையும் எண்ணிப்பார்த்து, எண்ணிப்பார்த்து அதற்கு நன்றி தெரிவிக்கவேண்டும். உதாரணமாக இப்படி சிந்திக்க வேண்டும் அல்ஹம்துலில்லாஹ் , நானும் என் குடும்பத்தார்களும் நலமாக உள்ளோம். அல்ஹம்துலில்லாஹ் , ஒதுங்கிக்கொள்ள வீடு ஒன்று உள்ளது , அல்ஹம்துலில்லாஹ் இந்த படுக்கை நன்கு சுகமாக உள்ளது, அல்ஹம்துலில்லாஹ்! உயிரும் உடமையும் பாதுகாப்பாக உள்ளது, ஆக இவ்வாறு எத்தனை சுககாரியங்கள் தனக்கு கிட்டியுள்ளனவோ அவை யாவற்றையும் ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்து அதற்கு நன்றி தெரிவித்து விட்டு தூங்க வேண்டும்.
             மனிதன் தன்னுடைய வாழ்க்கையை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு தோதுவாக அமைத்துக் கொள்வதுதான் அல்லாஹ்வின் பாக்கியங்களுக்கு மனிதன் செலுத்தும் உண்மையான நன்றி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும் மனிதன் தன்னுடைய உள்ளத்தாலும் நாவாலும் அதிகமதிகம் நன்றி செலுத்தும் பழக்கத்தை உண்டு பண்ணி கொண்டால் இதுவும் மிகப்பெரும் வணக்கமாகும்.இதன் பரக்கத்தால் மற்ற அமல்களும் சீராகி விடும் இன்ஷா அல்லாஹ்!
              நன்றி தெரிவிப்பதெற்கென குறிப்பிட்ட வார்த்தை எதுவும் இல்லை தான்.ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்த மொழியில் நன்றி தெரிவிக்கலாம் . ஆனால் நபி (ஸல்) அவர்கள் நன்றி தெரிவிப்பதற்காக பரந்த கருத்துக்களை   உள்ளடக்கிய வார்த்தைகளையும் கற்றுத்தந்துள்ளார்கள, அவற்றை கூறுவதால் ஒரு தடவையிலேயே ஆயிரக்கணக்கான தடவை நன்றி தெரிவித்த நன்மை கிடைத்துவிடும். அந்த வார்த்தைகள் இவைகள் தான்.
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ حَمْدًا دَائِمًا مَعَ دَوَامِكَ ولَكَ الْحَمْدُ حَمْدًاخَالِدًا مَعَ خُلُودكَ ، وَلَكَ الْحَمْدُ حَمْدًا دَائِمًا لَا مُنْتَهَى لَهُ دُونَ مَشِيئَتِكَ، وَلَكَ الْحَمْدُ حَمْدًا لَا يُرِيدُ قَائِلُهَا إِلَّا رِضَاكَ، وَلَكَ الْحَمْدُ حَمْدًا عِنْد طَرَفَةِ كُلّ عَيْنٍ وَتَنَفُّسِ كُلّ نَفْسٍ
            யா அல்லாஹ் ! உன்னுடைய நிலைத்த தன்மையோடு கூடிய நிரந்தர நன்றி உனக்கே உரியது , உன்னுடைய நீடித்த தன்மையோடு கூடிய நீடித்த நன்றி உனக்கே உரியது , உன்னின் நாட்டமின்றி முடிந்து போகாத முடிவில்லாத நன்றி உனக்கே உரியது . உன் திருப்தியை மட்டுமே நோக்கமாக கொண்டு நன்றி தெரிவிப்பவரின் நன்றியைப் போன்ற நன்றி உனக்கே உரியது , கண்ணிமைக்கும் ஒவ்வொரு நொடியும் , விடும் ஒவ்வொரு மூச்சின் போதும் நன்றி உனக்கே உரியது .
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَدَدَ خَلْقِكَ وَمِدَادَ كَلِمَاتِكَ وَزِنَةَ عَرْشِكَ وَرِضَا نَفْسِكَ
 யாஅல்லாஹ்  உன்னுடைய படைப்புகளின் எண்ணிக்கையளவுக்கு , உன் வார்த்தைகளை எழுத பயன்படும் மை அளவுக்கு உன்னுடைய அர்ஷின் எடையளவுக்கு ,   நீ திருப்தியுறும் அளவுக்கு உன்னை நான் புகழ்கிறேன்.
  ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு கன்னாம் (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கீழ்காணும் வார்த்தைகளை சொல்லித்தந்தார்கள்.
اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْر
     யா அல்லாஹ்! எனக்கோ அல்லது உன்னுடைய படைப்புகளிலிருந்து  யாருக்கேனும் எந்த ஒரு பாக்கியமும் கிட்டி இருந்தாலும் அது உன்னிலிருந்து மட்டுமே கிடைத்ததாகும். உனக்கு யாதொரு இணையுமில்லை, எனவே உனக்கே புகழ், உனக்கே நன்றி உரித்தாகுக.
  பின்னர் நபி (ஸல்) கூறினார்கள் எவர் இந்த வார்த்தைகளை காலையில் சொல்வாரோ அவர் அந்த நாளின் நன்றியை நிறைவேற்றி விட்டார்.எவர் இந்த வார்த்தைகளை மாலையில் சொல்வாரோ அவர் அன்றைய இரவின் நன்றியை நிறைவேற்றி விட்டவராவார். ( நஸயீ, அபூதாவூத் )

9, பொறுமை

                  அல்லாஹுத்தஆலா இந்த பிரபஞ்சத்தில் மூன்று வகையான உலகத்தை படைத்துள்ளான். ஒன்று இன்பமே இன்பம், சுகமே சுகம் என்றிருக்கும் உலகம். கவலை , சிரமத்தின் வாடை கூட அங்கே இருக்காது, அதுதான் சுவர்க்கம். இரண்டாவது சிரமமே சிரமம் , கவலையே கவலை என்றிருக்கும் உலகம், மகிழ்ச்சி, சுகத்தின் வாடை கூட அங்கே இருக்காது . அது தான் நரகம் என்ற உலகம். மூன்றாவது ஒரு உலகமுண்டு, அதில் மகிழ்ச்சியும் இருக்கும், கவலையும் இருக்கும், சுகமும் இருக்கும், சிரமமும் இருக்கும். அதுதான் நாம் வாழும் இந்த உலகமாகும், எனவே எப்போதும் ஏதாவதொரு சிறு சிரமம் கூட ஏற்படாத ஒரு மனிதன் இது வரை உலகத்தில் இருந்ததுமில்லை, இனி இருக்கவும் முடியாது. மனிதன் எத்தனை தான் செல்வந்தனாக இருந்தாலும், எத்தனை தான் அதிகாரம் படைத்தவனாக , எத்தனை நல்லவராக, பய பக்தியாளராக இருந்தாலும் அவருக்கு உலகிலே மகிழ்ச்சியோடு கவலையும், சுகத்தோடு சிரமமும்  கண்டிப்பாக ஏற்படத்தான் செய்யும். பெரும், பெரும் நபிமார்களுக்கு கூட சிரமங்களும், துயரங்களும் ஏற்படத்தான் செய்தன.
            எனவே எனக்கு என்னுடைய வாழ்க்கையில் எந்த சிரமமும், துயரமும் ஒரு போதும் ஏற்படக்கூடாது என எண்ணுபவன் இந்த உலகின் எதார்த்தத்தை புரியாதவனாவான். அவனின் இந்த விருப்பம் ஒரு போதும் நிறைவேறாது , கூடுதல் , குறைதல் என்பதில் சற்று வித்தியாசம் இருக்கலாம். ஆனால் கஷ்டங்கள், துயரங்களை விட்டும் முழுமையான விடுதலை என்பது இந்த உலகத்தில் சாத்தியமில்லை.
  உயிருடனிருப்பதும், கவலையில் பீடிக்கப் பட்டிருப்பதும் அசலில் இரண்டுமே ஒன்று தான், எனவே மரணத்திற்கு முன்னரே கவலையிலிருந்து ஒருவன் விடுதலை பெற வேண்டும் என எண்ணினால் அது எவ்வாறு   சாத்தியம் ?
   ஆதலால் இந்த உலக வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்தே தீரும். ஒருவன் பொறுமையிழந்து , இடம், காலம் தெரியாமல் எல்லா நேரத்திலும் தன் கவலைகளை நினைத்து அழுது கொண்டு , தன் விதியை நொந்து கொண்டு திரிந்தாலும் அப்போதும் அவனுக்கு கவலையிலிருந்து விடுதலை கிடைக்க முடியாது. ஆனால் இவ்வாறு ஒருவன் நடந்து கொள்ளும் பட்சத்தில் முதல் பாதிப்பு அவன் சதாவும் துன்பத்தில் உழண்டுகொண்டு தான் இருப்பான். அடுத்தது  அவன் பொறுமை கொள்ளாதிருப்பதால் ஏற்படும் இரண்டாவது மிகப்பெரிய நஷ்டம் யாதெனில் அவனுக்கு நன்மைகளை தேடித் தர இருந்த சிரமங்களுக்கு யாதொரு நன்மைகளும் கிடைக்காமலேயே போய்விடும்.
  இதற்கு நேர்மாற்றமாக ஒருவர்  அவருக்கு துன்பங்களும், துயரங்களும் ஏற்படும் போது இவ்வாறு சிந்திக்கிறார், உலகத்தின் இந்த துன்பம் சில நாட்கள் தான், இவ்வுலகின் சிரமங்களை விட்டும் முழுமையான ஈடேற்றம் என்பது யாருக்குமே சாத்தியமில்லை . அல்லாஹ்வின் எந்த ஒரு முடிவிலும் அது நமக்கு விளங்கினாலும் சரி, விளங்காவிட்டாலும் சரி தக்க காரணம் இல்லாமல் இருக்காது. எனவே அல்லாஹ்வின் முடிவு பற்றி புலம்புவதை விட்டு விட்டு அதன் சத்தியத் தன்மையின் மீது நம்பிக்கை கொள்வதுதான் நான் செய்ய வேண்டியது. இத்துயர்மிகு சம்பவத்தால் எனக்கு துன்பம் ஏற்பட்டிருந்தாலும் சரி, இத்துன்பத்தால் எனது உள்ளம் வேதனை பட்டாலும் சரி , எனக்கு அல்லாஹ்வின் இம் முடிவு குறித்து எந்த ஆட்சபனையும் கிடையாது.ஏனெனில் எனக்கு எது நலவானது? என்பதை அவன் தான் அறிகிறான், எனக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை என் விஷயத்தில் சிறந்ததாக மாற்றித் தர வேண்டும். என்னுடைய உள்ளத்திற்கு நிம்மதியையும், அமைதியையும் அளிக்க வேண்டும் என்னை நிம்மதியிழக்க செய்யும் இது போன்ற  துன்பங்கள் வருங்காலத்தில் ஏற்படாத வண்ணம் என்னைப் பாதுகாக்கக் வேண்டும் என்று நான் அல்லாஹ்விடமே வேண்டுகிறேன் என நினைக்கிறார்.
  இம்மனிதரின் இத்தகைய சிந்தனையோட்டத்திற்கு பெயர்தான் பொறுமை எனப்படுகிறது. இதில் ஏற்படும் லாபம் யாதெனில் இதனால் மனிதனுக்கு நிம்மதி உண்டாகிறது. அமைதியிழந்த நிலை மாறுகிறது, உள்ளத்திற்கு உறுதி ஏற்படுகிறது மற்றொருபுறம், ஏற்பட்டு விட்ட துன்பத்திற்காக அல்லாஹ்வின் தரப்பிலிருந்து எண்ணிலடங்காத நன்மையும் , கூலியும் கிடைக்கின்றது. அல்லாஹ் கூறுகிறான்
إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ
நிச்சயம் பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி கணக்குவழக்கில்லாமல் வழங்கப்படும்.
            ஒரு விஷயத்தை நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும் , ஒரு சிரமத்தின் போது உள்ளத்தில் கவலை எழுவதில் தவறில்லை , துன்பங்கள், துயரங்களின் சமயத்தில் தன்னையும் மீறி அழுதுவிடுவது கூட பொறுமையற்ற நிலை என குறிப்பிட முடியாது . ஆனால் அல்லாஹ்வின் தீர்ப்பை விமர்சிப்பது, குறை கூறி திரிவது, ஆட்சேபிக்க ஆரம்பித்து விடுவது போன்றவற்றைத்தான் பொறுமையற்ற நிலை என்போம். உள்ளத்தில் வருத்தம் கொழுந்துவிட்டு எரிகிறது, கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுகின்றது, பதட்டமாகவே உள்ளது, அடிக்கடி அழுகை வருகின்றது ஆனால் அம்மனிதர் அல்லாஹ்வின் விதியைப்பற்றி விமர்சிப்பதற்கு பதிலாக அல்லாஹ்வின் மதி நுட்பத்தை நம்புகிறார் என்றால் இதற்கு பெயர்தான் பொறுமை . இதற்காகத்தான் அல்லாஹ்வின் தரப்பிலிருந்து எண்ணிலடங்காத கூலியும் வாக்களிக்கப்பட்டுள்ளது.
          இந்த பொறுமையின் அடையாளம் மனிதனுக்கு உள்ளத்தில் வருத்தம் ஏற்படும் போதெல்லாம் அவர் நாவால் கூற வேண்டும்.
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
  வருத்தத்தின் போது எவர்கள் நாவால் இந்த வார்த்தைகளை கூறுவார்களோ அத்தகையவர்கள் குறித்து அல்லாஹ் கூறுவதாவது
أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ
  இத்தகைய மனிதர்கள் மீது தான் அவர்களின் இரட்சகனின் புறத்திலிருந்து கிருபைகளும், அருள்களும் மலைபோல் பொழிகின்றன, மேலும் இத்தகையோர்கள்தான் நேர்வழி பெற்றவர்களாவர்.
        எனவேதான் தீனுடைய பெரியார்கள் மிகச்சரியாக சொன்னார்கள், பொறுமை என்பது ஆயிரம் வணக்கங்களுக்கு சமமான ஒரு வணக்கம், அப்பொறுமையினால் மனிதன் ஆத்மீக ரீதியாக முன்னேற்றம் கண்டு எங்கிருந்து எங்கயோ போய் விடுகின்றான்.
        மேலும் பெரிய, பெரிய சிரமமும் , கஷ்டமும் ஏற்பட்டு மனிதன் அவற்றில் பொறுமை காத்து , இன்னாலில்லாஹி ஓதும் போது மட்டுமே  பொறுமை எனும் இவ்வணக்கம் ஈடேறும் என்பதல்ல , மாறாக தினசரி வாழ்க்கையில் தம் மன நிலைக்கு மாற்றமான நிகழ்வுகள் ஏற்படும் போதெல்லாம் இன்னாலில்லாஹி ஓதக்கூடிய பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
  ஹஜ்ரத் உம்முசல்மா (ரலி) கூறுகிறார்கள் , ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
"مَنْ أصَابَتْهُ مُصِيبَةٌ، فَلْيَقُلْ: ْ إنَّا للهِ وَإِنَّا إلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ عِنْدَكَ أَحْتَسِبُ مُصِيبَتي، فآجِرْني فِيهَا وَأَبْدِلْنِي بِهَا خَيْراً مِنْهَا"
  அதாவது உங்களில் யாருக்கேனும் சிரமமோ, துன்பமோ ஏற்பட்டால் அவர் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் என்று கூறி விட்டு , யா அல்லாஹ்! என்னுடைய இந்த துன்பத்திற்காக உன்னிடம் நற்கூலியை வேண்டுகிறேன் , எனக்கு இதற்காக கூலி வழங்குவாயாக, மேலும் இதற்கு பகரமாக இதை விட சிறந்ததை எனக்கு நீ தந்திடுவாயாக என கூறவும் . (அபூதாவூத்,பாபுல் இஸ்திர்ஜா)
        மேலும் ஹதீஸில் உள்ளது, ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் முன்னே இருந்த விளக்கு அணைந்து போனது , அதற்கும் நபியவர்கள் இன்னாலில்லாஹி ஒதினார்கள்.
  இதிலிருந்து தெரிகிறது சின்ன, சின்ன சிரமத்தின் போதும் இன்னாலில்லாஹி ஓத வேண்டும் . இவ்விதமாக நாம் நடந்து கொள்ளும் போது தினசரி வாழ்வில் நேரிடும் மனம் விரும்பாத சிறிய சிறிய நிகழ்வுகளுக்கும் பொறுமை எனும் வணக்கம் புரிந்த நன்மை கிடைத்துக் கொண்டே இருக்கிறதுநடந்துகொண்டிருக்கும் பாதத்தில் முள் தைத்து விட்டது, சட்டை எதிலோ மாட்டிக்கொண்டது, கால் வலுக்கிவிட்டது, வீட்டில் மின்சாரம் தடைபட்டுவிட்டது, மனம் விரும்பாத நிகழ்வு பற்றிய செய்தி காதில் விழுந்தது. ஏதேனும் ஒரு பொருள் தொலைந்து விட்டது, என தன் வாழ்வில் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏற்படும்  போதெல்லாம் இன்னாலில்லாஹி ஓதிக்கொண்டே இருக்க வேண்டும். மேலும் நாம் விரும்பாத ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்னாலும் அல்லாஹ்வின் ஏதாவதொரு மதிநுட்பம் இருக்கும் என்ற எண்ணத்தை ஒரு தடவை நமது உள்ளத்தில் ஆழமாக பதிய வைத்துக்கொண்டு மேற்கண்டவாறு நடந்து கொண்டால்  போதுமானது , இதற்குப் பெயர் தான் பொறுமை எனப்படும். இதற்குத்தான் தொடர்ந்து எண்ணிலடங்காத நன்மைகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.
          இங்கே மற்றொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்வது நல்லதாகும். எவ்வாறு ஏதேனும் சிரமத்தின் போது தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அழுது விடுவது பொறுமைக்கு முரணான ஒரு செயலாக பார்க்கப்படாதோ அதே போன்று ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அத்துன்பத்தை நீக்குவதற்கான முயற்சியில் இறங்குவதையும் பொறுமைக்கு எதிரான செயலாக கருதப்படாது . உதாரணமாக நோய் வந்தது என்றால் அதற்கான மருத்துவம் செய்வது பொறுமைக்கு எதிரானதல்ல, வேலை போய்விட்டது, வேறுவேலை தேடுவதும் பொறுமைக்கு முரணல்ல. மாறாக இவ்வெல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுக் கொண்டே இருப்பதுடன் அத்துன்பம் நீங்குவதற்காக துஆவும் செய்யவேண்டும் சிரமத்தின் கடுமை தாங்க இயலாமல் பொருமுவதும் பொறுமைக்கு முரணான செயலல்ல .  ஏனெனில் பொறுமை என்பதன் பொருள் மேலே கூறப்பட்டது மட்டும்தான் அதாவது அல்லாஹ்வின் தீர்ப்பின் மீது எவ்வித ஆட்சேபனையோ, விமர்சனமோ இருக்கக்கூடாதுநாவால் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்பதை ஓதிக்கொண்டே இருக்கவேண்டும்.
      சொல்வதற்கு இது ஒரு சுருக்கமான அமலாக தெரிகிறது , ஆனால் அதற்காக அல்லாஹ்விடத்தில் எழுதப்படும் நன்மையோ , அதைப் பற்றி இப்போது நம்மால் சிந்தித்தே பார்க்க முடியாது.

10, முக்கியமான ஒவ்வொரு செயலையும் பிஸ்மில்லாஹ்வைக் கொண்டு ஆரம்பித்தல்

  முக்கியத்துவம் வாய்ந்த செயல்கள் ஒவ்வொன்றையும் பிஸ்மில்லாஹ் கூறி ஆரம்பிப்பது இஸ்லாமிய அடையாளங்களில் உள்ளதாகும்.இதைக் கொண்டுதான் ஒரு முஸ்லிமை முஸ்லிமாக அறியப்படும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
كل أَمر ذِي بَال لَا يبْدَأ فِيهِ بِبسْم الله أَبتر
  பிஸ்மில்லாஹ்வைக் கொண்டு ஆரம்பிக்கப் படாத முக்கியமான ஒவ்வொரு காரியமும் முழுமை பெறாத அரைகுறை காரியமாகும் .
  நபி (ஸல்) அவர்களின் சுன்னத், அவர்கள் முக்கியமான ஒவ்வொரு காரியம் செய்வதற்கு முன்னரும் பிஸ்மில்லாஹ்வை கண்டிப்பாக ஓதிக் கொள்வார்கள். எனவே ஒவ்வொரு முஸ்லிமும் இந்த சுன்னத்தை பின்பற்றி பிஸ்மில்லாஹ்வைக் கொண்டு வேலையை ஆரம்பிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். வீட்டில் நுழையும் போது, வீட்டை விட்டு வெளியேறும் போது , வாகனத்தில் ஏறும் போது , வாகனத்திலிருந்து இறங்கும் போது , பள்ளியில் நுழையும் போது , பள்ளியை விட்டு வெளியேறும்போது , கழிவறையில் நுழைவதற்கு சிறிது நேரம் முன்னதாக, அங்கிருந்து வெளிப்பட்ட உடன், உணவு உண்ணும்போது, தண்ணீர் அருந்தும்போது ,ஆடை அணியும்போது, செருப்பு அணியும்போது, ஏதேனும் நூலை படிக்கும்போது, ஏதேனும் கடிதமோ, செய்தியோ எழுதும்போது, தான் புரியும் பணியை செய்ய ஆரம்பிக்கும் முன்னதாக, யாருடனும் ஏதேனும் புதிய கொடுக்கல்,வாங்கல் செய்வதற்கு முன்னதாக, என தன் நிலைகளில் ஒவ்வொரு மாற்றம் ஏற்படும் போதெல்லாம் பிஸ்மில்லாஹ்வை கொண்டு அதை ஆரம்பிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதே போல பெண்கள் உணவு சமைக்க ஆரம்பித்தால் அப்போது பிஸ்மில்லாஹ் ஓத வேண்டும், உணவிலே ஏதேனுமொன்றை போடுவதாக இருந்தால் பிஸ்மில்லாஹ் கூறி போடவேண்டும். உணவை எடுப்பதாக இருந்தால் பிஸ்மில்லாஹ் கூறி எடுக்க வேண்டும். ஏதேனும் ஆடையை தைக்கவோ பின்னவோ ஆரம்பித்தால் பிஸ்மில்லாஹ் கூறி ஆரம்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஆடையை அணிவித்தால் பிஸ்மில்லாஹ் கூறி அணிவிக்க வேண்டும், மேலும் அக்குழந்தைகளுக்கும் பிஸ்மில்லாஹ் கூற கற்றுக் கொடுக்க வேண்டும் . ஆக இவ்வாறாக தான் செய்யும் அன்றாட காரியங்கள் யாவற்றையும் பிஸ்மில்லாஹ் கூறி ஆரம்பிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் இதுவே பெரும் அமலாகும், இதை செய்ய கஷ்டப்படவோ , சிரமப்படவோ தேவையிருக்காது, சிறிது கவனம் மட்டுமே போதுமானது , செயல்களின் பட்டோலைகளில் நன்மைகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே போகும் , அது மட்டுமல்லாமல் இந்த அமலின் பரக்கத்தால் வெளிரங்கத்தில் உலகு சார்ந்தவைகளாக தெரிகின்ற காரியங்களெல்லாம் தானாகவே வணக்கமாய் மாறி விடுகின்றன.
              ஒரு இறை மறுப்பாளனும் உலக காரியத்தை செய்கிறான், ஒரு இறை நம்பிக்கையாளனும் செய்கிறான் , ஆனால் இரண்டிற்குமிடையே எத்தனை பெரும் வித்தியாசம் என்றால் இறை நிராகரிப்பாளன்  இறைவனை மறந்த நிலையில் இக்காரியங்களை புரிகின்றான். ஆனால் ஒரு முஃமின் ஒவ்வொரு செயலையும் பிஸ்மில்லாஹ்வைக்கொண்டு ஆரம்பித்து , அல்லாஹ்வின் உதவியில்லாமல் எந்த காரியத்தையும் நிரப்பமாக செய்து முடிப்பது  சாத்தியமில்லை என்பதை வெளிப்படுத்துபவனை  போல மாறிவிடுகின்றான். அவனின் இந்த வெளிப்பாட்டால் அவன் புரியும் உலகு காரியங்கள் யாவும் தீனுடைய அங்கமாக வணக்கமாக போய்விடுகின்றன.
  பிஸ்மில்லாஹ்வின் சிறப்பு பற்றி இச்சிறியோனின் தந்தை ஹஜ்ரத் மௌலானா முஹம்மது ஷஃபிஃ (ரஹ்) அவர்கள் எழுதிய பிஸ்மில்லாஹ்வின் சிறப்புகளும் சட்டங்களும் எனும் சிறு நூலை படித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

11,முந்தி ஸலாம் சொல்லுதல்

  முஸ்லிம்களுக்கு ஸலாம் கூறுவதும் இஸ்லாமிய அடையாளங்களில் ஒன்றாகும். அதை வைத்துதான் ஒரு முஸ்லிமை அடையாளம் காண முடிகிறது. இதற்கு மிக அதிகமான சிறப்புகள் ஹதீஸிலே வந்துள்ளன. குறிப்பாக ஒரு முஸ்லிமுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவது மிகப்பெரும் நன்மையாகும். ஹதீஸிலே வந்துள்ளது , மக்களிலேயே அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமான மனிதர் மக்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் சொல்பவரே.(அபூதாவூத்)
  நன்கு அறிமுகமானவர்கள்ளுக்குத்தான் ஸலாம் கூறவேண்டும் என்ற கட்டாயமில்லை மாறாக அறிமுகமில்லாதவர் கூட அவர் முஸ்லிம் என்று தெரிகிறது என்றால் அவர்களுக்கு சலாம் கூறுதலும் மிகப்பெரும் நன்மையாகும்.
            ஒரு மனிதர், நபி (ஸல்) அவர்களிடம் யாரசூலுல்லாஹ் ! ஒரு முஸ்லிம் செய்ய வேண்டிய மிகச்சிறந்த செயல்கள் என்னென்ன ? என்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள் அதற்கு சிலவற்றை எண்ணி கூறினார்கள். அவற்றில் ஒன்று நீ அறிந்தவர், அறியாதவர் யாவருக்கும் ஸலாம் கூறவேண்டும் என்றார்கள் .(புஹாரி,முஸ்லிம்)
            ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களை தொட்டும் கூறப்படுகின்றது, அவர்கள் சிலபொழுது வீட்டை விட்டு இதற்காகவென்றே வெளியே செல்வார்கள்,அதாவது  யாரேனும் முஸ்லிமை சந்தித்து அவருக்கு ஸலாம் கூறுவோம், அதனால் தம் நன்மைகளை அதிகரித்துக் கொள்ளலாமே என்று.(முவத்தா இமாம் மாலிக்)
           இருப்பினும் ஹதீஸுடைய சரியான பொருள் யாதெனில் மக்களுக்கு அதிகமாக ஸலாம் சொல்லவேண்டும் என்பதுதான், அதற்காக கண்ணில் படுபவர்களுக்கெல்லாம் ஸலாம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற அர்த்தமல்ல, ஏனெனில் இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம், மேலும் இதனால் மக்களுக்கு இடைஞ்சலும் ஏற்படுகின்றது.(அல்-ஆதாபுஷ் ஷர்இய்யா-இப்னு முஸ்லிஹ் பா:1 பக்:422)
             யாரேனும் ஒருவர் வெளியிலிருந்து வந்தால் வீட்டினுள் நுழைந்ததும் வீட்டினர்களுக்கு ஸலாம் சொல்வது சுன்னத்தானதாகும். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய சிறப்பு பணியாளரான ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.
            மகனே! நீ வீட்டில் நுழைந்ததும் அவர்களுக்கு ஸலாம் கூறுவாயாக. இந்த செயல் உமக்கும், உம்முடைய குடும்பத்தினர்க்கும் பரக்கத் உண்டாக காரணமாகும்.(திர்மிதி)
              இது மட்டுமல்லாமல் யாருமே இல்லாத வீட்டினுள் நுழையும் போது கூட மலக்குகளுக்கு ஸலாம் சொல்லப்படுகிறது என்ற எண்ணத்தில் ஸலாம் சொல்ல வேண்டும். ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில்
السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ
என கூறுபவர்களாக இருந்தார்கள்  (அல்-ஆதாபுஷ் ஷர்இய்யா-இப்னு முஸ்லிஹ் பா:1 பக்:424)
          ஸலாம் கூறுவதை பிறர் விளங்கும் வகையில் தெளிவாக சொல்ல வேண்டும் என்று ஆர்வப்படுத்தியும் ஹதீஸிலே வந்துள்ளது. அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினாலே சலாமுடைய சுன்னத் நிறைவேறிப்போகிறது என்றாலும் அத்துடன் வரஹ்மத்துல்லாஹி வபராகத்துஹு என்பதையும் சேர்த்துக்கொண்டால் நன்மை அதிகரிக்கின்றது.
          ஹஜ்ரத் இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) கூறுகின்றார்கள். நாங்கள் ஒரு தடவை நபி (ஸல்) அவர்களின் சபையில் அமர்ந்திருந்தோம். அப்போது ஒருவர் வந்தார் அவர் அஸ்ஸலாமு அலைக்கும் என்று ஸலாம் கூறினார். நபியவர்கள் ஸலாத்திற்கு பதில் கூறிவிட்டு பத்து என்றார்கள்(அதாவது ஸலாம் கூறியவருக்கு பத்து நன்மைகள்) பின்னர் இன்னொரு மனிதர் வந்தார் அவர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி என்று கூறினார்.நபியவர்கள் பதில் கூறிவிட்டு இருபது என்றார்கள்.(அதாவது இவருக்கு இருபது நன்மைகள் கிடைத்துள்ளன) பின்னர் இன்னொருவர் வந்தார் அவர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபராகத்துஹு என்று கூறினார். நபியவர்கள் பதிலளித்து விட்டு முப்பது என்றார்கள்(அதாவது இவருக்கு முப்பது நன்மைகள் கிடைத்துள்ளன). (அபூதாவூத், திர்மிதி,ஜாமிவுல் உஸுல் பா:6 பக்:602)
       இங்கே ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவர் தன்னுடைய ஏதேனும் அலுவலில் ஈடுபடாமல் இருக்கும் போது , மேலும் ஸலாம்சொல்வதால் அவருடைய வேலைக்கு இடைஞ்சல் ஏற்படாது எனும் போதுதான் அவருக்கு ஸலாம் கூறுவது சுன்னத்தாகும். ஸலாம் கூறுவதால் அவருடைய வேலைக்கு இடைஞ்சல் ஏற்படும் என்ற அச்சப்பாடு இருந்தால் அப்போது அது போன்ற சந்தர்ப்பங்களில் ஸலாம் கூறுவது முறையாகாது. உதாரணமாக ஒருவர் குர்ஆன் ஓதிக் கொண்டுள்ளார் அல்லது ஒரு நோயாளியை கவனித்துக் கொள்வதில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார் அல்லது கவனம் சிதறுவதால் காரியம் பாழாகிவிடும் என்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார் என்றால் எதுவரை அவர் தன் வேலையை முடித்துக் கொள்ள மாட்டாரோ அதுவரை ஸலாம் கூறுவது சரியல்ல.
        இதே போல ஒருவர் ஒரு கூட்டத்தாருக்கு மத்தியில் பயான் செய்து கொண்டிருக்கிறார். மக்கள் அவருடைய பேச்சை கேட்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்போது பேசிக்கொண்டிருப்பவருக்கு ஸலாம் சொல்லக் கூடாது.
        ஆனால் பயான் ஏதும் இல்லாமல் அமைதியாக அமர்ந்துள்ள மக்களைக்கடந்து  ஒருவர் செல்கிறார் , அல்லது அச்சபையில் அமர எண்ணுகிறார் என்றால் அப்போது ஒரு தடவை மட்டும் ஸலாம் சொல்ல வேண்டும்அமர்ந்திருப்போர்களிலிருந்து யாரேனும் ஒருவர் பதில் கூறி விட்டாலே போதும், ஸலாம் என்ற சுன்னத்தும், பதிலளித்தல் எனும் கடமையும் நிறைவேறிப் போகும்.
        சலாமை ஆரம்பிப்பது சுன்னத் , ஆனால் யாரேனும் ஸலாம் கூறினால் அதற்கு பதிலளிப்பது வாஜிபாகும் , பதில் தராவிட்டால் அவர் பாவியாவார்.  
        மேலும் ஒருவருக்கு கடிதம் வந்தது. அதில் அஸ்ஸலாமு அலைக்கும் என எழுதப்பட்டிருந்தால் கடிதத்தை படிக்கும் போதே சலாமிற்கு பதில் கூறிட வேண்டும்.(ஷரஹ் முஸ்லிம் நவவி)

12, நலம் விசாரித்தல்

        நோய்வாய்ப்பட்ட ஒருவரை நலம் விசாரித்தாலும் மிகப்பெரும் நன்மைக்குரிய செயலாகும். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமுக்காக செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று என இந்த நலம் விசாரித்தலை சொல்லிக்காட்டினார்கள் . சில அறிஞர்கள் இதை வாஜிப் என்றும் கூறியுள்ளார்கள். ஆனால் சரியான கருத்து இது சுன்னத் என்பது தான்.
       ஹஜ்ரத் ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் , ஒரு முஸ்லிம் தன்னுடைய பிற முஸ்லிமான சகோதரனை நலம் விசாரிக்கச்சென்றால் அவர் தொடர்ந்து சுவனத்தின் தோட்டத்தில் இருக்கிறார் . (திர்மிதி)
         ஹஜ்ரத் அலீ (ரலி) கூறுகின்றார்கள் நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்
   ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை காலை நேரத்தில் நலம் விசாரிக்கச் சென்றால் அவருக்காக மாலை வரை எழுபதுனாயிரம் மலக்குகள் நலவுடைய பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கிறார்கள். மாலை நேரத்தில் நலம் விசாரிக்கச் சென்றால் அடுத்த நாள் காலை வரை எழுபதுனாயிரம்  மலக்குகள் அவருக்காக நலவை வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கிறார்கள். மேலும் அவருக்கு சுவர்க்கத்தின் ஒரு தோட்டம் வழங்கப்படுகின்றது.(திர்மிதி)
        நபி (ஸல்) அவர்களின் தனிப்பட்ட பழக்கம் யாதெனில் தன்னோடு பழகுபவர்களில் யாரைப் பற்றியாவது அவர் நோய்வாய்ப்பட்டுள்ளார் என்ற செய்தி கேள்விப்பட்டால் அவரை நலம் விசாரிப்பதற்க்காக செல்வார்கள்.
        நலம் விசாரித்தலின் ஒழுக்கங்களில் ஒன்று நோயாளியின் நெற்றி மீது கை வைப்பதாலோ அல்லது அவரிடம் நலன் விசாரிப்பதாலோ அவருக்கு எவ்வித சிரமமும் இல்லையென்றால் அவரின் நெற்றி மீது கை வைத்து அவரிடம் நலன் விசாரிக்க வேண்டும். சிரமம் ஏற்படும் என்ற பயம் இருந்தால் அப்போது கையையும் வைக்கக்கூடாது , நலனையும் கேட்கக் கூடாது மாறாக அவரது நலனைப்பற்றி அவரை கவனித்துக் கொள்வோரிடம் விசாரித்தாலே போதுமானது.
        நபி (ஸல்) அவர்கள் நோயாளியை நலன் விசாரிக்கும் போது தடவை இந்த துஆவை ஓதும்படி கட்டளையிட்டார்கள்.
أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ
மகத்துவமிக்கவனும், மகத்துவமிக்க அர்ஷுக்கு சொந்தகாரனுமான அல்லாஹ்விடம் உனக்கு நிவாரணத்தை தரும்படி வேண்டுகிறேன்.
         நபி (ஸல்) கூறினார்கள் , யாருக்கு மரணமாகும் நேரம் வரவில்லையோ அப்படிப்பட்ட நோயாளிக்கு இந்த துஆவின் பரக்கத்தால் அல்லாஹ் முழு நிவாரணத்தை தந்துவிடுகிறான்.(அபூதாவூத்)
            நபி (ஸல்) அவர்கள் நோயாளியை நலம் விசாரிக்கும் போது அதிகமாக இந்த துஆவும் செய்துள்ளார்கள்.
أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ، اشْفِ وَأَنْتَ الشَّافِى، لا شِفَاءَ إِلا شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادرُ سَقَمًا
            எல்லா மனிதர்களின் இறைவா !  இந்த நோயை போக்கி விடுவாயாக , ஆரோக்கியத்தை தந்தருள்வாயாக , நீயே சுகமளிப்பவன், உன்னைத் தவிர யாரும் சுகமளிக்க முடியாது . எந்த நோயையும் விட்டு வைக்காத பரிபூரண சுகத்தை தந்திடுவாயாக.
  மேலும் நோயாளியைக் கண்டதும் இதுவும் கூறுவார்கள் 
لَا بَأْسَ طَهُورٌ، إِنْ شَاءَ اللَّهُ
        உங்களுக்கு கஷ்டமில்லாமல் போகட்டுமாக (இந்த சுகவீனம்) இன்ஷா அல்லாஹ் உங்களை தூய்மைப்படுத்திவிடும்.
         ஆனால் ஒரு விஷயத்தை எப்போதுமே நாம் மனதில் கொள்ள வேண்டும். இஸ்லாத்தில் நோயாளியை நலம் விசாரிப்பதற்காக எந்த அளவு சிறப்புகள் கூறப்பட்டுள்ளதோ அதை விட அதிகமாக தன்னுடைய எந்த ஒரு செயல் மூலமும் நோயாளிக்கு சிறிதளவு கூட கஷ்டம் கொடுத்துவிடக்கூடாது என்பதையும் அதிகமாக வலியுறுத்தி சொல்லப்பட்டுள்ளது . ஆதலால் நலன் விசாரிக்கும் போது நோயாளிக்கோ, நோயாளியை பார்த்துக்கொள்பவர்களுக்கோ சிரமம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டால்  அதனால் நன்மைக்குப் பதிலாக பாவம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
       எனவே ஒருவர் சந்திப்பதால் நோயாளிக்கு இடைஞ்சல் ஏற்படும் என்ற நிலை இருந்தால் அப்போது நோயாளியை சந்திக்க வேண்டுமென பிடிவாதம் பிடிப்பது முற்றிலும் கூடாத செயலாகும். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் வெளியில் இருந்தவாறே நலன் விசாரித்து விட்டு துஆவும் செய்து விட்டு வந்தாலே  நலன் விசாரித்த சிறப்பு கிடைத்துவிடுகிறது. நோயாளியை சிரமப்படுத்த வேண்டிய தேவையே இல்லை, நோயாளியின் மனதை சந்தோசப்படுத்துவது தனது நோக்கமாக இருந்தால் இன்ன மனிதர் தங்களை நலம் விசாரிக்க வந்திருந்தார். உங்களுக்காக துஆ செய்கிறார் என்ற செய்தியை நோயாளியிடம் நேரம் பார்த்து தெரிவித்து விடும் படி நோயாளியை கவனித்துக் கொள்பவர்களிடம் கூறிட வேண்டும்.
         இதே போல ஹதீஸிலே மற்றொரு விஷயத்தையும் வலியுறுத்தப்பட்டுள்ளது. யார் நோயாளியை நலன் விசாரிக்கச் செல்கிறாரோ அவர் அவரிடம் நீண்ட நேரம் அமரக்கூடாது. மாறாக சுருக்கமான முறையில் நலம் விசாரித்து விட்டு வந்துவிட வேண்டும். ஏனெனில் நீண்ட நேரம் அமர்வதால் பெரும்பாலும் நோயாளிக்கு சிரமம் ஏற்படுகிறது. இருந்தாலும் நன்கு பழகிய ஒரு மனிதரை நோயாளி தன் மன சந்தோசத்திற்காக அமரச் செய்தால் அப்போது அவருக்கருகில் அமர்வதில் எந்த குற்றமுமில்லை.
        நலம் விசாரிப்பதற்காக சரியான நேரத்தை தேர்ந்தெடுப்பதும் மிகவும் அவசியம். நோயாளியின் ஓய்விலோ அல்லது மற்ற செயல்களிலோ இடைஞ்சல் ஏற்படும் நேரத்தில் நலம் விசாரிப்பதற்க்காக  செல்வது முறையில்லை. எனவே நலம் விசாரிக்க வருவதற்கு ஏதுவான நேரம் எது என முன்பே கேட்டுக்கொள்ள வேண்டும்.

13, ஜனாஸா தொழுகை மற்றும் அடக்கம் செய்வதில் பங்கெடுத்தல்

         ஒரு முஸ்லிம் இறந்துவிட்டால்  அவருக்காக ஜனாஸா தொழுகையில் பங்கெடுத்தல், ஜனாஸாவுடன் கப்ருஸ்தான் சென்று அதை அடக்கம் செய்வதில் பங்கெடுத்தல் ஆகியவற்றிக்கும் ஹதீஸ்களில் அதிகமான சிறப்புகள் வந்துள்ளன. அதுமட்டுமல்ல ஒரு முஸ்லிம் இறந்துவிட்டால் அவருடைய ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும். ஜனாஸாவுடன் கப்ருஸ்தான் செல்ல வேண்டும் என்பதனை  ஒரு முஸ்லிமுக்கு செய்யவேண்டிய கடமை என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ,
        ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வதும் , ஜனாஸாவுடன் கப்ருஸ்தான் செல்வதும் பர்ள் கிபாயா அதாவது சிலர் இவற்றை நிறைவேற்றி விட்டாலே ஏனையோரிடமிருந்தும் கடமை நீங்கிவிடுகிறது , அவர்கள் ஜனாஸாவில் கலந்து கொள்ளாத குற்றத்திற்கு ஆளாக மாட்டார்கள் என்று கூறுகிறார்கள் , என்றாலும் கலந்து கொண்டால் அவருக்கு மிகப்பெரும் நன்மை இருக்கின்றது.
         ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,  யார் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வார்களோ அவருக்கு ஒரு கீராத் நன்மை கிடைக்கும், யார் ஜனாஸாவை அடக்கம் செய்யும் வரை அதனுடன் இருப்பாரோ அவருக்கு இரண்டு கீராத் நன்மை கிடைக்கும், அந்த கீராத் ஒவ்வொன்றும் உஹத் மலைக்கு சமமாக இருக்கும்.
  உலமா பெருமக்கள் கூறியுள்ளார்கள். சுவனத்தின் பாக்கியங்களையும் அங்கே கிடைக்கும் நன்மைகளையும் உலகிலே முழுமையாக விளங்கிக்கொள்வதென்பது   சாத்தியமில்லாத விஷயம் அதை விளக்கி சொல்வதற்கு மனிதனிடம் வார்த்தையுமில்லை. ஆதலால் நபி (ஸல்) அவர்கள் மனிதர்கள் விளங்கிக்கொள்வதற்கு ஏதுவாக இப்படிப்பட்ட வார்த்தைகளை , உலக நடைமுறையில் பயன்படுத்தப்படும் பிரபலமான வார்த்தைகளை உபயோகித்துள்ளார்கள். நபியவர்கள் ஜனாஸாவில் கலந்து கொள்வதற்கான நன்மையை தங்கம், வெள்ளியை நிறுப்பதற்க்காக பயன்படுத்தப்படும் கீராத் என்ற அளவைக்கொண்டு குறிப்பிட்டுள்ளார்கள்இருந்தாலும் அத்துடன் அது உலகத்தின் கீராத்தைப் போன்று இருக்காது , அது ஒவ்வொன்றும் உஹது மலைக்கு சமமாக இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள். சுருக்கம் என்னவென்றால் ஜனாஸா தொழுகையில் கலந்துகொள்வதால் கிடைக்க இருக்கும்  நன்மை தனி . ஜனாஸாவுடன் சென்று அடக்கம் செய்வதில் பங்கெடுப்பதற்கான நன்மை தனி , இரண்டுமே பெரும் நன்மைக்குறிய காரியங்களாகும். மேலும் மற்றொரு அறிவிப்பில் கீழ் கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
           எவர் (ஜனாஸா தூக்கும் முன்னர்) மைய்யித் வீட்டுக்கு செல்வாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மை கிடைக்கும் , ஜனாஸாவிற்கு பின்னால் சென்றால் மற்றொரு கீராத் நன்மை கிடைக்கும்பின்னர் அந்த ஜனாஸாவின் தொழுகையில் கலந்து கொண்டால் மற்றொரு கீராத் நன்மை கிடைக்கும், பின்னர் அடக்கம் செய்யும் வரை காத்திருந்தால் இன்னுமொறு கீராத் நன்மை கிடைக்கும்.(பத்ஹுல் பாரி பக்: 194, பாகம்:3, முஸ்னத் பன்ஸார்)
              இந்த அறிவிப்பின்படி நான்குமே தனித்தனியான நற்செயல்கள், அவற்றில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி நன்மை கிடைக்கின்றன. ஒவ்வொரு நன்மையும் மிகப்பெரியதாகும்.
          ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)க்கு இந்த ஹதீஸ் தெரியாமல் இருந்தது. பின்னர் ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அதை அறிந்து வைத்ததும் , அதனை ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் உண்மைப்படுத்தியதும் தெரிய வந்த போது ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) மிகவும் வருத்தத்தோடு கூறினார்கள்.
   நிச்சயமாக நாம் அதிகமான கீராத்தை வீணடித்து விட்டோமே , (திர்மிதி)
             ஜனாஸா தொழுகையில் பலரும் சங்கடமாகவே பங்கெடுக்கிறார்கள்.அது மட்டுமின்றி பல நேரங்களில் அவர்களுக்கு ஜானாசா தொழுகையின் முறை கூட தெரிவதில்லை , இவைகளெல்லாம் எத்தனை வருத்தத்திற்குறிய விஷயம் ?  ஆதலால் கவனத்தோடு ஜனாசா தொழுகையின் முறையை ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும். சடங்குக்காக பங்கெடுப்பது என்றில்லாமல் அல்லாஹ்வின் திருப்தியை பெற வேண்டுமென்ற எண்ணம் கொள்ளவேண்டும். இன்ஷா அல்லாஹ் இதற்காக பெரிய நன்மைகள் கிடைக்கும். மேற்கண்டதை போல ஜனாஸா தொழுகைக்குப் பின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று அதை அடக்கம் செய்வதில் பங்கெடுப்பது ஓர் தனிப்பட்ட நன்மைக்குறிய செயலாகும். ஹஜ்ரத் முஹாஜித் (ரஹ்) கூறுகிறார்கள், இது நபில் தொழுகையை விட சிறந்த அமலாகும்.

No comments:

Post a Comment