Friday, December 9, 2016

சூரா பகரா (8)

إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالنَّصَارَى وَالصَّابِئِينَ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (62) وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ (63) ثُمَّ تَوَلَّيْتُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَكُنْتُمْ مِنَ الْخَاسِرِينَ (64) وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ (65) فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ (66) وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ (67) قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا هِيَ قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَا فَارِضٌ وَلَا بِكْرٌ عَوَانٌ بَيْنَ ذَلِكَ فَافْعَلُوا مَا تُؤْمَرُونَ (68) قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا لَوْنُهَا قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ صَفْرَاءُ فَاقِعٌ لَوْنُهَا تَسُرُّ النَّاظِرِينَ (69) 
                    முஸ்லிம்களே , மேற்கண்ட வசனங்களில் இஸ்ரவேலர்கள் தமது தவறான செயல் பாடுகளினால் இறை முனிவுக்கு ஆளானார்கள் என்பதை எடுத்துக்கூறப்பட்டுள்ளது , அது அவர்களின் செயல்களால் அவர்கள் தேடிக்கொண்ட  சாபமே தவிர அவர்கள் யூதர்கள் என்பதாலோ, இஸ்ராயீலின் சந்ததியினர்கள் என்பதாலோ இல்லை , எனவே உலக மனிதர்கள் யாராக இருந்தாலும் சரி , செயல்களில் பழுது இருக்குமானால் அவர்களுக்கும் யூதர்களுக்கு ஏற்பட்ட அதே சாபம்தான் ஏற்படும் , இதே விதிதான் இறைவனின் அன்பை பெறுவதற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது ,  நிச்சயமாக முஸ்லிம்களானாலும், யூதர்களானாலும், கிறிஸ்தவர்களானாலும், அல்லது சாயிபீன் எனும் கூட்டத்தினர்களானாலும், உலகில் வேறு எந்த இனத்தவரை , ஜாதியினரை  , நாட்டவரை சார்ந்தவர்களானாலும்  எவராக இருப்பினும் அவர்கள் அல்லாஹ்வைக் கொண்டும், மறுமை நாளைக் கொண்டும் , நம்பிக்கை கொள்ள வேண்டிய இன்னும் பிற அம்சங்களான வேதங்கள், தூதர்கள், மலக்குகள், விதி போன்ற யாவற்றையும் உண்மையான உள்ளத்துடன் முறையாக விசுவாசம் கொண்டு , அந்நம்பிக்கையின் அடிப்படையில் நற்காரியங்கள் புரிந்து வாழ்ந்தால்   அவர்களே இறைவனின் அருளுக்கும் , கருணைக்கும் தகுதி பெற்றவர்கள் , அவர்களுக்கு மறு உலகில் எவ்வித பயமும் இருக்காது. அவர்கள் அங்கே நிம்மதியாக இருப்பார்கள். அங்கே அவர்கள் எவ்வித கவலையும் கொண்டிருக்க மாட்டார்கள். சந்தோசமாக இருப்பார்கள். அவர்களுக்கு நிரந்தரமான சுவன வாழ்வு உண்டு , 
           இங்கே யூதர்கள், கிறிஸ்தவர்களுடன் முஸ்லிகளையும் இணைத்து குறிப்பிட்டிருப்பது நமக்கெல்லாம் ஓர் பெரும் படிப்பினையும், எச்சரிக்கையுமாகும். நாமெல்லாம் முஸ்லிம்கள் , நமக்கே சுவனம் என வீண் கற்பனை கனவில் மிதக்காமல் , தனது நம்பிக்கையை சரி செய்து கொண்டும் , நற்கருமங்கள் புரிவதில் கவனம் செலுத்திக்கொண்டும் இருக்க வேண்டும். அல்லாஹ்விடத்தில் பெயருக்கு மதிப்பில்லை , செயலுக்குத்தான் மதிப்பு என்ற இந்த உண்மையை நாம் விளங்கி வாழ இறைவன் தௌபீக் செய்வானாக – ஆமீன்.
               அல்குர்ஆன் முற்காலத்து மனிதர்களின் வரலாறுகளை கூறும் போது இடையிடையே மனிதர்களுக்கு உபதேசத்தையும் நினைவூட்டிக்கொண்டே வரும் , இது அல்குர்ஆன் கடைபிடிக்கும் ஒரு நடையாகும் , இங்கேயும் இஸ்ரவேலர்கள் பற்றி கூறிக்கொண்டு வரும் போது சற்று அந்த பேச்சை நிறுத்தி வைத்து விட்டு இடையில் உபதேசம் செய்தது , இப்போது மீண்டும் இஸ்ரவேலர்கள் குறித்து தனது பேச்சை தொடர்கிறது , 
             இஸ்ராயீலின் சந்ததியினர்களே! நீங்கள் அந்த தருணத்தையும் நன்கு சிந்தித்து பாருங்கள் ,  அல்லாஹ்வுடைய வேதம் தவ்ராத் உங்களுக்கு எத்தகைய தருணத்தில் அருளப்பட்டது ? பிர்அவ்னுடைய கொடுமைகளிலிருந்து நீங்கள் விடுதலைப் பெற்ற பின்பு உங்களின் வாழ்வை சிறக்கச் செய்ய அல்லாஹ்வின் வழி காட்டுதல்கள் அடங்கிய ஓர் உயர்வான வேதம் உங்களுக்கு மிகவும் தேவையாக இருந்தது, அதை பெறுவதற்காக உங்களின் தூதர் மூஸா(அலை) நாற்பது நாட்கள் வரை நோன்பிருந்து வணக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள் ,  அதன் பின்னர் தான் தவ்ராத் வேதம் அருளப்பட்டது.  அத்தகைய வேதத்தை  உங்களிடம் மூஸா (அலை) கொண்டு வந்த போது அதை போற்றியிருக்கவும் , கண்ணியம் செய்யவும் கடமைப்பட்ட நீங்கள் அவ்வாறு செய்யாமல் சாக்கு போக்குகளை கூறி அதை புறக்கணிப்பதற்கு வழி பார்த்தீர்களே , அது எவ்வளவு அபத்தமானதும்,  தவறானதுமாகும்? ஆதலால் நாம்,  தவ்ராத் வேதத்தின் கட்டளைகளை ஏற்று நடக்க உங்களை வலியுறுத்தி உங்களிடம் பலமான உறுதிமொழி வாங்கினோம் , அதற்காக  தூர் எனும் மலையையே அதன் இடத்திலிருந்து பெயர்த்து உங்களின் தலைகளுக்கு மேல் தூக்கி நிறுத்தினோமே அது நினைவிருக்கிறதா ? நாம் உங்களிடம் பெற்ற உறுதி மொழிகள் என்னென்ன ? . நீங்கள் யாவரும் நாம் உங்களுக்கு அருளிய தவ்ராத் வேதத்தை ஏற்றுக்கொண்டு , அதன் கட்டளைகளை முறையாக நடை முறைப்படுத்துவதன் மூலம் மிக வலுவாக அதை பிடித்துக் கொள்ள வேண்டும் . மேலும் அவ்வேதத்திலுள்ள கருத்துக்களை நன்கு சிந்தித்து பாடம் பெற வேண்டும் . இவ்வாறு நீங்கள் செய்வீர்களானால் நீங்கள் இறைவனை அஞ்சுபவர்களாக, அவனுடைய தண்டனையை விட்டும் தப்பியவர்களாக ஆவீர்கள்.  இந்த வாக்குறுதி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது ? அம்மக்களிடம் சாதாரணமாக உறுதிமொழி வாங்காமல்   ஒர் மலையையே பெயர்த்து அதை தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்து இவ்வேதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையேல் இம்மலை உங்களின் மீது விழுந்து அழிந்து போவீர்கள் என மறக்க முடியாத ஓர் நிகழ்வை நடத்திக் காட்டி அவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குறுதி அது , சகல சக்தி படைத்த அல்லாஹ்வுக்கு அவர்கள் கொடுத்த வாக்குறுதி அது , இத்தனை வலுவான வாக்குறுதியை பாதுகாப்பதில் அவர்கள் எந்தளவு ஈடுபாடும், முனைப்பும் காட்டியிருக்க வேண்டும் ? ஆனால் அவ்வாறு நீங்கள் நடந்து கொள்ள வில்லை , ஆம்! சிறிது காலம் தவ்ராத்தை எடுத்து நடந்தீர்கள் , அதன் பின்னர் பழைய படி அதனை புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் ,  அதன் சட்ட திட்டங்களை ஏற்று நடப்பது ஒரு புறம் இருக்கட்டும், அல்லாஹ் அருளிய மேலான அவ்வேதத்தை எவ்வித கலப்புமில்லாமல் பாதுகாக்க கூட  உங்களால் முடியவில்லை , அதனால் அல்லாஹ்வின் வேதம் தன் அசல் வடிவத்தையே இழந்து பலரின் கையாடலுக்கு உட்பட்டு போனது, இன்றும் தவ்ராத் வேதம் உலகில் இருக்கிறது , ஆனால் மாற்றப்பட்ட வடிவத்தில்.  அதனையும் கூட எத்தனை இஸ்ரவேலர்கள் எடுத்து ஒழுகுகிறார்கள் ? மாற்றப்பட்டு போன தவ்ராத்திலும் கூட நம்முடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி தூதர், அவர்களை நபியாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தும் சான்றுகள் காணக்கிடைக்கின்றன. அதைக் கண்டு முஹம்மது (ஸல்) அவர்கள் மீது ஈமான் கொண்டு , உண்மையான முஸ்லிம்களாக எத்தனை யூதர்கள் மாறிவிட்டார்கள் ? என்ற வினாவுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் . நபி ஸல் அவர்கள் உலகில் வாழ்ந்து கொண்டிருந்த  அந்த பொற்காலத்திலும் கூட அக்காலத்து யூதர்கள் நபியவர்களை நம்பாமல் சிலர் நயவஞ்சகத்தனமான செயல்களில் ஈடுபட்டார்கள் என்பது மட்டுமின்றி , நபியவர்களையே கொலை செய்ய துணிந்தார்கள் என்பதுதான் வரலாறு . இவ்வாறு  தவ்ராத்தை எடுத்து நடப்பதாக அல்லாஹ்விடத்தில் அளித்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டதால் அல்லாஹ்வின் தண்டனைக்கு உரித்தானவர்களாக நீங்கள் முன்னமே ஆகிவிட்டீர்கள். இருப்பினும் அல்லாஹ்வுடைய அருளும் அவனுடைய கருணையும் உங்கள் மீது இல்லாது போயிருந்தால் நீங்கள் அல்லாஹ்வுடைய வேதனையை அடைந்து மறுமையில் நிரந்தர கைசேதத்திற்கும், நஷ்டத்திற்கும் உள்ளாகியிருப்பீர்கள். அல்லாஹ்வுடைய அருள் உங்கள் மீது இருப்பதால் தான் தந்த உறுதி மொழிக்கு நீங்கள் இந்தளவு மாறு செய்தும் , அல்லாஹ் உங்கள் மீது உடனடியாக எவ்வித வேதனையும் இறக்காமல் நீங்கள் இனியாவது திருந்துவீர்கள் என்று உங்களுக்கு சந்தர்ப்பத்தை தந்து வைத்துள்ளான். அல்லாஹ் அவனின் வாக்குறுதிகளுக்கு மாறு செய்வதை விட்டும் தற்காத்து அவனின் கோபத்திலிருந்து நம் அனைவரையும் பாதுகாத்திடுவானாக – ஆமீன்!
               இங்கு முஸ்லிம்களாகிய நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் , இஸ்ரவேலர்கள் தமது  வேதத்தை பற்றிய வாக்குறுதியை மீறியது  போன்றுதான் நாம்,  நம் வேதமான குர்ஆனைப் பற்றிய வாக்குறுதியை மீறிக்கொண்டு வாழ்ந்து வருகிறோம் ,  குர்ஆனை இறுக்கமாக பற்றிப் பிடித்து அதன் கடமைகளையும் , அது கற்றுத்தரும் ஒழுக்கங்களையும் வாழ்வில் கடைபிடிப்பது , மேலும் அதை சிந்தித்து படிப்பினை பெறுவது , அதன் மூலம் தன் வாழ்வை பயபக்தி நிறைந்ததாக ஆக்கிக்கொள்ள முயல்வது ஆகியவை நாம் குர்ஆனுக்கு செய்ய வேண்டிய கடமை என்பதை மறந்து விடக்கூடாது .
               வாக்குறுதிக்கு மாறு செய்தும் அல்லாஹ் அவர்களை தண்டிக்காமல் விட்டது அவனின் கருணை, மனிதர்களின் பாவங்களுக்கு அல்லாஹ் தண்டிக்க ஆரம்பித்து விட்டால் அந்த தண்டனையும் கடுமையாக இருக்கும் என்பதற்கு பின் வரும் வசனம் சான்றாகும்.
               இஸ்ரவேலர்களே!  உங்களுக்கு  உங்களின் மூதாதையர்களில் நிகழ்ந்த பின் வரும் சம்பவத்தைப் பற்றி நன்கு தெரியும் , இச்சம்பவம் பற்றிய குறிப்புகள் அவர்களின் நூல்களில் காணக் கிடைக்கின்றன. மேலும் அவர்களின் முன்னோர்கள் வாயிலாகவும் அவர்கள் இதைக் கேட்டு தெரிந்து வைத்திருந்தார்கள். அச்சம்பவம் சனிக்கிழமையில் மீன் ஏதும் பிடிக்கக் கூடாது என்ற அல்லாஹ்வின் கட்டளையில் வரம்பு மீறி நடந்தார்களே அத்தகையவர்களைப் பற்றியதாகும். வாரத்தில் ஒரு நாள் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை வணக்கத்திற்காக உள்ளதைப் போல , ஜும்ஆவிற்கு பாங்கு கூறப்பட்டு விட்டால் வியாபாரம் செய்வது ஹராமாகி விடுவதைப்போல யூதர்களுக்கு சனிக்கிழமை முழுவதும் அவ்வாறு தரப்பட்டிருந்தது. அவர்களுக்கு சனிக்கிழமை அல்லாஹ்வின் வணக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நாளாகும் ,  வாரத்தின் ஆறு நாட்கள் தம் தொழில்களில் ஈடுபட்டுக் கொள்ளலாம். சனிக்கிழமை மட்டும் எந்த தொழிலிலும் ஈடுபடக் கூடாது. வணக்கத்தில் மட்டுமே கழிக்க வேண்டும். இது அவர்களுக்கு அல்லாஹ் இட்ட கட்டளையாகும். அம்மக்கள் மீன் பிடித் தொழில் செய்பவர்களாக இருந்தார்கள் . அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு நேரடியாக மாறு செய்யாமல் தந்திரமாக குறுக்கு வழியில் சென்று மாறு புரிந்தனர். சனிக்கிழமை மீன் பிடிக்கச் செல்லாமல் கடலை ஒட்டி வாய்க்கால்கள் போல் அமைத்து கொள்வர் , அவற்றில் கடல் அலைகள் மீன்களை தள்ளிவிடும் , அம்மீன்களை இவர்கள் ஞாயிற்றுக் கிழமை சென்று பிடித்து வருவார்கள். இவ்வாறு தந்திரமாக அல்லாஹ்வின் கட்டளையை மீறினார்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் அத்து மீறள்கள் எல்லை மீறி போய்விட்ட போது அல்லாஹ்வின் கோபத்திற்கு அவர்கள் ஆளானார்கள். ஆதலால் நாம் அவர்களை நோக்கி கூறினோம் நீங்கள் நம் கட்டளையை மதிக்காது மீறியதால் நீங்கள் இழிவடைந்த குரங்குகளாக உருமாறிப் போகுங்கள் என்று சாபமிட்டோம் , அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தவர்களை விட்டும் விலகி பிற மக்கள் இருந்து வந்தார்கள் ,  ஒரு நாள் குற்றமிழைத்தவர்கள் பகுதியில் முற்றிலும் அமைதி நிலவியது , என்னவென்று இவர்கள் அவர்களைச் சென்று பார்த்தபோது அவர்கள் யாவரும் அல்லாஹ்வின் சாபத்தின் காரணத்தால் குரங்குகளாக உருமாற்றப்பட்டு போயிருந்தார்கள். வருத்தமும் , கவலையும் அம்முகங்களில் நிரம்பி காணப்பட்டன , மற்றபடி  மனிதர்களைப்போல அவைகளால் பேசவோ செயல்படவோ முடியவில்லை , இறுதியில் குரங்குகளாக மாறியவர்கள் யாவரும் மூன்று நாட்களுக்குள் செத்து மடிந்து போனார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அழகான மனித தோற்றத்தைக் கொடுத்திருந்தான். ஆனால் அவர்களோ தம் குரங்குச் சேட்டைகளால் அத் தோற்றத்தையே இழந்து போனார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்வதோ அதில் தந்திரங்களை கையாள்வதோ மாபெரும் குற்றமாகும். ஆதலால் இதனை உணரச் செய்வதற்காக இந்நிகழ்வினை அது நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்த, அதற்குப் பின்னால் வர இருக்கின்ற பாவிகளுக்கும், வரம்பு மீறுபவர்களுக்கும் படிப்பினையாகவும் , இறையச்சம் கொண்டவர்களுக்கு நல்லுபதேசமாகவும் ஆக்கிவிட்டோம். அல்லாஹ் இச்சம்பவத்தினை நமது படிப்பினைக்காக கூறி இருக்கிறான். அல்லாஹ் யாவற்றிற்கும் சக்திபடைத்தவன், அவன் தண்டனை தர நினைத்துவிட்டால் அது எந்த ரூபத்திலும் வரலாம். நமக்கு உயிரையும் தந்து, மனித உடலமைப்பையும் கொடுத்திருக்கிறான். இது அவனின் அருட்கொடை, அவன் நினைத்து விட்டால் அதை நம்மிடமிருந்து பிடுங்கிடவும் செய்யலாம், அல்லாஹ் அவனின் அனைத்து வித வேதனைகளை விட்டும், சோதனைகளை விட்டும் நம்மை பதுகாப்பானாக.
            இன்று நாம் நம்முடைய வாழ்விலே ஏராளமான இறைக் கட்டளைகளை மீறுகிறோம். அதற்கு நாமாகவே பல்வேறு காரணங்களை கூறி அதனை அனுமதிக்கப்பட்டதாக ஆக்க முயற்சிக்கிறோம். இந்நிலைகளை விட்டு நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும். பிறர் நிலை கண்டு நாம் படிப்பினை பெறா விட்டால் நம் நிலை கண்டு பிறர் படிப்பினை பெறும் நிலமை ஏற்படும். அல்லாஹ் பாதுகாப்பானாக ஆமீன்.
             இறைக்கட்டளையை மீறியதால் ஏற்பட்ட அழிவு மேற்கண்ட வசனத்தில் சொல்லிக்காட்டப்பட்டது , அதில் தயக்கம் காட்டியதால் ஏற்பட்ட சிரமம் அடுத்த வசனங்களில் கூறப்படுகிறது .
                பனூ இஸ்ராயீல்களே ! நீங்கள் அந்த சந்தர்ப்பத்தையும் நன்கு சிந்தித்துப் பாருங்கள் . உங்களில் ஒரு கொலை குற்றம் நடந்துவிட்டது, கொலையாளி யாரென்று தெரிய வில்லை, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டித்திரிந்தீர்கள் ,  அது ஊருக்குள் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது, கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் முன் நிறுத்தப்பட்டால் தான் ஊரில் அமைதி திரும்பும் என்று ஒரு பதட்டமான சூழல் நிலவியது . இந்நிலையில் அவர்கள் தம்முடைய தூதர் மூஸா (அலை) அவர்களிடம் இவ்வழக்கை கொண்டு சென்றனர். நபி மூஸா(அலை) கொலையாளியை காட்டித்தரும் படி அல்லாஹ்விடத்தில் இறைஞ்ச, அல்லாஹ் கொலையாளியை கண்டு பிடிக்க ஓர் முறையை கையாளச் சொன்னான். ஏதேனும் மாடு ஒன்றை அறுத்து அதன் ஏதேனும் ஒரு பகுதியால் கொலையுண்டவனின் மீது அடித்தால் , அவன் உயிர் பெற்றெழுந்து தன்னை கொன்றவனை அடையாளம் காட்டிவிடுவான். கொலையாளியும் பிடிபடுவான். ஊரில் பிரச்சினையும் ஓயும். இது தான் அல்லாஹ் கூறிய வழி. இதையே மூஸா (அலை) தம் சமுதாய மக்களிடம் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் ஏதேனும் மாடு ஒன்றை அறுக்கும் படி உத்தரவிடுகிறான். எனவே மாட்டை அறுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று  தெரிவித்தார்கள் , இந்த நடைமுறையில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை, முதலாவது ,  உயிர் பிரிந்தவன் மறுமுறை உயிர் பெற்றெழுவது என்பது அசாத்தியமான விஷயம், அதிலும் அவனை உயிர் பெறச் செய்வதற்காக அவன் மீது தண்ணீரைத் தெளிப்பதற்கோ, அல்லது மருந்து ஏதேனும் கொடுப்பதற்கோ சொல்லாமல் மாடு ஒன்றை அறுக்க உத்தரவிடுவது அறிவுக்கு சற்றும் பொருந்தாத விஷயம் என்றுதான் அவர்களின் சிந்தனை சென்றதே தவிர , உத்தரவிடுவது  அகிலத்தின் இரட்சகனும் , சர்வ வல்லமை படைத்தவனுமான அல்லாஹ் எனும் போது அதை செயல் படுத்துவதில் சிறிதும் தாமதிக்க கூடாது என அவர்கள் யோசிக்க தவறி விட்டார்கள்,  முடியும், முடியாது என்பது மனிதர்களுக்குத்தான், அல்லாஹ்வைப்பொருத்த வரை  யாவுமே சாத்தியம்தான், அவன் இடும் கட்டளை நம் குறுகிய அறிவுக்கு புலப்பட்டாலும் சரி, புலப்படாவிட்டாலும் சரி அதை ஈமான் கொண்டு செயல்படுத்துவதே நம் கடமை. அதில் ஆற்றலை வெளிபடச் செய்வது அல்லாஹ்வை சார்ந்தது. இது தான் ஈமானின் தத்துவம். அல்லாஹ்வின் மீது உண்மையான ஈமான் கொண்ட ஒவ்வொருவரும் இவ்வாறு தான் சிந்திப்பார்கள் , ஈமானில் குறை கொண்டவர்கள், தம் அறிவை தூக்கிப் பிடிப்பவர்கள் தான் அதில் சந்தேகப்பட்டு அதை செயல் படுத்துவதில் தயக்கம் காட்டுவார்கள். நபி மூஸா(அலை) இறைக்கட்டளையை அவர்களிடத்தில் கூறிய போது அவர்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை , இறந்தவன் உயிர் பெற்றெழுவதற்கும், ஏதோ ஒரு மாட்டை அறுப்பதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? என்ற தடுமாற்றத்திலேயே இருந்தனர், ஆதலால் அவர்கள் நபி மூஸா(அலை) கூறிய இறை உத்தரவுக்கு பதிலாக  மூஸாவே(அலை)! நீங்கள் எங்களை கேலி செய்கிறீர்களா? என்றே கேட்டு விட்டார்கள். அல்லாஹு அக்பர் ! அல்லாஹ்வுடைய உண்மையான தூதர், அவர்களுக்கு முன்னர் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவர் , இறைவனுடன் உரையாடியவர், இத்தகைய அந்தஸ்து பெற்ற ஓர் நபி அல்லாஹ்வுடைய கட்டளை இது என கூறியதை கேலி, தமாஷ் என எண்ணுவது எவ்வளவு அவமரியாதையான செயல், ஒரு நபி இறைக்கட்டளை விஷயத்தில் கேலி செய்வாரா ? கேலி பேசுவது , தமாஷ் பண்ணுவது, இவை யாவும் மடையர்களின் செயல். ஒரு நபி கண்டிப்பாக இவ்வாறு இருக்க மாட்டார். மூஸா(அலை) கூறினார்கள் நான் ஒரு நபி , நபியாக இருந்து அவ்வாறு நான் கூறுவேனா  ?   மடையர்களில் ஒருவனாக நான் ஆகுவதை விட்டு அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகிறேன். அல்லாஹ் என்னை பாதுகாக்க வேண்டும், நான் கூறுவது யாவும் அல்லாஹ்வின் கட்டளைகளை மட்டும் தான். எனவே நான் கூறியதை செயல்படுத்த தயாராகுங்கள் என்று மூஸா(அலை) அவர்களிடம் உரைத்தார்கள்.
             உள்ளத்தில் உண்மையான நம்பிக்கையும் வலுவான ஈமானும் இருந்திருந்ததால் மூஸா(அலை) அவர்கள் அவர்களுக்கு கூறிய வார்த்தைகளே போதுமானது, ஆனால் அவர்களுக்கு அப்போதும் முழு நம்பிக்கை ஏற்படவில்லை. அது எப்படி ஓர் மாட்டை அறுத்து அதன் ஒரு பகுதியைக் கொண்டு மரணித்தவரை அடிப்பதால் அவனுக்கு உயிர் வந்து விடும் என நம்புவது ? அதை நடைமுறைப்படுத்துவது ? ஆதலால் அறுக்கச் சொல்லப்பட்ட மாடு சாதாரணப்பட்டதாக இருக்க முடியாது ,  ஓர் விசேஷ சக்தி கொண்டதாக இருக்கும் போல தெரிகிறது , ஆகவே அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம் மூஸாவே எங்களுக்காக உம்முடைய இரட்சகனிடத்தில் இறைஞ்சுங்கள், அவன் எங்களுக்கு அந்த மாடு எப்படி இருக்கும் என்பதை விளக்கிச் சொல்லுவான் என்றார்கள் , மூஸா(அலை) அவர்கள் மறுபடியும் அல்லாஹ்விடத்தில் வேண்டினார்கள். யா அல்லாஹ் அந்த மாடு எப்படி இருக்கும் என்பதையும் நீயே தெளிவுப்படுத்துவாயாக என்று இறைஞ்சினார்கள் . பின்னர் அல்லாஹ் கூறியதாக மூஸா(அலை) தம் சமுதாயத்திடம் அந்த மாடு கிழடுமல்ல, இளங்கன்றுமல்ல. இரண்டுக்கும் இடைபட்ட மத்தியதரமான ஓர் பசுமாடாகும். ஆதலால் அதை தேடிப்பிடித்து உங்களுக்கு உத்தரவிடப்பட்டதை செய்து விடுங்கள் , இதற்கு மேல் அதில் ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள் என்று சொன்னார்கள் , ஏதோ ஒரு பசுமாடு என்ற நிலை மாறி மத்தியதரமான பசுமாடு என ஆகிவிட்டது. இப்போதாவது அவர்கள் தம் தடுமாற்றத்தை, தயக்கத்தை விட்டுவிட்டு கொன்னதை செய்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இன்னமும் திருப்தி படவில்லை. அறுக்க சொல்லப்பட்ட பசு மாடு வித்தியாசமான நிறம் கொண்டதாக இருக்குமோ என யோசிக்கலானார்கள் , ஆதலால் மீண்டும் அவர்கள் நபி மூஸா(அலை)விடம் வந்து மூஸாவே(அலை) உங்களின் இரட்சகனிடத்தில் எங்களுக்காக இறைஞ்சுங்கள் அவன் எங்களுக்கு அந்த மாட்டின் நிறமென்ன என்பதையும் நன்கு விளக்கமாக கூறவேண்டும் என்று கூறினார்கள்.  சமுதாயத்தின் மீது பரிவு கொண்ட கருணை நபியவர்கள் அவர்களின் இவ்வேண்டுகோளையும் ஏற்று அதனை அல்லாஹ்விடத்தில் கேட்டு இறைஞ்சினார்கள். பின்னர் தம் சமுதாயத்திடம் வந்து அந்த மாடு நன்கு மஞ்சல் நிறத்தில் இருக்கும், கட்டி நிறம் கொண்டதாக, பார்ப்பவர்களைக் கவர்ந்து ரம்மியத்தை மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும் என்று அல்லாஹ் கூறுவதாக கூறினார்கள். இந்த வர்ணணை அவர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. அவர்களின் அவநம்பிக்கையும் விலக வில்லை,  அது எப்படி இத்தகைய மாட்டிற்கு மரணித்தவரை உயிர்ப்பிக்கும் சக்தி இருக்க முடியும் ? என்றே யோசித்துக்கொண்டிருந்தார்கள் , ஆதலால் அவர்கள் மறுபடியும் மூஸா(அலை) அவர்களிடம் வந்து மூஸாவே(அலை) எங்களுக்காக உங்களின் இரட்சகனிடத்தில் மீண்டும் இறைஞ்சுங்கள் அவன் எங்களுக்கு அந்த மாடு என்னது என்பதை முற்றிலுமாக விளக்கி கூறிவிடுவான். நாங்கள் மீண்டும் மீண்டும் வந்து கேட்பதற்கு காரணம் அந்த மாடு எங்களை கடுமையாக குழப்பி விட்டது . நீங்கள் மீண்டும் ஒரு முறை அதைப் பற்றி கேட்டு தெளிவு படுத்திவிட்டால் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ் நாடிவிட்டால் வழி பெற்றிடுவோம் என்று கூறலானார்கள் , மூஸா(அலை) மீண்டும் அல்லாஹ்விடத்தில் இறைஞ்சிய பின் தம் சமுதாய மக்களிடம் வந்து அந்த மாடு வயலில் ஏர் இழுத்து, உழவடித்து தேய்ந்து போனதுமல்ல, பயிருக்கு தண்ணீர் பாய்ச்சும் கடினமான வேலை வாங்கப்பட்டதுமல்ல. எல்லா குறைகளை விட்டும் அப்பாற்பட்டது. எந்த ஒரு வேலையையும் உழைப்பையும் மேற்கொண்டதற்கான எவ்வித வடுவும் அதன் உடலில் இருக்காது அந்த அளவிற்கு உயர்ரகமான மாடாகும் அது என்று அல்லாஹ் கூறியதாக கூறினார்கள். இது அவர்களுக்கு சிறிது திருப்தியை தந்தது. இத்தகைய மாடு உண்மையிலேயே ஓர் விசேஷ ஆற்றல் கொண்டதாக இருக்கலாம் என்றெண்ணி மூஸா(அலை) அவர்களிடம் வந்து இப்போது தான் நீங்கள் சரியான விஷயத்தை சொல்லியுள்ளீர்கள் நாங்கள் அதை தேடிப்பிடித்து கொண்டு வருகிறோம் என்று கூறி சென்றனர். தேடித்திரிந்து இறுதியாக ஒருவனிடம் அத்தகைய மாடு இருப்பதை கண்டு கொண்டு மாட்டுத் தோல் நிறம்ப தங்க காசுகள் அதற்கு  கிரயமாக தருவதாக பேசி அதை வாங்கி வந்து இறுதியாக அதை அறுத்தார்கள். இன்னமும் அவர்கள் அதை மனமுவந்து செய்வதற்கு நெருங்கவில்லை. இனி கேட்பதற்கு எந்த கேள்வியும் இல்லை , எல்லா கேள்வியும் கேட்டாகி விட்டதே என்று அரை குறை மனதுடன் தான் அதனையும் செய்ய முன் வந்தனரே தவிர திருப்தியாக செய்ய அப்போதும் முன் வரவில்லை ,  முன்னதாகவே அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையில் உடனடியாக காரியத்தில் இறங்கியிருந்தால் இது போன்ற சிரமங்களுக்கும், செலவுகளுக்கும் உள்ளாகியிருக்க மாட்டார்கள்.
                ஒரு விஷயம்  அல்லாஹ்வின் கட்டளை என்பது ஊர்ஜிதமாகி விட்டால் அதில் எவ்வித தடுமாற்றமும் கொள்ளாமல் செய்து விட வேண்டும் , மீண்டும் மீண்டும் கேள்விக்கேட்டுக்கொண்டே இருப்பது நல்ல விஷயமல்ல .

சூரா பகரா (7)

وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِنْ رِزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ (60) وَإِذْ قُلْتُمْ يَامُوسَى لَنْ نَصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنْبِتُ الْأَرْضُ مِنْ بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا قَالَ أَتَسْتَبْدِلُونَ الَّذِي هُوَ أَدْنَى بِالَّذِي هُوَ خَيْرٌ اهْبِطُوا مِصْرًا فَإِنَّ لَكُمْ مَا سَأَلْتُمْ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِنَ اللَّهِ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ (61) 
                இஸ்ராயீலின் சந்ததியினர்களே ! இத்தருணத்தையும் நீங்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளீர்கள் , நீங்கள் தீஹ் பாலை வெளியில் இருந்த போது குடிப்பதற்கு நீரின்றி தவித்தீர்கள் , உங்களுடைய தவிப்பை உங்களுடைய தூதர் மூஸா(அலை) அவர்களிடம் வெளிப்படுத்தினீர்கள் , அவர்கள்  இருந்ததோ வரண்ட  பாலைவெளி, தண்ணீர் கிடைப்பதற்கான அத்தனை வழிகளும் அடைபட்டுக் கிடக்கும் பகுதி , இங்கே அல்லாஹ்வை தவிர்த்து  அவர்களுக்கு உதவ யாருமே இல்லை, அல்லாஹ் சகல சக்தி படைத்தவன், அவனுடைய சக்திக்கு அப்பாற்பட்டது எதுவுமே இல்லை. இந்த நம்பிக்கை மூஸா(அலை) அவர்களின் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றி இருந்ததால் தண்ணீருக்காக அந்த  அல்லாஹ்வின் வாசல் கதவை தட்டினார்கள்,அங்கே மட்டும்தான் தன் சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும்  என்பதை அவர்கள் உறுதி கொண்டிருந்தார்கள் ,  ஆதலால் மூஸா அலை தன் சமுதாயத்திற்காக தண்ணீர் வேண்டிய போது அவருக்கு நாம் கூறினோம் , மூஸாவே உங்களால் முடிந்த முயற்சியை  மேற்கொள்ளுங்கள். உங்களின் கைத்தடியால் இந்த பாறையில் அடியுங்கள், அதற்கு பிறகுள்ள காரியம் எம்மைச் சார்ந்தது, மூஸா(அலை)மும் நம் கட்டளையை ஏற்று தம் கைத்தடியால் பாறையை அடித்தார்கள். அல்லாஹ்வின் ஆற்றல் அங்கே வெளிபட்டது ,  அவர்கள் அடித்ததுதான் தாமதம் அப்பாறாங்கல்லிலிருந்து ஒன்றல்ல, இரண்டல்ல , பனிரெண்டு ஊற்றுகள் பீறிட்டு வெளியாயின. ஏனெனில் பனூ இஸ்ராயீல்கள் பனிரெண்டு பெரும் பெரும் குடும்பங்களாக இருந்தனர், ஒரே ஓர் ஊற்று மட்டும் பீறிட்டிருந்தால் அவர்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட வாய்ப்புள்ளது. அது சமூகத்தில் சண்டைகள், சச்சரவுகளை உண்டு பண்ணும். ஆதலால் அல்லாஹ் தண்ணீரை அளித்தது மட்டுமல்லாமல் அதனை சிரமமின்றி பெறுவதற்கான ஏற்பாட்டை செய்யும் வகையில் அதை  12 ஊற்றுகளாக பீறிடச் செய்தான். அதனால்   ஒவ்வொரு குடும்பத்து மனிதர்களும் தமது தமது ஊற்றெது ? நீரருந்தும் இடம் எது  ? என்பதை தனித்தனியாக பிரித்து தெரிந்து கொண்டார்கள் தண்ணீரைக் கண்டதும் அவர்கள் யாவரும் பெரும் மகிழ்ச்சி கொண்டார்கள். மன்னு சல்வா எனும் உணவையும், அருந்த மதுரமான நீரையும் தந்து அவர்களின் சிரமங்களை போக்கிய பின் அல்லாஹ் அவர்களிடம் கூறினான் , நீங்கள் அல்லாஹ்வுடைய ரிஸ்கிலிருந்து நன்கு உண்ணுங்கள், பருகுங்கள் ,  ஆனால் நற்காரியங்கள் புரிந்து வாழுங்கள், அல்லாஹ்வுடைய பூமியில் பாவங்கள் புரிந்து கொண்டு குழப்பங்கள் செய்து கொண்டு திரியாதீர்கள். மனிதனுக்கு உண்ண உணவும், அருந்த நீரும் தங்கு தடையில்லாமல் தாராளமாக கிடைக்க ஆரம்பித்துவிட்டால் அவன் கொடுத்த அல்லாஹ்வையே  மறந்து விடுகிறான் , பாவங்களில் ஈடுபட ஆரம்பித்து விடுகிறான் , இது தவறான போக்காகும் , பூமியின் வளங்களும் , அல்லாஹ்வின் இன்னும் பிற அருள் பாக்கியங்களும் மனிதனுக்கு அளிக்கப்படுவது அவன் அவற்றை அனுபவித்து தன்னை இறை திருப்தியில் ஈடுபடச் செய்வதற்குத்தான் , பாவங்கள் புரிவதற்கும் , இறைவனை மறுப்பதற்கும் அல்ல. இன்று நாம் வாழும் உலகில் செல்வ வளம் கொழிக்கும் பிரதேசங்களிலெல்லாம் இறைவனின் வரம்புகள் அப்பட்டமாக மீறப்படும் காட்சி வழக்கமாகி விட்டது , அல்லாஹ் இதனை விளங்கி அமல் செய்ய தவ்பீக் செய்வானாக ! ஆமீன்.
                படிப்பினைகள்: எந்த ஒர் தேவை ஏற்பட்டாலும் அல்லாஹ்விடத்தில் வேண்ட வேண்டும். உலகிலுள்ள எந்த பொருளுக்கும் சுயமாக எவ்வித சக்தியுமில்லை. அல்லாஹ் அதிலிருந்து என்ன சக்தியை வெளிப்படுத்த நாடுகின்றானோ அதைதான் ஒவ்வொன்றும் வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு சிக்கலிலும் தம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் ,  மிச்சத்தை அல்லாஹ்விடம் விட்டு விட வேண்டும் , அதற்கு பெயர்தான் தவக்குல் எனப்படும் , பாறாங்கல் போன்றவற்றிலிருந்து தண்ணீர் பீரிட்டு அடிப்பது இது அறிவுக்கு பட்டாலும் சரி, படாவிட்டாலும் சரி அதை நம்பி உறுதி கொள்ள வேண்டும். இதற்குத் தான் ஈமான் எனப்படும். 
                
               மேலும் இஸ்ரவேலர்களே ! நீங்கள் அந்த தருணத்தையும் சிந்தித்து பாருங்கள் , தீஹ் என்ற பாலைவெளியில் உங்களுக்கு எவ்வித செலவும் சிரமமுமில்லாமல் இலகுவான முறையில் மன்னுசல்வா எனும் உயர் ரக உணவு ஏற்பாட்டை செய்து தந்தோம். ஆனால் நீங்கள் அதன் மதிப்பை உணராமல் உங்களுடைய தூதர் மூஸா(அலை) அவர்களிடம் வந்து மரியாதை பேணாமல்  மூஸாவே என பெயர் கூறி அழைத்து எங்களால் இனி ஒரு நிமிடம் கூட ஒரே வகை உணவை மட்டும் உட்கொண்டு விட்டு பொறுமையாக இருக்கவே முடியாது, வகை, வகையான உணவுகளை உண்ண ஆசைப்படுகிறோம். ஆதலால் நீர் உம்முடைய இரட்சகனிடம் எங்களுக்காக பிரார்த்தியுங்கள், அவன் எங்களுக்காக பூமியிலிருந்து விளையக் கூடிய கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பருப்பு, வெங்காயம் போன்ற காய்கறி வகைகளை வெளிப்படுத்தி தர வேண்டும் என்று  கேளுங்கள் என கூறினீர்களே ,  அல்லாஹ்விடமும், அவன் ரசூலிடமும் நீங்கள் நடந்து கொண்ட ஒழுக்கக்கேடுகள்  இந்த வார்த்தைகளில் தொனிக்கிறதல்லவா ? . ஒரு நபியிடம் துஆ செய்ய வேண்டுவதற்கு சாப்பாடு ஒன்று மட்டும் தான் கிடைத்ததா ? அவ்வாறே வேண்டினாலும் எதை விட்டுவிட்டு எதை கேட்கச்சொல்கிறீர்கள் ? உங்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்த மன்னு சல்வா எனும் உணவு உயர் ரகமானதும் ,  எவ்வித சிரமமும், உழைப்புமில்லாமல் இலகுவாக கிடைத்துக் கொண்டிருக்கக்கூடியதுமாகும்  ,  அதை போய் ஒதுக்கி விட்டு பூமியிலிருந்து கிடைக்கும் சாதாரண காய்கறி வகைகளை வேண்டுகிறீர்களே . இக்காய்கறி வகைகள் உங்களுக்கு மன்னு சல்வா எனும் உணவை விட எந்த வகையில் உயர்ந்தது  என கூறுங்கள் , அது மட்டுமின்றி  அக்காய்கறிகளை பெற வயலில் இறங்க வேண்டும், பயிரிட வேண்டும், இரவு, பகலாக உழைக்க வேண்டும் , இது போன்ற பல்வேறு சிரமங்களை நீங்கள் அனுபவிக்க வேண்டும்,  இதைதான் மூஸா (அலை) கேட்டார்கள். உயர் ரகமான ஒன்றை விட்டு விட்டு அதற்கு பதிலாக மட்டமான ஒன்றையா மாற்றிக் கொள்ள விரும்புகிறீர்கள்? உங்கள் நிலை கண்டு நான் வருத்தப்படுகின்றேன். ஏன் இவ்வாறு கீழ்த்தரமாக சிந்திக்கிறீர்கள் ? உயர்ந்த சிந்தனைகள் வேண்டாமா ? இங்கிருந்து செல்லுங்கள் , இனி மன்னு ஸல்வா  உணவு உங்களுக்கு கிடைக்காது , ஏதாவது நகரில் சென்று தங்குங்கள். அங்கே உங்களுக்கு வேண்டியவற்றை, நீங்கள் கேட்பவற்றை பெற்றுக் கொள்ளலாம்.  இவ்வாறு வேதம் கொடுக்கப்பட்டும் , நபியும் அனுப்பப்பட்டும் , அவர்கள் வேண்டியவைகளெல்லாம் இறைவனால் தரப்பட்டும் கூட அவற்றின் மூலம் உலகில் மேலோங்கி இருக்க வேண்டிய ஒரு சமுதாயம் தம் கீழ்த்தரமான செயல் பாடுகளினாலும், ஒழுங்கீனங்களினாலும் தம் மதிப்பை இழந்து, அல்லாஹ்வுடைய கருணையை இழந்து இறுதியாக அவர்கள் மீது இழிவும், வறுமையும் காலத்திற்கும் சுவடாக படிந்து போகட்டுமாக  என்ற இறைவனின் சாபத்திற்கு உள்ளானார்கள் , இதன் விளைவு வரலாறு முழுக்க யூதர்கள் விரட்டியடிக்கப்பட்டுக் கொண்டும், கொல்லப்படுக் கொண்டும் வந்தார்கள் , இன்றளவிலும் யூதர்கள் என்றால் உலக அரங்கில் அவர்களின் கீழ்த்தரமான நடவடிக்கைகளும் , சூழ்ச்சிகளும் தவறாமல் நினைவு கூறப்படுகின்றன,  இது அவர்களே தேடி கொண்ட இழி நிலையாகும் ,  மேலும் அவர்கள் கருணையாளர்களிலெல்லாம் கருணையாளனான அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளாகிவிட்டார்கள் , இவற்றிற்கெல்லாம் பெரும் காரணங்கள் நான்கு 1, அவர்கள் அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளையெல்லாம் ஏற்க  மறுத்தார்கள்.  2 , அட்டூழியத்தின் உச்சகட்டமாக நேர்வழியை வெறுத்தது மட்டுமின்றி தமக்கு நேர்வழி காட்ட வந்த அல்லாஹ்வின் பரிசுத்தமான நபிமார்களையே எவ்வித உரிமையுமில்லாமல் அநியாயமாக கொலை  செய்தார்கள். 3. மேலும் அவர்களின் இந்த இழி நிலைக்கு 3 வது காரணம் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்தார்கள். 4, இறைவனின் கட்டளைகளை , அவனது வரம்புகளை துணிந்து மீறி நடப்பவர்களாக இருந்தார்கள். இந்த நான்குமே அவர்களின் வாழ்க்கை முழுக்க நிரம்பி காணப்பட்டது . அல்லாஹ் இது போன்ற பாவிகளின் நிலைகளை விட்டும், குணங்களை விட்டும் பாதுகாத்து அவனுக்கு வழிபட்டு வாழும் நல் அடியார்களில் நம்மை சேர்த்திடுவானாக – ஆமீன் !
படிப்பினைகள்: அல்லாஹ்விடம் வேண்டுவதற்கும் கேட்பதற்கும் ஒரு ஒழுங்கு இருக்கின்றது, பணிவுடன், கெஞ்சி கேட்க வேண்டும். சிந்தனைகளை உயர்வானதாகவும், விசாலமானதாகவும் சிந்திக்க வேண்டும். கீழ்த்தரமான சிந்தனைகளை தவிர்க்க வேண்டும். உலகில் கண்ணியம் கிடைப்பதற்கு வழி அல்லாஹ்வின் கட்டளைகளை பேணுவதில் உள்ளது. அல்லாஹ்வின் கட்டளைகளை மீறினால் உலகில் இழிவும் மறு உலகில் ஏமாற்றமும் தான் மிஞ்சும்.

Sunday, December 4, 2016

சூரா பகரா (6)

يَابَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ (47) وَاتَّقُوا يَوْمًا لَا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنْصَرُونَ (48) وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَظِيمٌ (49) وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ (50) وَإِذْ وَاعَدْنَا مُوسَى أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ (51) ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (52) وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ (53) وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَاقَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنْفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنْفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِنْدَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ (54) وَإِذْ قُلْتُمْ يَامُوسَى لَنْ نُؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنْظُرُونَ (55) ثُمَّ بَعَثْنَاكُمْ مِنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (56) وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ (57) وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ (58) فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنْزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ (59)

                 இஸ்ராயீலின் சந்ததியினர்களே ! திரும்பவும் கூறுகிறேன் , நான் உங்கள் மீது புரிந்த என் அருள் பாக்கியங்களையெல்லாம் நினைவு  கூர்ந்து பாருங்கள். உங்கள் இனம் நபிமார்கள் வந்த இனம் , நபி என்றாலே உங்கள் இனத்தில் தான் வருவர் என்று உலகத்தார்களால் நம்பப்படும் அளவுக்கு  உங்கள் இனத்தவர்களை  நான் உலகத்தார்களை விட மேன்மைப்படுத்தியும் கண்ணியத்தையும் அளித்து வைத்திருந்தேனே , இவை சாதாரண சிறப்புகளா ? இவ்வளவு சிறப்பளிக்கப்பட்டவர்கள் , அல்லாஹ்வுடைய செய்தியை உலக மக்களுக்கு எத்திவைக்கும் உயர்ந்த பொறுப்பு தரப்பட்டவர்கள் , பிற மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டியவர்களுமான நீங்கள் பிற மக்களைக் காட்டிலும் எந்த அளவு அல்லாஹ்வுடன்  உண்மையானவர்களாகவும் விசுவாசத்துடனும் செயல்பட்டிருக்க வேண்டும் ? இதனை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டாமா ?
             மேலும் நீங்கள் உங்களை எதிர் நோக்கி வர இருக்கும்  ஒரு மாபெரும் நாளை அஞ்சிக்கொள்ளுங்கள் ,  அது தான் கூலி கொடுக்கப்படும் நாள் , அந்த நாள் உலக நாட்களைப் போன்றிருக்காது. உலகிலே ஒருவர் தர வேண்டியதை மற்றவர் கொடுத்து அவரை விடுவித்துவிடமுடியும் , ஆனால் அந்த நாளிலோ எந்த ஓர் ஆத்மாவும் பிற ஆத்மாவின் சார்பாக எதையும் நிறைவேற்ற இயலாது.  தொழுகையிலோ, பிற கடமைகளிலோ ஒருவர் செய்த குறைகளை மற்றவர் ஈடு செய்ய முடியாது , மேலும் உலகிலே பிறரின் பரிந்துரையை பெற்று தப்பித்துக்கொள்வது போல் அந்நாளில் யாரின் சார்பாகவும் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாது. மேலும் உலகிலே  நஷ்டஈடுகளை தர முன் வருவது போல் அந்நாளிலே எப்படிப்பட்ட நஷ்ட ஈட்டை ஒருவர் அளிக்க முன் வந்தாலும் அது வாங்கிக்கொள்ளப் படாது. மேலும் உலகிலே சிரமத்திலே சிக்குண்டவர் மீது இரங்கி பலரும் உதவ முன் வருவதுபோல அந்நாளிலே அவர்கள் பிறரால் எவ்வித உதவியும் செய்யப்பட மாட்டார்கள். மனிதர்கள் யாவரும் நிர்க்கதியற்றுப் போய் பரிதவிக்கும் அந்நாளை சந்திக்கும் முன் உலகிலே இறை விசுவாசத்தோடு நற்காரியங்கள் புரிந்து அந்நாளின் வேதனையை விட்டு தப்பிக்க முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் நம் யாவரையும் கியாமத் நாளின் அமலிதுமளிகளை விட்டும் பாதுகாப்பானாக – ஆமீன் ! 
               மேலும் இஸ்ராயீலின் சந்ததியினர்களே! நாம் உங்களை பிர்அவ்னுடைய கூட்டத்தார்களிலிருந்து காப்பாற்றிய அச்சந்தர்ப்பத்தை சற்று எண்ணிப்பார்த்து அல்லாஹ்வுடைய அருளையும், ஆற்றலையும் நினைவு கூருங்கள். இஸ்ரவேலர்கள் தம் வரலாற்றிலே கடுமையான சோதனைகளை சந்தித்து வந்துள்ளார்கள், அவற்றில் ஒன்று தான் பிர்அவ்ன் எனும் கொடுங்கோல் அரசனால் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகள் , இவன் தன் ஆளுகையின் கீழ் வாழ்ந்து வந்த இஸ்ரவேலர்களை  தம் நாட்டு பிரஜைகளாக அல்லாமல் கொத்தடிமைகளாக , தாழ்த்தப்பட்ட இனத்தவர்களாக நடத்தினான். அவன்  செய்த கொடுமைகளுக்கு உலக வரலாற்றில் உதாரணம் கிடைப்பது அரிது . அந்தளவு கொடூரமான வேதனையால் அவன் உங்களை கொடுமைப்படுத்தினான். அதன் உச்சகட்டமாக  உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் எந்தெந்த குழந்தைகள் ஆண் பிள்ளைகளாக பிறக்குமோ அவற்றை தேடிப்பிடித்து பாவமறியாத அந்த சின்னஞ்சிசுக்களை கூட எவ்வித ஈவு இரக்கமில்லாமல் அவனது ஆட்கள் கொன்று குவித்தார்கள் , பெண் குழந்தைகளாக இருந்தால் அவற்றை கொல்லாமல் விட்டு விடுவார்கள். இவ்வாறு ஆண் குழந்தைகளை கொல்வதற்கு காரணம் பிர்அவ்ன் கண்ட ஓர் கனவு என கூறப்படுகிறது. அக் கனவிற்கு விளக்கம் கூறியவர்கள் இஸ்ரவேலர்களில் ஓர் ஆண் குழந்தை பிறக்க இருக்கிறது, அது பிறந்து வளர்ந்து வந்து உன்னையும், உன் ஆட்சியையும் இல்லாமல் செய்து விடும் என விளக்கம் கூறினார்கள். அதை தடுப்பதற்காக அவன் ஆடிய ஆட்டம்தான் இது . இவ்வாறு , என்ன குழந்தை பெற வேண்டும் என்ற அடிப்படை உரிமைகள் கூட பிடுங்கப்பட்டு அடிமைப்பட்டு அவர்கள் கிடந்தார்கள் ,  தாம் ஆசை ஆசையாய் பெற்றெடுத்த குழந்தை தமது கண்களுக்கு முன்னால் துடிக்க துடிக்க வெட்டப்படுவதை கண்டு பெற்றோர்கள் துடிதுடித்துப்போவார்கள் , இது போன்ற துயரம் உலகில் வேறொன்றும் இருக்க முடியாது , இத்தகைய கொடூரங்களிலிருந்து அல்லாஹ் உங்களுக்கு விடுதலை தந்தானே அது எத்தனை பெரும் கருணை ? மேலும் இவ்வாறு அவர்கள் உங்களை கொடுமைப்படுத்தியதில்  உங்களின் இரட்சகனின் புறத்திலிருந்து உங்களுக்கு மகத்தான சோதனை இருந்தது . அல்லாஹ் பாவங்களின் காரணமாக சோதிக்க நினைத்து விட்டால் இவ்வளவு பயங்கரமான சோதனைகளும் வரலாம். அல்லாஹ் அவன் சோதனைகளை விட்டும் நம் அனைவரையும் பாதுகாப்பானாக 
                  இத்தகைய கொடூரங்களிலிருந்து விடுபடும் நேரம் வந்தது, இறை நாட்டப்படி மூஸா (அலை) பிறந்து வளர்ந்து அல்லாஹ்வின் தூதராக ஆக்கப்பட்டு பிர்அவ்னின் கொடுமைகளிலிருந்து இஸ்ரவேலர்களை விடுவித்து அவர்களை அழைத்துக்கொண்டு மிஸ்ர் தேசத்தை விட்டு வெளியேறினார்கள் , அதையறிந்த பிர்அவ்னும் தனது  படைபட்டாளங்களுடன் அவர்களை துரத்திக்கொண்டு வந்தான் ,  இஸ்ரவேலர்கள் சென்ற பாதையில் நைல் நதி குறுக்கிடுகிறது . அது கடலைப்போல் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது , எனவே அவர்களால் முன்னேற முடியவில்லை ,  பின் பக்கமோ பிர்அவ்னின் பட்டாளங்கள் கூரிய ஆயுதங்களுடன் இவர்களை நெருங்கிக் கொண்டிருந்தார்கள் , ஆதலால் பின்பக்கமும் நகர முடியாது , இஸ்ரவேலர்கள் நடுவிலே சிக்கிக்கொண்டார்கள் ,  ஒட்டுமொத்தமாக இஸ்ரவேலர்கள் யாவரும் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருந்தார்கள். அதனை இங்கே நினைவூட்டி அல்லாஹ் கூறுகிறான் , அந்நேரத்தில் நாம் உங்களுக்காக யாருமே எதிர்பார்க்காத விதத்தில்  அக்கடலையே இரண்டாக பிளக்கச் செய்து உங்களை காப்பாற்றினோம். நீங்கள் அக்கடலை கடந்த பின்பு , அது  பிளந்து வழி அமைந்த அதே பாதையில் பிர்அவ்னும், அவன் படையும் உங்களை பின் தொடர்ந்தனர். ஆனால் அவர்கள் யாவரையும் உங்கள் கண்களுக்கு முன்பாகவே நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அக்கடலில் மூழ்கடித்தோம். நிமிட நேரத்தில் உங்களுக்கு வர இருந்த அழிவு அவர்களுக்கு மாறிப்போனது . இவையெல்லாம் இஸ்ரவேலர்கள் மீது அல்லாஹ் புரிந்த எவ்வளவு பெரிய உபகாரங்கள்? இதை அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டாமா? 
                இந்த வசனத்தில்  சில படிப்பினைகள் உள்ளன. உலகிலுள்ள வஸ்துக்கள் யாவும் அல்லாஹ்வின் நாட்டப்படிதான் இயங்குகின்றன. கடல் ஆர்ப்பரிப்பதும், பொங்குவதும், அமைதி கொள்வதும் கூட அவன் உத்தரவுபடிதான். அல்லாஹ் நாடிவிட்டால் சில விநாடிகளிலேயே சாதகமான அம்சங்கள் பாதகங்களாகவும், பாதகங்கள் சாதகங்களாகவும் மாறிப் போகும். அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட அடியார்கள் எவ்வளவு சிரமங்களை எதிர் கொண்டாலும் இறுதி வெற்றி அவர்களுக்குத் தான்.
                பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டு இஸ்ரவேலர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பித்தார்கள் , அடிமை வாழ்வு முடிவுக்கு வந்து புதிய வாழ்வு பிறந்தது , இப்போது அவர்கள் மீது தனது அருளை நிறைவு படுத்துவதற்காக  ஷரீஅத் சட்டதிட்டங்கள் அடங்கிய இறை வேதம் தவ்ராத் அருளப்படுவதற்கான நேரம் வந்து விட்டது , அல்லாஹ்வின் வேதம் உலகிற்கு வருவது சாதாரண நிகழ்வல்ல, அவ்வேதம் அருளப்படுவதற்கு முன்பு மூஸா (அலை) அவர்களும் தம்மை மனரீதியாகவும் , ஆத்மீக ரீதியாகவும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகையால் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களை தூர்சினாய் மலைக்கு வந்து தன் வணக்கத்தில் 40 நாட்கள் ஈடுபடுமாறு கட்டளையிட்டான்,  மூஸா(அலை) அவர்களும் தவ்ராத் வேதத்தை பெறப்போகிறோம் என்ற சந்தோஷத்தில் சினாய் மலைக்கு புறப்பட்டுவிட்டார்கள், அவர்கள் அங்கு தங்கியிருந்த 40 நாட்களுக்குள் இங்கே இஸ்ரவேலர்களுக்கு மத்தியில் ஒரு பெரிய குழப்பமே ஏற்பட்டு போனது. ஸாமிரீ என்பவன்  இஸ்ரவேலர்களிடம் இருந்த தங்க நகைகளை உருக்கி அதிலே  காளைக்கன்று சிலை செய்து இதிலே இறைவன் புகுந்துவிட்டான், இது தான் இறைவன், இதை விட்டு விட்டு நபி மூஸா(அலை) எங்கோ சென்றுவிட்டார் என ஒரு வதந்தியை கிளப்பி விட அதை அம்மக்களும் நம்பி சிலர் அதை வணங்கவும்  ஆரம்பித்து விட்டார்கள், இது எவ்வளவு பெரிய மடத்தனம் ? யாராவது கடவுள் பெயரால் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தினாலும் , அல்லது ஏமாற்றினாலும் உடனே ஏமாந்து போகும் அளவுக்கு  இறை விசுவாசத்தின் விளிம்பு நிலையில்தான் அம்மக்கள்  இருந்து வந்தார்கள் , அல்லாஹ்வின் மிகப்பெரிய அத்தாட்சிகளையெல்லாம் அவர்களின் கண்ணுக்கு முன்னால் செய்து காட்டிய ஓர் உன்னதமான நபியின் சொல்லை புறக்கணித்து விட்டு ஏதோ ஓர் ஏமாற்றுக்காரனின் கூற்றை நம்ப ஆரம்பித்து  விட்டார்கள் , இது எத்தனை பெரிய துரோகம் ? எவ்வளவு பெரிய பாவம் ? இந்த பெரும் பாவத்தை கூட அல்லாஹ் மன்னிப்பது அவனின் மிகப்பெரிய கருணையாகும் . அல்லாஹ் கூறுகிறான் ,
             பிர்அவ்னின் கொடுமைகளை விட்டும் இஸ்ரவேலர்களுக்கு விடுதலை தந்தபின் அவர்கள் எடுத்து நடப்பதற்கான சட்ட திட்டங்களை உள்ளடக்கிய ஒரு வேதத்தை நாற்பது இரவுகளில் நாற்பது நாட்களில் மூஸா (அலை)வுக்கு அருளப்போவதாக நாம் வாக்களித்த அந்த தருணத்தை நினைத்துப் பாருங்கள், அவர் நாற்பது நாட்கள் நம்முடைய வணக்கத்தில் திளைப்பதற்காக உங்களை விட்டு வந்ததற்குப்பின் அவருக்குப் பிறகு நீங்கள் அற்பமான கன்றின் சிலையைப்போய் தம் தெய்வமாக நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள், இது விஷயத்தில் நீங்கள் நன்றி மறந்த அநியாயக்காரர்களாக இருந்தீர்கள். பின்பும் நீங்கள் இனியாவது அல்லாஹ்வுக்கு நன்றியோடு வாழும் நல் அடியார்களாக ஆவீர்கள் என்பதற்காக நாம் உங்களை உங்களின் குற்றத்தை மன்னித்தோம்.
            இந்த ஆயத்துகளில் நாம் பெற வேண்டிய சில படிப்பினைகள் யாதெனில் அல்லாஹ்வுடைய வேதம் உலகிற்கு திடீரென அனுப்பப்படாமல் அது அனுபப்படும் முன்பு அதனுடைய மகத்துவத்தையும், மேன்மையையும் உணரச் செய்யப்படுகிறது. நாற்பது நாட்கள் என்பதற்கும், மனம் பண்படுவதற்கும்  நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அடியார்கள் மாபெரும் பாவங்களை புரிந்து விட்ட போதிலும் அவர்கள் மனந்திருந்தி உண்மையான உள்ளத்தோடு பாவமன்னிப்பு தேடினால் அல்லாஹ் மன்னிக்க தயாராக இருக்கிறான்.
         கன்றுச்சிலையை வணங்குதல் என்ற பெரும் பாவத்தில் ஈடுபட்டுவிட்டாலும் அல்லாஹ் தன்னுடைய பேரருளான தவ்ராத் அருளப்படுவதை நிறுத்திக்கொள்ள வில்லை, அவர்களின் நேர்வழிக்காக அதனை மூஸா அலை அவர்களுக்கு அருளினான், அல்லாஹ்வின் வேதம் மனிதர்களுக்கான பிரகாசம் , கண்ணொளி பிடுங்கப்பட்டு விட்டால் எதையும் பார்க்க முடியாமல் போய் விடுவதைப்போல வேதம் அருளப்படாமல் போனால் நல்லது தீயதை பிரித்துணர முடியாமல் போய் விடும் , அது மனிதர்களை நரகத்தில் கொண்டு தள்ளி விடும் , எனவேதான் அல்லாஹ் அவர்களின் பாவங்களுக்காக வேதத்தை பிடுங்கிக்கொள்ளவில்லை , இதுவும் இறைவனின் உபகாரமாகும் .
         நாம் உங்களின் தூதரான மூஸா(அலை)வுக்கு நீங்கள் உங்களுடைய வாழ்வில் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக வேண்டி தவ்ராத் எனும் வேதத்தை , நன்மை தீமைக்கு மத்தியில் பிரித்துக் காட்டும் தீர்க்கமானதை நாம் அருளினோம். இவ்வாறு நாம் உங்களுக்கு பெரும் உபகாரம் செய்தோம் இதை நீங்கள் நினைத்துப் பார்த்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக் கூடாதா?
         மனிதர்கள் செய்யும் பாவங்கள் , பாவம் செய்த நபர்கள் , பாவம் நடந்த இடம் , சூழல் ஆகியவற்றை வைத்து அவற்றின் கடுமைகள் வித்தியாசப்படும் , ஆதலால் அதற்கான தண்டனையும் பாவங்களுக்கேற்ப கடுமையாக இருக்கும் . இங்கே ஒரு நபியை பார்த்த மக்களே பாவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் , அதுவும் சாதாரண பாவமல்ல, பெரும் பாவங்களில் முதன்மையான அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் என்ற கொடூர பாவத்தை புரிந்துள்ளார்கள் , அதுவும் அல்லாஹ்வின் தூதர் , அல்லாஹ்விடமிருந்து வேதத்தை வாங்கி வருவதற்காக சென்ற அப்புனிதமான நாட்களில் இப்பாவத்தை செய்துள்ளார்கள் , இதன் காரணமாகவே அவற்றிற்கான தண்டனையும் பிற மக்களெல்லாம் படிப்பினை பெரும் நோக்கில் கடுமையாக்கப்பட்டது , அல்லாஹ் கூறுகிறான்.
                 நபி மூஸா(அலை) தம் சமுதாய மக்களான பனூ இஸ்ராயீல்களிடம் கூறிய இச்செய்தியை சற்று நினைத்து பாருங்கள் , மூஸா(அலை) கூறினார்கள். என் சமுதாயமே! அல்லாஹ்வின் ஆற்றல்களை வல்லமைகளை கண் கூடாக கண்ட பின்பும் , நீங்கள் ஒன்றுக்குமே உதவாத, அற்ப கன்று சிலையை தெய்வமாக ஏற்றுக் கொண்டு, அதனை வழிபட ஆரம்பித்து , பாவங்களிலேயே மிகப் பெரும் பாவமான ஷிர்க் எனும் இணை வைத்தல் என்ற பெரும் பாவத்தை செய்ததன் மூலம் உங்களுக்கு நீங்களே அநீதமிழைத்து விட்டீர்கள். இதனால் அல்லாஹ்வை விட்டு நீங்கள் வெகுதூரம் விலகி விட்டீர்கள் , இந்த பாவத்தை நினைத்து வருந்துங்கள். உங்களை படைத்த அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் தவ்பா செய்து மீளுங்கள்.  அந்த தவ்பா உண்மையானதாக இருக்க வேண்டும் , எனவே மன்னிக்க முடியாத இக்குற்றத்திற்கு பரிகாரமாக நீங்கள் உங்களில் காளைக் கன்றை வணங்குவதில் ஈடுபட்டோரை , அதை விட்டும் ஒதுங்கிக் கொண்டோர் தம் கைகளால் தம் இனத்தவர்களுக்கு மரண தண்டனை தர வேண்டும். இதுதான் அம்மக்கள் செய்த இணைவைத்தல் குற்றத்திற்கு அல்லாஹ் கொடுத்த தண்டனை , முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஷரீஅத்திலும் மனிதர்கள் சில பாவங்கள் புரிந்துவிட்டால் அதற்கு நாவளவில் தெளபா செய்வது மட்டுமல்லாமல் பாவம் புரிந்தவர்கள் கொல்லப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. உதாரணமாக பிற முஸ்லிமை வேண்டுமென்றே அநியாயமாக கொலை செய்தால் அதன் தண்டனை கொலை செய்தவரும் கொல்லப்பட வேண்டும். திருமணமான ஆண், பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டால் இப்பாவத்திற்கான தண்டனையும் குற்றம் புரிந்தவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதாகும் , இது போலவே மூஸா(அலை)வுடைய ஷரீஅத்தில் ஷிர்க் போன்ற பெரும் பாவங்களுக்கு பாவம் புரிந்தவர்கள் கொல்லப்பட வேண்டும். அப்போது தான் அவர்களின் தவ்பா நிறைவு பெறும். இதையே அம்மக்களுக்கு மூஸா(அலை) கூறினார்கள். மேலும் சொன்னார்கள் , நீங்கள் இந்த கட்டளைக்கு மறுப்பு தெரிவிப்பதை விட  இவ்வாறு நீங்கள் கொலையுண்டு குற்றப்பரிகாரம் தேடுவதுதான் உங்களை படைத்தவனிடத்தில் சிறந்ததாகும். ஏனெனில் உலகத்துடைய தண்டனையை சகித்துக்கொள்ள முடியும் ,மறுமையுடைய தண்டனையை யாராலும் சகிக்க முடியாது. எனவே உலகத்திலேயே தமது தவறுகளுக்கு பரிகாரம் தேடிக்கொள்ளுங்கள், மூஸா(அலை) அவர்களின் கட்டளைக்கு ஏற்ப குற்றம் புரிந்தவர்கள் தம் உயிரை இழக்க தயாராகி தாம் செய்யும் தெளபா உண்மையானது என்பதை நிரூபித்தார்கள். மாபெரும் குற்றவாளிகளாக திகழ்ந்தவர்கள் ஒப்பற்ற இந்த தவ்பாவினால் புனிதர்களாக மாறிவிட்டார்கள் , எனவே நீங்கள் செய்த பாவங்களால் உங்கள் மீது கோபம் கொண்டிருந்த இறைவனும் உங்களின் பால் முன்னோக்கி உங்களை மன்னித்து விட்டான். ஏனெனில் அல்லாஹ் அவன் அடியார்களின் பாவங்களை அதிகம் மன்னிப்பவனாகவும், அவர்கள் மீது அதிகம் கிருபை கொண்டவனாகவும் இருக்கிறான். இதனால்தான் அவனது மன்னிப்பை வேண்டி தம் உயிரையே இழந்த அடியார்களை மன்னித்தது மட்டுமல்லாது அவர்களை நரக நெருப்பை விட்டும் பாதுகாத்து உயர்வான சுவர்க்கத்திலே புகச் செய்கிறான்.
             படிப்பினைகள்: மனிதர்கள் நேர்வழி பெறுவதற்கு அல்லாஹ்வுடைய வேதத்தை பற்றிப் பிடிக்க வேண்டும். மனிதர்கள் புரியும் பாவம் அது தமக்குத்தாமே இழைக்கும் தீங்குகளாகும், அதன் பாதிப்பு அவர்களையே தாக்கும். அல்லாஹ்வுக்கு இணையாக ஷிர்க்காக எவற்றையேனும் வணங்குவது பாவங்களிலேயே மிகப் பெரிய பாவமாகும் , பாவங்கள் நிகழ்ந்து விட்டால் உடனடியாக அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கோர வேண்டும். தாம் செய்யும் தவ்பாவில் தாம் உண்மையாளர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகள் யாவற்றிலும் அல்லாஹ்வுடைய அருளும், கிருபையும் தான் மறைந்திருக்கும். தான் செய்த பாவத்திற்கு உயிரை மாய்ப்பதுதான் பரிகாரம் என்றால் உயிரை மாய்ப்பதற்கும் தயாராக வேண்டும் , பாவக்கறைகளுடன் வாழ்வதை உயிரை விடுவதற்கு சமமாக வெறுக்க வேண்டும் .ஷிர்க் என்ற பாவத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதற்காகத்தான் அல்லாஹ் அம்மக்களுக்கு இவ்வாறான தண்டனை கொடுத்தான் , அல்லாஹ் நம்மை பாவங்களிலிருந்து முழுமையாக  பாதுகாப்பானாக   - ஆமீன்
              ஷிர்க்கிலிருந்து தவ்பா செய்வதற்காக ஷிர்க் செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது ,அதனால் ஏற்பட்ட சலசலப்பு அடங்கியதும் அல்லாஹ் ஹஜ்ரத் மூஸா அலை அவர்களுக்கு அருளிய புனித தவ்ராத் வேதத்தின் பால்  அவர்கள் கவனத்தை திருப்பினார்கள், மூஸா (அலை) தவ்ராத் வேதத்தை அவர்களுக்கு தெளிவாக போதித்தார்கள் , அம்மக்களை தவ்ராத்தின் மீது பரிபூரண ஈமான் கொள்ள ஆர்வப்படுத்தினார்கள்  , தவ்ராத் வேதத்தில் எவ்வித குறையும் இல்லை, அதை திறந்த மனதுடன் படித்துப்பார்த்து அது காட்டும் நேர்வழிப்படி நடந்திருந்தால் இருலோக வெற்றியை பெற்றிருக்கலாம் , ஆனால் அதைவிட்டு விட்டு  அம்மக்களிடையே இருந்த விதண்டாவாதம் பேசும் சிலர் இன்று திருக்குர்ஆன் குறித்து கேட்பது போல  ஓர் விபரீதமான கோரிக்கையை நபியிடம் முன்வைத்தார்கள் , “மூஸாவே” இந்த புத்தகத்தில் உள்ளவை யாவும் அல்லாஹ்வின் வார்த்தைகள் தான் என்பதை நாங்கள் எவ்வாறு நம்புவது ? ஆதலால் நீங்கள் அல்லாஹ்வுடைய பேச்சை செவியேற்றது  போல நாங்களும் அல்லாஹ் பேசுவதை செவியேற்க  வேண்டும் . அப்போதுதான் எங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை பிறக்கும் ” என்று கூறலானார்கள், ஒரு நபியோடு அவர்கள் இந்தளவு மிகவும் தரம் தாழ்ந்த முறையில் நடந்து கொண்டார்கள் , ஆனால் மூஸா அலை அவர்களோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் எப்படியாவது அவர்களிடம் விசுவாசத்தை ஏற்படுத்திட வேண்டும் என்ற நன்னோக்கிலே அல்லாஹ்விடத்தில் அதற்காக பிரார்த்தித்தார்கள் , அல்லாஹ்வும் தமது பிரியமான நபியின் பிரார்த்தனையை அங்கீகரித்து  அவர்களில் 70 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களையும் தன்னுடன் தூர்சினா மலைக்கு அழைத்து வருமாறு கட்டளையிட்டான். அவ்வாறே  70 நபர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டு நபி மூஸா அலை வுடன் தூர்சினா மலைக்கு அழைத்து வரப்பட்டார்கள், சிறிது நேரத்தில் மூஸா (அலை) அவர்களுடன் அல்லாஹ் பேச ஆரம்பித்தான். பரிசுத்த அல்லாஹ்வின் பேச்சை அங்கு வந்திருந்த 70 நபர்களும் தெளிவாகவே  செவியேற்றார்கள். அல்லாஹ்வின் பேச்சை கேட்பது என்ன சாதாரண விஷயமா ? எவ்வளவு பெரிய பாக்கியம் அது ? அல்லாஹ்வுடன் தனது உரையாடலை முடித்து திரும்பிய மூஸா அலை,  அம்மக்களை நோக்கி இப்போது திருப்தி தானே ?, இப்போதாவது இதனை நம்புகிறீர்களா ? என வினவினார்கள் , மூஸா அலை தனது  கேள்விக்கு அவர்களிடமிருந்து நிறைவான பதில் வரும் என்றுதான் எதிர்பார்த்திருந்தார்கள் , ஆனால் அம்மக்கள் கூறிய பதில் நபி மூஸா அலை அவர்களையே திகைக்க வைத்தது, அதனை அல்லாஹ் கூறிக்காட்டுகிறான் ,  
             அந்நேரத்தில்  நீங்கள் , மூஸா(அலை)வே! நாங்கள் பேச்சை கேட்டோம் தான், ஆனால் எங்களுக்கு ஒரு சந்தேகம் , இப்போது அல்லாஹ்தான் பேசினான் என்பதை எவ்வாறு நாங்கள் உறுதிப்படுத்துவது  ? ஆதலால் நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக பார்க்காத வரை உங்களை ஒருபோதும் நம்புவதாய் இல்லை என முடிவு செய்து விட்டோம்  என்று கூறினீர்கள் , அல்லாஹ்வை கண்கூடாக பார்த்ததற்கு பிறகு நம்புவதற்கு ஈமான் என்றே கூறப்படாது , அந்த ஈமானுக்கு அல்லாஹ்விடத்தில் எந்த மதிப்பும் இல்லை , அதனால்தான் மறுமை நாளில் பாவிகள் அல்லாஹ்வை கண்கூடாக கண்டதற்குப்பின் ஈமான் கொள்வதற்கு முன் வரும்போது அவர்களின் ஈமான் ஏற்றுக்கொள்ளப்படாது , மறுக்கப்பட்டு விடும் , ஆதலால் உங்களின் இந்த பதில் எல்லா அற்புதங்களை காட்டிய பிறகும் நபியை ஈமான் கொள்ள மறுப்பதற்கு சமமாகும் , ஒரு நபி அற்புதங்களை காட்டி தன்னை இறைவனின் தூதர் என நிரூபித்த பிறகும் அவரை ஏற்க மறுத்தால் அவர்கள் மீது இறைவனின் வேதனை இறங்கி விடும் , எனவே உங்களின் இவ்வொழுக்ககேடுக்கு தண்டனையாக நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பெரும் இடி முழக்க சப்தம் உங்களை தாக்கியது , அதனால் நீங்கள் யாவரும் மரணித்துப் போனீர்கள்,
          அதற்குப் பிறகும் மூஸா(அலை) மனந்தளரவில்லை , அம்மக்கள் புரிந்த அக்குற்றத்திற்காக அல்லாஹ்விடத்தில் மன்றாடி அவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டினார்கள். ஆதலால் அவர்களின் பிரார்த்தனையை அங்கீகரித்து உங்களை மரணிக்கச் செய்த பின்னரும் கூட  மறுமுறை உயிரூட்டி எழுப்பினோம். இனியாவது நீங்கள் அல்லாஹ்வின் உபகாரங்களை எண்ணிப் பார்த்து அவனுக்கு நன்றி செலுத்திவீர்கள் , அவன் விரும்பியவாறு வாழ்வீர்கள் என்பதற்காக உங்களுக்கு மறு வாழ்வு தந்தோம் . யா அல்லாஹ் நாங்கள் உன்னையும், உன் சத்திய தூதர்களையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டோம் , எங்களை உன்வேதனையை விட்டும் நிரந்தரமாக பாதுகாப்பாயாக – ஆமீன்
படிப்பினைகள் 1. அல்லாஹ்வுடனும் அவன் தூதர்களுடன் மிக ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும், சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டால் அந்த சந்தேகத்திற்கு எல்லையே இல்லாமல் போய்விடும் , ஆதலால் அத்தாட்சிகளை முன் வைத்து உறுதியாக நம்பிக்கை கொள்ள முன்வர வேண்டும். இன்று உலகில் ஏராளமானோர் இந்த சந்தேக பிணி கொண்டு தான் வாழ்ந்து வருகிறார்கள் – அல்லாஹ் நம்மை இந்திலையை விட்டும் பாதுகாப்பானாக. 
                இஸ்ரவேலர்களின்  சொந்த நாடு ஷாம் பிரதேசமாகும் . அங்கிருந்து வெளியேறிய பின் அந்நாட்டை அமாலிகா என்ற பெரும் வம்பர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அவர்களும் பூமியில் பெரும் அட்டூழியங்கள் செய்தார்கள் . எனவே  அல்லாஹ்வின் எதிரிகளான அவர்களுடன் போரிட்டு தம் நாட்டையும் திருப்ப வேண்டும், அத்துடன் அவர்களின் எல்லை மீறிய அட்டுழியங்களுக்கும் முற்றுப் புள்ளிவைக்க வேண்டும் என அல்லாஹ்வின் தரப்பிலிருந்து இஸ்ரவேலர்களுக்கு  கட்டளையிடப்பட்டது . ஆதலால் மூஸா (அலை) இஸ்ரவேலர்களின் படையுடன்  மிஸ்ரிலிருந்து ஷாம் நோக்கி புறப்பட்டார்கள், அல்லாஹ்வின் விரோதிகள் எத்தகைய வலிமை கொண்டவர்களாக இருப்பினும் முஃமின்கள் முழுமையான ஈமானுடன் போரிட்டால் அல்லாஹ்வின் உதவி கண்டிப்பாக வரும், இது தான் எல்லா காலத்திலும் அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கும் நியதி , பத்ர் , கன்தக் யுத்தங்களில் எதிரிகள் வலுவாக இருந்தும் முஸ்லிம்கள் தமது ஈமானுடைய வலிமையால்தான் வெற்றி பெற்றார்கள் , ஈமானுக்கு அவ்வளவு பெரிய சக்தி உண்டு ,  இஸ்ரவேலர்களுக்கு அந்த  ஈமான்தான் இல்லாமல் போனது  , அதனால்  அவர்கள் மிஸ்ரை நெருங்கியதும் அமாலிகாகளின் படை பலத்தையும், வலிமையையும் அறிந்ததும்  இவர்களுக்குள்  பீதி கிளம்பியது , போருக்கு புறப்பட்டு வந்த பின்பும் போர் செய்வதை விட்டு  பின் வாங்கினார்கள் , அது மட்டுமின்றி போர்களத்திற்கு அழைத்த தமது நபியிடம் நீங்களும், உம் இறைவனும் இரண்டு பேரும் போய் சண்டை செய்யுங்கள் , எங்களால் அவர்களோடு சண்டையிட இயலாது , நாங்கள் வரவும் மாட்டோம் , நாங்கள் இங்கேயேதான் இருப்போம் என திமிரான பதிலை கூறினார்கள், ஒரு நபிக்கு தரும் மரியாதையா  இது ? அல்லாஹ்வின் கட்டளைக்கு கொடுக்கும் மதிப்பா இது ? இறை கட்டளை அவமதிக்கப்படும் போது அல்லாஹ்வின் தண்டனை வரும் , ஆதலால் அல்லாஹ் அவர்களை அவர்கள் இருந்த இடத்திலேயே வைத்து தண்டித்தான் , ஷாம் தேசத்திற்கும் போக முடியாமல், மிஸ்ருக்கும் திரும்ப இயலாமல் இடையில் தீஹ் என்ற ஒரு பாலை வெளியில் நாற்பது வருடகாலம் நாடோடிகளாக அலைய விட்டான். இந்த தீஹ் மைதானம் ஒரு விசித்திரமானது, சுமார் 15 கிலோ மீட்டர் தூரம்தான் தான் இருக்கும், அதை கடப்பதற்கு அவர்கள் பகல் முழுவதும் நடப்பார்கள், இரவிலே ஓய்வெடுத்து காலையில் விழித்துப்பார்த்தால் நடக்க துவங்கிய அதே இடத்திலேதான் இருப்பார்கள் . இவ்வாறு 40 வருடங்கள் வரை அவர்களால் அப்பகுதியை விட்டு நகர முடியாமல் அதற்குள்ளேயே  சுற்றி சுற்றி வந்தார்கள், அந்த பாலைவெளியில் ஒதுங்க இடமும் இல்லை, உணவுக்கும்  வழி இல்லை. இத்தகைய சூழலிலும் அல்லாஹ் அவர்களை முழுமையாக கைவிடவில்லை , அவர்கள் மீது பல உபகாரங்கள் புரிந்தான் , அல்லாஹ் கூறுகிறான் 
            இஸ்ராயீலின் சந்ததியினர்களே! நீங்கள் தீஹ் பாலைவெளியில் வெயிலை விட்டு ஒதுங்குவதற்கு கூட வசிப்பிடமின்றி  தவித்தீர்கள், நாம் உங்களுக்கு மேகத்தையே நிழலாக ஆக்கிக் கொடுத்தோம், கடுமையான வெயில் அடிக்கும் போது சூரியனை மேகம் மறைத்துவிட்டால் வெயிலின் தாக்கம் இல்லாமல்  குளுமை ஏற்படும்,  அவர்களை விட்டு எப்போதுமே மேகம் விலகாத வகையில் மேகத்தை அல்லாஹ் நீடித்து இருக்கச் செய்தான். ஆதலால் வெயிலின் கொடுமையை விட்டு தப்பினார்கள். பின்னர் நீங்கள் உண்ணுவதற்கு கூட வழியின்றி தவித்தீர்கள் , நாம் உங்கள் மீது ‘மன்னு’ எனும் இனிப்பையும், ‘ஸல்வா’ எனும் பறவை இறைச்சியையும் இறக்கிக் கொடுத்தோம். அதாவது அப்பாலைவெளியில் இருந்த மரங்களில் நன்கு இனிப்பான, மதுரமான சுவைமிக்க ‘தரஞ்சபீன்’ எனும் வஸ்துவை அல்லாஹ் ஏராளமாக முளைக்கச் செய்தான். அதை சேகரித்து அம்மக்கள் உணவாக புசித்துக் கொள்வர். அதற்கு ‘மன்னு’ எனப்படும். மேலும் காடை, கௌதாரி போன்ற ஓர் பறவையினம் கூட்டம் கூட்டமாக இவர்களுக்கு அருகிலேயே  வந்து அமரும். மனிதர்களை கண்டு  அவை பறந்து ஓடாது ,  இவர்கள் இலகுவாக அவற்றை பிடித்து அறுத்து நெருப்பில் பொசுக்கி உட்கொள்வர் , இதை ‘ஸல்வா’ எனக் கூறப்படும். ஆக இவ்வாறு அல்லாஹ் உங்களின் உணவு தேவைகளுக்கு ஏற்பாடு செய்தான். ஆதலால் நீங்கள் நாம் அளித்த சுவைமிக்க இந்த உணவு வகைகளிலிருந்து நன்றாக புசியுங்கள். என்று கூறினோம். இவ்வாறே தீஹ் வெளியில் அவர்களின் வாழ்க்கை கழிந்தது , அவர்கள் தம் தவறான செயல்பாடுகளினாலும், இறைக் கட்டளைகளை அவமதித்ததினாலும் நமக்கு அவர்கள் எவ்வித அநீதமும் இழைக்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கு நாம் பிறப்பித்த கட்டளைகள் அவர்களை மேன்மைபடுத்துவதற்காகத்தான் , அவற்றை அவர்கள் செயல்படுத்தாத போது அதனால் நமக்கு என்ன நஷ்டம் ? , எவ்வித நஷ்டமும் அல்லாஹ்வுக்கு இல்லை ,  அல்லாஹ் எவ்வித தேவையுமற்றவன். யாருடைய வணக்கமும்  அவனுக்கு எவ்வித இலாபத்தையும் கொடுத்திடாது, யாருடைய பாவமிழைத்தாலும் அவனுக்கு எவ்வித நஷ்டத்தையும் தந்திடாது. ஆனால் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை மீறியதன் மூலம் தமக்குத் தாமே அநீதமிழைத்துக் கொண்டார்கள். தனக்கே அவர்கள் நஷ்டத்தை தேடிக் கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்வில் அனுபவித்த துன்பங்கள் யாவும் இதற்கு சாட்சியாகும். அல்லாஹ் அவனின் கட்டளைகளுக்கு மாறு செய்வதை விட்டும் நம்மை பாதுகாப்பானாக, ஆமீன்.
படிப்பினைகள்:  அல்லாஹ்வின் கட்டளைகள் மீறப்படுவதால் தான் வாழ்வில் சிரமங்கள் உண்டாகின்றன. சோதனைகள் வருகின்றன . அல்லாஹ்வின் சோதனையின் போது  கூட அவனுடைய அருள்கள் தான் மிகைத்து நிற்கும் . அல்லாஹ் நாடிவிட்டால் சிறிய காரியத்தையும் கஷ்டமாக்கிவிடலாம்.  வானில் தவழும் மேகங்களும் அல்லாஹ்வின் கட்டுபாட்டில்தான் இருக்கின்றன. பாவங்களின் தீயவினைகள் பாவம் புரிந்தோரையே தாக்கும்.
                இஸ்ரவேலர்கள் வரலாற்றில் முக்கிய நிகழ்வு அவர்கள் தம் மூதாதையர்களின் சொந்த நகரான புனித ஜெரூசலம் நகரில் பிரவேசிப்பதாகும் .ஜெரூசலம் ஓர் புனித நகர், பல்வேறு சோதனைகளையும , நெருக்கடிக்களையும் கடந்து அதில் பிரவேசிப்பது என்பது அல்லாஹ் அவர்கள் மீது புரியும் பேருபகாரமாகும் , ஆதலால் அதற்கு நன்றி செலுத்தும் வண்ணம் அந்நகரில் நுழைவதற்காக சில ஒழுக்கங்களை பேணும் படி அல்லாஹ் கட்டளையிட்டான்.ஆனால் அவர்கள் அதற்கும் முழுமையாக தலை சாய்க்க வில்லை , அல்லாஹ் கூறுகிறான்.
               இஸ்ராயீலின் சந்த்தியினர்களே! நீங்கள் தீஹ் பாலைவெளியில் நாற்பது வருடங்களாக திரிந்தீர்கள். அங்கே நீங்கள் விரும்பிய உணவுவகைகளை பெற முடியாமல் போனது. பாலை வெளியில் விவசாயம் செய்வது, செடிகள் நடுவது போன்றவை எவ்வாறு இயலும், ஆதலால் உங்கள் விருப்பப் படி உங்களுக்கு நாம் கூறினோம், நீங்கள் தீஹ் பாலைவெளியை விட்டு வெளியேறி ஜெரூசலம் எனும் இந்நகரில் பிரவேசியுங்கள். இது நாள் வரை மன்னு சல்வா எனும் ஒரே வகை உணவை மட்டுமே புசித்து வந்தீர்கள்,ஆதலால் அது உங்களுக்கு சலிப்பை தந்திருக்கலாம் ,   ஆதலால் இந்நகரில்    பிரவேசித்து அங்கே நீங்கள் விரும்பியவற்றை தாராளமாக புசித்துக் கொள்ளலாம். இருப்பினும் இந்நகருக்குள் நுழைவதற்காக சில ஒழுக்கங்களை பேணுங்கள். நகரின் வாசலுக்குள் நுழையும் போது பணிந்தவர்களாக, அடக்கமுள்ளவர்களாக நுழையுங்கள். ஆடிக் கொண்டும், நெஞ்சை நிமிர்த்திக் கொண்டும், பெருமையடித்துக் கொண்டும் இறைவனை மறந்தவர்கள் செய்வது போல செய்து கொண்டு நுழையாதீர்கள். மேலும் எங்கள் இறைவா எங்களை விட்டும் எங்கள் பாவச் சுமைகளை போக்கிடுவாயாக என்று கூறியவர்களாக தம் பாவங்களை எண்ணி வருந்தியவர்களாக நுழையுங்கள். நீங்கள் இவ்வாறு ஒழுக்கங்கள் பேணும் பட்சத்தில் நாம் உங்களின் அனைத்து தவறுகளையும் மன்னித்து விடுவோம். மென்மேலும் நன்மை புரிபவர்களுக்கு அவர்களின் நன்மைகளுக்கு ஏற்ப கூலியையும் அதிகப்படுத்துவோம்,  அவர்களின் பாவங்களை மன்னிப்பது மட்டுமல்லாது அவர்களை சகல உலக மறு உலக நலவுகளை அடையச் செய்வோம்.இவ்வாறு அல்லாஹ் அவர்களுக்கு ஒழுக்கங்களை போதித்தான் , ஆனால்  அவர்கள் அதற்கும் செவிசாய்க்க வில்லை ,
                   மாறாக அதை அலட்சியப்படுத்தினார்கள் , தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட அந்த பாவிகள் அவர்களுக்கு கூறும்படி சொல்லப்பட்ட வார்த்தையையே மாற்றிப் போட்டு விட்டார்கள். அவர்களுக்கு சொல்லப்பட்ட வார்த்தை எங்கள் பாவங்களை போக்கிடுவாயாக என்பது தான் , ஆனால் அவர்கள் அந்த வார்த்தயை  மாற்றி வித்துக்குள் தானியம் என்று சிறிதும் சம்பந்தமே இல்லாத வார்த்தையை கூறினார்கள். பணிவுடன் நுழையுங்கள் என்ற ஒழுக்கத்தையும்  சிதைத்து தமது பணிவை வெளிப்படுத்துவதற்கு பதிலாக முதுகுப்புறமாக திருப்பிக் கொண்டு , தம் பித்தட்டை ஒரு மாதிரி ஆட்டியவர்களாக நுழைந்தார்கள் , அல்லாஹ்வுடைய கட்டளைகள் பேணப்படவில்லை மாறாக அவமதிக்கப்பட்டது . கேலி செய்யப்பட்டது. ஆதலால் அநீதமிழைத்த அக்கூட்டத்தினர்கள் மீது அவர்கள் புரிந்த அத்துமீறலின் காரணத்தால் வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைத்தோம். தாம் விரும்பியவற்றை உண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதற்காக அந்நகருக்குள் நுழைந்தவர்கள் தம் ஒழுங்கீனத்தால் அதை இழந்தார்கள் , அங்கே பெரும் மழை பெய்து எங்கும் காலரா நோய் பரவி கொத்து கொத்தாக மனிதர்கள் இறந்து போனார்கள். ஒரு நாளில் மட்டும் 70 ஆயிரம் பேர் இறந்து போனார்கள் என்று கூறப்படுகிறது . அவர்கள் அல்லாஹ் ஏவிய படி செயல்பட்டிருந்தால் பெய்த மழை நன்கு விளைச்சலை தந்து சந்தோசத்திற்கு காரணமாக இருந்திருக்கும். மாறு புரிந்ததால் காலரா போன்ற கொடிய நோய் பரவுவதற்கும், அவர்களின் அழிவிற்கும் அந்த மழை காரணமாகி விட்டது. அல்லாஹ் அவனின் கட்டளைகளுக்கு மாறு செய்வதை விட்டும், அவனின் வேதனையை விட்டும் நம்மை நிரந்தரமாக பாதுகாப்பானாக- ஆமீன்.
படிப்பினைகள்:  இஸ்லாம் கூறும் அனைத்து கடமைகளும், ஒழுக்கங்களும் கடைபிடிக்கப்பட வேண்டும்.அவற்றிலே அலட்சியம் காட்டக்கூடாது ,  அல்லாஹ்வின் கட்டளைகளை கேலி செய்வது பெரும் பாவமாகும். அல்லாஹ் மனிதர்களின் வாழ்வு சிறப்பதற்கும். மேம்படுவதற்கும் தான் வழி கூறுகிறான். அல்லாஹ் கூறிய வார்த்தையை மாற்றுவது கூட பாவமாகும் , மனிதனின் பாவங்களே வானிலிருந்து வேதனையாக இறங்குகிறது.

சூரா பகரா (5)

يَابَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَوْفُوا بِعَهْدِي أُوفِ بِعَهْدِكُمْ وَإِيَّايَ فَارْهَبُونِ (40) وَآمِنُوا بِمَا أَنْزَلْتُ مُصَدِّقًا لِمَا مَعَكُمْ وَلَا تَكُونُوا أَوَّلَ كَافِرٍ بِهِ وَلَا تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا وَإِيَّايَ فَاتَّقُونِ (41) وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ (42) وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ (43) أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ أَنْفُسَكُمْ وَأَنْتُمْ تَتْلُونَ الْكِتَابَ أَفَلَا تَعْقِلُونَ (44) وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ (45) الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَاجِعُونَ (46)
              சுவனத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்த மனிதனுக்கு இறைவனின் தரப்பிலிருந்து வழிகாட்டுதல்கள் அவனின் பரிசுத்த தூதர்கள் மூலம் வரும் , அந்த தூதர்கள் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள், அவர்கள் அந்த தூதுச்செய்திகளை எவ்வித கூடுதல்,  குறைதலுமின்றி மக்களிடம் எத்தி வைத்து விடுவார்கள் , அவர்கள் பிற மக்களுக்கு அதை எத்தி வைக்க வேண்டும் , இவ்வாறு தலை முறை தலைமுறையாக அந்த ஞானங்கள் கொண்டு செல்லப்படும் , இந்த வழியில்தான் உலகில் வாழும் கடைகோடி மனிதன் வரை இறைவனின் மார்க்கம் எத்தி வைக்கப்படும் , எனவே தமது வழிகாட்டிகளிடமிருந்து பெற்ற ஞானங்களை பிற மக்களுக்கு எத்தி வைக்க கடமைப்பட்டவர்களான மார்க்கம் தெரிந்தவர்கள்  அதை எத்தி வைப்பதில் குறை செய்யக்கூடாது என்பது மிகவும் அவசியம் , அதை அமானிதமாக நினைத்து உள்ளதை உள்ளபடி எத்தி வைக்க வேண்டும் , அவர்கள் அதில் குறை செய்வார்களானால் அதன் விளைவு கடுமையாக இருக்கும் , அது அவர்களையும் தாண்டி அவர்களை பின்பற்றும் மக்களெல்லாம் வழிகேட்டிலே சென்று விழுவதற்கு காரணமாகிவிடும்  , முற்காலத்து வேதங்கள் தன் உண்மையான தோற்றத்தை இழந்ததற்கு மிகப்பெரிய காரணம் அம்மார்க்க அறிஞர்கள் தடம் புரண்டு போனதே , மார்க்க அறிஞர்களில் பனூ இஸ்ராயீல்களுக்கு முக்கிய இடமுண்டு .அவர்கள் குறித்து முதலில் சில தெளிவுகளை பெற வேண்டும் .
             ஆதம்(அலை) ஹவ்வா (ரலி) இருவரிலிருந்து தோன்றியவர்கள் தான் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ள அனைத்து மனிதர்களும் . அவர்கள் தான் பல்கிப் பெருகி பல நாட்டவர்களாக, பல இனத்தவர்களாக, பல மொழி பேசும் மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், இவர்களில் சிலருக்கு யாருக்கும் அமையாத சில குறிப்பிட்ட சிறப்புகள் இருக்கின்றன, அவர்கள் தான் பனூ இஸ்ராயீல்கள் என குர்ஆனுடைய மொழியில் அழைக்கப்படுகின்றவர்கள் . இஸ்ராயீல் என்பது யஃகூப் நபியின் பெயராகும். பனூ இஸ்ராயீல் என்றால் இஸ்ராயீலின் சந்ததியினர்கள் எனும் பொருள். இந்த இனத்தவர்கள் மனித வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெறுபவர்கள். அல்லாஹ்வின்  தூதுச் செய்திகளை பிற மைந்தர்கள் வரை கொண்டு சேர்க்கும் மிகவும் உன்னதமான  உயர்ந்த பணியான நபித்துவத்தின் பணி , இறைப்பணி இவர்களின் இனத்திலே தான் பெரும்பாலும் ஒப்படைக்கப்பட்டு வந்தது .
               யஃகூப் நபி முதல் மூஸா, ஈஸா (அலை) வரை 400 ருக்கும் மேற்பட்ட பெரும் பெரும் நபிமார்கள் இவர்களின் இனத்தில் தான் தோன்றினார்கள். உலகில் குர்ஆனுக்கு முன் அருளப்பட்ட தவ்ராத், இஞ்ஜீல், ஜபூர் போன்ற உயர்ந்த வேதங்களும் இவர்களில்தான் இறக்கப்பட்டிருந்தன. முன் வேதங்கள் பற்றிய அதிகமான அறிவு கொண்டவர்களாக  இந்த மக்கள் திகழ்ந்தார்கள் . முன் வேதங்களில் குர்ஆன் பற்றிய, முஹம்மது நபி(ஸல்) பற்றிய முன் அறிவிப்புகளும் இடம் பெற்றிருந்தன என்பதையெல்லாம் இவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள் . அவர்களில் மூஸா (அலை) அவர்களை ஏற்றுக் கொண்ட மக்களை யூதர்கள் என்றும், ஈஸா(அலை) அவர்களை ஏற்றுக் கொண்டவர்களை கிறிஸ்தவர்கள் என்றும் அழைக்கப்படுவர். இன்றளவிலும் முஸ்லிம்களைக் காட்டிலும் உலகில் பெரும்பான்மையாக உள்ளவர்களை வழிநடத்துபவர்கள்  இவர்களே. இவர்களைத் தவிர்த்து உலகில் வாழும் ஏனைய மக்கள் யாவரும் பல்வேறுபட்ட மதங்களை பின் பற்றுவோராய் இருப்பினும் வானத்து வேதங்கள் பற்றிய தீர்க்கமான அறிவுகள் அவர்களிடத்தில் இல்லை . மேலும் பனூ இஸ்ராயீல்கள் இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளான அல்லாஹ், நபிமார்கள், வேதங்கள், சுவர்க்கம், நரகம் போன்றவற்றில் முஸ்லிம்களோடு நெருங்கிவருபவர்கள் . நபியவர்கள் தன் வாழ்நாளில் சந்தித்த மக்களில் இவர்கள் மட்டுமே முன் வேதத்து ஞானம் பெற்றவர்கள் , இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயல் பட்டிருந்தால் உலகில் கடவுளின் பெயரால் நடக்கும் பல அட்டூழியங்களுக்கு முடிவு பிறந்திருக்கும் , வழி கேடுகள் குறைந்திருக்கும் . ஆனால் அவர்கள்  தமது பொறுப்பை உணர வில்லை என்பதை குர்ஆன் பக்கம் பக்கமாக விவரிக்கின்றது . எனவே மார்க்கம் அறிந்தவர்கள் , வேதத்தை கற்றவர்கள் , மக்களுக்கு மார்க்கத்தை போதிக்கும் இடத்தில் உள்ளவர்களின் வழிகேடுகள் , குறைகள் களையப்பட இவர்களையே குர்ஆன் உதாரணத்திற்கும் எடுத்துக்கொண்டது .

              இஸ்ராயீலின் சந்ததியினர்களே! நான் உங்கள் மீது புரிந்த என்னுடைய அருள் பாக்கியங்களையெல்லாம் எண்ணிப்பாருங்கள்.   மார்க்கத்தின் விளக்கங்களை தந்து , அதன் மூலம் உங்களை பிற மனிதர்களை விட எவ்வளவு மேன்மைப்படுத்தி வைத்திருந்தேன் என்பதை யோசித்து பாருங்கள் , மேலும் நீங்கள் எனக்கு தந்த வாக்குறுதி என்ன ? தொழுகையை நிலை நாட்ட வேண்டும், ஜகாத்தை கொடுக்க வேண்டும், நான் அனுப்பிய அனைத்து, தூதர்களையும் விசுவாசம் கொள்ள வேண்டும், அவர்களில் இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் நம்ப வேண்டும் என்பவைதானே ? அந்த என்னுடைய ஒப்பந்தத்தை நீங்கள் நிறைவேற்றுங்கள் , பதிலுக்கு நான் உங்களின் பாவங்களையெல்லாம் போக்கி, உயர் ரக சுவர்க்கங்களில் உங்களை புகச் செய்வேன் என, நான் உங்களுக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் ,  நீங்கள் தந்த உறுதிமொழியை நிறைவேற்றாவிட்டாலும் உங்களுக்கு சுவனமுண்டு என வீண் கற்பனைகளில் மூழ்காதீர்கள் , மேலும் வேதங்களிலுள்ள உண்மைகளை பிறருக்கு எத்தி வைப்பதில் மனிதர்களுக்கு பயப்படாதீர்கள், என்னை மட்டுமே பயப்படுங்கள். 
                மேலும் நான் இறக்கி வைத்துள்ள இந்த குர்ஆனை, அதுவும் உங்களுடனுள்ள உங்களின் வேதங்களான இஞ்ஜீல், தவ்ராத்தை உண்மைப்படுத்தக் கூடியதாக உள்ளது , இத்தகைய குர்ஆனையும் நீங்கள் விசுவாசம் கொ ள்ளுங்கள் , இதை மறுப்பதில் முதல் நபராக நீங்கள் இருக்காதீர்கள்  , அதாவது குர்ஆனை ஏற்க மறுப்பதற்கு நீங்கள் முன்னுதாரணமாக திகழாதீர்கள் , அப்படி மறுப்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தால் உங்களைப்பார்த்து யாரெல்லாம் குர்ஆனை மறுப்பார்களோ அவர்கள் யாவரின் பாவங்களிலும்  நீங்களும் பங்காகிவிடுவீர்கள் . எனவே நன்மைக்கு முன்னுதாரணமாக திகழுங்கள் , மேலும் உங்கள் வேதத்தில் கூறப்பட்டுள்ள முன்னறிவிப்பு படி அமைந்துள்ள இந்த குர்ஆனை ஏற்பதாலோ , அல்லது அதனை பிறருக்கு எடுத்துக்கூறுவதாலோ  உங்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்த உலகம் சார்ந்த இலாபங்கள் பாதிக்கப்படும் என்றிருந்தாலும்  அந்த நஷ்டத்தை நீங்கள் பொருட்படுத்தாதீர்கள். ஏனெனில் உலக இலாபங்கள் எத்தனை பெரிதாக தோற்றமளித்தாலும் அது உங்களுக்கு அல்லாஹ் தர இருக்கும் கூலிக்கு முன்னால் மிக மிக அற்பமானதே . எனவே என்னுடைய வசனங்களை  எடுத்து செயலாற்றுவதை விட்டுக் கொடுத்து அர்ப்பமான கிரயத்தை பகரமாக வாங்காதீர்கள். அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்து நடப்பதால் நம்முடைய எவ்வளவு பெரிய இலாபத்திற்கு  பாதிப்பு ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தக் கூடாது . மேலும் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதால் ஏதேனும் இழப்பு ஏற்படுமென்ற பயம் இருப்பினும் நீங்கள் அதற்கு பயப்படாதீர்கள். எனக்கு மட்டுமே பயப்படுங்கள், 
           மேலும் எவ்வித அற்பமான உலக இலாபத்திற்காகவும் உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள், சத்தியத்தை அசத்தியத்துடன் இணைக்காதீர்கள், மேலும் நீங்கள் இதுதான் சத்தியம் என தெரிந்து கொண்டே அதை மறைக்காதீர்கள்.
              மேலும் நீங்கள் தொழுகையை அதன் முறைகள், ஒழுக்கங்கள், சுன்னத்துகள், நேரத்தை பேணுதல் போன்றவற்றை முழுமையாக பேணி நிரப்பமாக நிறைவேற்றுங்கள், மேலும் உங்களின் செல்வங்களுக்கான ஜகாத்தை கொடுத்துவிடுங்கள். மேலும் தொழுகையை தனியாக தொழாமல் தொழுபவர்களோடு சேர்ந்து தொழுங்கள். 
              மேலும் நீங்கள் பிறர்களுக்கு உபதேசிக்கிறீர்கள் , நன்மையானவற்றை செய்யும்படி பிற மக்களுக்கு ஏவுகிறீர்கள், ஆனால் உங்களை மறந்து விடுகிறீர்களே ! அந்நன்மையை செய்வதை விட்டு நீங்கள் ஒதுங்கியிருக்கிறீர்களே ! இது முறையாகுமா ? இத்தனைக்கும் நீங்கள்  வேதத்தை ஓதுகிறீர்கள், அதன் செய்திகளை உணர்கிறீர்கள், அதை பிறருக்கு போதிக்கிறீர்கள் , அதன் போதனைகளை எடுத்து நடக்க அதிக அருகதை உள்ளவர்கள் நீங்கள்தான் ,  அவ்வாறிருந்தும் நீங்கள் அதனை அமுல் படுத்தாமல் இருக்கலாமா ? இதை நீங்கள் யோசிக்க  வேண்டாமா?
               மேலும் நீங்கள் உங்களின் அனைத்து காரியங்களிலும் இரண்டு அம்சங்களை கடை பிடிப்பதன் மூலம் அல்லாஹ்வின் உதவியை எதிர்பாருங்கள் ,
          1, பொறுமையின் மூலம் , பொறுமை என்பதற்கு விரிவான கருத்துக்கள் உண்டு , அல்லாஹ்வின் வரம்புக்குள் தன்னை கட்டுப்படுத்தி வைப்பதற்கு பெயர் பொறுமை , இது அல்லாஹ்விடமிருந்து உதவியை வாங்கித்தருகிறது , 
         2, தொழுகையின் மூலம், தொழுகை , அல்லாஹ்வோடு மனிதனுக்கு தொடர்பை ஏற்படுத்தும் இணைப்பு பாலமாகும் . இதன் மூலம் தன் உலக , மறு உலக காரியங்களை இலகுவாக சாதிக்கலாம் , இருப்பினும் இத்தொழுகை பலமனிதர்களுக்கு பாரமாகத்தான் தெரியும், தம் மனங்களையும், உறுப்புகளையும் எவ்வித கட்டுபாடுமில்லாமல் சுதந்திரமாக இயங்கச் செய்பவர்களுக்கு தொழுகையில் அவற்றை அடக்கி வைப்பதென்பது சிரமமாகத்தான் தெரியும். ஆனால் பணிவானவர்களுக்கே தவிர , அவர்களுக்கு தொழுகை பாரமாக இருக்காது.
           பணிவானவர்கள் யாரெனில் எவர்கள் தாம் ஒரு நாள் தம்மை படைத்த இறைவனை , தமது பரிபாலிப்பவனை கண்டிப்பாக சந்திக்க இருக்கிறோம். மேலும் அவன் பக்கமே தாம் உலக வாழ்வை முடித்து  திரும்பி செல்ல இருக்கிறோம் என எவர்கள் உறுதிபட நம்புவார்களோ, இந்த எண்ணம் அவர்களின் வாழ்க்கையோடு  பிணைந்து இருக்குமோ அத்தகையவர்களே பணிவானவர்கள் , அவர்களுக்கு  தொழுகையிலும் மறுமை சிந்தனை  ஏற்பட்டு அதில் தம் உள்ளத்தையும் உறுப்புகளையும் ஒருமுகப்படுத்தி தொழுதல் அவர்களுக்கே பாரமாக இருக்காது. இந்த பணிவு வந்துவிட்டால் தொழுகையில் உயிரோட்டம் வந்து விடும் , தொழுகை உயிர் பெற்று விட்டால் அல்லாஹ்வின் உதவி வாசல் திறந்து விடும் , அல்லாஹ்வின் உதவி இருந்தால் எதற்கும் , யாருக்கும் அஞ்சாமல் மார்க்கப்பணி செய்யலாம் , அதுதான் இக்காலத்திற்கு மிக அவசியம் என்பதை இவ்வசனங்கள் நன்றாக உணர்த்துகின்றன , அல்லாஹ் நம்மிடத்தில் பொறுமையையும், தொழுகையையும் நிரப்பமாக உண்டாக்குவானாக – ஆமீன்.

சூரா பகரா (4)


وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ (30) وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (31) قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ (32) قَالَ يَاآدَمُ أَنْبِئْهُمْ بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنْبَأَهُمْ بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنْتُمْ تَكْتُمُونَ (33) وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ (34) وَقُلْنَا يَاآدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ (35) فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ (36) فَتَلَقَّى آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ (37) قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (38) وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ (39) 

                    அடுத்து குர்ஆன் நம்மை மனித வரலாற்றின் துவக்கத்திற்கு இழுத்து செல்கின்றது , இன்று உலகெங்கும் பரந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனித சஞ்சாரம் எதுவுமே பிறந்திருக்காத ஒரு நேரம் , ஆனால் மனிதர்கள் வாழ்வதற்கேற்ப பூமியும் , வானும் படைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது ,  அந்த சந்தர்ப்பத்தில் உமது இரட்சகனான அல்லாஹ் தன்னுடைய பரிசுத்த படைப்புகளான மலக்குகளை ஒன்று திரட்டி , அவர்களுக்கு முன்  தன் திட்டத்தை முன் வைத்து பேசினான் . மலக்குகளே ! இப்பரந்த பூமியில் என் கட்டளைகளை நடைமுறைப்படுத்த கூடிய, என் விருப்பங்களின் படி செயல் படக் கூடிய ஒரு புது வகையான படைப்பை படைக்க இருக்கிறேன் . அது தான் மனித படைப்பு , மனிதர்கள் , உங்களைப் போன்று பாவமே புரியாத என் கட்டளைகளுக்கு மாறு செய்யவே முடியாத குணாதிசங்கள் கொண்டவர்கள் அல்ல. அவர்கள் தனி சுபாவம் கொண்டிருப்பார்கள்  , என் அதிகாரத்திலிருந்து , ஆற்றல்களிலிருந்து சிறிது அவர்களுக்கு தருவேன் . அவற்றை பயன்படுத்தி அவர்கள் பூமியில் என்னுடைய பிரதிநிதியாக வாழ்வார்கள் என்று அல்லாஹ் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினான். 
              இதைக் கேட்டதும் மலக்குகள் அதிகாரமளிக்கப்பட்ட படைப்பு எனில் அவர்களில் தன் அதிகாரத்தை தீய வழியில் பயன்படுத்துவோரும், பல அட்டூழியங்கள் புரிவோரும் , இறைவனின் அதிருப்தியை ஏற்படுத்துவோரும் இருப்பார்களே ?  இறைவனுக்கு பிரதிநிதியாக செயல் படுவது என்பது எத்தகைய உன்னதமான அந்தஸ்து ? மனிதனால் அதில் குறை ஏற்படலாமே ! அந்த அந்தஸ்தை பெறுவதற்கு  யாவரும் ஆசைப்பட வேண்டும் , இந்த நன்மையில் தான் முந்திக்கொள்ள வேண்டும் , என எண்ணி கொண்டு அதை அல்லாஹ்விடம் வெளிப்படுத்தினார்கள் , யா அல்லாஹ் ! அமைதியான அப் பூமியில் குழப்பங்கள், அட்டூழியங்கள் புரிவோரை , அதிலே ஒருவருக்கொருவர் குத்தி கொலை செய்து இரத்தம் ஓட்டித் திரிவோரையா நீ குடியமர்த்தப் போகிறாய்? உன்னுடைய பிரதி நிதித்துவத்திற்கு நாங்கள் தகுதி பெறமாட்டோமா ? நாங்கள் நொடி பொழுது கூட உனக்கு மாறு செய்யாமல் உன் கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்ற காத்திருக்கிறோம். உன்னுடைய புகழைக் கொண்டு உன்னை நாங்கள் துதிக்கிறோம், உன்னையே நாங்கள் பரிசுத்தப் படுத்துகிறோம். உன் கட்டளைகளை நாங்கள் மீறவே மாட்டோம். எங்களிடம் இத்தகைய தகுதிகள் இருக்கும் போது  பிறகு ஏன் அட்டூழியம் புரியும் ஓர் படைப்பு ? என தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தினார்கள் . அதற்கு அல்லாஹ் அளித்த ஒரே பதில் , நீங்கள் மனிதன் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புள்ளதே என்பதை மட்டுமே பார்க்கிறீர்கள். ஆனால் அவ்வதிகாரத்தை முறையாக பயன்படுத்தும் பொழுது என்னென்ன நலவுகள் உண்டாகும் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். நீங்கள் அறியாத எல்லா அம்சங்களைப் பற்றி நான் அறிந்தவனாக உள்ளேன். மனிதனை படைப்பதில் என்னென்ன இலாபங்கள் உள்ளன என்பதை நீங்களும் காணத்தான் போகிறீர்கள் என பதிலுரைத்தான்.
                 மேற்கண்ட வசனத்தில் நாம் எடுக்க வேண்டிய சில படிப்பினைக்குறிய அம்சங்கள் புதைந்து உள்ளன. அல்லாஹ் ஓர் உயர்ந்த நோக்கத்திற்காகவும், விருப்பத்துடனும் தான் மனிதனை படைத்துள்ளான். அவனை படைப்பதற்கு முன்னதாகவே தன் மலக்குகளோடு அவனைப் பற்றி பிரஸ்தாபித்திருக்கின்றான். மனிதனைத் தவிர வேறு எதைப் பற்றியும் அதை படைப்பதற்கு முன்னதாகவே பிரஸ்தாபித்துக் கொண்டதாக இல்லை. இதிலிருந்து மனிதனின் உயர்வும் மதிப்பும் வெளிபடுகிறது, மனித படைப்பு அந்த அளவுக்கு உயர்ந்தது , மனிதர்களில் அல்லாஹ்வுடைய கட்டளைகளை ஏற்றுக் கொண்டு அதன் படி தானும் நடந்து , பிறரையும் நடக்க வைப்பவர்களே பிரதானமாக இடம் பிடிக்கிறார்கள். மற்றவர்கள் அவர்களின் பெயர்கள் கூறப்படுவதற்கு கூட தகுதி பெற மாட்டார்கள்.  அவர்கள் அல்லாஹ்விடத்தில் சிறிதும் மதிப்பே இல்லாது போய் விடுகிறார்கள். ஒரு வஸ்துவிலுள்ள நல்ல அம்சங்களையே பார்க்க வேண்டும் , அதை வெளிக்கொணர்வதற்கு முயற்சிக்க வேண்டும். தீய அம்சங்களை கண்டு பின் வாங்கி விடக்கூடாது. ரோஜா , முற்களுக்கிடையே தான் முளைக்கிறது. முற்களுக்கு அஞ்சி ரோஜாவையே புறக்கணிப்பது அறிவுடமை அல்ல.
             பூமியில் அல்லாஹ்வுடைய பிரதி நிதித்துவத்திற்கு யார் தகுதி ? மலக்குகளா? மனிதர்களா ? அல்லாஹ்வுக்கு பிரதிநிதியாக இருப்பதன் பொருள் அல்லாஹ்வை வணங்குவது, துதிப்பது, தியானிப்பது என அவனுக்கு தனது பணிவை வெளிப்படுத்துவதுடன் பூமியில் வாழும் சக மனிதர்களோடு, ஜீவராசிகளோடு அல்லாஹ்வின் தன்மைகளான கருணை , அன்பு , நீதம் போன்றவற்றை பிரதிபலிக்க வேண்டும், கோழைத்தனம், நய வஞ்சகம், பொய், சூது, பொறாமை, புறம், கோள், பேராசை போன்ற தீய எண்ணங்களை கலைந்து வீரம், உண்மை, மனசுத்தம், பிறர் நலன் நாடுதல் போன்ற உயர்ந்த நற்குணங்களை தன்னுள் ஏற்படுத்தி வாழ்வதும் , அல்லாஹ் கொடுத்த அறிவை பயன்படுத்தி பூமியின் வளங்களை, ஆற்றல்களை கண்டறிந்து அதை தன்னுடைய, தன் சக மனிதர்களின் வாழ்க்கை உதவிக்காக, வசதிக்காக நியாயமான முறையில் ஈடுபடுத்துவதும் , தன்னுடன் வாழும் சக மனிதர்களுக்கிடையே நீதியை நிலை நாட்டி பூமியில் அமைதியையும், நிம்மதியையும் ஏற்படுத்த முயற்சிப்பதும் போன்ற பெரும் பணிகளை ஆற்றுவதற்கு அல்லாஹ்வின் பிரதி நிதித்துவம் எனப்படும். இவற்றில் பெரும்பாலானவற்றை மலக்குகளால் நிறைவேற்ற முடியாது . காரணம் அவர்களின் இயல்பான சுபாவமே அல்லாஹ்வை சதாவும் துதிப்பது, வணங்குவது, அவன் கூறுபவற்றை நிறைவேற்றுவது, போன்ற பரிசுத்தமான உயர்ந்த அம்சங்களாகும் , அவர்களால் அல்லாஹ்வுடைய கட்டளைக்கு மாறு செய்யவே முடியாது, அவர்களுக்கு ஊண், உறக்கம், இச்சை, போட்டி, பொறாமை, கோபம் , குடும்ப வாழ்க்கை போன்ற எவ்வித உணர்வுகளும் கிடையாது. ஆனால் பூமியில் வாழ்வதற்கு, பூமி மனிதர்களால் செழிப்படைவதற்கு, பூமியில் மனிதர்களுக்கிடையே அல்லாஹ்வின் கட்டளைகள் நிலை நாட்டப்படுவதற்கு இவ்வுணர்வுகள் அவசியம். அவற்றை ஆக்கப்பூர்வமான முறையில் அல்லாஹ்வுடைய விருப்பு, வெறுப்பை முன் வைத்து வெளிப்படுத்தப்பட வேண்டும். இவ்வகையில் மனிதர்களே இப்பணிக்கு தகுதியானவர்கள். மலக்குகளின் இயற்கை அமைப்பு இப்பணிக்கு ஒத்துழைக்காது, இதுவே அல்லாஹ்வின் இயற்கை நியதி, இதை யாரும் கேள்வி கேட்க முடியாது . இதனை அல்லாஹுத்தஆலா மலக்குகளுக்கு உணரச் செய்கிறான். அவர்கள் வழியாக நமக்கும் கற்றுத் தருகிறான். 

              அல்லாஹுத்தஆலா ஆதம் (அலை) அவர்களை படைத்து மனிதர் என்ற ரீதியில் பூமியில் அவர்கள் எதிர் கொள்ள இருக்கும் சகல வஸ்துக்களின் பெயர்கள் அவற்றின் குணாதிசயங்கள் தன்மைகள் யாவற்றையும் கற்றுக் கொடுத்தான். வர இருக்கும் அவர்களின் பின் தோன்றல்கள் யாவருக்கும் அதை அறிந்து , அதனை அடையும் வழிகளை கண்டறிந்து, அவற்றை பயன்படுத்திக் கொள்ளும் படியான அறிவு ஞானத்தையும் வழங்கினான். பின்னர் அவற்றை மலக்குகளுக்கு முன் வைத்து உங்களால் பூமியில் வாழ முடியும் என்ற உங்களின் கூற்றிலும், எண்ணத்திலும் நீங்கள் உண்மையாளர்களாக  இருந்தால் இவற்றிற்கு என்ன பெயர் சொல்லப்படும். இவையெல்லாம் என்ன என்று எனக்கு சொல்லிக் காட்டுங்கள் என அல்லாஹ் கேட்டான். உதாரணமாக பசி என்றால் என்ன? அது ஏற்படும் போது எப்படி இருக்கும்? இச்சை என எதற்கு சொல்வது? என்றெல்லாம் கேள்வி எழுப்பிய போது மலக்குகளால் பதில் கூற முடியவில்லை. காரணம் அது அவர்களின் இயற்கைக்கும் , படைப்புத்தன்மைக்கும் அப்பாற்பட்ட விஷயம். ஆதலால் அவர்கள் கூறலானார்கள், யாஅல்லாஹ்! நீ மகா பரிசுத்தமானவன்! எங்களுக்கு நீ கற்றுத் தந்தவற்றைத் தவிர வேறு எந்த அறிவும் எங்களுக்கு கிடையாது. நீயே சகல வஸ்துக்களைப் பற்றி முற்றிலும் அறிந்தவன் தீர்க்கமான அறிவுடையவன். உன்னுடைய ஒவ்வொரு செயலிலும் ஏதேனும் நுட்பம், தக்க காரணம் இருக்கும் என்று கூறி , பின் வாங்கிவிட்டார்கள். 
           அதன் பின்  அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை அழைத்து, ஆதமே! இதோ இன்னின்ன வஸ்துக்களின் பெயர்களை, அவற்றின் தன்மைகளை இவர்களுக்கு விவரியுங்கள் என்றதும் அவர்கள் அவை ஒவ்வொன்றின் பெயர்கள், அவற்றின் குணங்கள் யாவற்றையும் அவர்களுக்கு விவரிக்கலானார்கள். இந்த தகுதிதான் உலகிலே வாழ்வதற்கும்,  அதன் சக்திகளை தனது பயன்பாட்டிலே கொண்டு வருவதற்கும் தேவை. அதை ஹஜ்ரத் ஆதம் (அலை) சரியாக நிரூபித்தபோது அல்லாஹ் கூறினான் , நான் வானம் பூமியின் மறைவான வஸ்துக்களைப் பற்றியெல்லாம் முற்றிலும் அறிந்தவன் என்றும், நீங்கள் தெளிவாக வெளிப்படுத்திய கருத்துகள், வெளிப்படுத்தாது உள்ளுக்குள்ளேயே மறைத்து வைக்கும் ரகசியங்கள் யாவற்றை பற்றியும் முற்றிலும் அறிந்தவன் என்பதை நான் உங்களுக்கு கூறவில்லையா? ஆகவே நான் செய்பவற்றில் கூறுபவற்றில் கண்டிப்பாக தக்க காரணம் இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் கூறினான்.

         ஆக இப்பூமியில் அல்லாஹ்வுடைய பிரதி நிதியாக இருந்து செயல்படுவதற்கு மலக்குகள் தகுதி பெறுகிறார்களா ? அல்லது மனிதர்களா ? என்ற தகுதி போட்டியில் படைப்பு, அறிவு ஆகியவற்றை முன் வைத்து மலக்குகளைக் காட்டிலும் மனித இனமே தகுதி பெறுகிறது என்பதும் நிரூபணமாகிவிட்டது. மனிதன் உலகிலே வருவது தான்விரும்பிய வாழ்க்கை வாழ வரவில்லை. அல்லாஹ்வின் பிரதி நிதியாக , அவன் விரும்பும் வாழ்க்கை வாழ வந்துள்ளான் என்பதும் தெளிவாகிவிட்டது. அத்துடன் அல்லாஹ் நிறுத்திக் கொள்ளவில்லை, அல்லாஹ்வின் பிரதிநிதியாக உலகிற்கு செல்ல இருக்கும் மனிதன் அறிவளவில் பலமிக்கவனாக படைக்கப்பட்டிருந்தாலும் , உடலளவில் ஓரளவு மட்டுமே பலம் கொண்டவன், இவனை விட பலமிக்கவையும், வலிமை கொண்டவையும் பூமியில் உள்ளன. அவற்றை எதிர் கொண்டுதான்  மனிதன் வாழவேண்டும் . எனவே மனிதனின் வசதிக்காகவும், அவனுக்கு வேலையை எளிமைப்படுத்தவும் அல்லாஹ் ஓர் ஏற்பாட்டை செய்கிறான். அதுதான் உலகம் முழுவதிலுமுள்ள வஸ்துக்கள் மனிதனுக்கு அடி பணிய வேண்டும். வசமாக வேண்டும் , மனிதனுக்கு சேவை புரிய வேண்டும் , இந்த ஏற்பாட்டையும் அல்லாஹ் அப்போதே மனிதனுக்கு செய்து கொடுத்துவிடுகிறான். இதைப்பற்றியே அடுத்த வசனம் பேசுகிறது.
              மேலும் நாம் அப்போது எல்லா படைப்புகளுக்கும் ஓர் உத்தரவு பிறப்பித்தோம் , எந்த அளவுக்கு என்றால் பரிசுத்த படைப்பான மலக்குமார்களுக்கும் கூட நாம் கூறினோம் , நீங்கள் யாவரும் ஆதம் (அலை) அவர்களுக்கு அடிபணியுங்கள் , அவருக்கு முன்னால் உங்களின் உயர்வை காட்டாதீர்கள் , அவருடன் நேசம் பாராட்டுங்கள் ,  இது என்னுடைய திருக்கரங்களால் படைக்கப்பட்ட படைப்பு , இவருக்கு எல்லா வகையிலும் ஒத்தாசையாய் இருங்கள். அவருடைய காரியத்தில் உதவி புரியுங்கள் என்று நாம் கூறியதும் எல்லாமே அவருக்கு அடிபணிந்தன. வானம் , பூமி , சூரியன் சந்திரன், காற்று , நீர் , நெருப்பு என யாவுமே அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று தம் பணிவை மனிதருக்காக வெளிப்படுத்தின. அதன் வெளிபாடுதான் இன்று வரை உலகில் கோடிக்கணக்கான ஜீவராசிகள் இருப்பினும் அவை யாவற்றிற்கும் அரசனைப் போல் மனிதன் திகழ்கிறான். அவை யாவும் மனிதனுக்கு சேவை புரிகின்றன. நன்கு வலுவுள்ள திடகாத்திரமான ஒட்டகமும் கூட அதன் மூக்கிலே கயிற்றை மாட்டி ஓர் சிறுவன் அதனை இழுத்துச் சென்றாலும் அடிபணிந்து அவன் பின்னால் செல்லும், இவ்வாறே எல்லா பிராணிகளும் , பூமியுடைய வளங்களும் திகழ்கின்றன , அவற்றை மனிதன் எவ்வாறெல்லாம் தன் வசதிக்கு வளைத்துக் கொள்கிறான் என்பது கண்கூடே, இதே நிலைதான் ஒவ்வொன்றிலும் காணப்படும் , காரணம் அல்லாஹ் அவற்றை மனிதனுக்காக அடிபணியச் செய்திருக்கின்றான். படைப்புகள் யாவும் மனிதனுக்காக தன் பணிவையும், நட்பையும் வெளிபடுத்திய போது  ஒரு படைப்பு மட்டும் மனிதனுக்கு தன் வெறுப்பையும் விரோதத்தையும் வெளிப்படுத்தியது. அவன் தான் இப்லீஸ், ஆம் இப்லீஸைத் தவிர யாவும் பணிந்துவிட்டன. அவனோ பணியுங்கள் என்ற அல்லாஹ்வின் கட்டளையை மறுத்தான், பணியவில்லை , காரணம் அவன் பெருமை கொண்டான், ஓர் தாழ்ந்த படைப்புக்கு உயர்ந்த படைப்பான நான் எப்படி பணிவது? அது நடக்காது என அரசனுக்கெல்லாம் அரசனான அல்லாஹ்விற்கு முன் பெருமையடித்தான். மேலும் அவன் மறுப்பவர்களில், காபிர்களில் ஒருவனாக இருந்தான். 
              இதன் மூலம் மனித படைப்பின் ஆரம்ப புள்ளியிலேயே ஷைத்தான்  மனிதனுக்கு விரோதியாகிவிட்டான் , அந்த பரம விரோதியின் சூழ்ச்சி வலையிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள வேண்டுமென்று மனிதர்கள் யாவருக்கும் அல்லாஹ் உணர்த்துகிறான். ஆனால் மனிதர்களில் பெரும்பாலானோர் இதை காதில் போட்டுக் கொள்ளாமல் ஷைத்தான் இழுத்துப் போகும் வழிகளிலேயே செல்கின்றார்கள். அல்லாஹ் ஷைத்தானுடைய சூழ்ச்சியை விட்டும் நம்மை பாதுகாப்பானாக , அவனுக்கு முற்றிலும் அடிபணிந்த நல் அடியார்களில் நம்மை சேர்த்திடுவானாக – ஆமீன்
             முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களை படைத்து, அவர்களை தன் பிரதிநிதியாக ஆக்கப் போவதாக அறிவித்து , அதற்கான முழு தகுதிகளையும் அவர்களுக்குள் ஏற்படுத்தி , மலக்குகள் உட்பட பிற படைப்புகளையும் அவர்களுக்கு பணிய வைத்து மேன்மைப்படுத்திய இறைவன் , அவர்களை உடனடியாக பூமிக்கு அனுப்பிடவில்லை. அல்லாஹ்வுடைய விதியில் ஒவ்வொன்றிற்க்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் . அதன் பின்பே காரியம் நடை பெரும் , இது மனிதர்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்திய விதி, ஆதலால் அல்லாஹ் அவர்களுக்கு துணையாக ஹவ்வா (ரலி) என்ற பெண்ணையும் படைத்து இருவரையும் சுவனத்தில் ஜோடியாக இருக்கச் செய்தான். பின்னர் அவர்களிருவரும் எவ்வாறு அதிலிருந்து வெளியேற்றப்பட்டு பூமிக்கு வந்தார்கள் என்பதைப் பற்றியே அடுத்த வசனங்கள் விவரிக்கின்றன.
            மேலும் நாம் கூறினோம் , ஆதம் (அலை) அவர்களே!  நீங்களும் உங்கள் மனைவி ஹவ்வாவும் இந்த சுவனத்தில் தங்கியிருங்கள் , இதில் நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள் , உங்களுக்கு எவ்வித தடையுமிருக்காது. எங்கும் செல்லலாம், எப்படியுமிருக்கலாம், எதையும் உண்ணலாம் , ஆனால் இந்த மரத்தின் பழங்களை மட்டும் சுவைப்பது மட்டுமல்ல , அதன் அருகில் கூட சென்றுவிடாதீர்கள். இதைத் தவிர வேறு உங்களுக்கு எவ்வித கட்டுபாடும் கிடையாது. இம்மரத்தின் பக்கம் மட்டும் நெருங்காதீர்கள். அப்படி நெருங்கினீர்களானால் நீங்கள் அநீதமிழைத்தவர்களாகி விடுவீர்கள். கவனமாக இருங்கள் என அல்லாஹ் கூறினான்.
                 அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் இருவரும் எவ்வித கவலையும் , குறையுமின்றி சந்தோசமாக தம் நாட்களை சுவனத்திலே கழித்து வந்தார்கள். பல வருடங்கள் உருண்டோடியிருக்க வேண்டும். அல்லாஹ் எச்சரித்த எச்சரிக்கை மறந்து போனது. இன்னொரு புறம் ஆரம்ப நாள் முதல் இவர்களின் மீது விரோதமும், பொறாமையும் கொண்டிருந்த ஷைத்தான் இவர்களை எப்படியாவது சுவனத்திலிருந்து, அதன் இன்பத்திலிருந்து வெளியேற்றி விட வேண்டுமென்ற வெறியிலே அதற்கான சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து காத்திருந்தான். இந்நிலையில் ஒரு நாள் அவர்களிடத்தில் சென்று அம்மரத்தைப் பற்றிய பொய்யான சிறப்புகளையும், மேன்மைகளையும் எடுத்துக் கூறி அவர்கள் இருவரையும் நம்ப வைத்து இறுதியாக அம்மரத்தின் காரணமாகவே அவர்களை தடம் பிறழச் செய்து அவர்களிருவரும் இதுகால் வரை அனுபவித்து வந்த இன்பம், மகிழ்ச்சி நிரம்பிய அச்சூளலிருந்து அவர்கள் இருவரையும் வெளியேறச் செய்து விட்டான். சுவனம் என்பது அல்லாஹ்வுடைய சந்தோசத்திற்கும், பொருத்தத்திற்கும் அடையாளமாக திகழும் இடம் . அங்கே அல்லாஹ்வுடைய அதிருப்தியுடன் இருக்க இயலாது , எனவே நாங்கள் கூறினோம் நீங்கள் யாவரும் சுவனத்திலிருந்து பூமிக்கு இறங்கிவிடுங்கள். இனி சுவனத்தில் உங்களால் வசிக்க இயலாது ,  ஷைத்தானே ! நீயும் சேர்ந்து இவர்களுடன் பூமிக்கு சென்றுவிடு , பூமியில் உங்களில் சிலர் சிலருக்கு விரோதியாக இருப்பீர்கள். உங்களுக்கும், ஷைத்தானுக்கும் இடையேயான விரோதம் பூமியிலும் தொடரும் என்பதை நினைவில் கொண்டு அவனின் சூழ்ச்சி வலையிலிருந்து தப்பித்து இருங்கள். மேலும் நீங்கள் பூமியில் கவனிப்பாரற்று விடப்படமாட்டீர்கள். மாறாக உங்களுக்கு பூமியில் வாழ்வதற்கேற்ற தங்குமிடமும் , குறிப்பிட்ட காலம் வரை வாழ்வதற்கான  வசதியும் உண்டு. அங்கு போய் வாழுங்கள் என அல்லாஹ் மனித சஞ்சாரத்தையே பூமியில் இறங்கச்செய்தான் , இது நாள் வரை அல்லாஹ்வை அதிருப்தியுற்று கண்டிராத ஆதம் (அலை) மும் , ஹவ்வா (ரலி)வும் திடுக்கிட்டு போனார்கள். செய்வதறியாது திகைத்தார்கள் , ஷைத்தான் தம்மை நன்கு ஏமாற்றி விட்டதை உணர்ந்தார்கள் , தம் தவறை நினைத்து வருந்தினார்கள் . 
            தாம் சுவன வாழ்க்கையிலிருந்து , பூமியின் சிரமம் நிறைந்த வாழ்க்கைக்கு தள்ளப்பட்டு விட்டோமே என்ற துக்கத்தை விட அல்லாஹ் தம் மீது அதிருப்தி கொண்டு விட்டானே என்ற வருத்தத்தைதான் அவர்களால் தாங்க இயலவில்லை , முதலில் அல்லாஹ்வின் அதிருப்தியை போக்க வேண்டும் , அதற்கு என்ன வழி ? என்பதைதான் யோசித்தார்கள் , அல்லாஹ்வின் கருணையை பாருங்கள் , தன்னுடைய அதிருப்தியை போக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ்வே அவர்களுக்கு கற்றுக்கொடுத்தான்.
       எனவே ஆதம் அலை தன் தவறுக்காக இறைவனிடம் எவ்வாறு மன்னிப்பு வேண்ட வேண்டும் என்பதற்காக , தம் இரட்சகனிடமிருந்தே மன்னிப்பு வேண்டும் சில வார்த்தைகளை கற்று கொண்டு அல்லாஹ்விடத்தில் வருந்தி தம் தவற்றை மன்னிக்க வேண்டினார்கள். ஆகவே அல்லாஹ்வும் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டான். அல்லாஹ்வின் அதிருப்தியும் நீங்கியது . காரணம் அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவனும், அடியார்களின் நிலை கண்டு இரங்கக் கூடியவனுமாக இருக்கிறான். அவன் கல்நெஞ்சக்காரன் இல்லை, அவன் அதிருப்தியும் கொள்கிறான் , அடியார்கள் மன்னிப்பு வேண்டினால் அவர்கள் மீது இரங்கி அவர்களுக்காக கருணையும் கொள்கிறான் . இவ்வாறுதான் சுவனத்தில் வாழ்ந்த மனித சஞ்சாரம் பூமியில் வாழத்தொடங்கியது . இதுதான் மனிதன் பூமிக்கு வந்த வரலாறு .  
             இதில் நாம் சிந்தித்துணர வேண்டிய பல்வேறு படிப்பினைகள் உள்ளன. மனிதர்களின் சொந்த வீடு சுவனம் , உலகில் நற்காரியங்கள் புரிந்து மீண்டும் அவ்வீட்டை அடைய வேண்டும் . ஷைத்தான் பாவத்தை அதன் தோற்றத்தில் காட்டமாட்டான் நன்மையாகவும், இன்பமாகவும் காட்டி அதை செய்ய வைக்க முயற்சிப்பான். பாவத்திற்கு பின்னால் மறைந்திருப்பது வருத்தமும், கைசேதமும்தான், பாவம் நிகழ்ந்து விட்டால் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் நாமும் பிறரின் தவறை மன்னித்துவிடுகின்ற குணங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ் அமல் செய்ய தவ்பீக் செய்வானாக –ஆமீன் !
             சுவனவாழ்விலிருந்து பூமியின் சிரமங்கள் நிறைந்த வாழ்வுக்கு தள்ளப்பட்டது முதல் மனிதர் சந்தித்த எவ்வளவு பெரிய சோகம் அது ? இருப்பினும் அவர் சோர்ந்து விட வில்லை , சறுக்கி கீழே விழுந்த பின் மீண்டும் எவ்வாறு எழுந்து நிற்பது என யோசிக்கலானார் , எவ்வளவு பெரிய உயரத்திலிருந்து விழுந்தாலும் மீண்டும் ஏறி அந்த உயரத்தை அடைய முடியும் என்ற மன தைரியத்தை அல்லாஹ் முதல் மனிதருக்கு கற்றுக்கொடுத்திருந்தான் , அத்துடன் அதற்கு வழியும் காட்டினான் ,
             மனிதர்களே ! நீங்கள் யாவரும் சுவனத்திலிருந்து பூமிக்கு இறங்கிவிடுங்கள் என்று நாம் கூறினோம் , ஆகவே ஒட்டு மொத்த மனித சஞ்சாரமும் பூமிக்கு இறங்கிவந்து விட்டது , பூமியில் வந்துவிட்டதால் அவர்களுக்கும், படைத்தவனுக்குமிடையேயான தொடர்பு விட்டு போகாது , எனவே  பூமியில் நீங்கள் விரும்பிய கட்டுபாடில்லாத வாழ்க்கை வாழ இயலாது , மாறாக என்னிலிருந்து உங்களுக்கு வழிகாட்டுதல் வரும் , உங்களிலிருந்தே நல்ல மனிதர்களை தேர்ந்தெடுத்து , அவர்களுக்கு என்னுடைய தூதுச் செய்திகளை மலக்குகள் மூலம் தெரிவிப்பேன் , அவர் உங்கள் யாவருக்கும் என் செய்திகளை தெரிவிப்பார். பின்னர் உங்களில் யார் என்னுடைய வழிகாட்டுதலை பின்பற்றி உலகில் வாழ்வார்களோ அவர்களுக்கு எதிர் வரும் வாழ்வு பற்றிய  எவ்வித பயமும் கொள்ள வேண்டிய தேவை இருக்காது. மேலும் அவர்கள் கடந்து போன வாழ்வை எண்ணி  கவலைக்குள்ளாகவும் மாட்டார்கள்.  எந்த சுவனத்திலிருந்து பூமிக்கு வந்தாரோ மீண்டும் அதே சுவனத்தை பெற்று இன்புறுவர் , பின்பு அதிலிருந்து ஒரு காலும் வெளியேற்றப்பட மாட்டார்கள் .அதிலேயே அவர்கள் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள் . 
                மேலும் எவர்கள் என்னையே ஏற்றுக் கொள்ள மறுத்து, அவர்களுக்கு நான் காட்டிய வழிகாட்டுதல்களை, நமது உறுதியான அத்தாட்சிகளை பொய்ப்பித்து உலக வாழ்க்கையை தொலைத்து, என் வெறுப்புக்கும், கோபத்திற்குமுறிய விதத்தில் வாழ்வார்களோ அவர்கள் மரணத்திற்குப்பின் நரகில் நுழைவார்கள். அவர்கள் நரக வாசிகள், அதிலே அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
             பூமிக்கு வந்த பின் மனிதன் தட்டளிந்து கொண்டிருந்த போது அல்லாஹ் கூறிய இந்த முதல் செய்தி எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது ! என்பதை ஒவ்வொரு மனிதரும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளார் , ஆக இவ்வுலக வாழ்க்கை என்பது சுவனத்திற்கான தகுதிகளை பரிசோதிப்பதற்காக மனிதனுக்கு தரப்பட்டுள்ள வாழ்க்கையாகும் , எனவே மனிதர்கள் இவ்வுலகில் இறைவனின் வழிகாட்டுதல்கள் படி நடந்து தன்னுடைய தகுதியை நிரூபிக்க வேண்டும் , அல்லாஹ் இதை உணர்ந்து செயலாற்ற தவ்பீக் செய்வானாக , ஆமீன் . 

Tuesday, November 29, 2016

சூரா பகரா (3)



                   குர்ஆனின் ஆரம்பத்திலிருந்து இதுவரை உலக மனிதர்களை அல்லாஹ்வை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள், ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள், தடுமாற்றத்தில் இருப்பவர்கள் என்று மூன்று வகைப்படுத்தி அவரவர்களின் செயல்பாடுகளையும், அடையாளங்களையும் எடுத்துரைத்து வந்த இறைவன் , குர்ஆனின் அடிப்படை வாதமான ஏகத்துவத்தின் ஆதாரங்களை அடுத்த வசனங்களில் அடுக்கிக்கொண்டே போகிறான்  ,
يَاأَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (21) الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ (22) وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (23) فَإِنْ لَمْ تَفْعَلُوا وَلَنْ تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ (24) وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا قَالُوا هَذَا الَّذِي رُزِقْنَا مِنْ قَبْلُ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ (25) إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي أَنْ يَضْرِبَ مَثَلًا مَا بَعُوضَةً فَمَا فَوْقَهَا فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا وَمَا يُضِلُّ بِهِ إِلَّا الْفَاسِقِينَ (26) الَّذِينَ يَنْقُضُونَ عَهْدَ اللَّهِ مِنْ بَعْدِ مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ أُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ (27) كَيْفَ تَكْفُرُونَ بِاللَّهِ وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ (28) هُوَ الَّذِي خَلَقَ لَكُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ (29)

            ஒட்டு மொத்த மனித வர்க்கத்தினர்களே! நீங்கள் ஒரே இறைவனான உங்களின் இரட்சகனை , உங்களை பரிபாலிப்பவனை வணங்குங்கள்.
            வணக்கம் என்பது , ஒருவரிடமிருந்து தனது பலனை எதிர்பார்த்து அவரின் மீது உச்சகட்ட அன்பு, எல்லை மீறிய மரியாதையோடு அவருக்கு முன்னால் தன்னை ஒட்டு மொத்தமாக பணியச் செய்வதற்கு சொல்லப்படும் வார்த்தையாகும் , இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒன்றிற்கு தலை வணங்குபவனாக, அடிபணிபவனாகவே இருக்கிறான், சிலர் சிலைகளுக்கு, சிலர் தலைவர்களுக்கு, சிலர் நல்லோர்களுக்கு சிலர் தன் சக படைப்புகளுக்கு, சிலர் தனது மனோ இச்சைகளுக்கு சிலர் காசு பணத்திற்கு என ஏதாவது ஒருவகையில் பிறவற்றிற்கு தன்னை அடிமைப்படுத்திக் கொள்கிறார்கள் , அவ்வாறு ஒருவருக்கு முன் தன்னை அடிமைப் படுத்தி கொள்வதற்கு அவரிடம் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை அவற்றை வணங்குவதற்கு முன் மனிதன் சிந்தித்துப்பார்ப்பதில்லை . ஆனால் தூயவனான அல்லாஹ்வை தன் வணக்கத்திற்குறியவனாக ஏற்றுக் கொள்வதற்கு அவனிடம் அனைத்து அம்சங்களும் நிரப்பமாக உள்ளன.அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடத்திலும் அவ்அம்சங்கள் முழுமையாக இல்லை.
           முதலாவது, உங்களின் இரட்சகன் எத்தகைய கருணைகளை உங்கள் மீது பொழிந்திருக்கிறான் என்பதை சிந்தியுங்கள் , அவனே உங்களையும் படைத்தான், உங்களுக்கு முன்பு இப்பூமியில் வாழ்ந்த அத்தனை மனிதர்களையும் படைத்தான். உலகில் எந்த மூலையிலும் , எந்த காலத்திலும் வாழ்ந்த எத்தகைய மனிதனாக இருந்தாலும் யாவரும் அவன் படைப்புகளே . அவன் உங்களை படைத்திருக்காவிட்டால் வேறு யாரும் உங்களை படைத்திருக்க மாட்டார்கள் , நீங்கள் உருவாகி இருக்கவே மாட்டீர்கள். உங்களுக்கும் சரி, உங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்களுக்கும் சரி  உருவாக்கம் என்பதையே அவன்தான் தந்தான் , பிறகு அவனை விட்டுவிட்டு அவனால் படைக்கப்பட்ட ஒரு படைப்பை  வணங்குவது முறையாகுமா ? எனவே உங்கள் வணக்கங்கள் முழுவதையும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்யுங்கள். அப்படியான மனத் தூய்மையுடன் கூடிய வணக்கத்தின் பலாபலன் நீங்கள் பயபக்தி கொண்டவர்களாக ஆவீர்கள். அது உங்களை உலக நெருக்கடிகளிலிருந்தும் , மறுமையின் வேதனையிலிருந்தும் விடுதலை தரும்.
          இரண்டாவது , நம் இரட்சகன் நமக்கு உருவாக்கத்தை தந்ததோடு மட்டும் நில்லாமல் நாம் அழிந்து போகாது உயிர் வாழ்வதற்குறிய அனைத்து அம்சங்களையும், வசதிகளையும்  இவ்வுலகிலே அவனே ஏற்படுத்தி தந்தான். அதில் அவனோடு யாரும் கூட்டு கிடையாது. அல்லாஹ் கூறுகிறான் உங்களின் இரட்சகன் எத்தகைய கருணை கொண்டவன் என்றால் அவனே உங்களின் வசதிக்காக இப்பூமியை விரிப்பாக ஆக்கியுள்ளான். ஆம் , மனிதனை படைத்து எங்கேயாவது போய் உட்கார்ந்து கொள் என அவமரியாதையுடன் நடத்தப்படுபவர் போல் அல்லாமல் விரிப்பை விரித்து கண்ணியப்படுத்தி தகுந்த இடத்தில் அமர வைக்கப்படும் விருந்தாளியை போல் அல்லாஹ் மனிதனை படைத்த பின் அவன் அமர  பூமியை விரித்து தந்தான் , மனிதன் அமர்வதற்கு மிகவும் ஏதுவான இடமாக பூமி அமைந்துள்ளது , மனிதனின் தேவைக்கு தக்கவாறு பூமி வளைந்து கொடுக்கிறது , அதை தோண்டி விவசாயம் செய்வது , வீடுகள் கட்டுவது, சாலைகள் அமைப்பது, கழிவுகளை கொட்டுவது, மரணித்தவர்களை புதைப்பது என மனிதன் ஆற்றும் எல்லாவற்றையும் பூமி தாங்கிக் கொள்கிறது. எளிதில் உடைக்க முடியாத இரும்பாகவோ , கட்டிடத்தை பிடிக்காமல் சரிந்து விழும் புதை மணல் நிறைந்த பகுதியாகவோ பூமி இருப்பதில்லை , இது எத்தனை பெரும் கருணை ?
           மூன்றாவதாக , உங்களுக்காகவே வானத்தை முகடாக ஆக்கியுள்ளான். ஓர் வீட்டிற்கு முகடு அமைந்திருப்பதைப் போல பூமி என்ற வீட்டிற்கு வானம் முகடாக விளங்குகிறது  , பிரமாண்டமான விளக்குக்கு இணையாக  சூரியன், சிறு விளக்குக்கு இணையாக  சந்திரன்,  மின் விசிறிகளுக்கு இணையாக காற்று மண்டலம் என மனிதன் வாழ்வதற்கு அத்தியாவசியமான படைப்புகள் யாவும் வானிலே  அல்லாஹ்வால்  ஏற்படுத்தப்பட்டுள்ளன.
           நான்காவதாக , படைத்த அந்த வானத்திலிருந்து உங்களின் நீர்த்தேவைக்காகவே மழையையும் பொழியச்செய்தான்  பின்னர்  , அம்மழை நீரை பூமி உள்வாங்கச் செய்து அதைக் கொண்டு உங்களின் உணவுத்தேவைக்காக தானிய வகைகளையும், பழவகைகளையும் அதிலிருந்து முளைக்கச் செய்தான். அந்நீரை பருகி , அவ்வுணவை உட்கொண்டு நீங்கள் உயிர் வாழ்வதற்கான ஆற்றல்களை பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் , சுப்ஹானல்லாஹ் ! இந்த நீண்ட நெடிய , பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்த அந்த அல்லாஹ் எவ்வளவு பெரிய கருணையாளன் ! இவற்றையெல்லாம் நீங்கள் எண்ணிபார்க்க வேண்டாமா ? மேலே அடுக்கிய அத்தனை ஏற்பாடுகளையும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாராவது செய்திருக்க முடியுமா ? அவன் இந்த  ஏற்பாடுகளை செய்து தந்திருக்காவிட்டால் வேறு யாரால் செய்து தர முடியும் ? இவைகளே வணங்கப்படும் ஒருவனிடம் இருக்க வேண்டிய அம்சங்கள் , இவை அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடம் உள்ளது ? நீங்கள் இவற்றையெல்லாம் நன்றாக அறிந்திருக்கிறீர்கள் , எனவே  அல்லாஹ்வுக்கு இணையாளர்களாக யாரையும் ஆக்காதீர்கள் . அவனை  மட்டுமே வணங்குங்கள் .
            இது தான் இஸ்லாத்துடைய ஆணித்தரமான, அடிப்படையான ஏகத்துவ கொள்கை. அல்லாஹ்வுக்கு மட்டுமே தலை வணங்க வேண்டும். அவனுக்கு சமமாக, இணையாக யாரையும் வைக்க கூடாது . அல்லாஹ் நம் மரணம் வரை நம்மை இக்கொள்கையின் மீது நிலைக்கச் செய்வானாகஆமீன் !
               இதை அடுத்து பொதுவாக எல்லா மனிதர்களின் உள்ளத்திலும் அல்குர்ஆன் குறித்து எழக்கூடிய சந்தேகங்களுக்கு  பதில் தருகிறான். அதாவது அல்குர்ஆன் தூய அல்லாஹ் அருளிய வேதம்தான் என்பதற்கு என்ன ஆதாரம் ? என்பதுதான் அது .
              ஓ மனிதர்களே ! நீங்கள் நாம் நம்முடைய அடியாரான முஹம்மது (ஸல்) அவர்களின் மீது இறக்கியருளிய திருக்குரானின் வசனங்கள் பற்றி, அது கூறும் செய்திகள் குறித்து இவை உண்மையாகவே தூய இறைவனின் வார்த்தைகள் தானா ? என்ற  தடுமாற்றத்திலும், சந்தேகத்திலும் இருப்பீர்களானால் நீங்கள் தாராளமாக முன் வந்து திருக்குர்ஆனை படித்துப் பாருங்கள் ,  அதன் ஒரு அத்தியாயத்தையாவது வாசித்துப் பாருங்கள். அது தரும் பொருள், அது உணர்த்தும் பாடம், அது காட்டும் சீரான வழி, இலக்கிய நயத்திலும், மொழிப்புலமையிலும் அதன் உயரம் , அவை அருளப்பட்ட பிரதேசம், அது யார் மீது இறக்கப்பட்தோ அவரின் வாழ்வியல் சூழ்நிலைகள் , அவரின் பண்புகள் போன்ற அம்சங்களையெல்லாம் சேர்த்து வைத்து நன்றாக சிந்தியுங்கள் , ஆராயுங்கள் . உங்களின் ஆய்வின் முடிவு , உண்மையிலேயே, எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் இவை யாவும் அகில உலக அதிபதி உலகத்தார்களோடு பேசும் பேச்சுக்கள் தான் என்றே  இருக்கும் நீங்கள் நடு நிலையாளர்களாக இருந்தால். அவ்வாறில்லாது நீங்கள் நன்கு ஆராய்ச்சி செய்து இது இறைவனின் வசனங்கள் கிடையாது , அரபு நாட்டில் பிறந்த முஹம்மது என்பவர் கற்பனைகள் செய்து கூறியவைகள்தான் இவை , இவை மனித வார்த்தைகள் தானே யொழிய இறைவார்த்தைகள்  கிடையாது என்ற முடிவுக்கு நீங்கள் வந்தால்  உங்களை நான் சவாலுக்கு அழைக்கிறேன். வாருங்கள் , இவை  மனிதரே உருவாக்கியவை என்றிருந்தால் நீங்களும் மனிதர் தாமே , உலகிலே வல்லவனுக்கு வல்லவன் இருக்கத்தானே செய்வார். ஒரு அறிவாளி படைத்த படைப்புக்கு மேலான படைப்பை மற்றொரு அறிவாளி முன் வைத்து அவரை தோற்கடிப்பாரே அது போல நீங்களும் முஹம்மதை தோற்கடிக்க , இத்திருக்குர்ஆன் முழுக்க அல்ல அதன் ஏதாவது ஒரு சிறிய அத்தியாயத்தைப் போன்றாவது ஒன்றை உருவாக்கி கொண்டு வாருங்கள். அது குர்ஆனுடைய கருத்துக்களை விட மேலானதாக அல்லது சமமானதாகவாவது இருக்க வேண்டும் . அதை உலக அரங்கிலே நிரூபிக்கவும் வேண்டும். உங்களால் தனித்து நின்று இதனை செய்ய இயலவில்லையானால் பரவாயில்லை , உங்களின் உதவியாளர்கள் , நண்பர்கள் , அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட உங்களின் கற்பனை தெய்வங்கள் என யாரை வேண்டுமானாலும் உதவிக்கு அழைத்துக் கொண்டு குர்ஆனுக்கு சமமான ஒரு சிறிய அத்தியாயத்தையாவது கொண்டு வாருங்கள்
திருக்குர் ஆன் இறைவசனங்களல்ல, மனித கருத்துக்கள் தான் என்ற உங்களின் கூற்றில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதை செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாமல் போவீர்களானால் இனி இரண்டே வழிதான் இருக்கின்றது, ஒன்று தன்னுடைய பிடிவாதத்தையும், வீம்பையும் விட்டு விட்டு அல்லாஹ்வுடைய தூய்மையான உண்மையான குர்ஆனின் வசனங்களை மனதார ஏற்றுக் கொண்டு பரிபூரண முஸ்லிமாகுங்கள். அது தான் உங்களுக்கு மிக நல்லது. ஏனெனில் கண்டிப்பாக நிச்சயமாக உங்களால் குர்ஆனுக்கு நிகரான எந்த ஒரு சின்ன அத்தியாயத்தையும் கொண்டு வரவே முடியாது. அல்லாஹ்வின் இந்த வார்த்தை கூறப்பட்டு இத்துடன் 1400 வருடங்களுக்கு மேல் கழிந்து விட்டது. இது வரை இந்த சவாலை முழுமையாக எதிர் கொண்டு செய்து காட்டியவர் ஒருவருமில்லை. இன்ஷா அல்லாஹ் இனி கியாமத் நாள் வரை யாராலும் இந்த சவாலை எதிர் கொள்ளவே முடியாது . ஆகவே இது இறைவனின் வார்த்தைகள் தான் என்பது நிரூபணமாகிவிட்டது . அதை ஏற்பது தான் முறை , இல்லையென்றால் பிறகு இரண்டாவது வழி உங்களுக்கு நரகை பற்றி எச்சரிக்கிறேன் , நீங்கள் கொழுந்து விட்டெரியும் நரகிலே நிரந்தரமாக புகுவீர்கள் என்பதை பயந்து கொள்ளுங்கள். அந்நரகத்தின் நெருப்பு உலக நெருப்புகளைப் போல விறகு, எண்ணை போன்றவற்றைக் கொண்டு எரியூட்டப்படாது, மாறாக அந்நரகத்தின் கடுமை எத்தகையதென்றால் அதன் எரிபொருளே மனிதர்களும், அவர்கள் வணங்கிய சிலை கற்களும் தான். அந்நரகம் உலகிலே அல்லாஹ்வையும், அவனுடைய தீனையும் நிராகரித்து வாழ்பவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் நம்மை நரகை விட்டும் பாதுகாத்து மேலான சுவனத்தில் புகச்செய்வானாக- ஆமீன்.
                  இத்தகையோர்களுக்கு நேர் மாற்றமாக உலகிலே வாழும் போது எவர்கள் அல்லாஹ்வின் மீது முழுமையாக விசுவாசம் கொண்டு , அவனுடைய அனைத்து கட்டளைகளையும் மனப்பூர்வமாக ஏற்று அதன்படி நல்ல அமல்களை, சிறந்த காரியங்களை ஆற்றி வழ்வார்களோ அத்தகைய பாக்கியவான்களுக்கு பல வகையான சுவனச் சோலைகள் காத்திருக்கின்றது, இதில் எவ்வித மாற்றமுமில்லையென்ற சுபச் செய்தியை அவர்களுக்கு நீங்கள் தெரிவித்து விடுங்கள். அச்சுவனச் சோலைகளின் இடையே நீரறுவிகள் ஒளித்தோடிக் கொண்டே இருக்கும். இதனால் சுவனம் எப்போதும் பசுமையாகவும் செழுமையாகவுமே காட்சி தரும் , மனித மனம் விரும்பாத எவ்விதமான வறட்சியோ வெப்பமோ அங்கே பார்க்க முடியாது ,  தொழுகையோ மற்ற அமல்களோ புரிய வேண்டுமின்ற எவ்வித கட்டளையும் அங்கே  இருக்காது . அச்சுவனத்து சோலைகளில் அவர்கள் விதவிதமான உணவுகள், பழவகைகள் கொடுக்கப்படுவார்கள். அதனை அவர்கள்  இன்பத்துடன் புசிப்பார்கள். எவ்வித கவலையும் அங்கு இருக்காது. இவர்கள் உணவைத் தேடிச் செல்லவோ, தானே எடுத்து வைத்து உண்ண வேண்டுமென்ற நிலையோ கூட அங்கு இருக்காது , மாறாக இவர்களை கண்ணியமான விருந்தாளிகள் போல அமர வைத்து சுவர்க்கப் பணியாளர்கள் இவர்களுக்கு பரிமாறுவார்கள். அவர்களுக்கு சுவனத்துடைய பழவகையிலிருந்து ஏதேனும் ஒன்றை உண்ணக் கொடுக்கப்படும் போதெல்லாம் ஆச்சரிய மேலிட்டவர்களாக, வியப்புடன் இது முன்னர் எங்களுக்கு அளிக்கப்பட்டதே , அது தானே? தாருங்கள் உண்ணலாமென வேண்டுவார்கள் , அவர்கள் ஒன்றொயொன்று ஒத்த பழவகைகளை கொடுக்கப்பட்டிருப்பார்கள், பார்ப்பதற்கு ஒரே வகை பழங்களை போல்   இருக்கும் , ஆனால் சுவைத்துப் பார்த்தால் ஒவ்வொன்றின் சுவையும் ருசியும் வித்தியாசமாய் இருக்கும் . இவ்வாறு பழங்களை புசிப்பதில் அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருப்பார்கள். இதோடு மட்டுமல்ல , அங்கே அவர்களுக்கு பரிசுத்தமான மனைவியர்களும் இருப்பார்கள். உலக துணைவியர்களைப் போல அழுக்காகவோ துர்வாடை கொண்டோ அல்லது பெருமை, அகம்பாவம் ஆணவம் போன்ற துற்குணங்கள் கொண்டோ இல்லாமல் பரிசுத்தமானவர்களாக இருப்பர் . இவர்கள் அவர்களோடு இன்பம் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அங்கே அவர்கள் எவ்வித பயமோ கவலையோ அற்று நிம்மதியுடன் மிக சந்தோசமாக காலா காலத்திற்கும் நிரந்தரமாக இருந்து கொண்டிருப்பார்கள். இத்தகு மேலான  சுவனத்தில் அல்லாஹ் நம் எல்லோரையும் சேர்த்து அருள்வானாகஆமீன்.
                 கடந்து போன சில வசனங்களில் குர்ஆன் பற்றிய மனிதர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்து வந்த இறைவன் அடுத்து வரும் வசனத்தில் குர்ஆன் குறித்து அவர்கள் எழுப்பிய இன்னுமொறு சந்தேகத்திற்கு பதிலளிக்கின்றான். அதாவது  இந்த குர்ஆனில் கூறப்படும் அனைத்து செய்திகளும் , அதன் எழுத்துக்கள் முதற்கொண்டு அகில உலக இரட்சகனான அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது என்பது உண்மையாக இருந்தால் குர்ஆனில் ஈ, எறும்பு, கொசு, சிலந்தி, சிலந்தி வலை போன்ற அற்பமானவைகள் எவ்வாறு இடம் பெறலாம் ? உயர்ந்தவனான அல்லாஹ் அற்பமான கீழ்த்தரமான படைப்புகளை தன் பேச்சிலே கொண்டு வரலாமா ? இவைகள் குர்ஆனில் இடம் பெறுவதால் அதன் மதிப்பு சரிந்து விடாதா? என்றெல்லாம் கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பினார்கள் , அதற்கான பதிலை அல்லாஹ் அடுத்த வசனத்தில் கூறுகிறான் .
                நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வசனங்களை தம் அடியார்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளும் வகையில் தெளிவுபடுத்தி விவரிப்பான். அதற்காக உதாரணங்களையும், உவமைகளையும் கூற வேண்டிய தேவை ஏற்பட்டால் அல்லாஹ் உதாரணங்களையும் சொல்லிக் காட்டுகிறான் , கொசுவையோ அதை விடவும் சிறுமையில் மேலானதையோ உதாரணங்களாக கூற வேண்டிய தேவை ஏற்பட்டால், அவ்வுதாரணங்களை கூறினால் தான் வசனங்களை விளங்க முடியும் என்றிருந்தால் அவைகளை உதாரணமாக காட்டுவதில் எவ்வித வெட்கமும் அவன் கொள்ளமாட்டான். எனவே அவ்வுதாரணம் எதற்காக கூறப்பட்டது என்பதை தான் சிந்திக்க வேண்டுமேயொழிய இவ்வுதாரணங்களை கூறுவது இறைவனுக்கு தகுமா ? என தம் சிந்தனையின் போக்கை வேறு பக்கம் திருப்பிக் கொள்வது மூடத்தனமாகும் . அல்லாஹ் கூறும்  உதாரணங்களை எல்லோரும் ஒரே போன்று  எடுத்துக் கொள்வதில்லை , அல்லாஹ்வின் மீது உண்மையான விசுவாசம் கொண்டவர்கள் இறை வசனங்களை எப்படியாவது விளங்க வேண்டுமென்ற தேட்டத்துடன் இருந்து இவ்வுதாரணங்களை அவர்கள் கேட்டதும் நிச்சயமாக சத்தியமாக இவைகள் தங்களின் இரட்சகனான அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தவைகள் தாம், அவை முற்றிலும் சத்தியம் வாய்ந்தவை, பொருத்தமானவை தாம் என அறிந்து கொள்வார்கள், இதற்கு மாற்றமாக எவர்கள் அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்களோ அவர்களுக்கு எவ்வுதாரணங்களில் புதைந்துள்ள நுணுக்கங்கள்  தெரிவதில்லை. மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரிவது போல எதையும் மறுக்கும் குணம் கொண்டவர்களுக்கு யாவற்றையும் மறுக்கத்தான் தோணும் , எனவே அவர்கள் அல்லாஹ் இதன் மூலம் என்ன பெரிய உதாரணத்தை நாடிவிட்டான்? என்று பரிகாசமாக கூறிக் கொள்வார்கள். அதை தாண்டி அவ்வுதாரணங்களை சிந்திக்க முன்வரமாட்டார்கள். இவ்வாறு  வ்வுதாரணங்களை கூறுவதின் மூலம் அல்லாஹ் பல மனிதர்களை வழி பிறழச்செய்கிறான். இதன் மூலம் பலருக்கு நேர் வழியை விளக்கி காண்பிக்கிறான். அல்லாஹ் கூறிக்காட்டும் உதாரணங்கள் பலருடைய நேர்வழியும் , தெளிவும் அதிகரிக்க  காரணமாக அமைகிறது , அதை முறையாக அணுகாத பலருக்கு அவர்களின் வழிகேடுகள் அதிகரிக்க காரணமாகிறது . ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் , நற்சிந்தனை உடையவர்கள் உதாரணங்களில்  வழி தவறமாட்டார்கள். மாறாக எவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை துச்சமாக மதித்து மீறி நடக்கும் பாவிகளாக இருப்பார்களோ அவர்களையே அல்லாஹ் அவ்வுதாரணத்தை அணுகுவதில் வழிதவறச் செய்கிறான். அல்லாஹ் இப்பாவத்தை விட்டும் நம்மை பாதுகாப்பானாக.
            அவர்கள் எத்தகையோர்களென்றால் அவர்களின் முதல் அடையாளம் , அவர்கள் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை , அவை உறுதிபட செய்ததற்குப் பிறகும் கூட எவ்வித மன உறுத்தலும் இல்லாமல் முறித்துக் கொள்வார்கள். சாதாரணமாக சக மனிதருடன் செய்து  கொண்ட ஒப்பந்தத்தை முறிப்பதும், அதற்கு மாறு செய்வதும் கீழ்த்தரமான செயல் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. அதிலும் அல்லாஹ்வுடன் புரிந்து கொண்ட ஒப்பந்தத்தை முறிப்பதும் , அதை மீறுவதும் எவ்வளவு மாபாதகமான செயல் ? உலக மனிதர்கள் ஒவ்வொருவரும் இவ்வுலகத்தில் பிறப்பதற்கு முன்னதாக, அவர்களின் உயிர்கள் யாவும் உயிர் உலகம் எனுமிடத்தில் அணி அணியாக வைக்கப்பட்டிருக்கும் , அவைகளுக்கான உடல்கள் தாயின் வயிற்றில் உற்பத்தியான பின் அங்கிருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவ்வுயிர்கள் மலக்கின் மூலம் எடுத்து வரப்பட்டு , அவ்வுடல்களில் செலுத்தப்படும் ,  பின்னர் உடலும், உயிரும் இணைந்து மனிதனாக அவன் உலகில் பிறக்கின்றான். இவ்வாறு உலகின் ஒட்டு மொத்த மனித உயிர்களும் குழுமியிருந்த ஒரு நேரத்தில் அல்லாஹ் அவற்றோடு உரையாடினான். தன்னை அவற்றிற்கு அறிமுகப்படுத்தி தான் யார் என கேட்ட போது , நீதான் எங்களின் இரட்சகன் , எங்களை பரிபாலிப்பவன் என உயிர்கள் யாவும் ஒரு சேர கூறின. இதன் படி அவ்வுயிர்கள் உடல்களுடன் சேர்த்து உலகிற்கு அனுப்பப்பட்ட பிறகு அல்லாஹ்வையே தம் இரட்சகனாக, வணக்கத்திற்குறியவனாக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அது தான் மனிதனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையேயான ஒப்பந்தம் , ஒவ்வொரு மனிதனின் உள் மனதிலும் இந்த ஒப்பந்தம் படிந்து இருக்கத்தான் செய்கிறது . இறைவனைப் பற்றிய தேடல் எண்ணம் ஒவ்வொருவரிலும் எழுந்து கொண்டே இருப்பது இதன் வெளிபாடுதான். பின்னர் அல்லாஹுத்தஆலா சத்தியத்தை மட்டுமே உரக்கக் கூறிய உண்மையான தூதர்களை அனுப்பி அவ்ஒப்பந்தத்தை நினைவூட்டவும் செய்கிறான். நபி (ஸல்) அவர்கள் இது பற்றி கூறிய பொன் மொழிகளும் இருக்கின்றன . ஆக இவ்வாறெல்லாம் அவ்வொப்பந்தம் உறுதியூட்டப்பட்ட பின்பும் அதை முறிப்பவர்கள், அல்லாஹ்வை மட்டுமே தன் இரட்சகனாக ஏற்க மறுப்பவர்கள். இவர்களே பாவிகள்.
          மேலும் அவர்களின் இரண்டாவது அடையாளம் அவர்கள் எந்த உறவு முறைகளை, தொடர்புகளை அறுந்து போகாமல் அவற்றுடன் இணைந்து, சேர்ந்து வாழவேண்டுமென அல்லாஹ் அவர்களுக்கு கட்டளை இட்டிருந்தானோ அதனை துண்டித்துக் கொண்டு அவர்கள் வாழ்வார்கள். தம் இரத்த உறவுகள், சொந்த பந்தங்கள், அண்டை வீட்டார்கள், தம் இஸ்லாமிய சகோதரர்கள், நல்லோர்கள் இவர்களோடு பிணக்கு ஏதுமில்லாமல் விட்டுக் கொடுத்தும், பெருந்தன்மையோடும் இணங்கி வாழ வேண்டும் என்பது அல்லாஹ் இட்ட கட்டளை. அதனை சற்றும் அசட்டை செய்யாமல் சண்டையிட்டுக் கொண்டு, விரோத மனப்பான்மையுடன் உறவுகளையும் நற்தொடர்புகளையும் முறித்து வாழ்வார்கள்.
         மேலும் அவர்களின் மூன்றாவது அடையாளம் , தமது இத்தகைய ஒழுங்கற்ற செயல்களால் அமைதிக்கும், நிம்மதிக்கும் குந்தகம் விளைவித்துக் கொண்டு பூமியில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு திரிவார்கள். இத்தகைய போக்கு கொண்டவர்களே நஷ்டவாளிகள். இவ்வுலகிலும் மறு உலகிலும் அவர்கள் தழுவும் நஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இத்தகைய பாவிகள் அல்லாஹ் கூறும் உதாரணங்களையெல்லாம் ஏறெடுத்துப் பார்த்து நேர்வழி பெறுவார்கள் என்பதை ஆதரவு வைக்க முடியாது. அல்லாஹ் இப்படிப் பட்ட நஷ்டவாளிகளை விட்டும் நம்மை பாதுகாப்பானாக. ஆமீன்
           இதுவரை அல்லாஹ்வைப்பார்த்து மனிதர்கள் கேள்வி எழுப்பினார்கள் , அல்லாஹ் அதற்கு தக்க பதில் கூறினான், அடுத்து மனிதர்களை நோக்கி அல்லாஹ் கேள்வி எழுப்புகிறான் , அதற்கு மனிதர்கள் என்ன பதில் வைத்துள்ளார்கள் ? என்பதை சிந்திக்க வேண்டும் ,  மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ்வே வணக்கத்திற்குறியவன் , அல்குர்ஆன் அவனால் அருளப்பட்ட புனித வேதம் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகி விட்ட போதும் அல்லாஹ்வை தம் இரட்சகனாக ஏற்க மறுப்பவர்களே !  நான் உங்களைப்பார்த்து ஓர் கேள்வி கேட்கிறேன் , நீங்கள் அல்லாஹ்வை எப்படி மறுக்கிறீர்கள் ? அவனை எவ்வாறு உங்களால் நிராகரிக்க முடிகிறது? உங்களின் ஒவ்வோரு நிலையோடும், அசைவோடும் அவன் சம்பந்தப்படுகிறான் என்பதை தெரிந்துதான் அவனை ஏற்க மறுக்கிறீர்களா ? சற்று நீதமாக சிந்தியுங்கள் , நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள் ? ஒரு காலத்தில் பிசுபிசுக்கின்ற இந்திரியத்துளியாக, பிறகு சதைக் கட்டியாக, பின்னர் உயிரற்ற அசைவே இல்லாத மாமிச பிண்டமாகத்தானே இருந்தீர்கள். அப்படியிருந்த உங்களை அவன் தானே உயிராக்கினான்? வேறு யாராவது உங்களுக்கு உயிர் கொடுத்தார்களா ? பின்னர் நீங்கள் குழந்தையாக தாயின் வயிற்றிலிருந்து வெளிபட்டு சிறிது சிறிதாக வளர்ந்து முழு மனிதனாக மாறி இன்று வாழ்கிறீர்கள். அவன் உங்களூக்கு உயிரை தந்திருக்காவிட்டால் இவ்வாறு நீங்கள் வாழ்க்கையை அனுபவித்திருக்க முடியுமா ? பிறகு இந்த வாழ்க்கை நீடித்த, நிரந்தரமானதல்ல. ஒரு நேரத்தில் முடிந்து போகும்  , அப்போது  அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த உயிரை எடுத்துக் கொண்டு உங்களை முன்பிருந்தது போல உயிரற்ற ஜடமாக்கி விடுவான். நீங்கள் மரணித்துப்போவீர்கள் , மரணித்த உங்களை அப்படியே விட்டு விடாமல் மறுபடியும் உங்களின் உடல்களை உருவாக்கி அதனுல் உங்களின் உயிர்களை செலுத்தச் செய்து உங்களை மறுபடியும் உயிர்பிப்பான். பின்னர் நீங்கள் இறுதியாக விசாரணைக்காக அவன் பக்கமே மீட்டி கொண்டு வரப்படுவீர்கள். அதுதான் மறுமை நாள் , உங்களின் இவ்வுலக வாழ்க்கைப்பற்றிய விசாரணை நடைபெறும் நாள். உங்களின் பிறப்பும் அவன் கையில் , இறப்பும் அவன் கையில் , இடைப்பட்ட வாழ்க்கையும் அவன் கையில் , இத்தகு ஒருவனை  மறப்பதும், மறுப்பதும் அறிவீனமில்லையா ?,
       அவன் எத்தகைய அரசனும், கருணையாளனும் என்றால்  உங்களுக்காக, உங்களின் வாழ்வை நிலை பெறச் செய்வதற்காக, உங்களின் வசதிக்காக பூமியிலுள்ள வஸ்துக்கள் யாவற்றையும் படைத்துள்ளான். பூமியிலுள்ள கோடிக்கணக்கான ஜீவராசிகள், எண்ணற்ற வளங்கள், காற்று, நீர் , நெருப்பு என யாவுமே மனிதனின் வசதிக்காகவே தரப்பட்டுள்ளன , இவை யாவும் இறைவன் மனிதனுக்கு தந்த கொடை , அவற்றை அனுபவித்தே மனிதன் தனது வாழ்வை முன்னேடுத்துச் செல்கிறான், பின்னர் இப்பூமி மட்டும் மனித வாழ்வுக்கு போதாது , பூமியில் மழை பொழிவதற்கும், இன்னும் பிற தேவைகளுக்கும் வானுலகம் தேவை. ஆதலால் அல்லாஹ் வானத்தின் பால் கவனம் வைத்து அதனை மனித வாழ்வுக்கு உதவும் வண்ணம் சூரியன், சந்திரன் என எல்லா வித அம்சங்களையும் பொருத்தி ஏழு வானங்களாக அவற்றை செம்மைபடுத்தினான், சுருங்கச் சொல்வதானால் மனித சஞ்சாரம் யாவும் ஒரே குடும்பம். அக்குடும்பம் வாழ்வதற்கேற்ற வகையில் வானம், பூமி என்ற பிரமாண்ட வீட்டை அனைத்து வசதிகளோடும் எழுப்பி தந்துள்ளான். அவன் எல்லா வித வஸ்துக்களைப் பற்றியும் முற்றிலும் அறிந்தவனாக, ஞான முள்ளவனாக இருக்கிறான். இவ்வளவு உபகாரங்களை மனிதனுக்காக கொட்டித்தந்த  தூய இறைவனை மறுப்பது மனிதனின் எவ்வளவு பெரிய முட்டாள் தனமும், நன்றி கெட்ட தனமுமாகும் . அவனை மறுப்பது எவ்வகையில் நியாயம் ? இந்த கேள்விக்கு நீங்கள் என்ன பதில் வைத்துள்ளீர்கள்? அல்லாஹ் இதை உணர தவ்பீக் செய்வானாக , ஆமீன் .
யா அல்லாஹ் நாங்கள் உன்னை ஆழ்மனதால் நம்புகிறோம், ஏற்று கொள்கிறோம். எங்களுக்கு நீ நேரான பாதையை காட்டுவாயாக ஆமீன்.