குர்ஆனின் ஆரம்பத்திலிருந்து இதுவரை உலக மனிதர்களை அல்லாஹ்வை
மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள், ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள், தடுமாற்றத்தில்
இருப்பவர்கள் என்று மூன்று வகைப்படுத்தி அவரவர்களின் செயல்பாடுகளையும், அடையாளங்களையும்
எடுத்துரைத்து வந்த இறைவன் , குர்ஆனின் அடிப்படை வாதமான ஏகத்துவத்தின் ஆதாரங்களை அடுத்த
வசனங்களில் அடுக்கிக்கொண்டே போகிறான் ,
يَاأَيُّهَا النَّاسُ اعْبُدُوا
رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
(21) الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنْزَلَ
مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا
تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ (22) وَإِنْ كُنْتُمْ فِي
رَيْبٍ مِمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ
وَادْعُوا شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (23) فَإِنْ
لَمْ تَفْعَلُوا وَلَنْ تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا
النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ (24) وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا
وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا
الْأَنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا قَالُوا هَذَا
الَّذِي رُزِقْنَا مِنْ قَبْلُ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا
أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ (25) إِنَّ اللَّهَ لَا
يَسْتَحْيِي أَنْ يَضْرِبَ مَثَلًا مَا بَعُوضَةً فَمَا فَوْقَهَا فَأَمَّا
الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وَأَمَّا
الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا يُضِلُّ
بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا وَمَا يُضِلُّ بِهِ إِلَّا الْفَاسِقِينَ
(26) الَّذِينَ يَنْقُضُونَ عَهْدَ اللَّهِ مِنْ بَعْدِ مِيثَاقِهِ وَيَقْطَعُونَ
مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ أُولَئِكَ هُمُ
الْخَاسِرُونَ (27) كَيْفَ تَكْفُرُونَ بِاللَّهِ وَكُنْتُمْ أَمْوَاتًا
فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ
(28) هُوَ الَّذِي خَلَقَ لَكُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَى إِلَى
السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ (29)
ஓ ஒட்டு மொத்த மனித
வர்க்கத்தினர்களே! நீங்கள் ஒரே இறைவனான
உங்களின் இரட்சகனை , உங்களை பரிபாலிப்பவனை வணங்குங்கள்.
வணக்கம் என்பது , ஒருவரிடமிருந்து தனது பலனை
எதிர்பார்த்து அவரின் மீது உச்சகட்ட அன்பு, எல்லை மீறிய
மரியாதையோடு அவருக்கு முன்னால் தன்னை ஒட்டு மொத்தமாக பணியச் செய்வதற்கு சொல்லப்படும்
வார்த்தையாகும் , இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒன்றிற்கு தலை வணங்குபவனாக, அடிபணிபவனாகவே
இருக்கிறான், சிலர் சிலைகளுக்கு, சிலர் தலைவர்களுக்கு, சிலர் நல்லோர்களுக்கு
சிலர் தன் சக படைப்புகளுக்கு, சிலர் தனது மனோ இச்சைகளுக்கு சிலர் காசு பணத்திற்கு என ஏதாவது
ஒருவகையில் பிறவற்றிற்கு தன்னை அடிமைப்படுத்திக் கொள்கிறார்கள் , அவ்வாறு
ஒருவருக்கு முன் தன்னை அடிமைப் படுத்தி கொள்வதற்கு அவரிடம் என்னென்ன அம்சங்கள் இருக்க
வேண்டும் என்பதை அவற்றை வணங்குவதற்கு முன் மனிதன் சிந்தித்துப்பார்ப்பதில்லை . ஆனால் தூயவனான
அல்லாஹ்வை தன் வணக்கத்திற்குறியவனாக ஏற்றுக் கொள்வதற்கு அவனிடம் அனைத்து அம்சங்களும்
நிரப்பமாக உள்ளன.அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடத்திலும் அவ்அம்சங்கள் முழுமையாக
இல்லை.
முதலாவது, உங்களின் இரட்சகன் எத்தகைய கருணைகளை
உங்கள் மீது பொழிந்திருக்கிறான் என்பதை சிந்தியுங்கள் , அவனே உங்களையும்
படைத்தான், உங்களுக்கு முன்பு இப்பூமியில் வாழ்ந்த அத்தனை மனிதர்களையும் படைத்தான். உலகில் எந்த மூலையிலும் , எந்த காலத்திலும் வாழ்ந்த எத்தகைய
மனிதனாக இருந்தாலும் யாவரும் அவன் படைப்புகளே . அவன் உங்களை
படைத்திருக்காவிட்டால் வேறு யாரும் உங்களை படைத்திருக்க மாட்டார்கள் , நீங்கள் உருவாகி
இருக்கவே மாட்டீர்கள். உங்களுக்கும் சரி, உங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்களுக்கும்
சரி உருவாக்கம் என்பதையே அவன்தான் தந்தான்
, பிறகு அவனை விட்டுவிட்டு அவனால் படைக்கப்பட்ட ஒரு படைப்பை வணங்குவது முறையாகுமா ? எனவே உங்கள்
வணக்கங்கள் முழுவதையும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்யுங்கள். அப்படியான
மனத் தூய்மையுடன் கூடிய வணக்கத்தின் பலாபலன் நீங்கள் பயபக்தி கொண்டவர்களாக ஆவீர்கள். அது உங்களை உலக நெருக்கடிகளிலிருந்தும் , மறுமையின்
வேதனையிலிருந்தும் விடுதலை தரும்.
இரண்டாவது , நம் இரட்சகன் நமக்கு
உருவாக்கத்தை தந்ததோடு மட்டும் நில்லாமல் நாம் அழிந்து போகாது உயிர் வாழ்வதற்குறிய
அனைத்து அம்சங்களையும், வசதிகளையும் இவ்வுலகிலே
அவனே ஏற்படுத்தி தந்தான். அதில் அவனோடு யாரும் கூட்டு கிடையாது. அல்லாஹ்
கூறுகிறான் உங்களின் இரட்சகன் எத்தகைய கருணை கொண்டவன் என்றால்
அவனே உங்களின் வசதிக்காக இப்பூமியை விரிப்பாக ஆக்கியுள்ளான். ஆம் , மனிதனை படைத்து எங்கேயாவது போய் உட்கார்ந்து கொள் என
அவமரியாதையுடன் நடத்தப்படுபவர் போல் அல்லாமல் விரிப்பை விரித்து கண்ணியப்படுத்தி தகுந்த
இடத்தில் அமர வைக்கப்படும் விருந்தாளியை போல் அல்லாஹ் மனிதனை படைத்த பின் அவன் அமர
பூமியை விரித்து தந்தான் , மனிதன்
அமர்வதற்கு மிகவும் ஏதுவான இடமாக பூமி அமைந்துள்ளது , மனிதனின் தேவைக்கு தக்கவாறு பூமி
வளைந்து கொடுக்கிறது , அதை தோண்டி விவசாயம் செய்வது , வீடுகள்
கட்டுவது, சாலைகள் அமைப்பது, கழிவுகளை கொட்டுவது, மரணித்தவர்களை
புதைப்பது என மனிதன் ஆற்றும் எல்லாவற்றையும் பூமி தாங்கிக் கொள்கிறது. எளிதில்
உடைக்க முடியாத இரும்பாகவோ , கட்டிடத்தை பிடிக்காமல் சரிந்து விழும் புதை மணல்
நிறைந்த பகுதியாகவோ பூமி இருப்பதில்லை , இது எத்தனை பெரும் கருணை ?
மூன்றாவதாக , உங்களுக்காகவே வானத்தை முகடாக ஆக்கியுள்ளான். ஓர் வீட்டிற்கு முகடு அமைந்திருப்பதைப் போல பூமி என்ற
வீட்டிற்கு வானம் முகடாக விளங்குகிறது , பிரமாண்டமான
விளக்குக்கு இணையாக சூரியன், சிறு
விளக்குக்கு இணையாக சந்திரன், மின் விசிறிகளுக்கு இணையாக காற்று மண்டலம் என
மனிதன் வாழ்வதற்கு அத்தியாவசியமான படைப்புகள் யாவும் வானிலே அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நான்காவதாக
, படைத்த அந்த வானத்திலிருந்து உங்களின் நீர்த்தேவைக்காகவே மழையையும் பொழியச்செய்தான்
பின்னர் , அம்மழை நீரை பூமி உள்வாங்கச் செய்து அதைக் கொண்டு
உங்களின் உணவுத்தேவைக்காக தானிய வகைகளையும், பழவகைகளையும் அதிலிருந்து முளைக்கச் செய்தான். அந்நீரை பருகி , அவ்வுணவை உட்கொண்டு நீங்கள் உயிர்
வாழ்வதற்கான ஆற்றல்களை பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் , சுப்ஹானல்லாஹ் ! இந்த நீண்ட
நெடிய , பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்த அந்த அல்லாஹ் எவ்வளவு பெரிய
கருணையாளன் ! இவற்றையெல்லாம்
நீங்கள் எண்ணிபார்க்க வேண்டாமா ? மேலே அடுக்கிய அத்தனை ஏற்பாடுகளையும் அல்லாஹ்வைத் தவிர வேறு
யாராவது செய்திருக்க முடியுமா ? அவன் இந்த ஏற்பாடுகளை
செய்து தந்திருக்காவிட்டால் வேறு யாரால் செய்து தர முடியும் ? இவைகளே
வணங்கப்படும் ஒருவனிடம் இருக்க வேண்டிய அம்சங்கள் , இவை அல்லாஹ்வைத்தவிர வேறு
யாரிடம் உள்ளது ? நீங்கள் இவற்றையெல்லாம் நன்றாக அறிந்திருக்கிறீர்கள் , எனவே
அல்லாஹ்வுக்கு இணையாளர்களாக யாரையும் ஆக்காதீர்கள்
. அவனை மட்டுமே வணங்குங்கள் .
இது தான் இஸ்லாத்துடைய ஆணித்தரமான, அடிப்படையான
ஏகத்துவ கொள்கை. அல்லாஹ்வுக்கு மட்டுமே தலை வணங்க வேண்டும். அவனுக்கு
சமமாக, இணையாக யாரையும் வைக்க கூடாது . அல்லாஹ்
நம் மரணம் வரை நம்மை இக்கொள்கையின் மீது நிலைக்கச் செய்வானாக – ஆமீன் !
இதை அடுத்து பொதுவாக எல்லா மனிதர்களின் உள்ளத்திலும்
அல்குர்ஆன் குறித்து எழக்கூடிய சந்தேகங்களுக்கு
பதில் தருகிறான். அதாவது அல்குர்ஆன் தூய அல்லாஹ் அருளிய வேதம்தான் என்பதற்கு
என்ன ஆதாரம் ? என்பதுதான் அது .
ஓ மனிதர்களே ! நீங்கள் நாம் நம்முடைய அடியாரான
முஹம்மது (ஸல்) அவர்களின் மீது இறக்கியருளிய திருக்குரானின் வசனங்கள் பற்றி, அது கூறும் செய்திகள் குறித்து இவை உண்மையாகவே தூய இறைவனின்
வார்த்தைகள் தானா ? என்ற தடுமாற்றத்திலும், சந்தேகத்திலும்
இருப்பீர்களானால் நீங்கள் தாராளமாக முன்
வந்து திருக்குர்ஆனை படித்துப் பாருங்கள் ,
அதன் ஒரு அத்தியாயத்தையாவது வாசித்துப் பாருங்கள். அது தரும்
பொருள், அது உணர்த்தும் பாடம், அது காட்டும்
சீரான வழி, இலக்கிய நயத்திலும், மொழிப்புலமையிலும்
அதன் உயரம் , அவை அருளப்பட்ட பிரதேசம், அது யார்
மீது இறக்கப்பட்தோ அவரின் வாழ்வியல் சூழ்நிலைகள் , அவரின் பண்புகள் போன்ற அம்சங்களையெல்லாம்
சேர்த்து வைத்து நன்றாக சிந்தியுங்கள் , ஆராயுங்கள் . உங்களின்
ஆய்வின் முடிவு , உண்மையிலேயே, எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் இவை யாவும் அகில உலக அதிபதி
உலகத்தார்களோடு பேசும் பேச்சுக்கள் தான் என்றே இருக்கும் நீங்கள் நடு நிலையாளர்களாக இருந்தால். அவ்வாறில்லாது
நீங்கள் நன்கு ஆராய்ச்சி செய்து இது இறைவனின் வசனங்கள் கிடையாது , அரபு நாட்டில்
பிறந்த முஹம்மது என்பவர் கற்பனைகள் செய்து கூறியவைகள்தான் இவை , இவை மனித
வார்த்தைகள் தானே யொழிய இறைவார்த்தைகள் கிடையாது
என்ற முடிவுக்கு நீங்கள் வந்தால் உங்களை நான்
சவாலுக்கு அழைக்கிறேன். வாருங்கள் , இவை மனிதரே
உருவாக்கியவை என்றிருந்தால் நீங்களும் மனிதர் தாமே , உலகிலே வல்லவனுக்கு வல்லவன் இருக்கத்தானே
செய்வார். ஒரு அறிவாளி படைத்த படைப்புக்கு மேலான படைப்பை மற்றொரு அறிவாளி
முன் வைத்து அவரை தோற்கடிப்பாரே அது போல நீங்களும் முஹம்மதை தோற்கடிக்க , இத்திருக்குர்ஆன்
முழுக்க அல்ல அதன் ஏதாவது ஒரு சிறிய அத்தியாயத்தைப் போன்றாவது ஒன்றை உருவாக்கி கொண்டு
வாருங்கள். அது குர்ஆனுடைய கருத்துக்களை விட மேலானதாக அல்லது சமமானதாகவாவது
இருக்க வேண்டும் . அதை உலக அரங்கிலே நிரூபிக்கவும் வேண்டும். உங்களால்
தனித்து நின்று இதனை செய்ய இயலவில்லையானால் பரவாயில்லை , உங்களின் உதவியாளர்கள் , நண்பர்கள்
, அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட உங்களின் கற்பனை
தெய்வங்கள் என யாரை வேண்டுமானாலும் உதவிக்கு அழைத்துக் கொண்டு குர்ஆனுக்கு
சமமான ஒரு சிறிய அத்தியாயத்தையாவது கொண்டு வாருங்கள்
திருக்குர் ஆன்
இறைவசனங்களல்ல, மனித கருத்துக்கள் தான் என்ற உங்களின் கூற்றில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதை செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாமல் போவீர்களானால் இனி இரண்டே வழிதான் இருக்கின்றது, ஒன்று தன்னுடைய பிடிவாதத்தையும், வீம்பையும் விட்டு விட்டு அல்லாஹ்வுடைய தூய்மையான உண்மையான குர்ஆனின் வசனங்களை மனதார ஏற்றுக் கொண்டு பரிபூரண முஸ்லிமாகுங்கள். அது தான் உங்களுக்கு மிக நல்லது. ஏனெனில் கண்டிப்பாக நிச்சயமாக உங்களால் குர்ஆனுக்கு நிகரான எந்த ஒரு சின்ன அத்தியாயத்தையும் கொண்டு வரவே முடியாது.
அல்லாஹ்வின் இந்த வார்த்தை கூறப்பட்டு இத்துடன் 1400 வருடங்களுக்கு மேல் கழிந்து விட்டது. இது வரை இந்த சவாலை முழுமையாக எதிர் கொண்டு செய்து காட்டியவர் ஒருவருமில்லை. இன்ஷா அல்லாஹ் இனி கியாமத் நாள் வரை யாராலும் இந்த சவாலை எதிர் கொள்ளவே முடியாது . ஆகவே இது இறைவனின் வார்த்தைகள் தான் என்பது நிரூபணமாகிவிட்டது . அதை ஏற்பது தான் முறை , இல்லையென்றால் பிறகு இரண்டாவது வழி உங்களுக்கு நரகை பற்றி எச்சரிக்கிறேன் , நீங்கள்
கொழுந்து விட்டெரியும் நரகிலே நிரந்தரமாக புகுவீர்கள் என்பதை பயந்து கொள்ளுங்கள்.
அந்நரகத்தின் நெருப்பு உலக நெருப்புகளைப் போல விறகு, எண்ணை போன்றவற்றைக் கொண்டு எரியூட்டப்படாது, மாறாக அந்நரகத்தின் கடுமை எத்தகையதென்றால் அதன் எரிபொருளே மனிதர்களும்,
அவர்கள் வணங்கிய சிலை கற்களும் தான். அந்நரகம் உலகிலே அல்லாஹ்வையும், அவனுடைய தீனையும் நிராகரித்து வாழ்பவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் நம்மை நரகை விட்டும் பாதுகாத்து மேலான சுவனத்தில் புகச்செய்வானாக- ஆமீன்.
இத்தகையோர்களுக்கு
நேர் மாற்றமாக உலகிலே வாழும் போது
எவர்கள் அல்லாஹ்வின் மீது முழுமையாக விசுவாசம் கொண்டு , அவனுடைய அனைத்து கட்டளைகளையும் மனப்பூர்வமாக ஏற்று அதன்படி நல்ல அமல்களை, சிறந்த காரியங்களை ஆற்றி வழ்வார்களோ அத்தகைய பாக்கியவான்களுக்கு பல வகையான சுவனச் சோலைகள் காத்திருக்கின்றது, இதில் எவ்வித மாற்றமுமில்லையென்ற சுபச் செய்தியை அவர்களுக்கு நீங்கள் தெரிவித்து விடுங்கள்.
அச்சுவனச்
சோலைகளின்
இடையே
நீரறுவிகள்
ஒளித்தோடிக்
கொண்டே
இருக்கும்.
இதனால் சுவனம் எப்போதும் பசுமையாகவும் செழுமையாகவுமே காட்சி தரும் , மனித மனம் விரும்பாத எவ்விதமான வறட்சியோ வெப்பமோ அங்கே பார்க்க முடியாது , தொழுகையோ
மற்ற அமல்களோ புரிய வேண்டுமின்ற எவ்வித கட்டளையும் அங்கே இருக்காது
. அச்சுவனத்து
சோலைகளில் அவர்கள் விதவிதமான உணவுகள், பழவகைகள் கொடுக்கப்படுவார்கள். அதனை அவர்கள் இன்பத்துடன்
புசிப்பார்கள். எவ்வித கவலையும் அங்கு இருக்காது. இவர்கள் உணவைத் தேடிச் செல்லவோ, தானே எடுத்து வைத்து உண்ண வேண்டுமென்ற நிலையோ கூட அங்கு இருக்காது , மாறாக இவர்களை கண்ணியமான விருந்தாளிகள் போல அமர வைத்து சுவர்க்கப் பணியாளர்கள் இவர்களுக்கு பரிமாறுவார்கள். அவர்களுக்கு சுவனத்துடைய பழவகையிலிருந்து ஏதேனும் ஒன்றை உண்ணக் கொடுக்கப்படும் போதெல்லாம் ஆச்சரிய
மேலிட்டவர்களாக, வியப்புடன்
இது முன்னர் எங்களுக்கு அளிக்கப்பட்டதே , அது தானே?
தாருங்கள் உண்ணலாமென வேண்டுவார்கள் , அவர்கள் ஒன்றொயொன்று ஒத்த பழவகைகளை கொடுக்கப்பட்டிருப்பார்கள், பார்ப்பதற்கு ஒரே வகை பழங்களை போல் இருக்கும் , ஆனால் சுவைத்துப் பார்த்தால் ஒவ்வொன்றின் சுவையும் ருசியும் வித்தியாசமாய் இருக்கும் . இவ்வாறு பழங்களை புசிப்பதில் அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருப்பார்கள். இதோடு மட்டுமல்ல , அங்கே அவர்களுக்கு பரிசுத்தமான மனைவியர்களும் இருப்பார்கள்.
உலக துணைவியர்களைப் போல அழுக்காகவோ துர்வாடை கொண்டோ அல்லது பெருமை, அகம்பாவம் ஆணவம் போன்ற துற்குணங்கள் கொண்டோ இல்லாமல் பரிசுத்தமானவர்களாக இருப்பர் . இவர்கள் அவர்களோடு இன்பம் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அங்கே அவர்கள் எவ்வித பயமோ கவலையோ அற்று நிம்மதியுடன் மிக சந்தோசமாக காலா காலத்திற்கும் நிரந்தரமாக இருந்து கொண்டிருப்பார்கள்.
இத்தகு மேலான சுவனத்தில்
அல்லாஹ் நம் எல்லோரையும் சேர்த்து அருள்வானாக – ஆமீன்.
கடந்து
போன சில வசனங்களில் குர்ஆன் பற்றிய மனிதர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்து வந்த இறைவன் அடுத்து வரும் வசனத்தில் குர்ஆன் குறித்து அவர்கள் எழுப்பிய இன்னுமொறு சந்தேகத்திற்கு பதிலளிக்கின்றான். அதாவது இந்த குர்ஆனில் கூறப்படும் அனைத்து செய்திகளும் , அதன் எழுத்துக்கள்
முதற்கொண்டு அகில உலக இரட்சகனான அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது என்பது உண்மையாக
இருந்தால் குர்ஆனில் ஈ, எறும்பு, கொசு, சிலந்தி, சிலந்தி வலை போன்ற அற்பமானவைகள் எவ்வாறு இடம் பெறலாம் ? உயர்ந்தவனான
அல்லாஹ் அற்பமான கீழ்த்தரமான படைப்புகளை தன் பேச்சிலே கொண்டு வரலாமா ? இவைகள் குர்ஆனில்
இடம் பெறுவதால் அதன் மதிப்பு சரிந்து விடாதா? என்றெல்லாம்
கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பினார்கள் , அதற்கான பதிலை அல்லாஹ்
அடுத்த வசனத்தில் கூறுகிறான் .
நிச்சயமாக அல்லாஹ்
தன்னுடைய வசனங்களை தம் அடியார்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளும் வகையில் தெளிவுபடுத்தி
விவரிப்பான். அதற்காக உதாரணங்களையும், உவமைகளையும்
கூற வேண்டிய தேவை ஏற்பட்டால் அல்லாஹ் உதாரணங்களையும் சொல்லிக் காட்டுகிறான் , கொசுவையோ
அதை விடவும் சிறுமையில் மேலானதையோ உதாரணங்களாக கூற வேண்டிய தேவை ஏற்பட்டால், அவ்வுதாரணங்களை
கூறினால் தான் வசனங்களை விளங்க முடியும் என்றிருந்தால் அவைகளை உதாரணமாக காட்டுவதில்
எவ்வித வெட்கமும் அவன் கொள்ளமாட்டான். எனவே அவ்வுதாரணம் எதற்காக கூறப்பட்டது என்பதை தான் சிந்திக்க
வேண்டுமேயொழிய இவ்வுதாரணங்களை கூறுவது இறைவனுக்கு தகுமா ? என தம் சிந்தனையின் போக்கை
வேறு பக்கம் திருப்பிக் கொள்வது மூடத்தனமாகும் . அல்லாஹ் கூறும் உதாரணங்களை எல்லோரும் ஒரே போன்று எடுத்துக் கொள்வதில்லை , அல்லாஹ்வின் மீது உண்மையான
விசுவாசம் கொண்டவர்கள் இறை வசனங்களை எப்படியாவது விளங்க வேண்டுமென்ற தேட்டத்துடன்
இருந்து இவ்வுதாரணங்களை அவர்கள் கேட்டதும் நிச்சயமாக சத்தியமாக இவைகள் தங்களின்
இரட்சகனான அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தவைகள் தாம், அவை முற்றிலும்
சத்தியம் வாய்ந்தவை, பொருத்தமானவை தாம் என
அறிந்து கொள்வார்கள், இதற்கு மாற்றமாக எவர்கள்
அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்களோ அவர்களுக்கு எவ்வுதாரணங்களில் புதைந்துள்ள
நுணுக்கங்கள் தெரிவதில்லை. மஞ்சள் காமாலை
உள்ளவர்களுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரிவது போல எதையும் மறுக்கும் குணம் கொண்டவர்களுக்கு
யாவற்றையும் மறுக்கத்தான் தோணும் , எனவே அவர்கள் அல்லாஹ் இதன் மூலம் என்ன பெரிய
உதாரணத்தை நாடிவிட்டான்? என்று பரிகாசமாக கூறிக் கொள்வார்கள். அதை தாண்டி அவ்வுதாரணங்களை சிந்திக்க முன்வரமாட்டார்கள். இவ்வாறு
இவ்வுதாரணங்களை கூறுவதின் மூலம்
அல்லாஹ் பல மனிதர்களை வழி பிறழச்செய்கிறான். இதன் மூலம்
பலருக்கு நேர் வழியை விளக்கி காண்பிக்கிறான். அல்லாஹ் கூறிக்காட்டும் உதாரணங்கள் பலருடைய நேர்வழியும் ,
தெளிவும் அதிகரிக்க காரணமாக அமைகிறது , அதை
முறையாக அணுகாத பலருக்கு அவர்களின் வழிகேடுகள் அதிகரிக்க காரணமாகிறது . ஆனால்
ஒன்று மட்டும் நிச்சயம் , நற்சிந்தனை உடையவர்கள் உதாரணங்களில் வழி தவறமாட்டார்கள். மாறாக எவர்கள்
அல்லாஹ்வின் கட்டளைகளை துச்சமாக மதித்து மீறி நடக்கும் பாவிகளாக இருப்பார்களோ
அவர்களையே அல்லாஹ் அவ்வுதாரணத்தை அணுகுவதில் வழிதவறச் செய்கிறான். அல்லாஹ்
இப்பாவத்தை விட்டும் நம்மை பாதுகாப்பானாக.
அவர்கள் எத்தகையோர்களென்றால்
அவர்களின் முதல் அடையாளம் , அவர்கள் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை , அவை
உறுதிபட செய்ததற்குப் பிறகும் கூட எவ்வித மன உறுத்தலும் இல்லாமல் முறித்துக்
கொள்வார்கள். சாதாரணமாக சக
மனிதருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறிப்பதும்,
அதற்கு மாறு செய்வதும் கீழ்த்தரமான செயல் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. அதிலும்
அல்லாஹ்வுடன் புரிந்து கொண்ட ஒப்பந்தத்தை முறிப்பதும் , அதை மீறுவதும்
எவ்வளவு மாபாதகமான செயல் ? உலக மனிதர்கள் ஒவ்வொருவரும் இவ்வுலகத்தில் பிறப்பதற்கு முன்னதாக, அவர்களின்
உயிர்கள் யாவும் உயிர் உலகம் எனுமிடத்தில் அணி அணியாக வைக்கப்பட்டிருக்கும் , அவைகளுக்கான
உடல்கள் தாயின் வயிற்றில் உற்பத்தியான பின் அங்கிருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவ்வுயிர்கள்
மலக்கின் மூலம் எடுத்து வரப்பட்டு , அவ்வுடல்களில் செலுத்தப்படும் , பின்னர் உடலும், உயிரும்
இணைந்து மனிதனாக அவன் உலகில் பிறக்கின்றான். இவ்வாறு
உலகின் ஒட்டு மொத்த மனித உயிர்களும் குழுமியிருந்த ஒரு நேரத்தில் அல்லாஹ் அவற்றோடு
உரையாடினான். தன்னை அவற்றிற்கு அறிமுகப்படுத்தி தான் யார் என கேட்ட போது ,
நீதான் எங்களின் இரட்சகன் , எங்களை பரிபாலிப்பவன் என உயிர்கள் யாவும் ஒரு சேர கூறின. இதன் படி
அவ்வுயிர்கள் உடல்களுடன் சேர்த்து உலகிற்கு அனுப்பப்பட்ட பிறகு அல்லாஹ்வையே தம் இரட்சகனாக,
வணக்கத்திற்குறியவனாக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அது தான்
மனிதனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையேயான ஒப்பந்தம் , ஒவ்வொரு மனிதனின் உள் மனதிலும் இந்த
ஒப்பந்தம் படிந்து இருக்கத்தான் செய்கிறது . இறைவனைப்
பற்றிய தேடல் எண்ணம் ஒவ்வொருவரிலும் எழுந்து கொண்டே இருப்பது இதன் வெளிபாடுதான். பின்னர்
அல்லாஹுத்தஆலா சத்தியத்தை மட்டுமே உரக்கக் கூறிய உண்மையான தூதர்களை அனுப்பி அவ்ஒப்பந்தத்தை
நினைவூட்டவும் செய்கிறான். நபி (ஸல்) அவர்கள் இது பற்றி கூறிய பொன் மொழிகளும் இருக்கின்றன . ஆக இவ்வாறெல்லாம்
அவ்வொப்பந்தம் உறுதியூட்டப்பட்ட பின்பும் அதை முறிப்பவர்கள், அல்லாஹ்வை
மட்டுமே தன் இரட்சகனாக ஏற்க மறுப்பவர்கள். இவர்களே
பாவிகள்.
மேலும் அவர்களின் இரண்டாவது அடையாளம்
அவர்கள் எந்த உறவு முறைகளை, தொடர்புகளை அறுந்து போகாமல் அவற்றுடன் இணைந்து, சேர்ந்து வாழவேண்டுமென அல்லாஹ் அவர்களுக்கு கட்டளை
இட்டிருந்தானோ அதனை துண்டித்துக் கொண்டு அவர்கள் வாழ்வார்கள். தம் இரத்த
உறவுகள், சொந்த பந்தங்கள், அண்டை வீட்டார்கள், தம் இஸ்லாமிய
சகோதரர்கள், நல்லோர்கள் இவர்களோடு பிணக்கு ஏதுமில்லாமல் விட்டுக் கொடுத்தும்,
பெருந்தன்மையோடும் இணங்கி வாழ வேண்டும் என்பது அல்லாஹ் இட்ட கட்டளை. அதனை சற்றும்
அசட்டை செய்யாமல் சண்டையிட்டுக் கொண்டு, விரோத மனப்பான்மையுடன் உறவுகளையும் நற்தொடர்புகளையும்
முறித்து வாழ்வார்கள்.
மேலும் அவர்களின் மூன்றாவது அடையாளம்
, தமது இத்தகைய ஒழுங்கற்ற செயல்களால் அமைதிக்கும், நிம்மதிக்கும்
குந்தகம் விளைவித்துக் கொண்டு பூமியில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு திரிவார்கள். இத்தகைய போக்கு கொண்டவர்களே நஷ்டவாளிகள். இவ்வுலகிலும் மறு உலகிலும் அவர்கள் தழுவும் நஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இத்தகைய
பாவிகள் அல்லாஹ் கூறும் உதாரணங்களையெல்லாம் ஏறெடுத்துப் பார்த்து நேர்வழி பெறுவார்கள்
என்பதை ஆதரவு வைக்க முடியாது. அல்லாஹ் இப்படிப் பட்ட நஷ்டவாளிகளை விட்டும் நம்மை பாதுகாப்பானாக. ஆமீன்
இதுவரை அல்லாஹ்வைப்பார்த்து மனிதர்கள் கேள்வி
எழுப்பினார்கள் , அல்லாஹ் அதற்கு தக்க பதில் கூறினான், அடுத்து மனிதர்களை நோக்கி
அல்லாஹ் கேள்வி எழுப்புகிறான் , அதற்கு மனிதர்கள் என்ன பதில் வைத்துள்ளார்கள் ? என்பதை சிந்திக்க வேண்டும் , மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ்வே
வணக்கத்திற்குறியவன் , அல்குர்ஆன் அவனால் அருளப்பட்ட புனித வேதம் என்பது
சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகி விட்ட போதும் அல்லாஹ்வை தம் இரட்சகனாக ஏற்க
மறுப்பவர்களே ! நான் உங்களைப்பார்த்து ஓர் கேள்வி கேட்கிறேன் , நீங்கள் அல்லாஹ்வை எப்படி மறுக்கிறீர்கள் ? அவனை எவ்வாறு உங்களால் நிராகரிக்க
முடிகிறது? உங்களின் ஒவ்வோரு நிலையோடும், அசைவோடும் அவன் சம்பந்தப்படுகிறான் என்பதை தெரிந்துதான் அவனை ஏற்க
மறுக்கிறீர்களா ? சற்று நீதமாக சிந்தியுங்கள் , நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள் ? ஒரு காலத்தில் பிசுபிசுக்கின்ற
இந்திரியத்துளியாக, பிறகு சதைக் கட்டியாக, பின்னர் உயிரற்ற அசைவே இல்லாத மாமிச பிண்டமாகத்தானே இருந்தீர்கள். அப்படியிருந்த உங்களை அவன் தானே
உயிராக்கினான்? வேறு யாராவது உங்களுக்கு உயிர் கொடுத்தார்களா ? பின்னர் நீங்கள் குழந்தையாக தாயின் வயிற்றிலிருந்து வெளிபட்டு
சிறிது சிறிதாக வளர்ந்து முழு மனிதனாக மாறி இன்று வாழ்கிறீர்கள். அவன் உங்களூக்கு உயிரை தந்திருக்காவிட்டால் இவ்வாறு நீங்கள்
வாழ்க்கையை அனுபவித்திருக்க முடியுமா ? பிறகு இந்த வாழ்க்கை நீடித்த, நிரந்தரமானதல்ல. ஒரு நேரத்தில் முடிந்து போகும் ,
அப்போது அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த உயிரை
எடுத்துக் கொண்டு உங்களை முன்பிருந்தது போல உயிரற்ற ஜடமாக்கி விடுவான். நீங்கள் மரணித்துப்போவீர்கள் ,
மரணித்த உங்களை அப்படியே விட்டு விடாமல் மறுபடியும் உங்களின் உடல்களை உருவாக்கி
அதனுல் உங்களின் உயிர்களை செலுத்தச் செய்து உங்களை மறுபடியும் உயிர்பிப்பான். பின்னர் நீங்கள் இறுதியாக விசாரணைக்காக அவன் பக்கமே மீட்டி கொண்டு வரப்படுவீர்கள். அதுதான் மறுமை நாள் , உங்களின் இவ்வுலக
வாழ்க்கைப்பற்றிய விசாரணை நடைபெறும் நாள். உங்களின் பிறப்பும் அவன் கையில் , இறப்பும் அவன் கையில் ,
இடைப்பட்ட வாழ்க்கையும் அவன் கையில் , இத்தகு ஒருவனை மறப்பதும், மறுப்பதும் அறிவீனமில்லையா ?,
அவன் எத்தகைய
அரசனும், கருணையாளனும் என்றால் உங்களுக்காக, உங்களின் வாழ்வை நிலை பெறச் செய்வதற்காக, உங்களின் வசதிக்காக பூமியிலுள்ள வஸ்துக்கள் யாவற்றையும் படைத்துள்ளான். பூமியிலுள்ள கோடிக்கணக்கான ஜீவராசிகள், எண்ணற்ற வளங்கள், காற்று, நீர் , நெருப்பு என யாவுமே மனிதனின் வசதிக்காகவே தரப்பட்டுள்ளன ,
இவை யாவும் இறைவன் மனிதனுக்கு தந்த கொடை , அவற்றை அனுபவித்தே மனிதன் தனது வாழ்வை முன்னேடுத்துச்
செல்கிறான், பின்னர் இப்பூமி மட்டும் மனித வாழ்வுக்கு போதாது , பூமியில் மழை பொழிவதற்கும், இன்னும் பிற தேவைகளுக்கும் வானுலகம் தேவை. ஆதலால் அல்லாஹ் வானத்தின் பால் கவனம் வைத்து அதனை மனித
வாழ்வுக்கு உதவும் வண்ணம் சூரியன், சந்திரன் என எல்லா வித அம்சங்களையும் பொருத்தி ஏழு வானங்களாக அவற்றை செம்மைபடுத்தினான், சுருங்கச் சொல்வதானால் மனித சஞ்சாரம் யாவும்
ஒரே குடும்பம். அக்குடும்பம் வாழ்வதற்கேற்ற
வகையில் வானம், பூமி என்ற பிரமாண்ட வீட்டை
அனைத்து வசதிகளோடும் எழுப்பி தந்துள்ளான். அவன் எல்லா வித வஸ்துக்களைப் பற்றியும் முற்றிலும் அறிந்தவனாக, ஞான முள்ளவனாக இருக்கிறான். இவ்வளவு உபகாரங்களை மனிதனுக்காக கொட்டித்தந்த
தூய இறைவனை மறுப்பது மனிதனின் எவ்வளவு பெரிய
முட்டாள் தனமும், நன்றி கெட்ட தனமுமாகும் . அவனை மறுப்பது எவ்வகையில் நியாயம் ? இந்த கேள்விக்கு நீங்கள் என்ன பதில் வைத்துள்ளீர்கள்? அல்லாஹ் இதை உணர தவ்பீக் செய்வானாக , ஆமீன் .
யா அல்லாஹ் நாங்கள் உன்னை ஆழ்மனதால் நம்புகிறோம், ஏற்று கொள்கிறோம். எங்களுக்கு
நீ நேரான பாதையை காட்டுவாயாக ஆமீன்.