سورة البقرة
بسم الله الرحمن الرحيم
الم (1) ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ (2) الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (3) وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ (4) أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (5) إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنْذَرْتَهُمْ أَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُونَ (6) خَتَمَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ (7)
அல்ஹம்து சூராவை அடுத்து அல்லாஹூத்தஆலா சூரத்துல் பகராவை ஆரம்பம் செய்கின்றான். குர்ஆனிலேயே மிகப்பெரிய சூரா இதுதான். எந்த வீட்டில் இந்த சூரா ஓதப்படுமோ அந்த வீட்டை தீயசக்திகள் அண்டாது என்பது ஒரு நபி மொழியின் கருத்தாகும். அதிகமான சட்ட திட்டங்களை உள்ளடக்கிய சூராவாகவும் இது இருக்கிறது. அல்லாஹ் இதனை முறையாக படித்து அதன் படி அமல் புரிய தௌபீக் செய்வானாக – ஆமீன்.
அலிப் லாம் மீம் , இதன் பொருளைப்பற்றி சில அறிஞர்கள் சில கருத்துக்களை கூறியிருந்தாலும் இது தான் என நாம் திட்டவட்டமாக கூற இயலாது. இந்த எழுத்துக்களின் முழுமையான பொருளை அல்லாஹ் மட்டுமே அறிந்தவன். இதை அடுத்து அல்லாஹுத்தஆலா குர்ஆனை அறிமுகம் செய்கிறான்.
இந்த வேதமாகிறது இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இது இறைவன் அருளியதுதானா ? இது கூறும் செய்திகளெல்லாம் உண்மைதானா ? இதன் சொல்படி நடந்தால் ஈடேற்றம் பெறலாமா ? போன்ற எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாத வகையில் எல்லா வித ஐயங்களுக்கும் அப்பாற்பட்ட புத்தகம் இது . இதிலே ஏதேனும் குறைகள் தெரியுமானால் அது மனிதர்களின் சிந்தனைகளிலுள்ள குறையே தவிர இப்புத்தகத்தின் குறைபாடு கிடையாது , இந்த புத்தகம் எதற்கு தரப்பட்டுள்ளது ? உலகிலே கவிதைகளை நோக்கமாக கொண்டு சில புத்தகங்கள் , நகைச்சுவையை ஏற்படுத்த சில நூல்கள் , வரலாற்றை கூற சில திரட்டுகள் என இவ்வாறு பல புத்தகங்களுக்கும் பல வகையான நோக்கங்கள் இருக்க இந்த புத்தகத்தின் நோக்கம் என்னவென்றால் அல்லாஹ்வை நித்தமும் பயந்து வாழக்கூடிய நல் அடியார்களுக்கு இது நேரான வழியை காட்டிக் கொடுக்கக்கூடியதாக அமைந்திருக்கிறது , ஆம் , ஓர் அடர்ந்த காட்டிலே பாதை தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பவனுக்கு பாதையை காட்டித்தரும் பெயர் பலகையைப் போல , இவ்வுலகில் நிலவும் பலவகையான தத்துவங்கள், கோட்பாடுகள், சிந்தனைகள் , நாகரீகங்களுக்கு மத்தியில் ஓர் மனிதன் சென்றடைய வேண்டிய சரியான இலக்கை துள்ளியமாக எடுத்து வைக்கும் ஓர் வழிகாட்டு புத்தகமாக இது அமைந்திருக்கிறது.
இந்த புத்தகம் வழிகாட்டாக அமையப்போகிற அல்லாஹ்வை அஞ்சி வாழும் நல் அடியார்களின் அடையாளங்களை, செயல்பாடுகளை அடுத்த வசனங்களில் அல்லாஹ் விவரிக்கின்றான்.
அல்லாஹ்வை அஞ்சக்கூடிய நல் அடியார்கள் எத்தகையவர்கள் என்றால் அவர்களுக்கு அடிப்படையாக ஐந்து அடையாளங்கள் உண்டு , முதலாவதாக அவர்கள் மறைவான செய்திகளை நம்புவார்கள் , ஈமான் என்றால் ஒருவரின் மீதுள்ள நம்பிக்கையில் அவர் கூறக்கூடிய அனைத்து விஷயங்களும் உண்மை என உறுதியாக நம்பி அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதற்கு சொல்லப்படும், மறைவான செய்திகள் என்றால் நமது ஐம்புலன்களால் அல்லது மேலோட்டமான அறிவைக் கொண்டு அறிந்து கொள்ள இயலாத செய்திகளுக்கு கூறப்படும். ஆகவே முஸ்லிம்களாகிய நாம், உண்மையே உருவான, நம்பிக்கைகுறிய நம்முடைய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறிய அனைத்து விஷயங்களையும், அவை நம் அறிவிற்கோ, புலனுக்கோ எட்டினாலும் சரி, எட்டாவிட்டாலும் சரி உண்மையென நம்பி அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் , அவற்றிலே தயக்கம் காட்டுவதோ, சந்தேகம் கொள்வதோ. அல்லது உண்மைதான் என்று மட்டும் நம்புவதோடு நிறுத்தி கொண்டு, ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதோ ஈமானுக்கு முரணாண நிலையாகும். இது அல்லாஹ்வின் மீது அச்சப்பாடு கொண்டவர்களின் முதல் அடையாளமாகும்.
இரண்டாவது அடையாளம் தொழுகையை அதன் அனைத்து அம்சங்களையும் முறையாக பேணி நிரப்பமாக நிலை நாட்டுவார்கள். நேரம் தவறியோ, அல்லது தூய்மையை பேணுவதில் குறைபாடு செய்தோ, அல்லது அதன் நிபந்தனைகள், கடமைகள் , ஒழுக்கங்கள் போன்றவற்றில் கவனமின்மையுடனோ அவர்களின் தொழுகை இருக்காது, உள்ளுக்குள் இருக்கக்கூடிய ஈமானின் வெளி அடையாளம் தான் தொழுகை, எனவே அவர்கள் தொழக்கூடிய தொழுகையில் அவர்கள் கொண்டுள்ள ஈமானுடைய உறுதியும் பிடிப்பும் வெளிபடும்.
மூன்றாவது அடையாளம் , அவர்கள் அல்லாஹ்வின் மீது கொண்டுள்ள ஈமானின் வெளிபாடு அவர்களின் உடல் உறுப்புகளை கடந்து அவர்களின் செல்வங்களிலும் பிரதிபலிக்கும் , அதன் விளைவாக நாம் அவர்களுக்கு அளித்த செல்வங்களிலிருந்து நாம் கூறிய வழிகளில் செலவும் செய்வார்கள், அதாவது ஜகாத் கொடுப்பது , தான தர்மங்கள் செய்வது , அநாதைகளை ஆதரிப்பது, பசித்தவர்களுக்கு உணவளிப்பது , வறியவர்களுக்கு உதவி புரிவது, கடனாளிகள் மீது பரிவு காட்டுவது, தன் மனைவி, மக்கள், பெற்றோர்களுக்கு அளிப்பது , தன் சொந்த பந்தங்களிலுள்ள ஏழைகளை பராமரிப்பது , மேலும் அல்லாஹ்வுடைய தீன் உலகில் மேலோங்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் காரியங்களுக்கு நிதியுதவி அளிப்பது போன்ற நலவான வழிகளில் அவர்கள் செலவு செய்வார்கள். அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் , அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை இந்த நல்ல காரியங்களையெல்லாம் செய்யத்தூண்டும்.
நான்காவது அடையாளம் , நபியே உங்களுக்கு அருளப்பட்ட இப்புனிதமான குர்ஆனையும், உங்களுக்கு முன்பதாக வாழ்ந்த நபிமார்களுக்கு அருளப்பட்ட முன் வேதங்களையும் நம்புவார்கள். முன் வேதங்களான இன்ஜீல், ஜபூர், தவ்ராத் போன்றவற்றை நம்புவதோடு மட்டும் நிறுத்திக் கொண்டு குர்ஆனை ஏற்க மறுத்துவிட்டால் அவர்கள் நம்பிக்கையாளர்களில் வரமாட்டார்கள். ஆகவே அவர்கள் குர்ஆனையும் ஏற்றுக் கொள்வதோடு , குர்ஆனின் வழிகாட்டுதல் படி வாழ வேண்டும், முஸ்லிம்களாகிய நாமும், குர்ஆனை அல்லாஹ்வுடைய வேதம் என நம்புவதோடு குர்ஆனுக்கு முன்பாகவும் அல்லாஹுத்தஆலா வேதங்களை அருளியுள்ளான். அக்காலத்தில் அவற்றின் படி செயல்படுவதே வெற்றி, குர்ஆன் அருளப்பட்ட பிறகு குர்ஆனின் படி அமல் புரிவதில் மட்டும் தான் வெற்றி இருக்கின்றது என்பதாகவும் நம்பிக்கை கொள்ள வேண்டும். முன் வேதங்களை நம்புவதற்கு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அமல் செய்வது முழுக்க முழுக்க குர்ஆன் படிதான் இருக்க வேண்டும்.
ஐந்தாவது அடையாளம், இதுவே முன்னதாக கூறப்பட்ட அடையாளங்களில் முத்தாய்ப்பானதாகவும், முஸ்லிம்களை இயக்கக் கூடிய மாபெரும் சக்தியாகவும் இருந்து கொண்டிருக்கிறது. அதாவது அவர்கள் மறு உலகத்தை உறுதியாக நம்பியிருப்பார்கள். ஏனெனில் ஒரு மனிதனின் பார்வையில் உலக வாழ்க்கைதான் வாழ்க்கை , இதன் சுகம்தான் சுகம், இதில் அனுபவிப்பவன் தான் வெற்றியாளன் என்ற சிந்தனை மேலோங்கி விட்டால் பின்னர் அவனை மேம்படுத்தக் கூடிய , நற்செயல்கள் செய்வதற்கு அவனை தூண்டக்கூடிய, பாவங்கள், குற்றங்கள் புரிவதை விட்டும் அவனை தடுக்கக் கூடிய ஆற்றல் எந்த ஒரு சக்திக்கும், அதிகாரத்திற்கும் இல்லாது போய்விடுகிறது, வலிமை மிக்க அரசுகள் இயற்றக் கூடிய சட்டங்களெல்லாம் விழலுக்கிரைத்த நீராய் போய்விடுகின்றன. இதற்கு மறுமையை நம்பாதவர்களின் உலகிலே மலிந்து காணப்படும் எண்ணற்ற குற்றங்களும், பாவச் செயல்களுமே சாட்சி. இதற்கு மாறாக ஒருவரின் சிந்தனையில் இவ்வுலக வாழ்வைத் தாண்டி மறு உலகு ஒன்று உள்ளது. அங்கே இவ்வுலக வாழ்வில் நாம் புரிந்த நல்ல, தீய செயல்களைப் பற்றி விசாரிக்கப்படும். அதன் முடிவில் கூலி வழங்கப்படும் , நல்ல செயல்கள் புரிந்தவர்களுக்கு நிரந்தரமான சுக வாழ்க்கை வழங்கப்படும், தீய செயல்கள் புரிந்தவர்களுக்கு கொடும் வேதனை நிறைந்த வாழ்வு நிரந்தரமாக கொடுக்கப்படும் என்றெல்லாம் உறுதி பிறந்துவிட்டால் அவ்வுறுதியே அவரை நிலைப்படுத்தும், நற்காரியங்கள் புரிய வைக்கும். குற்றச் செயல்களையும், பாவங்களையும் விட்டு பிறர் முன்னிலையில் அல்ல பூட்டிய அறையிலே, நடு நிசியிலே, பிறர் காணாத போது கூட அவரை தடுமாறாமல் தடுத்து நிறுத்தும், எனவே மறு உலகு நம்பிக்கையை எவ்வித சந்தேகமும் இன்றி அதை தன் கண் முன்னால் காணுவதைப் போல உறுதியாக நம்ப வேண்டும்.
ஆக இந்த ஐந்து அம்சங்களும் பயபக்தி கொண்டவர்களின் அடையாளங்களாகும் . இத்தகையவர்களுக்கே திருமறை குர்ஆன் நேர்வழிகாட்டக் கூடியதாக இருக்கிறது. சற்று சிந்திக்க வேண்டிய தருணமிது. மேற்கூறப்பட்ட ஐந்து உயர்ந்த அடையாளங்களும் வாய்க்கப் பெற்று தம் வாழ்க்கையை நேர்படுத்திக் கொண்ட நல் அடியார்களே குர்ஆனை விட்டு விட முடியாது. நித்தம் நித்தம் குர்ஆனை படித்து, நேர்வழியை அறிந்து செயல்பட வேண்டும். இது அவர்களின் வாழ்க்கையின் இறுதி மூச்சுவரை தொடர வேண்டும் என்கிற போது மேற்கூறப்பட்ட அடையாளங்கள் எதுவும் இல்லாத ஒருவன் அல்லது அரைகுறையாக உள்ளவன் என்றிருந்தால் அவனின் வாழ்க்கையின் ஈடேற்றத்துக்கு குர்ஆனின் வழிகாட்டுதல் எந்தளவு அவசியமானது என்பதையும் இங்கே நாம் உணர வேண்டும் . எனவே மேற்கூறப்பட்ட அடையாளங்களோடு குர்ஆனையும் தம் வழிகாட்டு புத்தகமாக எடுத்துக் கொண்டவர்களை தேடுங்கள். அவர்களின் பாதையில் நீங்களும் செல்லுங்கள் , காரணம் அவர்களைப் பற்றி அல்லாஹ்வே அடுத்த வசனத்தில் சான்றிதழ் அளிக்கின்றான்.
இவர்கள்தான் அவர்களின் இரட்சகனான அல்லாஹ்வின் புறத்திலிருந்து காட்டித்தரப்பட்ட நேர் வழியின் மீது வாழ்பவர்கள். இவர்கள் தான் வெற்றியாளர்கள். எந்த வெற்றியைத் தேடி மனித சமுதாயம் ஓடிக் கொண்டிருக்கிறதோ அந்த வெற்றி இவர்களுக்குத்தான், இவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அல்லாஹ் நம் அனைவரையும் இக்கூட்டத்தில் சேரச் செய்வானாக - ஆமீன்.
மேற் கூறப்பட்ட அடையாளங்களை எடுத்துக் கொள்ள எவர்கள் மறுத்து விட்டார்களோ அவர்களின் நிலைகளைப் பற்றி அல்லாஹுத்தஆலா அடுத்த வசனத்தில் கூறுகின்றான்.
நிச்சயமாக எந்த மனிதர்கள் மறைவானவையான அல்லாஹ், அவனுடைய தன்மைகள், மலக்குகள், சுவர்க்கம் நரகம் போன்றவற்றையும் நம்ப மறுத்து, அல்லாஹ்வை தொழுகாமலும், தம் பொருளை நல்வழிகளில் செலவழிக்காமலும், வேதங்களை உண்மை படுத்தாமலும், மறு உலக வாழ்க்கையை உறுதி கொள்ளாமலும் உலகில் வாழ்வை கழிக்கிறார்களோ, அவர்களின் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்கப் போகிறது? கண்டதையெல்லாம் நம்பிக் கொண்டு அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு புரிந்து கொண்டு வாழ்கிறார்கள். அவர்களைக்கண்டு நீங்கள் மனம் வெறுப்படைய வேண்டாம், அவர்களுக்கு நீங்கள் அல்லாஹ்வைபற்றியும், அவனை நம்ப மறுத்தால் ஏற்படும் தண்டனைகளைப் பற்றியும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்தாலும் சரி , அல்லது அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாவிட்டாலும் சரி , அவர்களைப் பொறுத்தவரை அது இரண்டுமே சமம்தான், அவர்கள் நீங்கள் கூறும் செய்திகளை நம்ப மாட்டார்கள். அவர்களின் பாவங்கள் அதிகரித்துவிட்டன. அத்துமீறல்கள் பெருகி விட்டன. அட்டூழியங்கள் மலிந்துவிட்டன. அவர்கள் தம்மை திருத்திக் கொள்வதற்கான , நேர்வழியை அடைவதற்கான அனைத்து சந்தர்ப்பங்களையும் , இறைவன் அவர்களுக்கு ஏற்படுத்தி தந்த அனைத்து வாய்ப்புகளையும் அவர்களே வீணடித்துக்கொண்டார்கள். அவர்களின் தொடர் பாவங்களின் பீடைகளினால் அவர்களின் நிலை எப்படி ஆகிவிட்டதென்றால் அல்லாஹ் அவர்களின் இதயங்கள் மீதே முத்திரையிட்டு விட்டான். அவர்களின் உள்ளங்களில் நல்ல விஷயங்கள் எதுவும் தங்காது. அவ்வுள்ளங்களுக்கு நற்போதனைகளை கொண்டு சேர்க்கும் முக்கிய வழிகளான அவர்களின் செவி புலன்கள் மீதும் முத்திரையிட்டுவிட்டான். எனவே நற்சிந்தனைகள், போதனைகள் அவர்களின் காதுகளில் விழுவதில்லை. இன்னும் முன்னேறி அவர்களின் பார்வை புலன்கள் மிதும் திரை விழுந்துவிட்டது. ஆகையால் அவர்கள் தம்மை சுற்றி நடைபெறும் படிப்பினை பெறும்படியான எந்த ஒரு நிகழ்வையும் கண்டு கொள்ளவே மாட்டார்கள். பின்னர் எவ்வாறு அவர்கள் திருந்த முடியும்? ஆகவே நபியே இது அவர்களின் குறைபாடுகள் தானேயொழிய உங்களின் போதனைகளில் வார்த்தைகளில் எவ்வித குறையும் இல்லை. இதுவெல்லாம் அவர்கள் புரிந்த பாவங்களின் தீவினைகளாகும். உலகில் அவர்கள் நேரிய வழியை தொலைத்து சொல்லெணா துன்பத்திற்கு ஆளாகின்றார்கள். மறுமையிலோ அவர்களுக்கு கடுமையான வேதனை காத்திருக்கின்றது. அல்லாஹ் பாதுகாப்பானாக. அவனை நம்பிய நல் அடியார்களில் நம்மை சேர்த்திடுவானாக. ஆமீன்.
No comments:
Post a Comment