சூரத்துல் பாத்திஹா
இந்த சூரா குர்ஆனுடைய ஆரம்ப சூராவாகும், 7 வசனங்களை கொண்டுள்ளது. இது எவ்வளவு சுருக்கமான சூராவோ அதே அளவு விரிவான, அதிமுக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது, தெளிவாக சொல்வதாக இருந்தால் இந்த சூராவின் விரிவுரைதான் முழு குர்ஆன், முழு குர்ஆனின் சுருக்கம் தான் இந்த சூரா. எனவேதான் இதனை ஒவ்வொரு தொழுகையிலும், ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதும் படி கட்டளையிடப்பட்டுள்ளது. இவ்வகையில் ஒவ்வொரு முஸ்லிமும் இந்த சூராவை மனனம் செய்வதும், அதன் கருத்துக்களை புரிவதும் அவசியமாக இருந்து கொண்டிருக்கிறது.
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய, அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன். எல்லா புகழும், புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே இப்பிரபஞ்சத்தில் எங்கு சென்றாலும் எங்கு திரும்பினாலும் அங்கே புகழுக்குறியவன் அல்லாஹ்வாகத்தான் இருப்பான், அவனுடைய புகழ் பாடும் காட்சிகள்தான் எங்கும் நிரம்பியுள்ளன, உலகில் காணப்படும் ஒவ்வொன்றும் அவனின் புகழையே பறை சாற்றுகின்றன. மனிதனின் அறிவு, வானத்தின் உயரம், பிரபஞ்சத்தின் விஸ்தீரணம், சூரியனின் பிரகாசம், சந்திரனின் ஓட்டம், காற்றின் அசைவு, பூமியின் வளைந்து கொடுக்கும் திறன் என கண்ணுக்கு படும் ஒவ்வொன்றின் பின்னாலும் அல்லாஹ்வுடைய புகழ் மறைந்திருக்கின்றது. அவன் மட்டுமே நிறைவானவன், எவ்வித குறைகளுமற்றவன், பரிசுத்தமானவன், அவனுக்கு பிறகுதான் மற்றவையெல்லாம். இப்பிரபஞ்சத்தில் காணப்படும் புகழுக்குரிய அம்சம் ஒவ்வொன்றும் அவனால் கொடுக்கப்பட்டதே, அவன் கொடுக்கவில்லையென்றால் சுயமாக எதற்கும் எதுவுமே இல்லை,
அந்த அல்லாஹ் எப்படிப்பட்டவனென்றால் அவனே அகில உலகின் இரட்சகன் உலகில் எத்தனை கோடி உயிரினங்கள் உள்ளனவோ, எத்தனையெத்தனை வகைகளில் உள்ளனவோ அவை யாவற்றையும் படைத்து பரிபாலிப்பவன் அவனே. படைத்தது மட்டுமல்லாமல் அவை ஒவ்வொன்றும் நிலைத்திருப்பதற்கு தேவையான அம்சங்களையும் உற்பத்தி செய்து அவற்றை சிறிதும் பிசகாமல் பராமரித்து வருபவனும் அவனே.இவ்வாறு அவன் பராமரிப்பதற்கு எவ்வித நிர்பந்தமோ, யாருடைய அழுத்தமோ காரணமில்லை , மாறாக இவை யாவும் அவனுடைய கருணை பண்பின் வெளிபாடாகும் ,
ஆம், அவன் அளவற்ற அருளாளன், அவனின் அருளுக்கு அளவே இல்லை. தன்னை இறைவனாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுமல்லாது , ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும், தன் கட்டளைகளுக்கு மாறு செய்பவனுக்கும் கூட அருள் செய்பவன், இரக்கம் காட்டுபவன். அவனின் அருளில்லாமல் உலகில் எதுவுமே இல்லை. இந்த அளவு அல்லாஹ்வுடைய அருள் விசாலமானது, பரந்து விரிந்தது, முழு உலகும் அவனுடைய அருளின் வெளிபாடாகும்.
எல்லோருக்கும் அருளும் இந்த நிலை உலகில் ,ஆனால் மறுமையில் அல்லாஹ் நிகரற்ற அன்புடையோனுமாக இருப்பான். அங்கே அவனுடைய அருள் நிறைவுற்றதாக , குறையில்லாததாக இருக்கும், அவன் மீது விசுவாசம் கொண்ட நல்லடியார்களுக்கு மறுமையில் அவன் காட்டும் பரிபூரண அருளின் காரணமாக அவர்கள் எவ்வித அதிருப்தியும் சிறிதுமில்லாமல் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். எனவே உலகில் அல்லாஹ்வின் அருளை நினைவு கூர்ந்து மறுமையில் அவனின் பரிபூரண அருளை பெறுவதற்காக தன் வாழ்க்கையை சீர் செய்து நேரான வழியில் நடக்க வேண்டும். அவ்வாறு நடந்தால் மறுமையில் கூலி கொடுக்கப்படும் நாளில் ஜெயம் பெறலாம்.
பலரும் பல அதிகாரங்களை பெற்றிருப்பவர்களாக இவ்வுலகு அமைந்திருப்பதைப்போல மறுஉலகம் இருக்காது , அந்த நாளில் யாரும் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்க மாட்டார்கள், அதிகாரமெல்லாம் உலகோடு முற்று பெற்றுவிடும், கூலி கொடுக்கப்படும் அந்த நாளின் அதிபதியும் முழு அதிகாரமும் கொண்டவன் அல்லாஹ் ஒருவனாக மட்டுமே இருப்பான்.
இத்தகைய பண்புகளெல்லாம் ஒருங்கே அமையப்பெற்றவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே , அவனே வணங்கப்படுவதற்கும் , சரணாகதியாவதற்கும் தகுதியானவனாக இருக்க முடியும்,
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
எனவே யா அல்லாஹ் நாங்கள் எவ்வித தயக்கமும் , ஐயமுமின்றி மிகத்தெளிவாகவே இதை உரைக்கின்றோம் நீ மட்டுமே வணங்கத்தகுதியானவன், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம் , உன்னைத் தவிர்த்து வேறு யாரையும் வணங்கமாட்டோம். ஏனெனில் வணங்குவதற்கு தகுதிபடைத்தவன் நீ மட்டுமே வணக்கத்தின் முழு பலனையும் உன்னை வணங்குவதால் மட்டுமே அடைய முடியும், வணங்குவது , மன்றாடுவது , கெஞ்சுவது, அடிபணிவது யாவும் உனக்கு மட்டுமே.
மேலும் உன்னிடத்திலேயே நாங்கள் உதவி தேடுகிறோம். உதவி இல்லாமல் எம்மால் வாழ முடியாது, உன் உதவி இல்லாது போய்விட்டால் உலகமே சேர்ந்து நின்றாலும் பயனில்லை. உன் உதவி கிட்டிவிட்டால் உலகமே எதிர்த்தாலும் பயமில்லை. நீ மட்டுமே எங்களுக்கு உதவ முடியும், உன்னைத்தவிர்த்து வேறு யாரிடத்திலும் நாங்கள் உதவி தேடப்போவதில்லை. வாழ்வின் ஒவ்வோர் நிலையிலும், கட்டத்திலும் நாங்கள் உன்னை மட்டுமே சார்ந்துள்ளோம், எங்களை அண்டக்கூடிய நோய், அபாயம் , அடிதடி, பிரச்சினை, கடன் தொல்லை, இன்னுமுள்ள எத்தனையெத்தனையோ சங்கடங்களில் நாங்கள் உன்னை மட்டுமே நம்புகிறோம், நாங்கள் உன்னை வணங்குவத்தின் பலனே உன்னுடைய உதவியை பெறுவதற்குத்தான். உன் உதவியை பெற்றுத்தராத வகையில் எங்களுடைய வணக்கத்தை ஆக்கிவிடாதே. எங்களின் வாழ்க்கையில் நித்தம் நித்தம் உதவி செய்வாயாக. எல்லாவித உதவிகளையும் உன்னிடத்திலேயே வேண்டுகிறோம்.
இந்த இடம் அல்லாஹ்விடம் தம் தேவைகளை கேட்கும் இடம். என்ன தேவைகளை கேட்பது? அல்லாஹ்வே அதை சொல்லித்தருகிறான்.
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
யா அல்லாஹ் உன்னிடம் நாங்கள் வேண்டும் முக்கியமான உதவி நாங்கள் எங்களின் சரியான இலக்கை அடைவதற்கு எங்களுக்கு நீ நேரான பாதையை கருணையோடு காட்டித்தருவாயாக எவர்கள் உன் கோபத்திற்கு ஆளாகி பாதை தெரிந்திருந்தும் அதிலே செல்லாமல் வழி மாறிச்சென்று விட்டார்களோ அவர்களின் பாதையும் அல்லாது மேலும் வழியை அறிய விரும்பாமல் தவறான வழியில் நடப்பவர்களின் பாதையும் அல்லாது நீ எவர்களின் மீது அருள் செய்து உன்னுடைய தனிப் பெரும் உபகாரம் புரிந்துள்ளாயோ அத்தகைய நல்லடியார்களின் பாதை எதுவோ அந்த நேரான பாதையை எங்களுக்கு நீ காட்டுவாயாக. எல்லை மீறுதலோ தரம் தாழ்தலோ இல்லாத பாதையாக அது இருக்க வேண்டும் , எங்களின் வாழ்வில் நாங்கள் சிறக்க எங்களின் இந்த துஆவை நீ அங்கீகரிப்பாயாக. ஆமீன்.இந்த துஆவிற்கான பதில்தான் முழு குர்ஆனும்.
படிப்பினை 1,இறைவன் எவ்வாறு இரக்குமுள்ளவனாக , கருணை கொண்டவனாக இருக்கின்றானோ அதே போல அவனுடைய அடியார்களும் கருணையுள்ளம் படைத்தவர்களாக திகழ வேண்டும் .
2, வணங்குவதற்கு தகுதியானவன் அல்லாஹ் மட்டுமே , எனவே யாருடைய நேசமும் அல்லாஹ்வுக்கு சமமாக இருக்கக்கூடாது , அல்லாஹ்வுக்கு சமமாக யாரையும் அஞ்சக்கூடாது , அவனிடம் ஆதரவு வைப்பது போல யாரிடமும் ஆதரவு வைக்கக்கூடாது , அவனை நம்பியிருப்பது போல யாரையும் நம்பியிருக்கக்கூடாது , அல்லாஹ்வை வணங்குவதற்கு தரும் முக்கியத்துவத்தைப்போல யாருடைய பணிவிடைக்கும், அடிபணிதலுக்கும் தரக்கூடாது , அல்லாஹ்வுக்கு நேர்ச்சை செய்வதைப்போல யாருக்கும் நேர்ச்சை செய்யக்கூடாது , அல்லாஹ்வுக்கு முன்பு தன் முழு இயலாமையை வெளிப்படுத்துவது போல யாருக்கு முன்பும் வெளிப்படுத்தக்கூடாது , பணிவின் உச்சமாக திகழும் ருகூவ் , ஸுஜுது போன்ற மரியாதையை யாருக்கும் தரக்கூடாது , மொத்தத்தில் நமது வாழ்க்கையில் அல்லாஹ்வுக்கென தனி இடம் இருக்க வேண்டும் . மஆரிபுல் குர்ஆன் பாகம் 1, பக்கம் 87
3,நேரிய பாதையை தவறியவர்கள் இவ்வுலகில் ஏராளமாக இருக்கிறார்கள் கல்வயறிவு உண்டு ஆனால் செயல்பாடு இல்லை, அல்லது செயல்பாடும் , உத்வேகமும் உண்டு ஆனால் முறையான கல்வியறிவு இல்லை , இவ்விரண்டுமே நாசத்திற்கான வழிகளாகும் , முஸ்லிம்கள் அதிலிருந்து தவிர்ந்து முறையான கல்வியறிவுடன் அமல் செய்யும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
Maa shaa Allah.......
ReplyDelete