Wednesday, November 9, 2016

சூரா பகரா (2)

 
                     மேற்கண்ட வசனம் , எந்த வித ஒளிவு மறைவுமின்றி தன்னை இஸ்லாத்தை விட்டும் அப்பாற்பட்டவர்கள், இஸ்லாத்தை ஏற்க மறுத்தவர்கள்  என பகிரங்கமாக கூறிய காபிர்களைப் பற்றியது , ஆனால் உலகிலே இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் , பகிரங்கமாக அதை ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் என இருவகை மனிதர்கள் மட்டும் வாழ்வதில்லை. இவ்விரு வகையினருக்கும் இடைபட்ட நிலையில் , தன்னை வெளிப்பார்வையில் முஸ்லிமாக காட்டிக் கொண்டு, உள்ரங்கத்தில் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் வெறுப்பு கொண்டோ அல்லது இஸ்லாத்தின் ஆணித்தரமான கொள்கைகளில், கட்டளைகளில் ஏதேனுமொன்றை மறுத்துக் கொண்டோ அல்லது முஸ்லிம் என்பதால் எதுவும் செய்ய வேண்டிய, விட வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படாதவரை தம்மை முஸ்லிமாக காட்டிக்கொண்டும் , ஏதேனும் அதிமுக்கியமான கட்டளையை எடுத்து நடக்க வேண்டிய அல்லது ஒரு பாவத்தை தவிர்ந்து நடக்க வேண்டிய கட்டம் வரும்போது அதற்கு அடிபணியாமல் தன்னை இஸ்லாத்தை விட்டும் விலக்கி வைத்துக் கொண்டும்  வாழக்கூடியவர்கள் , தனக்கு சாதகமாக இருந்தால் தன்னை இஸ்லாத்துடைய வட்டத்தில் வைத்துக்கொண்டும் , பாதகமாக இருந்தால் இஸ்லாத்தை விட்டு தன்னை விலக்கி வைத்துக்கொண்டும் இருப்பவர்கள் , சுருக்கமாக கூறுவதானால் வெளிரங்கத்தில் ஒருவிதமாகவும் உள்ரங்கத்தில் வேறு விதமாகவும் இருக்கக்கூடியவர்கள் எல்லா துறைகளிலும் இருப்பதைப் போல இஸ்லாத்திலும் இருப்பார்கள். நபி(ஸல்)வுடைய காலத்திலும் இருந்தார்கள் அவர்களை இஸ்லாமிய வழக்கிலே முனாபிக்கள் என்றும், நயவஞ்சகர்கள் என்றும் கூறப்படும்.
                  அவர்களின் துல்லியமான அடையாளங்கள் நபி (ஸல்) அவர்களின் மறைவோடு வஹி நின்று போனதால் உறுதிபட கூற முடியாது போனாலும்,  அவர்களின் உத்தேச அடையாளங்கள் இன்றளவிலும் இருந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய முனாபிக்களின் அடையாளங்கள் பற்றியே அடுத்து வரும் பதிமூன்று வசனங்களில் திருக் குர்ஆன் பேசுகிறது. 
وَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ (8) يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ (9) فِي قُلُوبِهِمْ مَرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ (10) وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ (11) أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ (12) وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ (13) وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ (14) اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ (15) أُولَئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَى فَمَا رَبِحَتْ تِجَارَتُهُمْ وَمَا كَانُوا مُهْتَدِينَ (16) مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَارًا فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهُ ذَهَبَ اللَّهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ لَا يُبْصِرُونَ (17) صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُونَ (18) أَوْ كَصَيِّبٍ مِنَ السَّمَاءِ فِيهِ ظُلُمَاتٌ وَرَعْدٌ وَبَرْقٌ يَجْعَلُونَ أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ مِنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ وَاللَّهُ مُحِيطٌ بِالْكَافِرِينَ (19) يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ أَبْصَارَهُمْ كُلَّمَا أَضَاءَ لَهُمْ مَشَوْا فِيهِ وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا وَلَوْ شَاءَ اللَّهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (20)

               மக்களில் சிலர் உண்டு நாங்களும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியுள்ளோம் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையான முஃமின்கள் அல்லர், பெயர் என்னவோ முஸ்லிம்களின் பெயராக இருக்கலாம் , ஆனால் அவர்களின் உள்ளங்களில் முறையான ஈமான் இல்லை.      
           அவர்களின் முதல் அடையாளம் போலித்தனமாக இருப்பதாகும் . முஸ்லிம்களைப் போல் பாசாங்கு செய்து கொண்டு , அல்லாஹ்வையும் அவன் மீது நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களையும் அவர்கள் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக நினைத்து கொள்கிறார்கள் தம் உள்ளங்களில் உள்ளவை பிறருக்கு தெரியவா போகிறது ? சந்தர்ப்பத்திற்கு ஒத்த படி இருந்து கொள்ள வேண்டியதுதான். முஸ்லிமாக தெரிவதில் ஏதேனும் இலாபம் இருந்தால் தானும் முஸ்லிம் என கூறிக் கொள்ள வேண்டியது , நெருக்கடி ஏற்படும் தருவாயில் விலகிக் கொள்ள   வேண்டியது . மற்றபடி இஸ்லாத்தின் மீதோ, அதன் வாழ்க்கை முறையின் மீதோ உண்மையான பற்று அவர்களுக்கு இருப்பதில்லை,  இவர்களின் ஏமாற்று எண்ணம் அல்லாஹ்வோடு செல்லுமா ? அல்லாஹ்வுக்கு அனைத்துமே வெளிச்சம். உள்ளத்தில் எழக்கூடிய அத்தனை சிந்தனைகளையும் அல்லாஹ் அறிகிறான். எனவே அவர்கள் தம் செயல்களால் அல்லாஹ்வையும் ஒரு போதும் ஏமாற்றுவதில்லை, ஏமாற்றவும் முடியாது , முஸ்லிம்களோடும் அவர்களின் ஏமாற்றும், நடிப்பும் அதிக காலத்திற்கு நிலைக்காது . ஆகவே அவர்கள் தமக்கே தெரியாமல் தம்மை தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள். நடிப்புக்காக தொழுகையோ, பிற வணக்கங்களோ மேற்கொண்டாலும் அதன் பலாபலன்கள் எதுவும் அவர்களுக்கு கிடைக்காது. உள்ளத்தில் நம்பிக்கை வேரூன்றாத போது செயல்களினால் மட்டும் என்ன பலன் ஏற்பட்டுவிடும் ? மறுமையில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். அல்லாஹ் இந்நிலையை விட்டும் நம்மை பாதுகாப்பானாக ஆமீன்.
            இரண்டாவது அடையாளம் அவர்களின் உள்ளங்களில்  நோய் இருக்கும். ஆரோக்கியமான உள்ளம் நேர்மையாக சிந்திக்கும் . எவருடைய வளர்ச்சியைப் பார்த்தும் எரிச்சலடையாது , பொறாமையுணர்ச்சி கொள்ளாது . உண்மையை உண்மை என்றும், பொய்மையை பொய் என்றும் மனமாற ஏற்றுக் கொள்ளும் . இதற்கு மாறாக உள்ளத்தில் வியாதி வந்து விட்டால் நேர்மைக்கு புறம்பாகவும் , சத்தியத்திற்கு எதிராகவும் அதன் சிந்தனைகள் மாறி விடும் , பிறர் வளர்ச்சியைக் கண்டு எரிச்சல் கொள்ளுதல் , உலக ஆதாயத்திற்காக உண்மையை ஏற்றுக் கொள்ள மறுத்தல், பாவங்களில் இன்பம் காணுதல் போன்ற துற்குணங்கள் அவ்வுள்ளங்களில் நிரம்பி விடும் . இவ்வியாதி குணமாவதற்கு  உள்ளங்களை துற்குணங்களை விட்டும் தூய்மைப்படுத்த வேண்டும். நேர்மையான சிந்தனையோடு, திறந்த மனதோடு சத்தியத்தை அணுக வேண்டும். இதை விடுத்து அவர்களின் பொறாமைக்கு காரணமான இஸ்லாத்தின் வளர்ச்சியும் , முஸ்லிம்களின் முன்னேற்றமும் சரிய வேண்டும் என எதிர்பார்த்தால் அது இயலாது . அல்லாஹ் இஸ்லாத்திற்கு மேலும் மேலும் வளர்ச்சியை தந்து கொண்டே இருப்பான் . அதன் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு அவர்களின் உள்ளப்பிணியையும் அதிகரிக்கவே செய்வான். முடிவில் வியாதி கண்ட உடல் வைத்தியம் செய்யாததால் அதிகரித்து அதிகரித்து உடல்  செத்து விடுவதைப்போல , மன வியாதியும் முறையான வைத்தியம் இல்லாமல் அதிகரித்து அதிகரித்து மனமும் செத்து போகும் , இது அவர்களின் நயவஞ்கத்தனத்திற்கு உலகில் கிடைக்கும் தண்டனை , மறுமையிலோ, அவர்கள் தன் போலித்தனத்தை மறைக்க பொய்யான பேச்சுக்களை பேசிக்கொண்டிருந்த காரணத்தால் அவர்களுக்கு நோவினை தரக்கூடிய வேதனை காத்துக் கொண்டிருக்கிறது.
            நயவஞ்கர்களின் மூன்றாவது அடையாளம் தவறான முடிவுகள் எடுத்தல் , ஆம்,மனித உடலின் முக்கிய பகுதியான உள்ளமே செத்து விட்டால் மாலுமி இல்லாத கப்பல் தத்தலிப்பதைப்போல , ஓட்டுனர் இல்லாத வாகனம் தடுமாறுவது போல அவர்களும் தடுமாறுவார்கள் , வாழ்வில் தப்பு தப்பான முடிவுகளை எடுப்பார்கள் , தவறானதை சரியென்றும் , சரியானதை தவறென்றும் விளங்குவார்கள்.
               நீங்கள் உங்களின் தவறான செயல்பாடுகளினால் பூமியில் குழப்பத்தை உண்டு பண்ணாதீர்கள் என அவர்களிடம் கூறப்பட்டால் அவர்கள் அதற்கு அளிக்கும் பதில் , நாங்களா குழப்பம் செய்கிறோம் ? . நாங்களல்லவா உண்மையில் சீர்திருத்தவாதிகள் என்கிறார்கள். ஆனால் மக்களே அறிந்து கொள்ளுங்கள் அவர்கள் தான் பூமியில் குழப்பத்தை உண்டு பண்ணுபவர்கள். ஆனால் அவர்கள் இதனை உணரமாட்டார்கள் , உணர்வதற்கு உள்ளம்தான் இல்லையே ,
           உள்ளங்கள் சரியான திசையில் இல்லாதபோது மனித செயல்பாடுகளும் முறையாக இருக்காது . இந்த உண்மையைத்தான் இறை மறுப்பினர் உணர மறுக்கிறார்கள் . தம் நிலைபாட்டையே சரி என கருதுகிறார்கள். உள்ளத்தில் இறைவனின் அச்சம், அவனின் ஆற்றல்கள் மீதும், தன்மைகள் மீதும் உறுதி பிசகாத நம்பிக்கை இவைதான் மனிதனை கட்டுப்படுத்தும் உண்மையான காரணிகள். இவற்றை சுத்தமாக மறுத்து ஓரம் கட்டிவிட்டால் பின்னர் மனிதன் எதற்குத்தான் அஞ்சுவான் ?  பட்டப்பகலில் பகிரங்கமாக ஓர் அறிவுள்ள மனிதன் , கண்காணிக்கும் காவலர்களின் ஆயுதங்களுக்கு அஞ்சி தவறு செய்யாமல் இருந்து விடலாம். இரகசியத்திலே , இருட்டிலே , பூட்டிய அறைக்குள்ளே, யாரும் தன்னை காணாதபோதும் அவன் தவறு செய்வதை விட்டும் அவனை யாரால் தடுக்க முடியும்? , ஆகவே ஒரு மனிதனை அவனின் எல்லா நிலைகளிலும் தவறு செய்வதை விட்டும் தடைபோடக் கூடியது அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையும், அச்சமும்தான்.
          ஓர் நடு நிசி நேரம் , பால் விற்கும் அம்மாவும், மகளும் பேசிக் கொள்கிறார்கள் , அம்மா கூறுகிறாள் பாலோடு தண்ணீரை கலந்து விடு , மகள் பதிலளிக்கிறாள் ,  அமீருல் முஃமினீன் இவ்வாறு கலப்படம் செய்ய தடை விதித்துள்ளார்களே அம்மா ! அதற்கு தாய் , இப்போது அமீருல் முஃமுனீன் பார்த்துக் கொண்டா இருக்கிறார் ?  அமீருல் முஃமினீன் நம்மை  பார்க்காவிட்டாலும் அரசனுக்கெல்லாம் அரசனான அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறானே என்றதும் அதற்கு தாயாரால் பதில் பேச முடியவில்லை. அங்கே குற்றம் நடைபெறாமல் போகிறது. இந்த நம்பிக்கையும் இறையச்சமும்தான் ஓர் மனிதனுக்கு அத்தியாவசியமானது. உலகில் குழப்பங்களை அகற்ற இன்றியமையாதது , இதே நம்பிக்கையைத்தான் நபித்தோழர்கள் கொண்டிருந்தார்கள் , அவர்களின் உலக வாழ்வும் மேம்பட்டது , குற்றச் செயல்களும் அகன்றன, மறு உலக வெற்றியும் அவர்களுக்கு கிட்டியது. இந்த நம்பிக்கையை உருவாக்கிக் கொள்வது மட்டுமே  நம்முடைய ஈடேற்றத்திற்கான  ஒரே வழி !
           நயவஞ்சகர்களின் நான்காவது அடையாளம் , நபியை , நபித்தோழர்களை , மார்க்கத்தின் முன்னோடிகளை வசை மாறி பொழிவது ,   ஆம் , அவர்களிடம் நபித்தோழர்களான அந்த மேன்மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும் , ஈமானையும் எடுத்துக்கூறி அவர்கள் தம் ஈமானில் எவ்வாறு பிடிப்புடன் இருந்தார்களோ அதே போல நீங்களும் அல்லாஹ்வின் மீதும் , இஸ்லாம் கூறும் மற்ற ஏனைய அம்சங்கள் மீதும் நம்பிக்கை வைய்யுங்கள் , அவர்களின் ஈமானைப்போல எவர்கள் ஈமான் கொண்டிருப்பார்களோ அவர்களுடைய ஈமானுக்கே அல்லாஹ்விடம் அங்கீகாரம் உண்டு , நபித்தோழர்களின் ஈமான் எல்லோருடைய ஈமானுக்கும் உறைகல் என கூறப்பட்டால் அதற்கு அவர்கள் அளிக்கும் பதில் , அவர்களெல்லாம் மடையர்கள் , விளக்கமில்லாதவர்கள் , அவர்கள் நம்புவதைப் போலவா நாம் நம்பவேண்டும் ? அது முடியாது என்று கூறி அந்த நல்லடியார்களையும் ஏசுகிறார்கள் , அவர்களின் பாதையை விட்டு விட்டு தமக்கென தன் மன இச்சைக்கு தகுந்தாற் போல் ஓர் தனி பாதையை உருவாக்கிக்கொள்கிறார்கள் , ஆனால் உண்மையில் நபித்தோழர்களின் பாதையை விட்டு விட்டு வேறு பாதையில் செல்லும் இவர்கள்தான் மடையர்கள் , எனினும் இதை அவர்கள் அறிய மாட்டார்கள் , தம்மைத்தாமே சரியான பாதையில் தாம் செல்வதாக நினைத்துக்கொண்டு ஏமாந்து கொண்டுள்ளார்கள் .
            இங்கே நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் இருக்கின்றது. நபித்தோழர்கள் தான் நம்முடைய ஈமானுடைய, நேர்வழியுடைய அளவுகோல். யாருடைய ஈமான் ஸஹாபாக்களின் ஈமானுக்கு, யாருடைய பாதை சஹாபாக்களின் பாதைக்கு ஒத்து இருக்குமோ அவர்கள்தான் உண்மையான முஃமின்கள், நேர்வழி பெற்றவர்கள். அவர்களின் பாதைகளை, முறைகளை புறந்தள்ளிவிட்டு அவர்கள் என்னத்தான் தன்னை உண்மையான முஃமின்கள் என கூறிக் கொண்டாலும் அவர்கள்  வழிகேடர்கள். இலக்குக்கு எதிரான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது இந்த வசனத்திலிருந்து  விளங்குகிறது .           ஆனால் அவர்களின் பாதையை விட்டு விட்டு அம்முன்னோர்களையும் , நல்லடியார்களையும் வசை மாறி பொழிவது , தரம் தாழ்ந்து விமர்சனங்களை அவர்கள் மீது செய்வது ஆகியவை  இன்றைய நவீன முஸ்லிம்களின் அடையாளமாக மாறி வருவது மிகவும் வருத்தத்திற்குறிய விஷயமாகும் .
             நயவஞ்சகர்களின் ஐந்தாவது அடையாளம் இரண்டு  முகத்துடன் வளம் வருதல், இஸ்லாமிய விழுமியங்களை பரிகாசம் செய்தல் .
             அதனால்தான் அவர்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவர்களை சந்தித்தால் நாங்களும் அல்லாஹ்வை நம்புகிறோம் நாங்களும் முஸ்லிம்கள்தான் என கூறிக் கொள்வார்கள். அதே சந்தர்ப்பத்தில் அவர்களின் இனத்தவராகிய ஷைத்தான்களோடு, இஸ்லாத்திற்கு எதிரானவர்களுடன் தனித்திருக்கும் நிலை ஏற்படும்போது உண்மையில் நாங்கள் உங்களைச் சார்ந்தவர்கள், உங்களுடந்தான் இருக்கிறோம். மற்றபடி முஸ்லிம்களைப் போல நாங்கள் இருப்பதும், அவர்களோடு கலப்பதும் அவர்கள் ஆற்றும் கடமைகளை நாங்கள் ஆற்றுவதெல்லாம் கேலிக்காக, நாங்கள் அவர்களை கேலி செய்பவர்கள் – என்று கூறுகின்றனர். இவர்களின் இந்த இழிச்செயல் எவ்வளவு கீழ்த்தரமானது என்பதை எல்லோருமே அறிந்து கொள்ள முடியும்.
          இங்கே ஒரு உண்மையான முஃமின் எப்படி இருக்க வேண்டும் என்ற பாடமும் கற்றுத்தரப்படுகிறது. அல்லாஹ்வை மனப்பூர்வமாக நம்பியதோடு அதில் சந்தேகம் கொள்ளக் கூடாது. எல்லா நிலையிலும் தன்னை முஸ்லிமாகவே காட்ட வேண்டும் , இஸ்லாத்திற்கு மாற்றமான சூழல்களுக்கு மத்தியில் மாட்டிக் கொள்ளும் போது கூட தன் நம்பிக்கையை தளரவிட்டு விடாமல் , ஈமானில் நிலைத்து இருக்க வேண்டும் . மார்க்கத்தின் எந்த ஒரு சின்ன விஷயத்தைப் பற்றியும் பரிகாசம் செய்வது , கேலிபேசுவது அறவே கூடாது . எல்லா நிலைகளிலும் ஒரே மனநிலை கொண்டிருக்க வேண்டும் . பச்சோந்திகளைப் போல் சந்தர்ப்பவாதியாகி விடக்கூடாது.
           நயவஞ்சகத்துடன் செயல்படுபவர்கள் தம் நடத்தையால் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பரிகாசிக்கிறோம் என்கிறார்களே ,  ஆனால் உண்மையில் அல்லாஹ்தான் அவர்களைக் கொண்டு பரிகாசம் செய்கிறான். ஒருவன் திருடும் திட்டத்தை தீட்டுகிறான். அது ஒருவருக்கு தெரிந்து விடுகிறது ,  ஆனால் அதை அவனிடத்தில் வெளிப்படுத்தாமல் அவனை கைய்யும் களவுமாக பிடிக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து  காத்திருக்கிறார் . அவரிடத்திலேயே அவன் வந்து தன்னை தூய்மையானவனைப் போல நடத்திக் காட்டினாலும் அதை ஆமோதிப்பதைப் போல அவர் இருந்து விடுகிறார். அவனோ உள்ளத்தில் குதூகலித்துக் கொண்டு அவரை ஏமாற்றி விட்டதாக நினைத்துக் கொண்டு தன் திட்டத்தை தொடங்குகிறான். அவரோ அங்கே அவனை கைது செய்வதற்காக காவலர்களோடு வந்து விடுகிறார். இங்கு யார் யாரை கேலி செய்தார் ? . இதே போலவே அவர்கள் அல்லாஹ்வை பரிகசிப்பதாக நினைத்துக் கொண்டு உள்ளொன்று புறமொன்றுமாக இருக்கிறார்கள். அல்லாஹ்வுக்கு தன் இரகசியங்களெல்லாம் தெரியாதென்று நினைத்துக்கொள்கிறார்கள் . ஆனால் அல்லாஹ்வோ உள்ளங்களில் எழக்கூடிய அனைத்து எண்ணங்களையும் கூட அறியக் கூடியவன். அவன் இவர்களை அவர்களின் போக்கிலேயே அட்டூழியங்களில் தட்டழிந்தவர்களாக விட்டு வைக்கிறான். இறுதியில் அவர்களின் அனைத்து பாவச்செயல்களுக்கும் தகுந்த தண்டனைகளை அளித்தே தீருவான். அல்லாஹ் இந்நிலையை விட்டும் நம்மை பாதுகாப்பானாக , ஆமீன்.
            ஆக நயவஞ்சகர்களிடம் இந்த ஐந்து அடையாளங்களில் ஏதாவது ஒன்று  கண்டிப்பாக இருக்கும்,நம்மிடம் இந்த அடையாளங்கள் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் ,  அவர்களின் கீழ்த்தரமான இப்போக்குக்கு உதாரணம் கூறுவதாக இருந்தால் , விலை உயர்ந்த பொருளைக் கொடுத்து மட்டமான பொருளை வாங்கும் யோசனை கெட்ட மனிதர்களைப் போல என்று கூற வேண்டும் , ஆம் ,  இவர்கள் இறை நம்பிக்கை , இறை கட்டளைகள்படி செயல்படுவது , உண்மையாக இருப்பது என நற்காரியங்களின் பால் இழுத்துச் செல்லும் நேர்வழியான தூய இஸ்லாத்தை நிராகரித்துவிட்டு , அவநம்பிக்கை கொள்வது  , குதர்க்கமாக யோசிப்பது , உள்ளொன்று புறமொன்று செயல்படுவது , நடிப்பது போன்ற தீய நடத்தையின் பால் இழுத்துச் செல்லும் வழிகேட்டை வாங்கிக் கொண்டார்கள் . எதைக் கொடுத்து எதை வாங்குவது ? தங்கத்தைக் கொடுத்து மலத்தையா வாங்குவது ? வாழ்க்கை வயது என்ற சிறந்த மூலதனத்தை நேர்வழியில் ஈடுபடுத்தி லாபமீட்டுவதற்கு பதிலாக அதனை வழிகேட்டில் செலவழித்து பெரும் இழப்பையல்லவா இவர்கள்  தழுவ இருக்கிறார்கள்  . இவர்கள் அடைந்த நஷ்டத்திற்கு அளவேதும் உண்டா? அவர்கள் செய்த இவ்வியாபாரம் ஓர் சின்ன லாபத்தை கூட பெற்றுத்தரவில்லையே , காரணம் அவர்கள் வியாபார விசயத்தில் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை .
                திருக்குர்ஆன் ஒரு கருத்தை மனதில் ஆழமாக பதிய வைக்க அதனை உதாரணத்தின் மூலம் விளக்கி தருவது வழக்கம் , அந்த அடிப்படையில் இங்கே நயவஞ்சகர்களுக்கு இரண்டு உதாரணத்தை கூறுகிறது .
            முன் இருப்பது எதுவும் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு சரியான கும்மிருட்டு,  , தான் பாதத்தை எடுத்து வைப்பது மலரின் மீதா அல்லது முள்ளின் மீதா  என்பதும் தெரியவில்லை. இப்படியே நடந்து கொண்டு போனால் எங்காவது பாழும் கிணற்றிலே போய் விழுந்து விடுவோமா ? அல்லது சரியான பாதையில் தான் நடப்போமா? என்பதும் புரிய வில்லை , அத்தகைய  புதர் மண்டிய காட்டின் நடுவிலே சிலர் சிக்கிக் கொள்கிறார்கள். இந்நேரத்தில் இவர்களுக்கு தேவையான மிக அத்தியாவசியமான ஒன்று ஒரு வெளிச்சம் மட்டுமே . ஏனெனில் எங்கும் கும்மிருட்டாக இருக்கும் போது மூச்சே நின்று போவதைப் போல இருக்கும் , இப்படியான ஓர் சூழ்நிலையில் ஒரு நல்லவர் வெளிச்சத்திற்காக நெருப்பை மூட்டுகிறார். அவர் மூட்டிய நெருப்பு பற்றிக் கொண்டு சிறிது சிறிதாக வெளிச்சத்தை பரப்புகிறது . இப்போது தான் எல்லோருக்கும் பாதை புலப்படுகிறது. சிலர் தான் நின்று கொண்டிருப்பது மலத்தின் மேலே என தெரிந்து கொண்டு உடனே தன் பாதத்தை சுத்தம் செய்கிறார்கள் . சிலரோ தான் முள்ளை மிதிக்க இருந்ததாகவும், இந்த வெளிச்சத்தினால் தான்  தப்பித்துக் கொண்டோமென நிம்மதியடைகின்றார்கள். சிலர் தான் நடந்த பாதையிலேயே தொடர்ந்து நடந்திருந்தால் பல லட்சம் மைல் ஆழமான பாழடைந்த கிணற்றிலே அல்லவா விழுந்திருப்போம். இவ்வெளிச்சம் கண்டே நாம் பிழைத்தோம் என ஆனந்தப் படுகிறார்கள். இவ்வாறெல்லாம் பலரும் அவ்வெளிச்சத்தையும் அதை மூட்டிய அந்த நல்லவரையும் நினைத்து போற்றி அவ்வெளிச்சத்தை தன்னுடன் எடுத்துக் கொண்டு அக்காட்டை விட்டு தப்பித்து தம் ஊரை அடைய முயற்சித்துக் கொண்டிருக்க , வேறு சிலரோ அவ்வெளிச்சத்தை காண பிடிக்காமல் கண்களை மூடிக் கொள்கிறார்கள். இருளாகவே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே , இருட்டிலே இது வரை நாம் அனுபவித்து வந்த பாவத்தின் சுகங்கள் யாவற்றையும் இவ்வெளிச்சம் வந்து கெடுத்து விட்டதே என உள்ளுக்குள்ளேயே பொருமிக்கொண்டு  அவ்வெளிச்சத்தின் மீதும் அதை ஏற்றிய அந்த நல்லவர் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டு செயல்படுகிறார்கள் எனில் இங்கே யாருக்கு நஷ்டம் ? இருட்டிலே வெளிச்சத்தை  ஏற்படுத்தியது  குற்றமா ? அல்லது அதை காண பிடிக்காமல் தம் கண்களை மூடிக் கொண்டார்களே அவர்கள் மூடர்களா ? அவர்களே தம் கண்களை மூடிக் கொண்ட பின்னரும் வெளிச்சம் அவர்களுக்கு தெரியவா போகிறது? மற்றவர்களெல்லாம் வெளிச்சத்தை எடுத்துக் கொண்டு தம் ஊர் நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களோ தாமே ஏற்படுத்திக் கொண்ட கும்மிருட்டிலே தத்தளித்துக் கொண்டு பாதை தெரியாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த உவமானத்தில் முற்களும், புதர்களும் மண்டிய இருண்ட காடுதான் இவ்வுலகம். இருண்ட இருளைப் போக்க வெளிச்சம் கொண்டு வந்தவர்தான் நம்முடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் , அவர்கள் காட்டிய வெளிச்சம்தான் தீனுல் இஸ்லாமென்ற வாழ்க்கை நெறி. அதை எடுத்துக் கொண்டவர்கள் தான் முஸ்லிம்கள். அவர்களின் ஊர் என குறிப்பிட்டது சுவனத்தை . வெளிச்சத்தை காண பிடிக்காமல் தம் கண்களையே பொத்திக் கொண்டவர்கள் என குறிப்பிட்டது இஸ்லாத்தின் மீது வெறுப்புக் கொண்டு வாழும் நயவஞ்சகர்களையும் காபிர்களையும். இனி அல்லாஹ் கூறுவதை கேளுங்கள். அவர்களின் உதாரணம் ஒருவர் வெளிச்சத்திற்காக நெருப்பை மூட்டினார் அந்த நெருப்பும் தன்னை சுற்றுயிருந்த இருட்டான பகுதிகளையெல்லாம் வெளிச்சப்படுத்திய போது பலரும் தம் பாதையை கண்டு கொண்டு நடை போடுகிறார்கள். சிலரோ வெளிச்சத்தை காண பிடிக்காமல் தம் கண்களை பொத்திக் கொள்கிறார்கள். கண்களை மூடிக் கொண்ட பிறகு வெளிச்சம் தெரியவா போகிறது ஆதலால் வெளிச்சத்தை காணுவதற்காக எல்லோருக்கும் கண் ஒளியைக் கொடுத்த இறைவன் இவர்களின் கண் ஒளியை போக்கி அவர்களால் எதையும் கண்டு கொள்ள முடியாத கும்மிருட்டிலே எக்கேடும் கெட்டு போங்கள் என அவர்களை விட்டு விட்டான் . சரி , கண்களைத்தான் மூடிக் கொண்டார்கள் தம் வாயையாவது திறந்து தனக்கு வழிக்காட்ட அந்நல்லவர்களிடம் வேண்டினார்களா ? இல்லை , அதுவும் செய்யாத ஊமைகளாக அவர்கள் போய்விட்டார்கள். அந்நல்லவர்கள் கூறும் உபதேசங்களையாவது காது கொடுத்து கேட்டார்களா எனில் அதுவும் கேட்காத செவிடர்களாக , கண்களை பொத்திக் கொண்ட குருடர்களாகவே அவர்கள் இருந்து போனார்கள். இருட்டிலேயே மூழ்கிப் போனார்கள். வெளிச்சத்தை விட்டு மிகவும் விலகிபோய் விட்டார்கள். எனவே அவர்கள் திரும்ப வரமாட்டார்கள். அப்படியே போய்விடுவார்கள். அல்லாஹ் இந்நிலையை விட்டும் நம்மை பதுக்காப்பானாக ஆமீன்.
               இந்த உவமானத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஏராளமான பாடங்கள் இருக்கின்றன. இவ்வுலகம் என்பது நாம் நிரந்தரமாக தங்கி இருக்கப் போகிற இடமல்ல. அவ்வாறிருந்தால் பிறகு ஏன் வெளிச்சத்தையும், விளக்கையும் தேட வேண்டியது ஏற்படுகிறது. ஒருவர் தான் மட்டும் சரியாக வாழ்ந்து பிறர் பற்றிய சிந்தனையற்றிருப்பது சரியானதில்லை  என்பது மட்டுமல்ல அது இவரையும் வெகு நாட்களுக்கு நல்லவராக இருக்கவிடாது. சூழ்நிலைகளின் வெள்ளத்திலேயே இழுத்துச் செல்லப்படுவார். அல்லாஹ் யாருக்கும் நேர் வழியில் வரும்படி வற்புறுத்துவதில்லை. நேர்வழியை அடையக் கூடிய அத்தனை சாதனங்களையும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தித் தருகிறான். அதை கையாள வேண்டியது மனிதனின் கடமை. மனிதன் என்ற ரீதியில் ஒருவன் அறியாமல் பாவம் செய்துவிட்டான் எனில் அது பெரிய தவறல்ல. மாறாக அப்பாவத்திலேயே மூழ்கி கிடப்பதும், திருந்தாமல் இருப்பதுமே மாபெரும் குற்றமாகும் .
             நயவஞ்சகர்களின் மனோ நிலைகளை உதாரணங்கள் மூலம் விவரித்துக் கொண்டு வரும் இறைவன் , அடுத்து ஓர் உதாரணத்தை தருகிறான். சிலருக்கு இஸ்லாத்தின் மீது சில நேரங்களில் நம்பிக்கையும், சில நேரத்தில் சந்தேகமும் எற்படும், எதிலும் பிடிமானமாக இருக்க மாட்டார்கள், இப்பக்கமும், அப்பக்கமும் சாய்ந்து கொண்டே இருப்பார்கள், இவர்களுக்கான உதாரணம்.
            அல்லது அவர்களுக்கான உதாரணம் வானத்திலிருந்து பொழியும் பெரும் மழையில் சிக்கிக் கொண்டவர்களைப் போல , மழையும் சாதாரண மழையில்லை . கொட்டித் தீர்க்கின்ற மழை . கருமையான இருள்களும் சூழ்ந்து கொள்கின்றன. இடியும், மின்னலும் கடுமையாக இருக்கின்றது. அவ்விடி சப்தத்தின் கடுமை தாங்காமல் தாம் மரணித்துப் போவோமோ என்ற பயத்தில் மிரண்டு போய் இவர்கள் தம் கைவிரல்களால் தம் காதுகளை இறுக்கமாக பொத்திக் கொள்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வோ அந்த நிராகரிப்பாளர்களைப் பற்றி முற்றிலும் அறிந்தவனாக சூழ்ந்தவனாக இருக்கின்றான். அல்லாஹ்வை விட்டு அவர்கள் எங்கும் தப்பிக்க இயலாது. மேலும் அக்கண  மழையில் வெட்டுகின்ற மின்னல் அவர்களின் பார்வைகளை பறித்துக் கொண்டு போய்விடும் வகையில் இருக்கின்றது. அப்படிப்பட்ட பெரும் மழையில் சிக்கிக் கொண்டவர்கள் இருளின் காரணமாக எங்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றார்கள். வெட்டுகின்ற மின்னலால் ஏற்படும் வெளிச்சம் அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்தும் போது மட்டும் அவ்வெளிச்சத்தில் சிறிது நடக்கின்றார்கள். மின்னல் நின்று இருட்டு கவ்விக் கொள்ளும் போது மீண்டும் அவர்கள் நடப்பதை நிறுத்திக் கொள்கிறார்கள். இவ்வாறு கொஞ்சம் நடப்பது, பிறகு நிற்பது, பிறகு நடப்பது, பிறகு நிற்பது என பெரும் தடுமாற்றத்தில் வந்து விடுகிறார்கள். இவர்கள் அம்மழையை எடுத்துக் கொண்டது போலத்தான் சிலர் இஸ்லாத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இஸ்லாத்தின் மீது அச்சப்பாடு கொள்கிறார்கள். சந்தேகத்துடன் அதை அணுகுகிறார்கள் . இஸ்லாத்தின் போதனைகளை  எடுத்து நடந்தால் நாம் வெற்றி பெறுவோமா ? அது நம்மை வெற்றியின் இறுதிவரை கொண்டு போய் சேர்த்து விடுமா என்று எந்த முடிவுக்கும் வர முடியாமல் தேவையில்லாத தடுமாற்றத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள்  , இதனால் மின்னல் வெட்டுவதைப் போல திடீர் திடீரென அவர்களின் மனதில் தெளிவு பிறந்து தொழுகை நோன்பு என வணக்கங்களை சில காலத்திற்கு மேற் கொள்வார்கள். பிறகு அவ்வணக்கம் எல்லாமே நின்று போய்விடும்  பிறகு திடீரென எல்லாவற்றையும் ஆரம்பிப்பார்கள்  , பிறகு நின்று போகும் , இவ்வாறு தடுமாறிக்கொண்டே இருக்கும் இவர்களில் சிலருக்கு அல்லாஹ்வின் கருணை ஏற்பட்டு இஸ்லாத்தின் பெயரில் ஓர் ஆழமான மனத் தெளிவு உண்டாகிவிடுவது முண்டு. சிலர் இறுதி வாழ்க்கை வரை இதே தடுமாற்றத்தில் இருந்து விடுவதுமுண்டு. யார் யார் எப்படி போவார்கள் என்பது அல்லாஹ்வின் நாட்டத்தை பொருத்தது. அல்லாஹ் நாடினால் அவர்களின் செவித்திறனையும், பார்வை புலன்களையும் எடுத்துவிடலாம். அதன் பின்னர் இப்பிரிவினரும் மேற்கண்ட பிரிவைனர்களைப் போல நேர்வழியைத் தொலைத்த செவிடர்களாக, ஊமைகளாக குருடர்களாக போய்விடுவார்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லா வஸ்துக்களின் மீதும், ஆற்றல் படைத்தவனாக இருக்கிறான்.
         நயவஞ்சகர்களைப் பற்றி மேற்கூறப்பட்ட இரு உதாரணங்களில் ஓர் உண்மை முஸ்லிம் எப்படி இருக்க வேண்டுமென்ற மிக துள்ளியமான அளவுகோலும் எடுத்து வைக்கப்பட்டுள்ளது . இஸ்லாத்தின் போதனைகள் அனைத்தையும் திறந்த மனதோடு அணுக வேண்டும். அது வகுக்கும் வாழ்க்கை வழியில் தன்னை செலுத்த வேண்டும், அதன் எந்த அம்சத்திலும் சந்தேகமோ, தடுமாற்றமோ கொள்ளக் கூடாது. அதன் போதனைகளையும், கடமைகளையும், வாழ்வின் இறுதி மூச்சு வரை கடைபிடிக்க வேண்டும், பிடிப்பில்லாத நிலைபாடுகளும், விட்டு விட்டு செய்யும் அமல்களும் சுவர்க்கத்தை அடைவதற்கான தூரமான பாதையை கடப்பதற்கு போதுமாகாது. அல்லாஹுத்தஆலா நம்மை அவனை முழுமையாக நம்பிய நல்லடியார்களாக வாழச்செய்வனாக. குப்ரைவிட்டும் நயவஞ்சகத்தனத்தை விட்டும் நிரந்தர விடுதலை தருவானாக – ஆமீன்

No comments:

Post a Comment