بسم الله الرحمن الرحيم
உம்ரா பயணம்
முன்னுரை
நூலுக்கான காரணங்கள்
எல்லா புகழும் , புகழ்ச்சியும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே உரியது , அல்லாஹ்வுடைய சாந்தியும் சமாதானமும் எமது உயிரினும் மேலான முஹம்மதுர்ரஸுலுல்லாஹி ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக , ஆமீன்
அல்லாஹுத்தஆலா இச்சிறியோனுக்கு கடந்த மார்ச் மாதம் உம்ரா செய்யும் பாக்கியத்தை தந்தான் , அல்ஹம்து லில்லாஹ் , அதிலே தான் அடைந்த அனுபவங்களை ஒரு நூல் வடிவில் தர வேண்டும் என்ற எண்ணம் சில காரணங்களால் ஏற்பட்டது
1,ஹஜ் , உம்ரா பயணங்களெல்லாம் பிற பயணங்களைப்போன்ற ஒரு சாதாரண பயணமல்ல , அதை ஒரு காதல் பயணம் என்று கூற வேண்டும் , அல்லாஹ்வின் மீது ஒரு அடியான் கொள்ளும் அன்பையும் , மதிப்பையும் வெளிப்படுத்தும் ஓர் இன்பப்பயணம் , இந்தப்பயணம் எத்தனையோ மனிதர்களை புனிதர்களாக்கியிருக்கிறது , எம்முடைய ஆசிரியப்பெருந்தகை மௌலானா முப்தீ ஸயீத் அஹ்மது பாலன்பூரி தாமத் பரகாதுஹு கூறுவார்கள், முற்காலங்களில் ஹஜ் , உம்ரா பயணம் மாதக்கணக்கில் பல் வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஒட்டகங்களிலும் , கப்பல்களிலும் நடை பெற்று வந்தது , அந்நீண்ட பயணத்தில் ஒரு ஹாஜி எத்தனையோ ஏற்ற இறக்கங்களை சந்தித்திருப்பார் , பல அனுபவங்களை பெற்றிருப்பார் , பல் வேறு வகையான மனிதர்களுடன் பழகியிருப்பார் , இவ்வாறு சிரமப்பட்டு , கஷ்டப்பட்டு தன் பயணத்தை நிறைவு செய்து அவர் ஊர் திரும்பும் போது தங்க கம்பியாகவே உரு மாறியிருப்பார் , அவருடைய ஒட்டு மொத்த வாழ்க்கையே மாறிப்போயிருக்கும் , தன் சமூக வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை தருவார் , இஸ்லாமிய அடையாளத்தோடு , தாடியுடைய சுன்னத் , ஆடையுடைய பேணுதல் , நடத்தையில் பணிவு , இறை வணக்கத்தில் நாட்டம் என அவருடையை நடைமுறையை பார்த்து பிற முஸ்லிம்கள் தம் வாழ்க்கையை திருத்திக்கொள்வார்கள் , அந்தளவு பிற முஸ்லிம்களின் வாழ்க்கைக்கு ஒரு முன்மாதிரியான வாழ்க்கையை அவர் மேற் கொள்ள துவங்கிடுவார் , அதனாலேயே அவரை தனித்து அடையாளப்படுத்துவதற்காக ஹாஜி என கண்ணியமாக அழைக்கும் பழக்கம் இந்தியா போன்ற நாடுகளில் உருவானது ,
ஆனால் இந்த நிலை காலப்போக்கில் மாற ஆரம்பித்தது , வசதிகள் பெருகிய போது பயண சிரமங்கள் குறைந்தன, பயண நாட்களும் தேய்ந்து போயின , ஒரு ஹஜ் பயணம் முற்காலத்தில் எத்தகைய ஹாஜியை உருவாக்கியதோ அது போன்ற ஹாஜிகளை பிற்காலத்தில் காண முடிவதில்லை , ஹஜ் , உம்ரா பயணம் என்பது சுற்றுலா பயணத்தைப்போல மாறிப்போனது , அந்த நிலை எமக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக அதை சரியான முறையில் மேற்கொள்வதற்கு என்னால் இயன்ற அளவுக்கு முயன்றேன் , அதன் ஒரு பகுதியாக ஹஜ் உம்ராவை முறையாக செய்தவர்கள், அதனை இரசனையோடு செய்தவர்கள் , ஒவ்வொரு அமலையும் அனுபவித்து அனுபவித்து செய்தவர்கள் , அதை உண்மையிலேயே ஒரு காதல் பயணமாக கருதி செய்தவர்கள் யாரேனும் தமது ஹஜ் , உம்ரா அனுபவத்தை புத்தகமாக தந்துள்ளார்களா என பல விதங்களிலும் என்னால் முடிந்த அளவு தேடிப்பார்த்தேன் , உருது , அரபி மொழிகளில் அது கிடைத்தனவே தவிர தமிழ் மொழியில் எனக்கு கிடைக்க வில்லை , அது எனக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது , அதுவே என்னை என் உம்ரா பயண அனுபவங்களை எழுத தூண்டியது ,
2, உம்ராவின் போது , ஹஜ்ஜின் போது பார்க்க நேரிடும் புனித ஸ்தலங்கள் பற்றிய தெளிவு ஒரு ஹாஜிக்கு இல்லையென்றால் அவ்விடங்களை பார்ப்பதிலுள்ள இன்பங்களே இல்லாமல் போய் விடுவதுண்டு , வரலாற்று பிண்ணனியோடு ஒவ்வொரு இடத்தையும் பார்க்க நேரிடுகிற போது ஏற்படும் ஆர்வத்திற்கு எல்லையே இல்லை , அது வணக்கங்களிலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது , அது மட்டுமின்றி மக்கா, வெளிரங்கத்தில் பாலை வனங்களும் , மலைகளும் நிரம்பிய பிரதேசமாக இருக்கலாம் , ஆனால் அது தனக்குள்ளே புதைத்து வைத்திருக்கும் வரலாறுகளும் , வரலாற்று மாமனிதர்களும் பூத்து குலுங்கும் சோலைவனங்களை விட மேலானவை , அவற்றினால்தான் மக்கா அழகு பெறுகிறதே தவிர, அவைகளே உலகெங்கிலுமுள்ள மக்களை மக்காவை நோக்கி ஈர்க்கின்றனவே தவிர மக்காவின் மலைகளோ , பாலைகளோ ஈர்ப்புக்கு காரணம் அல்ல , இவ்வாறிருக்க அவ்வரலாறுகளே ஹாஜிக்கு தெரியாது போகுமானால் அது எந்த ஒரு தாக்கத்தையும் அவருடைய வாழ்க்கையில் ஏற்படுத்தாது என்பது எனது எண்ணம் . எனவே குறைந்த பட்சம் ஹஜ்ஜிலே , அல்லது உம்ராவிலே பெரும்பாலும் பார்க்க நேரிடுகின்ற இடங்களின் சுருக்கமான வரலாறுகள் தொகுக்கப்பட்டு சமூக அரங்கிலே சமர்ப்பிக்கப்பட வேண்டும் , அந்த நோக்கத்தை இந்நூல் ஓரளவு ஈடு செய்யும் என நான் நம்புகிறேன் .
3, நபி (ஸல்) , மற்றும் அவர்தம் தோழர்கள் ஆகிய அப்புனிதர்களின் பெயர்களை கூறுவதே பெரும் பாக்கியம் . அவ்வாறு இஸ்லாமிய வரலாறுகளை சமூக அரங்கிலே நினைவு கூர்வதற்கான சந்தர்ப்பம் தனக்கும் வாழ்க்கையில் கிடைக்காதா என்று நான் ஏங்கினேன் , எனவே இஸ்லாமிய வரலாற்றின் சில பக்கங்களை சுட்டிக்காட்ட இந்நூலை நான் பயன்படுத்திக்கொண்டேன்.
4, இந்த நூல் வெறும் தகவல்களாக இல்லாமல் தன் அனுபவத்தை எடுத்து வைப்பதாக அமைய வேண்டும் என நான் விரும்பினேன் , எனவே இதில் நான் பயணத்தில் சந்தித்த தனி நபர்கள் , எனது அலைச்சல் , எனது உள் எண்ணங்கள் போன்றவை குறித்தும் உள்ளதை உள்ள படி தேவையான அளவு விரிவுடன் எழுதி விட்டேன் , அது வாசகர்களுக்கு சலிப்பை தரலாம் , ஆனால் அதிலும் படிப்பினை உண்டு என்பதால் அதை என்னால் தவிர்க்க முடியவில்லை .
5 , அல்லாமா ஸஃதீ (ரஹ்) அவர்கள் தன் உலகப்புகழ் பெற்ற குலிஸ்தான் எனும் நூலிலே கூறுவார்கள்
کوس رحلت بکوفت دست اجل اۓدو چشمم وداع سر بکنيد
اۓ کف دست وساعدوبازو ہمہ توديع يک دگر بکنيد
بر من افتادہ دشمن کام آخر اۓ دوستاں گذر بکنيد
روزگارم بشد بنادانی من نکردم شما حذر بکنيد
மரணத்தின் கரம் பயணத்திற்கான மணியை அடித்து விட்டது , என் இரு கண்களே தலைக்கு விடை கொடுங்கள் .
என் கரங்களில் இது நாள் பிணைந்திருந்த உள்ளங்கையே, குடங்கையே , புஜமே நீங்கள் யாவரும் ஒருவர் பிறருக்கு பிரியா விடை கொடுக்கும் நேரம் வந்து விட்டது , விடை பெற்றுக்கொள்ளுங்கள்
விரோதியின் எண்ணம் என் மீது பழிக்கப்போகும் நேரம் நெருங்கி விட்டது , ஆகவே நண்பர்களே கடைசியாக என்னை ஒரு முறை பார்த்துக்கொள்ள வாருங்கள்,
என் காலங்கள்தான் அறியாமையில் கழிந்து விட்டன , என்னால்தான் இயலவில்லை , நீங்களாவது தப்பித்துக்கொள்ளுங்கள்.
இது மரணிக்கப்போகும் ஒருவன், வாழப்போகும் மனிதர்களைப் பார்த்து கூறும் கடைசி உபதேசம் , இதே போல உம்ராவை முடித்த ஒருவன் இனி உம்ரா செய்ய இருக்கின்ற நண்பர்களுக்கு தன்னுடைய பயணத்தில் நேரிட்ட தவறுகள் அவர்களின் பயணத்தில் நேர்ந்து விடக்கூடாதே எனும் நோக்கில் கூறும் தாழ்மையான சில யோசனைகளும் இப்புத்தகத்தின் வரிகளாக விளங்குகின்றன .
ஆகவே இதை படிப்பதன் மூலம் யாருடைய ஹஜ் , உம்ரா பயணங்களாவது முழுமை பெற்றது என்றால் அதுவே இறைவன் எனக்களிக்கப்போகும் பாக்கியமாக கருதுவேன் , அல்லாஹுத்தஆலா இம்முயற்சியை என்னுடைய மற்றும் என்னுடைய பெற்றோர் , குடும்பத்தினர் , எனது கல்விக்கு பாலமாக திகழ்ந்தவர்கள் யாவர்களின் மறுமை வாழ்வின் பிரகாசத்திற்கு காரணமாக்குவானாக. ஆமீன் .
M.G முஹம்மது சபியுல்லாஹ்
அன்வாரீ , காசிமீ
எண்ணம் எழுந்தது....
மக்கா, கஃபத்துல்லாஹ், மதீனா , ரவ்ழா போன்ற புனித இடங்களையெல்லாம் ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது கண்டு விட வேண்டுமென விரும்புவார் , அதற்காக எத்தகைய சிரமங்களையும், பொருட்செலவையும் எதிர் கொள்ள தயாராக இருப்பார், அப்படியிருக்க இவற்றையெல்லாம் செவிவழி செய்திகள் மட்டுமின்றி மதரஸா பாடமாகவே படித்தவனுக்கும் , படித்து கொடுத்தவனுக்கும் அவற்றை பார்ப்பதில் இன்னும் எத்தனை நாட்டமும் ஆசையும் இருக்கும் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை , எனவே அவற்றை தன் வாழ்வில் எப்படியாவது தரிசித்துவிட வேண்டுமென்ற எல்லையில்லா ஆசை நீண்ட நாட்களாகவே அடியேனுக்கும் இருந்து வந்தது , அதற்கான சந்தர்ப்பமும் இப்போது அமைந்தது , எனது தாயார் இரண்டு வருடங்களுக்கு முன்பு உம்ரா சென்றிருந்தார் ,அப்போது எதிர்பாராத விதமாக அவரது காலில் ஏற்பட்ட காயம் அதனை ஓர் அரைகுறை பிரயாணமாக மாற்றியது , உம்ராவை கூட மனநிறைவோடு செய்ய முடியாமல் ஊர் திரும்பினார் , அது என்னுடைய உள்ளத்தில் தாயாருடன் சென்று உம்ரா செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை உண்டு பண்ணியது , இறைவனிடம் என்னுடைய நாட்டத்தை முன்வைத்து துஆவும் செய்து வந்தேன், இறைவன் என்னுடைய பல நாட்டங்களை துஆவின் மூலம் நிறைவேற்றி தந்துள்ளான், இந்த நாட்டத்தையும் அல்லாஹ் நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பத்தை நல்கினான் , உம்ராவுக்கு தயாரானேன் ,
உம்ராவுடைய கடமை
உம்ரா என்பது சின்ன ஹஜ்ஜைப்போல . வசதிவுள்ளவர்கள் மீது ஹஜ் கடமையாகுவது போல உம்ரா செய்ய வசதியுள்ளவர்கள் மீது உம்ராவும் கடமையாகிறது , கடன், வீட்டினர்களின் செலவுகள் போக பயணத்திற்கான தொகை ஒருவரிடம் எஞ்சியிருந்தால் அவர் உம்ராவுக்கு புறப்பட வேண்டும் , சிலர் ஹஜ் செய்வதற்கான வசதி ஏற்படும் வரை உம்ராவை பிற்படுத்தி ஹஜ்ஜு பிரயாணத்திலேயே உம்ரா செய்பவர்களும் உண்டு , அதுவும் தவறில்லை, அப்படி செய்வதினாலும் உம்ராவுடைய கடமை நீங்கி விடும் , இருப்பினும் உம்ரா செய்வதற்காக தனி பயணம் மேற் கொள்வதே சிறப்பு , ஆக அச்சிறப்பான பயணத்திற்கான தேதி 16 - 3 -2016 என முடிவுசெய்யப்பட்டது, அதிராம்பட்டினத்தின் பிரபல அல்-நூர் ஹஜ் டிராவல்ஸின் நிறுவனர் ஹாஜி முஹம்மது அலி அவர்கள் சலுகை கட்டணத்தில் என்னுடைய பிரயாணத்தை மேலும் இலகுவாக்கித்தந்தார் , அல்லாஹ் அவருக்கு சிறந்த கூலி வழங்குவானாக ,
ஒருவர் பிரயாணத்திற்கு முன் தன் குடும்பத்தினர்களை அரவணைக்கும் வண்ணம் அவர்களுக்கு விருந்தளிப்பது சிறந்த நடை முறை , அதற்கு வசதி இருந்தால் செய்யலாம் , அதை தவிர்ப்பதால் தவறேதுமில்லை, சிலர் அவ்வாறு விருந்தளிப்பதை கட்டாயம் என கருதுவதுதான் தவறு , நானும் என்னுடைய வசதிக்கு தகுந்த படி சிறிய அளவில் குடும்பத்தினர்களுக்கு விருந்தளித்தேன் , அன்று மாலையே நெல்லை எக்ஸ்பிரஸ் மூலம் சென்னைக்கு புறப்பட்டோம் , அல்ஹம்துலில்லாஹ்! 15.04.2016 அன்று காலை சென்னை சென்றடைந்தோம்.
சென்னையிலிருந்து....
சென்னையில் எனது அண்ணன் வீட்டில் ஒரு நாள் தங்கியிருந்தோம் , அடுத்தநாள் அதிகாலையில் எழுந்து , குளித்து தைத்த ஆடைளை களைத்து விட்டு தைக்காத ஆடைகளை உடுத்திகொண்டு சுப்ஹு தொழுதுவிட்டு காலை 5.30 மணியளவில் வீட்டை விட்டு புறப்பட்டோம். எனது மூத்த சகோதரர் ,சிறிய தந்தை , தம்பி, அண்ணன் மகன் ஆகியோர் எங்களை அனுப்பி வைக்க உடன் வந்திருந்தார்கள் , காலை நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசல்கள் பெரிய அளவில் இல்லை, சீக்கிரமாகவே சென்னை விமான நிலையத்தை அடைந்தோம். அங்கே ஹாஜிகளும், அவர்களின் குடும்பத்தார்களும் குழுமி இருந்தார்கள், உடனடியாக எங்களின் குடும்பத்தார்களிடம் விடைபெற்றுக் கொண்டு சாமான்களோடு நானும் எனது தாயாரும் விமான நிலையத்திற்குள் புகுந்தோம் , குடும்பத்தார்கள் உடன் இருந்தவரை எதுவும் தெரியவில்லை, அவர்களை பிரிந்த பிறகுதான் பிரயாணத்தின் சிரமத்தினை என்னால் உணர முடிந்தது, ஒரு கையில் சாமான்களையும் , மறு கையில் தாயாரையும் பிடித்துக்கொண்டு போர்டிங் போடும் இடத்தை அடைந்தேன். சென்னை விமான நிலையத்தில்....
விமான நிலையத்தின் நடைமுறை விதிகள் கிட்டத்தட்ட மறுமையில் விசாரணைக்காக நிறுத்தப்பட்டிருக்கும் ஞாபகத்தை தந்த்து , கொண்டு வந்த சாமான்கள் மட்டுமின்றி மனித உடல் முழுதுவதையும் கூட ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்த பின்னரே ஒவ்வொருவரையும் உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள் , என்னுடைய பர்சுக்குள் பிளேடு ஒன்று இருந்தது , அது இருந்தது எனக்கே மறந்து போனது , அதை ஸ்கேனர் சுட்டிக்காட்ட அதை வெளியே எடுத்து தூக்கி எறிந்த பின்புதான் அவர்கள் என்னை உள்ளே செல்ல அனுமதித்தார்கள் , எல்லா சோதனைகளும் முடிந்து பயணிகள் காத்திருக்கும் இருக்கைகளை அடைந்தோம், அங்கே சிறிது நேரத்தில் எங்களுக்கு டிராவல்ஸின் மூலம் கொண்டு வரப்பட்ட காலை உணவு பரிமாறப்பட்டது , அதை அவசரகதியில் உண்டு முடித்தபோது எங்களது விமானத்தின் பெயர் கூறி பயணிகளை அழைத்தார்கள் , விமானத்தின் வாயிலுடன் பொறுத்தப்பட்ட குழாய்கள் வழியாக நாங்கள் விமானத்திற்குள் சென்றடைந்தோம் , விமான சிப்பந்திகள் எங்களை அன்பாக வரவேற்று எங்களின் இருக்கைகளை காட்டிதந்தார்கள்.
விமானம்
விமானம் அல்லாஹ்வின் மிகப்பெரும் அத்தாட்சியாகும், விமானத்திற்கு முன்னோடியே பறவைதான், பறவைக்கு இறக்கைகள் இருப்பதை போல விமானத்திற்கும் இறக்கைகள் உண்டு, பறவைகள் பறக்கும்போது கால்களை மடக்கிக்கொள்வதை போல விமானமும் தன் சக்கரங்களை மடக்கிக்கொள்கிறது , பறவைகளின் முகத்தை போல விமானத்தின் முன்புறமும் கூம்பு போன்று அமைந்துள்ளது, குர்ஆனில் “ நீங்கள் பறவைகளை பார்க்கவில்லையா ? அவை வான்வெளியில் பறப்பதற்கு ஏற்ப காற்றுகள் வசியம்செய்யப்பட்டவைகளாக பறந்து கொண்டுள்ளன, அல்லாஹ்வைத் தவிர்த்து அவை கீழே விழாமல் தடுத்து வைப்பவர் யாருமில்லை ,, (16:79) என்று தன்னுடைய மாபெரும் ஆற்றலை அல்லாஹ் கூறிக்காட்டுகிறான், இதில் பறவை எனும் இடத்தில் விமானம் என்று வைத்து படித்து பாருங்கள், அல்லாஹ்வின் ஆற்றல் விளங்க வரும் , விமானம் என்பது பல டன் கணக்கில் சரக்குகளையும், மனிதர்களையும் சுமந்து செல்லும் ஓர் இராட்சத பறவை அவ்வளவுதான்,
சிறுவயதில் விமானம் வான்வெளியில் பறக்கும் சப்தம் கேட்டால் அது புள்ளியாய் தேய்ந்து கண்களை விட்டு மறையும் கடைசி நிமிடம் வரை பார்த்துக்கொண்டிருப்பேன், இன்று அந்த விமானத்தில் நான் அமர்ந்திருக்கிறேன் என்று விமான பயணத்தை என்னால் அனுபவிக்க முடியவில்லை , அதை காட்டிலும் என்னுடைய உள்ளத்தில் அச்சம்தான் பரவியிருந்தது , ஆம், இரண்டு வருடங்களுக்கு முன்பு மலேசியா விமானம் ஒன்று வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது மாயமாக மறைந்தது , அது எங்கே சென்றது என இன்றுவரை கண்டு பிடிக்க முடியவில்லை, அந்த செய்தி நாளிதழ்களில் வெளியானபோது அதிர்ச்சியோடு அதை விடாமல் படித்தவன் நான் , ஒருகால் கடலிலோ, மலையிலோ அது விழுந்திருக்குமானால் அதில் பயணம் செய்தவர்களின் நிலைமை என்ன ஆகியிருக்கும் ? என்பதை நினைத்தாலே குலை நடுங்குகிறது, அன்று முதல் விமானப்பயணம் என்பது சொகுசு பயணம் என்ற எண்ணத்தை விட உயிருடன் விளையாடும் விளையாட்டு என்ற எண்ணமே மேலோங்க ஆரம்பித்தது , இன்று அந்த விளையாட்டுக்குத்தான் நான் தயாராகியிருக்கிறேன் , அதனால் வீட்டிலிருந்து இஹ்ராம் அணியும்போது இது எனக்கு நானே உடுத்திக் கொள்ளும் கபன் என்ற எண்ணமெல்லாம் மனதில் வர துவங்கிவிட்டது , இது நான் செய்யும் கடைசி பயணமாக இருக்கலாம் என்பதால் வீட்டிலும் சொல்ல வேண்டிய சில விஷயங்களை வஸியத்தாக கூறி விட்டுத்தான் வந்திருந்தேன்.
விமானத்தில் ....
நாங்கள் பயணமாகப்போவது சவூதிய்யா ஏர்லைன்ஸ் , நாங்கள் 8.40 மணியளவில் விமானத்தில் ஏறி இருப்போம் , அரைமணி நேரம் கழித்து சரியாக காலை 9.10 க்கு விமானம் ஓடுதளத்திற்கு நகர்த்தப்பட்டு ஓடுதளத்தை அடைந்ததும், அசுர வேகம் எடுத்து விண்ணிலே பாய ஆரம்பித்தது , சென்னையின் உயர உயரமான கட்டிடங்கள் சில நொடிகளில் கண்களை விட்டு மறைந்து போயின , விமானம் படிப்படியாக தன்னுடைய உயரத்தை கூட்டிக்கொண்டே சென்று 36 ஆயிரம் அடி உயரத்தில் கொண்டு சென்று நிறுத்தியது , அது வட மேற்கு திசையில் தனது பயணத்தை தொடர்ந்து 800 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது , இத்தனை அடி உயரத்தில் இத்தனை பிரயாணிகளையும், சாமான்களையும் சுமந்து கொண்டு விமானம் பறந்து கொண்டிருப்பதை நினைக்கும் போது பிரமிப்பாக இருந்தது , விமானம் புறப்படும் முன்பு பிரயாணத்தின் துஆவான
الْحَمْدُ للهِ , الْحَمْدُ للهِ , الْحَمْدُ للهِ
الله أَكْبَرُ , اللهُ أَكْبَرُ , اللهُ أَكْبَرُ , سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ , وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ
என்ற துஆவை தொலைகாட்சியின் திரையில் ஓடவிட்டார்கள் , அதன் உண்மையான அர்த்தம் விண்ணில் பறந்து கொண்டிருந்த போதுதான் புரிந்தது , இந்த விமானத்தை நமது உபயோகத்தற்காக வசப்படுத்தி கொடுத்த அந்த இறைவன் எவ்வளவு தூயவன் ! இல்லாது போனால் பலகீனமான நம் போன்ற மனிதர்களால் இவற்றை நமது வசதிக்கேற்ப வளைத்திருக்க முடியாது , இதுதான் அதன் பொருள் ,
விமானம் பறக்க ஆரம்பித்து சில நிமிடங்கள் கழித்து நானும் , தாயாரும் இஹ்ராமுடைய நிய்யத் செய்து கொண்டோம் , விமானத்தில் முகம் துடைக்க நறுமணத்துடன் கூடிய டிஷ்யூ பேப்பர் தந்தார்கள் , நான் அப்போது இஹ்ராமுடைய நிய்யத் வைத்து விட்டதால் அதை உபயோகிக்க வில்லை , இஹ்ராமுடைய நிலையில் அந்த நறுமணம் கலந்த டிஷ்யூ வை உபயோகிக்க முடியாது , இதேபோல விமானத்தில் குளிர்பானங்கள் பரிமாறுகிறார்கள் , அதிலும் நறுமணம் கலந்துள்ளது , அதை பருகுவதிலும் எனக்கு ஐயம் ஏற்பட்டது , இஹ்ராமுடைய நிய்யத் வைத்து விட்டால் நறுமணம் உபயோகிப்பது , நகங்கள் வெட்டுவது , முடிகளை களைவது , ஆண்கள் தலையை மறைப்பது ஆகியவை கூடாது , இந்த சட்டங்களெல்லாம் மிகுந்த கவனம் கொடுத்தால் மட்டுமே நடைமுறைப்படுத்துவது சாத்தியம் .
இஹ்ராமுடைய நிய்யத் வைத்த பின் தல்பியா ஓதுவது மிக சிறந்த திக்ராகும் , ஆண்கள் சிறிது சப்தமாகவும் , பெண்கள் சப்தமில்லாமலும் ஓத வேண்டும் , அல்ஹம்துலில்லாஹ், நான் சிறிது இடைவெளி விட்டு விட்டு தல்பியா ஓதும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கு தந்தான் , நான் ஓதிக்கொண்டே வந்தேன் , ஹஜ்ஜுடைய இஹ்ராமாக இருந்தால் ஷைத்தானுக்கு கல் எறிய துவங்கும் வரை தல்பியா ஓதிக்கொண்டே இருக்க வேண்டும் , உம்ராவுடைய இஹ்ராமாக இருந்தால் உம்ராவுடைய தவாபை ஆரம்பிக்கும் வரை தல்பியா ஓத வேண்டும் , ஆனால் விமானத்தில் இருந்த உம்ரா பயணிகள் தல்பியா ஓதி நான் கேட்க வில்லை , ஒருகால் அவர்கள் மனதிற்குள்ளாக ஓதியிருக்கலாம்,
விமானம் பறக்கத்துவங்கி சிறிது நேரத்தில் எங்களுக்கு உணவுகள் பரிமாறப்பட்டன , ஆனால் இந்திய உணவுகளுக்கு பழக்கப்பட்டு போயிருந்ததால் அந்த உணவுகள் எமக்கு திருப்தியளிக்கவில்லை , பழக்கப்பட்ட உணவை விமானத்தில் பெறமுடியாது போனபோதுதான் காலையில் நாங்கள் கொண்டு வந்த சப்பாத்தியை எம் குடும்பத்தாரிடமே திருப்பி அனுப்பியது தவறு என்று விளங்கியது , இஹ்ராமுடைய நிலைமையில் இருந்தும் கூட விமானத்தில் பரிமாறப்பட்ட அந்த ரிஜ்கை வேறு வழியில்லாமல் வீணாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது , வயிறு பாதி நிரம்பியும் , பாதி நிரம்பாமலும் பயணித்துக்கொண்டிருந்தோம் , விமானம் எத்தனை அடி உயரத்தில், எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது என்பதை விமானத்திலுள்ள திரை அவ்வப்போது அறிவிப்பு செய்து கொண்டே இருந்தது , அத்துடன் விமானம் பயணிக்கும் பாதையில் எதிர் கொள்ளும் நாடுகளின் , இடங்களின் பெயர்களையும் அத் திரை காட்டிக்கொண்டே வந்தது ,
இஸ்லாமிய நாடுகள்
சென்னையிலிருந்து புறப்பட்டு இந்திய நிலப்பரப்பை கடந்து கடலோர நகரமான மும்பையை தாண்டியதும் எங்களை அரபிக்கடல் எதிர்கொள்கிறது , அதை கடந்ததும் அரபு தீபகற்பத்தின் ஓமன் பகுதி வருகிறது , நபியவர்களின் காலத்தில் இன்றைய ஐக்கிய அரபு நாடுகளின் கிழக்கு பகுதிகளையும் சேர்த்து ஓமன் உள்ளடக்கி இருந்தது , இன்று அதிலிருந்து பிரிந்துதான் ஐக்கிய அரபு நாடுகள் உருவாகியுள்ளன, அக்காலத்தில் இங்கே சிலை வணங்கிகளும் , நெருப்பு வணங்கிகளும் வசித்து வந்தார்கள் , ஜீஃபர் மற்றும் அப்து பிஸ்ரான் ஜலந்தி எனும் இரு சகோதரர்கள் ஓமனை ஆட்சி செய்து வந்தார்கள் , இருவரும் நபித்தோழர் ஹஜ்ரத் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களின் கைகளில் இஸ்லாத்தை தழுவினார்கள் , அன்றிலிருந்து இது இஸ்லாமிய நாடாக திகழ்கிறது , (அட்லஸ் 68)
அடுத்தது பஹ்ரைன் நாடு , இது நபியவர்களின் காலத்தில் பாரசீக வளைகுடாவுக்கும் , யமாமாவுக்கும் மத்தியில் அமைந்திருந்த கத்தார் , பஹ்ரைன் தீவுகள் மற்றும் சவூதியின் அல்- இஹ்ஸா ஆகிய பகுதிகள் வரை பரந்து விரிந்த ஒருங்கிணைந்த பகுதிக்கு சொல்லப்பட்டு வந்தது, பின்னர்தான் அதிலிருந்து பிரிந்து கத்தார் நாடு உருவானது , ஆனால் இப்போதோ பஹ்ரைன் என்ற பெயர் கத்தார் நாட்டுக்கும் சவூதிக்கும் மத்தியில் வளைகுடா கடலில் அமைந்துள்ள 21 தீவுக்கூட்டங்களின் கூட்டமைப்புக்கு மட்டுமே கூறப்படுகிறது ,இப்போது பஹ்ரைனிலிருந்து சவூதிக்கு 35 கிலோ மீட்டர் தூரமுள்ள ஒரு கடற் பாலம் மூலம் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது , (அட்லஸ் 467) ஹிஜ்ரி 8 ம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் அலா இப்னு அப்துல்லாஹ் அல்ஹழ்ரமீ (ரலி) அவர்களை பஹ்ரைனுக்கு அனுப்பி வைத்தார்கள் , அவர் அங்கு சென்று அங்குள்ள மக்களுக்கு இஸ்லாத்தின் அழைப்பு விடுக்க வேண்டும் , அத்துடன் அவர்களிடம் பஹ்ரைனை ஆட்சி செய்து வந்த முன்திர் இப்னு ஸாவி அவர்களுக்கு நபியவர்கள் கடிதம் கொடுத்து அனுப்பினார்கள் , கடிதத்தை பெற்றதும் அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார், அவருடன் சில அரபு மற்றும் அரபு அல்லாத மக்களும் இஸ்லாத்தை தழுவினர் , மற்ற சிலர் சமாதான தூதை ஏற்றுக்கொண்டார்கள் , ஹஜ்ரத் அலா (ரலி) அவர்கள் பஹ்ரைனிலிருந்து என்பதுனாயிரம் தீனாரை திர்ஹத்தை நபியவர்களுக்கு அனுப்பித்தந்தார்கள் , இது வரை அந்தளவுக்கு எந்த கவர்னரும் அனுப்பித்தந்ததுமில்லை , பின்னர் நபி ஸல் அவர்கள் அபான் இப்னு ஸயீது இப்னு ஆஸ் ரலி என்ற நபித்தோழரை பஹ்ரைனின் ஆளுனராக நியமித்தார்கள் , அட்லஸ் சீரத்துன்னபவீ 189 இவ்வாறு நபியவர்களின் ஆளுகையின் கீழ் இருந்த ஒப்பற்ற பெருமையை பெற்ற பிரதேசங்களுல் இவையும் அடக்கம், (அட்லஸ் சீரத்துன்னபவீ , டாக்டர் ஷவ்கீ அபூ கலீல் , பக்கம் 68)
இப்பிரதேசங்களையெல்லாம் கடந்து உள்ளூர் நேரப்படி காலை 11.45 க்கு விமானம் சவூதி அரேபியாவின் முக்கிய துறைமுக நகரான தம்மாமிலே தரை இறங்கியது ,
தம்மாமிலே விமானம் தரை இறங்கி சுமார் ஒரு மணி நேரம் நின்றது , பயணிகள் இறங்க அனுமதிக்கப்படவில்லை . உள்ளுர் நேரப்படி 12.45 க்கு விமானம் தம்மாமிலிருந்து மீண்டும் கிளம்பி தன் பயணத்தை வடக்கிலிருந்து தென்மேற்கு நோக்கி தொடர்ந்தது , அது பறந்த பகுதிகள் யாவற்றிலும் இஸ்லாமிய வரலாறுகள் நிரம்பி கிடக்கின்றன , விமானத்துடன் சேர்ந்து உள்ளமும் வரலாறுகளில் பயணிக்க ஆரம்பித்தது.
இஸ்லாமிய வரலாறு
இன்றிலிருந்து சுமார் 1440 வருடங்களுக்கு முன்பு நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவில் பிறக்கிறார்கள் , அங்கே 40 வயது வரை அம்மக்களால் உண்மையாளர் , நம்பிக்கையாளர் என்று போற்றப்படும் அளவுக்கு தூய்மையான வாழ்வை வாழ்கிறார்கள் , 40 ம் வயதில் நபிப்பட்டம் தரப்பட்ட பின்னர் அங்கே 13 வருட காலம் சொல்லெனா பல துன்பங்களுக்கு மத்தியில் மறைந்து , மறைந்து இஸ்லாமிய அழைப்புப்பணியை நபியவர்கள் துவங்கினார்கள் , எதிர்ப்புகள் எல்லை மீறிய பின் மக்காவை விட்டு மதீனாவுக்கு குடி பெயர்ந்தார்கள் ,
மதீனா, முதல் இஸ்லாமிய தேசமாக உருவெடுத்தது , அங்கே தூய்மையான இஸ்லாமிய சமூகம் உருவாக்கப்படுவதோடு அங்கிருந்து இஸ்லாத்தின் பரவுதலுக்கு தடைகளாக இருந்த சக்திகள் இனம் காணப்பட்டு தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, எதிரிகளுக்கு ஆயுதங்கள் வாங்கி வரும் வியாபார கூட்டங்கள் இடைமறிக்கப்பட்டன , இவ்வாறாக அரபகத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட பெரும் படைகளின் எண்ணிக்கை 28, சிறிய படைகளின் எண்ணிக்கை 55, இவை யாவும் முஸ்லிம்கள் மதீனா வந்து 10 வருட காலங்களுக்குள் நடந்தேறின, இப்படைகள் மதீனாவை மைய்யமாக வைத்து நாலா புறங்களிலும் சென்று யுத்தம் செய்தார்கள் , ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு முஸ்லிம்களுக்கும் , மக்கா வாசிகளுக்குமிடையே ஹுதைபிய்யா உடன்படிக்கை கையெழுத்தானது , அதன்பின் யுத்தங்கள் குறைந்தன, நபி (ஸல்) அவர்கள் அன்றைய எட்டு நாடுகளின் தலைவர்களுக்கு இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார்கள், அதனால் இஸ்லாம் அரபுலகை கடந்து வெளி உலகுக்கும் அறிமுகமானது , இப்படி இருந்த கொண்டிருந்த போது பத்து வருட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறிக்கும் ஒரு செயலில் மக்காவாசிகள் ஈடுபட்டார்கள், அதனால் ஹிஜ்ரி 8 ம்ஆண்டு மக்கா மீது போர் தொடுக்கப்பட்டு மக்கா வெற்றி கொள்ளப்பட்டது , அது அரபு மக்களிடையே மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது , முஸ்லிம்களின் மதிப்பும் பெருகியது ,காரணம் மக்காவே அனைத்து மக்களின் கவனத்தை பெற்றிருந்தது , முஸ்லிம்களுக்கும், மக்காவாசிகளுக்குமிடையே நடந்த யுத்தங்களை பிற மக்கள் உற்று நோக்கி கவனித்து வந்தார்கள் , இஸ்லாம் உண்மையான மார்க்கமாக இருக்குமானால் முஸ்லிம்கள் மக்காவை வெற்றி கொள்வார்கள் என பிற மக்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தபோதுதான் மக்கா வெற்றி நடந்தேறியது , அது உலகிற்கே இஸ்லாத்தின் கதவை திறந்து விட்டது , இது வரை இஸ்லாத்தை பாதுகாப்பதற்காக படைகளை அனுப்பிக்கொண்டிருந்த நிலமை மாறி, அரபகத்தின் பல பகுதிகளிலிருந்து இஸ்லாத்தை ஏற்ற மக்கள் குழுக்கள் குழுக்களாக மதீனா வர ஆரம்பித்தார்கள், இதனாலேயே ஹிஜ்ரி 9 ம் ஆண்டை ஆமுல் உஃபூத் (பல குளுக்கள் இஸ்லாத்தில் வந்த ஆண்டு) என அழைக்கப்படுகிறது , இவ்வாறாக மதீனாவுக்கு வருகை தந்த குழுக்களின் எண்ணிக்கை மட்டும் 70 தை தாண்டுவதாக இப்னு ஸஃத் எனும் வரலாற்றாசிரியர் தபகாதே குப்ரா எனும் நூலில் குறிப்பிடுகிறார் , அதை அடுத்து ஹிஜ்ரி 10 ம்ஆண்டு நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ் செய்கிறார்கள் , அதே ஆண்டு உலகை விட்டும் மறைகிறார்கள், இவ்வாறாக அவர்களின் வெற்றிகரமான , சாதனைமிக்க வாழ்வு முடிவுக்கு வந்தது , இப்படித்தான் இப்பிரதேசங்களெல்லாம் இஸ்லாமிய வட்டத்துக்குள் சங்கமித்தன,
லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் திருக்கலிமாவை உலகிற்கு சொன்ன ஒரே குற்றத்திற்காக ஊரை விட்டு வெளியேற்றிய அரபுகளை நபியவர்கள் எந்தளவு வென்றார்கள் என்றால் நாங்கள் ஏறி வந்த விமானம் முதல், விமான நிலையம் , ,நாட்டின் முக்கிய கட்டிடங்கள் , முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ,தேசிய கொடி , மக்காவின் உயர் கோபுரம் வரை எங்கும் லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் திருக்கலிமா எழுதப்பட்டு மின்னிக்கொண்டிருப்பதை எங்களின் பிரயாணத்தின் பல சந்தர்ப்பங்களில் பார்த்து பூரிப்படைந்தோம் , அந்தளவு இத்திருக்கலிமா சவூதியின் அடையாளமாகவே மாறிப்போனது , குறுகிய காலத்திற்குள் நபியவர்கள் எத்தனை பெரிய சாதனையை செய்து விட்டார்கள் ? பிரமிப்பூட்டும் இந்நினைவுகளிலேயே சவூதியின் பல பகுதிகள் எங்களை கடந்து சென்றன , இன்றளவிலும் அக்காற்றில் ஸஹாபாக்களின் சுவாசங்கள் கலந்திருப்பதை உணர முடிகிறது .
சுமார் 1 ½ மணி நேர பறத்தலுக்குப் பின் விமானம் சவூதியின் மற்றொரு துறைமுக மற்றும் தொழில் நகரமான ஜித்தாவை அடைந்தது .
ஜித்தா
ஜித்தா என்பது செங்கடலை ஒட்டிய கிழக்கு கடற்கரையில் மக்காவுக்கு மேற்கே 70 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நகரமாகும், இது ஹிஜாஸுக்கு மட்டுமல்லாது பழங்காலந்தொட்டு ஹஜ்ஜுக்கு வரும் இலட்சக்கணக்கான மக்களின் நுழைவாயிலாகவும் திகழ்கிறது , ஆரம்பத்தில் இது மீனவ கிராமமாக இருந்தது , ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) காலத்தில்தான் இதற்கு அடித்தளமிடப்பட்டது , (அட்லஸ் 422) இங்கிருந்து சுமார் நூறு கிலோ மீட்டர் தெற்கிலே ஷுஐபா எனும் துறைமுகம் உள்ளது , நபித்துவம் கிடைத்த ஐந்தாவது வருடம் குறைஷிகளின் தொல்லை தாங்க இயலாமல் ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களின் தலைமையில் 12 ஆண்கள், 4 பெண்கள் என முஸ்லிம்களின் ஓர் கூட்டம் இத்துறைமுகம் வழியாகத்தான் ஹபஷா நாட்டுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள் , ஹபஷாவை இரண்டாம் உலகப்போர் வரை அபீ ஸீனியா என கூறப்பட்டு வந்தது , இன்றைய வழக்கிலோ அதனை எத்தியோப்பியா என்று அழைக்கப்படுகிறது , இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்ற ஒரே காரணத்தை முன் வைத்து தம் சொந்த ஊரை விட்டு விரட்டியடிக்கப்பட்ட, அநீதமிழைக்கப்பட்ட அந்த முஸ்லிம்களின் ஒப்பற்ற தியாக சம்பவங்களெல்லாம் நினைவில் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சென்றன,
ஜித்தாவை அடைவதற்கு சுமார் அரைமணி நேரத்திற்கு முன்னதாக மீகாத் எல்லையை அடைகிறோம் என அறிவிப்பு செய்யப்பட்டு இஹ்ராமுடைய நிய்யத் வைக்காதவர்கள் வைத்துக்கொள்ளும்படி ஹிந்தியிலும் , ஆங்கிலத்திலும் அறிவிப்பு செய்யப்பட்டது . பிரயாணிகள் ஜித்தாவை நெருங்கிய சந்தோசத்தில் தம்தம் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தார்கள் , இப்போது விமானம் தன்னுடைய உயரத்தை படிப்படியாக குறைக்க ஆரம்பித்து விட்டது , ஜித்தாவின் மலைகளும் , சாலைகளும் கட்டிடங்களும் மேக மூட்டத்தில் மங்கலாக தெரிய ஆரம்பித்தன . மலைகளும், பாலைகளும் நிரம்பிய இப்பிரதேசத்தில்தானே நபியும் , நபித்தோழர்களும் சரித்திரம் படைத்து உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்கள் ? இஸ்லாமிய சரித்திரத்தின் எத்தனை பக்கங்கள் இச்சாதனைகள் குறித்து பேசயிருக்கும் , ஆனாலும் அவர்களின் சாதனைகளை கூறி முடிக்க வில்லை என்பதுதானே உண்மை ? ,அப்புண்ணியவான்களின் வாழ்க்கை வரலாறுகள் எத்தனை பூரிப்பானவை ? என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருக்கும் போதே விமானம் தரையில் இறங்கி ஓடுதளங்களில் ஓடி தன் இடத்தை அடைந்து அமைதியாகி விட்டிருந்தது .
எங்களது விமானத்தில் பெரும்பாலானவர்கள் உம்ராவுக்கு வந்தவர்களே , எனவே நாங்கள் விமானத்தை விட்டு இறங்கியதும் பிற பயணிகள் போக உம்ரா பயணிகளுக்கென தனி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
ஜித்தா விமான நிலையம்
நாங்கள் வந்திறங்கிய ஜித்தா விமான நிலையம் உலகின் பிரபல விமான நிலையங்களில் ஒன்று , இதில் முக்கால் நிமிடத்திற்கு ஒரு முறை விமானம் விண்ணில் ஏறிக்கொண்டும் , இறங்கிக்கொண்டும் இருப்பதாக ஜித்தாவில் நீண்ட காலமாக பணி புரியும் எனது மச்சான் கூறினார் , அந்தளவிற்கு அதிக மக்கள் வந்து போகும் இடம் இது . கடல் போன்று விமான நிலையம் விரிந்து கிடந்தது ,ஜித்தா விமான நிலையத்தின் ஹஜ் டெர்மினல் மட்டும் ஐந்து லட்சம் சதுர கிலோ மீட்டர் கொண்டது ,(அட்லஸ் 422) விமான நிலையத்தின் ஆரம்பம் எது , முடிவு எது என்பதை எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை , லட்சக்கணக்கான ஹாஜிகள் வந்து போகும் ஓர் உன்னதமான இடம் இது , அதில் நாங்கள் இறங்கி எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் ஏறியதும் ஒரு ஆலிம் தல்பியா சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார், பஸ்ஸில் இருந்த யாவரும் தல்பியாவை கூறினோம், அது மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது .இதோ நெருங்கி விட்டோம், வந்து விட்டோம் , சிறு தொலைவில்தான் உள்ளோம் இறைவா ! என்று இறைவன் அழைத்த அழைப்புக்கு பதில் கூறுவது போல் தல்பியாவின் வாசகங்கள் அமைந்திருப்பதை அனுபவப்பூர்வமாக என்னால் அப்போது உணர முடிந்தது, இறுதியாக அந்த வாகனம் எங்களை விமான நிலையத்தின் ஒரு கட்டிடத்தில் கொண்டு வந்து இறக்கிவிட்டது, அங்கே சுயதேவைகளை நிறைவேற்றிவிட்டு லுஹர், அஸர் தொழுகைகளை சேர்த்து தொழுது விட்டு இமிகிரேஷனுக்காக கீழ் தளத்திற்கு இறங்கி வந்தோம் , எனது தாயார் மிகவும் சிரமத்தோடு நடந்து வந்தார் , விமான நிலையத்தின் வாசல் அருகிலேயே திருநபி (ஸல்) அவர்கள் ஹஜ் குறித்து கூறிய பொன்மொழி ஒன்று பெரிய எழுத்தில் கம்பீரமாக ஜொலித்துக்கொண்டிருந்தது ,
مَنْ حَجَّ لِلَّهِ، فَلَمْ يَرْفُثْ، وَلَمْ يَفْسُقْ، رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّه
ஒருவர் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்தார், ஹஜ்ஜிலே இச்சையை தூண்டும் காரியத்திலும் ஈடுபட வில்லை, பாவமேதும் புரியவில்லை , அவர் நிரப்பமாக ஹஜ்ஜை முடித்து திரும்பும் போது அன்று பிறந்த பாலகனைப்போல திரும்புகிறார்,(புகாரி)
நபியின் பொன் மொழிகள் பெரிய எழுத்தில் பொறிக்கப்பட்டிருப்பது , பரிசுத்தமான கலிமா இடத்திற்கு இடம் மின்னுவது , தொழுகையின் அழைப்பொலி ஒலிப்பெருக்கியில் கம்பீரமாக ஒலிப்பது , விமான நிலைய அதிகாரிகள் தொழுகையில் ஈடுபடுவது என இஸ்லாத்திற்கென்றே சொந்தமான அடையாளங்களெல்லாம் உலகின் பெரும்பாலான விமான நிலையங்களில் பார்க்க முடியாத காட்சிகள் , அவற்றைக்கண்டு உள்ளத்தில் பூரிப்பு ஏற்பட்டது , இவற்றிற்கு வித்திட்ட நபி மற்றும் நபித்தோழர்களின் மீது மரியாதை பெருகியது .
இமிக்ரேஷனுக்காக நான்கைந்து வரிசைகள் இருந்தன , எல்லாவற்றிலும் புனித பயணிகள் நீண்ட வரிசைகளில் நின்றிருந்தார்கள் , நாங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்த போதே அஸருக்கான பாங்கு விமான நிலைய ஒலி பெருக்கியில் ஒலித்தது,அதிகாரிகள் சிறு சிறு ஜமாத்தாக சென்று தொழுது வந்தார்கள் , புகைப்படம் எடுத்தல், ஐந்து கைவிரல்களின் ரேகைகளை பதிவு செய்தல், பாஸ்போர்ட்டை பரிசோதித்தல் ஆகியவை இமிக்கிரேஷனில் மேற்கொள்ளப்படுகிறது , களைத்து போய் உள்ள ஹாஜிகளை கவனத்தில் கொண்டு இவற்றை செய்வதற்கு துரிதம் காட்டாமல் விமான நிலைய அதிகாரிகள் மிகவும் நிதானத்துடன் வேலை செய்தார்கள் , பிரயாணத்தில் களைத்து நின்ற எமக்கு அது ஒருவகையில் ஆத்திரத்தை மூட்டினாலும் நாம் தியாகத்திற்கு பெயர்போன சத்தியசீலர் ஹஜ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் இணையற்ற தியாகத்தால் உருவான நகரத்தை தொட்டு நிற்கிறோம் என்ற எண்ணமும், வாழ்நாள் கனவான புனித கஃபத்துல்லாஹ்வை காணப்போகிறோம் என்ற இன்பமான எதிர்பார்ப்பும் இமிக்கிரேஷனின் அசௌகரியத்தை மறக்கடித்தன , இருப்பினும் எனது தாயார் கால் வலியுடன் மிகவும் சிரமப்பட்டு அவதியுற்றுக்கொண்டு நின்று கொண்டிருந்ததை பார்த்து எனக்கு மேலும் தர்மசங்கடம் ஏற்பட்டது , பல்வேறு சிந்தனையில் நேரங்கள் கரைந்து கொண்டிருந்தன , ஹஜ்ஜிலும் , உம்ராவிலும் ஹாஜிகள் பொறுமை கொள்ள வேண்டிய பல சந்தர்ப்பங்களில் விமான நிலைய சிரமங்களுக்கு மிகப்பெரிய இடமுண்டு என்பதை உணர்ந்தேன் , ஒரு வழியாக அந்த துன்பத்திலிருந்து விடுபட்டு எங்களின் சாமான்களை தேடிப்பிடித்து எடுத்து வந்து அவற்றில் சக்கர நாற்காலியை கட்டவிழ்த்து எனது தாயாரை அதில் அமரவைத்து ஒரு கையில் தாயாரையும், மறு கையில் சாமான்களின் டிராலியையும் தள்ளிக்கொண்டு எல்லா பரிசோதனைகதைளயும் கடந்து விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்.சாமான்களை தள்ளுவதில் எங்களுடன் வந்த ஒரு ஹாஜியும் மிக உதவியாக இருந்தார், அல்லாஹ் அவருக்கு நற்கூலி வழங்குவானாக , கூடாரங்களின் அமைப்பில் நீண்ட நெடிய கட்டிடங்கள் அவை ஹாஜிகளுக்காக , ஹஜ் வுடைய காலங்களில் வெகுவாக பயன்படுத்தப்படும் என்பதை பறைசாற்றிக்கொண்டிருந்தன . வெளியே வந்து அமர்ந்து எல்லா ஹாஜிகளும் வரும்வரை எதிர்பார்த்திருந்து விட்டு பின்னர் பேருந்திற்காக காத்திருந்தோம் . பேருந்தில் நாங்கள் ஏறி அமர்ந்த போது மணி மாலை 5. 40 தை தொட்டிருந்தது , புனித கஃபத்துல்லாஹ்வை சீக்கிரம் காண வேண்டுமே என்ற வேட்கை மனதுள் ஆர்ப்பரிப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தன, இனம்புரியாத ஓர் எதிர்பார்ப்பு உள்ளுக்குள் தீயாய் கொழுந்து விட்டுக்கொண்டிருந்தது, தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் வருடமாக கழிந்தன , மக்ரிப் தொழுகையை புனித ஹரமில் தொழலாம் என கற்பனையில் மிதந்து கொண்டிருந்தேன் , பஸ் டிரைவரோ நம் அவசரம் புரியாமல் சீட்டுகளை நிரப்புவதில் மும்முரமாக இருந்தார் , பேருந்திலுள்ள சீட்டுகளை நிரப்ப சுமார் ஒரு மணிநேரம் காத்திருந்து மேலும் சில பயணிகளை, ஏற்றிக்கொண்டு ஒரு வழியாக பஸ் புனித மக்கா நகரை நோக்கி நகர ஆரம்பித்தது , அப்போது மணி மாலை 6.30 தை தொட்டுக்கொண்டிருந்தது,ஹரமில் மக்ரிப் என்ற கற்பனையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது . எங்களின் முதல் நாள் முழுக்க பிரயாணத்திலேயே கழிந்து விட்டது .
மக்காவில்....
6.40 மணிக்கு பேருந்து புறப்பட்டது , ஜித்தா நகரம் மின் விளக்கொளியில் ஜொலித்துக்கொண்டிருந்தது , சாலைகளும் மிக நேர்த்தியாக தேவையான இடைவெளியில் விளக்கு கம்பங்களுடன் அமைந்திருந்தன , சிறு சிறு மலைகளுக்கு மத்தியிலும் சாலை ஏறி இறங்கி சென்றது , இந்த பாதையில் நிச்சயம் நபித்தோழர்களின் ஒட்டகங்களும் பயணம் செய்திருக்கக்கூடும், தம் உயிரையோ , சுகத்தையோ பொருட்படுத்தாமல் இறைவனின் பொருத்தத்தை மட்டும் நாடி பாலைவன வெயிலில் பயணித்து எதிரிகளோடு யுத்தம் செய்வதற்கும் , இஸ்லாத்தை உலகெங்கிலும் பரவச்செய்வதற்காகவும் அவர்கள் இம்மலை பிரதேசங்களில் ஏறி இறங்கியிருக்கக்கூடும் , ஆனால் இன்றோ இப்பிரதேசம் என் போன்ற பார்வையாளர்கள் , ஒன்றுக்கும் உதவாதவர்கள் கடந்து போகும் பாதையாக மாறி விட்டது , யா அல்லாஹ் எங்களையும் ஸஹாபாக்கள் சென்ற பாதையில் நடை போடச்செய்வாயாக , மனம் அவர்களுக்காக யாசீன் சூரா ஓதி ஈசால் ஸவாப் செய்ய வேண்டுமென விரும்பியது , எங்கேனும் பிரயாணத்தில் சென்றால் அங்குள்ள நல்லடியார்களின் ஆத்மாக்களுக்காக ஏதேனும் ஓதி ஈசால் ஸவாப் செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசிரியப்பெருந்தகை முப்தி முஹம்மது ரூஹுல் ஹக் ஹஜ்ரத் அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் ,எனவே யாசீன் ஓதி அப்பகுதியில் வாழ்ந்த , அல்லது கடந்து சென்ற நபித்தோழர்களுக்காக நன்மையை எத்தி வைத்தேன் , சிந்தனைகளெல்லாம் ஸஹாபாக்கள் காலத்து சரித்திரங்களை நோக்கியே ஓடிக்கொண்டிருந்தன , நூல்களில் மட்டுமே படித்த அவர்களின் சுவாச காற்றுகள் நிரம்பிய பிரதேசங்கள் இதோ எமது கண்களுக்கு முன்னால் விரிந்து கிடக்கின்றன , காற்றோடு போட்டி போட்டுக்கொண்டு பேருந்து மக்காவை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது .
இங்கே மக்கா மாநகரின் துவக்கத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும் , மக்கா ஆள் அரவமற்ற , மனிதர்கள் யாரும் வசிக்காத ஓர் வனாந்திரமாக கிடந்தது , ஹஜ்ரத் இப்ராஹீம்(அலை) காலம் வந்தது , அவர்கள் பல கிலோ மீட்டர் தள்ளி ஷாமிலே வசித்து வந்தார்கள், அங்கிருந்து அவர்களை அல்லாஹ் அவர் தம் மனைவி, குழந்தை இஸ்மாயீல் (அலை) ஆகியோருடன் இங்கே வரச்செய்தான், பின்பு இறை உத்தரவுக்கிணங்க மனைவியையும், குழந்தையையும் அங்கேயே விட்டு விட்டு ஹஜ்ரத் இப்ராஹிம் (அலை) விடைபெறும்போது செய்த துஆவை அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் , “ என் இறைவா ! என் குடும்பத்தை உன்னுடைய புனித வீட்டுக்கு அருகாமையில் எவ்வித புற்பூண்டுகளுமில்லாத ஓர் வனாந்தரத்தில் தங்க வைத்துள்ளேன் , எங்களின் இரட்சகா அவர்கள் தொழுகையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக தங்கவைத்துள்ளேன் , எனவே மக்களின் உள்ளங்கள் அவர்களை நோக்கி சாயச்செய்வாயாக , அவர்கள் வாழும் இவ்வனாந்திரத்தை மக்களைக்கொண்டு செழிக்கச்செய்வாயாக , அவர்கள் நன்றி செலுத்தி வாழவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு உண்ண உணவாக கனிவர்க்கங்ளை அவர்களுக்கு அளித்திடுவாயாக , என்று பிரார்த்தித்தார்கள் , இந்த பிரார்த்தனை ஒன்றே மக்கா நகரின் துவக்கத்தை புரிந்து கொள்ள போதுமானது , இப்ராஹிம் (அலை) இவ்வாறு பிரார்த்தித்து விட்டு அங்கிருந்து புறப்படுகிறார்கள், அவர்களின் இப்பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரித்து இங்கே மக்களை வரச்செய்தான் , ஸம்ஸம் ஊற்று பெருக்கெடுத்தது , அதனால் மனிதர்கள் வாழ்வதற்கான சூழல்கள் இங்கே உருவாகியன , இவ்வாறு ஒரு நபியின் குடும்பம்தான் மக்கா மாநகரின் துவக்கம் , அவர்களுக்குப் பின் ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) குடும்பம் அங்கே தழைத்தது , அவர்களின் வம்சத்தில்தான் இறுதி நபி , இருலோகத்தின் மாமனிதர் முஹம்மதுர்ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் பிறந்தார்கள் , இவ்வாறு இறைவனின் திருத்தூதர்களின் அசைக்க முடியாத ஈமானும் , உறுதியான நம்பிக்கையுடன் அவர்கள் செய்த பிரார்த்தனையும் , அதை அங்கீகரிக்கும் இறைவனின் பேராற்றலும் தத்ரூபமாக காட்சியளிக்கும் ஓர் உன்னத நகரம்தான் மக்கா , அத்தகைய மக்கா மாநகரை காணத்தான் நாங்கள் விரைந்து கொண்டுள்ளோம் ,
ஜித்தாவிலிருந்து மக்கா 76 கிலோ மீட்டர் , மக்கா நகரத்தில் நுழைவதற்கு முன் குளிக்க வேண்டும் என்பது சுன்னத், குளிக்க முடியாது போனாலும் கூறப்பட்டிருக்கும் பிற ஒழுக்கங்களையாவது பேணும் வண்ணம் குறைந்தபட்சம் மக்கா வரை விழித்தே இருந்து தல்பியாவை அதிகம் ஓதிக்கொண்டே இருக்க வேண்டும் என விரும்பினேன், ஆனால் தொடர் பிரயாணத்தின் காரணமாக களைப்பு மேலிட்டு என்னை அறியாமலேயே நான் தூங்கிப்போனேன் , திடீரென விழிப்பு வந்த போது பேருந்து மக்காவினுல் நுழைந்து ஓடிக்கொண்டிருந்தது , கொத்து கொத்தாக வாகனங்கள் தெரிந்தன, ஹரமுடைய கண்ணியத்திற்கு தக்கவாறு நான் நடந்து கொள்ள வில்லை என பின்னாளில் நான் அதிகம் வருத்தப்பட்டதுண்டு , அந்த சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று , அல்லாஹ் இந்த குற்றத்தை மன்னிப்பானாக , ஹரமை நெருங்கிவிட்டதன் அடையாளமாக பஹ்த் மன்னரின் மணிக்கூண்டு மிக தூரத்திலிருந்தே ஒளித்துகொண்டிருந்தது , ஹரமை காணப்போகிறோம் எனும் நினைப்பு இதயத்துடிப்பை மேலும் அதிகரிக்கச்செய்தது ,
ஹரம் செல்லும் சாலையில் பஸ் நுழைந்தபோது இரவு 8.00 மணி , அப்போது ஹரமில் இஷா தொழுகை ஆரம்பித்து நடந்து கொண்டிருப்பது எனது காதில் விழுந்தது , ஹரமிலே முதல் தொழுகை தொழ முடியாமல் போவதை எண்ணி மனம் துடித்தது , மனதின் துடிப்பு பஸ்ஸுக்கு தெரியவில்லை , அதனால் படுவேகத்தில் வந்து கொண்டிருந்த பஸ் இப்போது ஊற ஆரம்பித்தது , வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தன , இதற்குள் இஷா தொழுகை முடிந்து மக்கள் புனித பள்ளியிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தார்கள் , அதனால் நெரிசல் மேலும் அதிகமானது, இதனால் சுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகுதான் எங்களால் ஓட்டலின் வாசலை மிதிக்க முடிந்தது , சுரூக்கூஸ்ஸப்வா ஹோட்டலின் இரண்டாவது தளத்தில் அறை எண் 202 லே எங்களுக்காக அறை ஒதுக்கப்பட்டிருந்தது, அறையை அடைந்து சாமான்களை அதனதன் இடத்தில் வைத்து விட்டு உம்ராவுக்காக ஆயத்தமானோம் .
உம்ராவிற்காக ஆயத்தமாகுதல்....
எங்களுடைய வழிகாட்டியாக வந்த மௌலவி முஹம்மது இல்யாஸ் முதலில் உணவு தேவையை முடித்துகொள்ளும்படியும், பின்னர் உம்ரா செய்ய செல்லாம் எனவும் கூறியிருந்தார், அதன்படி நாங்கள் செயல்பட்டோம் , உணவை முடித்துவிட்டு சற்று ஓய்வெடுத்து பின்னர் காலையில் எழுந்து உற்சாகத்தோடு உம்ராவிற்காக சென்றிருக்கலாம் , ஆனால் அவ்வாறு செய்தால் பைத்துல்லாஹ்வை அவமதித்ததாக, புறக்கணித்ததாக போய் விடுமோ என்ற கலக்கம் மனதில் ஏற்பட்டது , கஃபத்துல்லாஹ் அருகில் வந்தும் கூட அதை பார்ப்பதில் துரிதம் காட்டாமல் தூங்கிவிழுவது எனக்கு சரியாக படவில்லை , அதிலும் நபி ஸல் அவர்கள் மக்கா வந்த பின் பிற காரியங்களில் ஈடுபடுவதற்கு முன் முதலில் ஒழு செய்து விட்டு தவாபை ஆரம்பித்தார்கள் என நபியவர்களின் உம்ராவைப்பற்றி ஹஜ்ரத் ஆயிஷா ரலி கூறுவார்கள் , (புஹாரி , ஹதீஸ் 1642) இந்த ஹதீஸின் அடிப்படையில் ஒரு ஹாஜி தனது அறைக்கு செல்வதற்கு முன்னதாக, வாகனத்திலிருந்து தனது சாமான்களை இறக்கி வைப்பதை கூட தள்ளி வைத்து விட்டு முதலில் உம்ராவுடைய அமலில் ஈடுபடுவதே சிறந்தது என இமாம் நவ்வீ ரஹ் குறிப்பிடுகின்றார்கள் ,(مجموع 8/15 ) எனவே கால்கள் ஹரம் ஷரீஃபை நோக்கி தானாக நகர்ந்தன , இதுதான் சுன்னத்தான நடை முறை என்றிருந்தாலும் பின்னாளில் நான் நடு நிசியில் , களைத்துப்போன உடலுடன் , உற்சாகம் குன்றிய நிலையில் உம்ராவுடைய அமலை செய்ததற்காக வருந்தியது வேறு விஷயம் .
எங்களின் ஹோட்டல் மக்காவின் தாழ்வான பகுதியில் கலீல் இப்ராஹிம் சாலையில் அமைந்திருந்தது . எனவே தாழ்வான பகுதியிலிருந்து உயரமான பகுதிக்கு செல்ல வேண்டும் , அத்துடன் தாயாரையும் வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு செல்ல வேண்டும், இது களைத்து போயிருந்த ஒருவனுக்கு சற்று சிரமமாக தெரிந்தாலும் கஃபாவை காணப்போகிறோம் என்ற பேராவல் அச்சிரமங்களை இன்பங்களாக மாற்றிவிட்டது . சாலையிலோ மக்கள் வெள்ளம் நிரம்பி காணப்பட்டது , கடிகாரத்தை பார்த்தால் மட்டுமே நாம் 11 மணியை தாண்டிய நடுநிசியில் நிற்கிறோம் என்று உணர முடியுமே தவிர ஹரமின் வீதிகளைப்பார்த்து நேரத்தை கணிக்க முடியாது , அந்தளவிற்கு சாலைகள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தன , தூரத்திலிருந்தே புனித பள்ளியின் ஒளிமயமான மினாராக்களும், நுழைவாயில்களும் கண்களுக்கு தெரிய ஆரம்பித்தன , இப்போது அவைகளெல்லாம் ஏதோ கனவு போல தோன்றுகிறது , ஹரமை நெருங்க, நெருங்க இதயத்தின் துடிப்பு அதிகரித்தது , காலத்தின் பல சவால்களை முறியடித்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் உலகின் முதல் ஆலயமான கஃபாவையல்லவா காணப்போகிறேன், சுமார் 19 மணி நேர பிரயாண அலுப்பு யாவும் உடலை விட்டு மறைந்து புதிய உற்சாகம் என்னை தொற்றிக்கொண்டது , உலக ஆலயங்களில் அல்லாஹ் கஃபத்துல்லாஹ்வுக்கு மட்டுமே இத்தகைய ஈர்ப்பை வைத்துள்ளான், யா அல்லாஹ் அதன் கண்ணியத்தை மேலும் மேலும் அதிகப்படுத்துவாயாக , ஆமீன்
ஹரமிற்குள் நுழைந்ததும் அதன் தூய்மையான ஸஹனிலேயே ஒரு ஓரமாக நின்று முதலில் மக்ரிப் , இஷாவை நிறைவேற்றிவிட்டு புனித பள்ளியில் காலெடி எடுத்து வைத்தோம் .ஹோட்டலிலிருந்து வெளியேறும் போதே எங்களுடன் வந்த உம்ரா பயணிகளெல்லாம் பிரிந்து விட்டார்கள் , எனவே நானும் , தாயாரும் தனித்து விடப்பட்டோம் . நான் தாயாரின் வீல் சேரை தள்ளிக்கொண்டு புனித பள்ளியில் பஹ்து வாசல் வழியாக உள்ளே நுழைந்தேன், பள்ளியில் இரவு 12 மணியை கடந்த நிலையிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது , இறைவனின் நல்லடியார்கள் பலர் வணக்கங்களில் இருந்தார்கள் , வாழ்நாளில் ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்று ஏங்கிய புனித கஃபத்துல்லாஹ்வை இன்னும் சற்று நேரத்தில் காணப்போகிறோம் என்ற உணர்வு சொல்ல முடியாத ஓர் தனி சந்தோசத்தை மனதில் ஏற்படுத்தியது . கஃபாவின் வரலாறு உலகிற்கே பிரமிப்பை தந்ததாகும்,
கஃபத்துல்லாஹ்
கஃபத்துல்லாஹ் , உலகிலுள்ள எல்லா பள்ளிவாசல்களின் முன்னோடி , முதன்முதலாக மனித சஞ்சாரம் பூமியில் தழைக்க ஆரம்பித்தபோது அந்த இடத்தை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து குறிப்பிட்டு காட்டப்பட்டு அங்கே இப்புனித ஆலயம் மலக்குகளால் கட்டப்பட்டது , ஹஜ்ரத் ஆதம் (அலை) அதை முன்னோக்கி தொழுதார்கள் , அதுவே நபிமார்கள் யாவரும் முன்னோக்கி தொழும் கிப்லாவாக இருந்து வந்தது, ஹஜ்ரத் நூஹ் (அலை) காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயத்தில் கஃபாவுடைய கட்டிடமும் சிதைந்துபோனது , ஹஜ்ரத் நூஹ் (அலை) காலத்தில் கட்டிடம் சிதைந்து , இருந்த இடம் தெரியாமல் போன பின்பு ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அது இருந்த இடத்தினை காட்டி தரப்பட்டது , தந்தையும், மகனும் சேர்ந்து கஃபத்துல்லாஹ்வை மறுநிர்மாணம் செய்தார்கள் , கட்ட துவங்கி அதன் கட்டடம் உயர ஆரம்பித்ததும் ஏறி நின்று கட்ட ஒரு கல்லை எடுத்து வரும்படி தம் மகனிடம் கூறினார்கள் , அவர்கள் அபூ குபைஸ் மலைக்கு சென்று ஒரு கல்லை எடுத்து வந்தார்கள் , அந்த கல்மீது ஏறிநின்று கட்டிடத்தை உயர்த்தினார்கள் , கட்டிடம் உயர உயர கல்லும் வளர்ந்தது , அவர்கள் அக்கல்லின் மீது ஏறி நின்றதால் அவர்களின் கால் அச்சு பதிந்தது , அந்தளவிற்கு நெகிழ்வு தன்மை கொண்ட அதிசய கல்லாக அது இருந்தது , அக்கல்லைத்தான் மகாமே இப்ராஹீம் என கூறுகிறார்கள் ,
( تاريخ مكة المكرمة قديما وحديثا محمد الياس عبد الغني 7372, )
இன்றளவிலும் அதிலே அக்கால் அச்சுகளை பார்க்கலாம் ,
ஹஜ்ருல் அஸ்வது
கஃபத்துல்லாஹ்வை கட்டி முடித்த பின் எங்கிருந்து தவாபை துவங்குவது என்பதற்கு அடையாளமாக ஒரு கல்லை பதிக்க வேண்டும் , சுவனத்திலிருந்து ஓர் வெள்ளை நிற கல்லை அல்லாஹ் இறக்கித்தந்தான் , இந்த கல் குறித்து ஹதீஸில் மிகவும் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது , இதைதான் ஹஜ்ருல் அஸ்வத் என்கிறோம் , அது கஃபாவின் தெற்கு மூலையில் மதாபுடைய தரையிலிருந்து 1.10 மீட்டர் உயரத்தில் பதிக்கப்பட்டுள்ளது , 25 செ.மீ, நீளமும் , 17 செ.மீ அகலமும் அந்த கல் கொண்டுள்ளது . முன்னர் அது ஒரே துண்டாகத்தான் இருந்தது , ஹிஜ்ரி 319 ம் ஆண்டு நடந்த ஒரு கலவரத்தில் கராமுத்தா என்ற பிரிவினர் அதை பெயர்த்து இஹ்ஸாவுக்கு கொண்டு சென்று விட்டார்கள், பின்னர் ஹிஜ்ரி 339 ம் ஆண்டுதான் அதை மீட்டப்பட்டது .அந்த இழுபறியின் போதுதான் அது பல துண்டுகளாக உடைந்து போனது . எனவேதான் அது நமக்கு மாறுபட்ட அளவில் எட்டு துண்டுகளாக தெரிகிறது, அது மற்றொரு பெரிய கல்லில் பதிக்கப்பட்டு அதை சுற்றிலும் வெள்ளி பிரேம் போடப்பட்டுள்ளது .
( تاريخ مكة المكرمة قديما وحديثا, محمد الياس عبد الغني 342, 4 )
ஹஜ்ருல் அஸ்வது குறித்து ஹதீஸிலே பல சிறப்புகள் கூறப்பட்டுள்ளன , நபி (ஸல்) கூறினார்கள், ஹஜ்ருல் அஸ்வத் சுவனத்திலிருந்து இறங்கியபோது பாலைவிட வெண்மையாக இருந்தது, மனிதர்களின் பாவங்கள் அக்கல்லை கருப்பாக்கி விட்டன, (திர்;மிதீ , 887) பாவங்கள் ஒரு கல்லிலேயே இவ்வளவு பிரதிபலிப்பை ஏற்படுத்துகிறதென்றால் உள்ளங்களில் அது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும்? என்பதை சிந்திக்க வேண்டும், ஹஜ்ருல் அஸ்வத் சுவனத்தின் மாணிக்கங்களில் ஒன்று, கஃபாவின் மூலையில் பதிப்பதற்காக இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு சுவனத்திலிருந்து தரப்பட்டது. நபி (ஸல்) தம் புனித கரங்களால் எடுத்து அதை அதன் இடத்தில் பதித்துள்ளார்கள், நபி (ஸல்) அதை முத்தமிட்டுள்ளார்கள். அவர்களுக்கு முன்புள்ள நபிமார்களும் முத்தமிட்டுள்ளார்கள், நபிமார்கள் , சத்திய சஹாபாக்கள் , ஸாலிஹீன்கள், ஹாஜிகள் என நல்லடியார்களெல்லாம் வரலாறு முழுக்க அதன்மீது தம் உதட்டை வைத்துள்ளார்கள். அங்கே துஆ ஏற்றுக்கொள்ளப்படும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹுத்தஆலா மறுமையில் ஹஜ்ருல் அஸ்வதை எழுப்புவான், அதற்கு பார்க்கக்கூடிய இரு கண்களும், பேசும் ஒரு நாவும் இருக்கும், அதை சத்தியமான முறையில் தொட்டவர்களுக்காக அது பரிந்து பேசும், (திர்மிதீ, 961) இத்தகைய சிறப்பு மிக்க கல்லைதான் கஃபத்துல்லாஹ்வின் ஓர் மூலையில் ஹஜ்ரத் இப்ராஹிம் அலை பதித்தார்கள் , கஃபத்துல்லாஹ் தயாராகிவிட்டது , எங்கிருந்து தவாபை ஆரம்பிக்க வேண்டும் என்பதும் காட்டப்பட்டுவிட்டது , முதன் முதலில் தந்தையும் மகனும் தவாப் செய்ய ஆரம்பித்தார்கள் , பின்னர் வனாந்திரத்தில், மக்கள் யாரும் வசிக்காத பிரதேசத்தில் , மலைகளும், பாலைகளும், நிரம்பிய பகுதியில் சாதாரணமான இக்கட்டிடத்தை பார்க்கவும் , தொழவும், தவாப் செய்யவும் எவர் வருவார் ? ஆனால் இப்ராஹீம் (அலை) ஓர் நபி ,அவர்கள் நம் போன்ற அவநம்பிக்கை கொண்டவர்களாக இருக்க வில்லை , இறைவனின் ஆற்றலை முழுமையாக நம்பியிருந்தார்கள், எனவே இறைவனின் கட்டளைக்கிணங்க அபூ குபைஸ் மலையின் மீது ஏறி நின்று மக்களை அழைத்தார்கள் , அந்த அழைப்பில் என்ன ஒரு ஈர்ப்புதன்மை இருந்ததோ தெரியவில்லை ! , அந்த குரலில் என்ன மாதிரி மனத்தூய்மை இருந்ததோ தெரியாது ! , அதன் பிரதிபலிப்புதான் ஆயிரக்கணக்காண வருடங்கள் உருண்டோடிய பிறகும் கூட உலகின் நாலாபுறத்திலிருந்தும் மக்கள், கூட்டம் கூட்டமாக பைத்துல்லாஹ்வை ஹஜ் செய்வதற்கும், உம்ரா செய்வதற்கும் வந்து குவிகிறார்கள், தியாகத்திற்கும், மனத்தூய்மைக்கும் இறைவனிடம் எவ்வளவு பெரிய அந்தஸ்து இருக்கிறது என்பதற்கு பைத்துல்லாஹ் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு , கஃபத்துல்லாஹ்வை தவிர்த்து ஈர்ப்புக்கு அங்கே ஒன்றுமே இல்லை, இருப்பினும் மக்கள் வெள்ளம் இங்கு குவிவது போல வேறு எங்கும் குவிவது கிடையாது ,
இந்த பைத்துல்லாஹ்வைப்பார்த்து பொறாமைப் பட்டவர்கள் ஏராளம் , தம்மிடமுள்ள ஆட்சி அதிகாரத்தால் இதனை தோற்கடிக்க முயற்சித்தார்கள் , அப்ரஹா மன்னனின் வரலாற்றை குர்ஆனே விவரிக்கிறது, தான் ஓர் கட்டிடத்தை கட்டிவைத்து மக்கள் அங்குதான் வரவேண்டுமென்று மக்களுக்கு கட்டளையிட்டான் , இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டிய பைத்துல்லாஹ் கட்டிடத்தை இடித்து சின்னாபின்னப்படுத்த யானைபடையுடன் புறப்பட்டான், ஆனால் அவன்தான் அழிந்துபோனான், பைத்துல்லாஹ் அப்போதும் சிறு சேதமில்லாமல் கம்பீரமாக உயர்ந்து நின்றது , நபி (ஸல்) அவர்களின் காலம் வந்தது, காலப்போக்கில் மக்களின் வணக்கமுறைகளில், கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களையெல்லாம் களைந்து மீண்டும் இப்ராஹீம் (அலை) அவர்களின் தூய மார்க்கத்தை நபியவர்கள் நிலைநாட்டினார்கள், இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டிய கட்டிடம் பழுதானபோது குரைஷிகள் அதை புதுப்பித்தார்கள், ஏழ்மையின் காரணமாக முழுமையாக கட்டமுடியாமல் ஒரு பகுதியை மட்டும் சிறு சுவர் வளர்த்து மூடாமல் விட்டுவிட்டார்கள், வாசலையும் ஒர் ஆள் உயரத்துக்கு உயர்த்திவிட்டார்கள் , நபி (ஸல்) அவர்களிடம் அதிகாரம் வந்தபோது இப்ராஹிம் (அலை) காலத்தில் இருந்த படி கஃபத்துல்லாஹ்வை முழுமையாக கட்ட விரும்பினார்கள், இருப்பினும் மக்களின் மனநிலையை கருத்தில்கொண்டு அதை நடைமுறைப்படுத்தவில்லை , பிற்காலத்தில் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவ்விருப்பத்தை நடைமுறைப்படுத்தி கஃபத்துல்லாஹ்வை மாற்றிகட்டினார்கள் , அவர்களை ஷஹீதாக்கிய ஹஜ்ஜாஜ், அவர்கள் கட்டிய கட்டிடத்தையும் இடித்து மீண்டும் முன்பு இருந்தது போலவே கட்டினார், பிற்காலத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஹாரூன் ரஷீத் மன்னரான போது அவர் நபி (ஸல்) விருப்பத்திற்கேற்ப கஃபத்துல்லாஹ்வை மாற்றி கட்ட நினைத்த நேர்த்தில் அப்போது அரபுலகின் பேரறிஞராக இருந்த இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் இவ்வாறு ஆட்சிக்கு வருவோறெல்லாம் கஃபத்துல்லாஹ்வில் கை வைத்துக்கொண்டிருந்தால் கஃபத்துல்லாஹ் கேலிப்பொருளாகிவிடும் என எச்சரித்ததும் மன்னர் ஹாரூன் ரஷீத் தன் எண்ணத்தை கைவிட்டார்கள். இன்றளவிலும் கஃபத்துல்லாஹ் அதே அமைப்பு படி ஓர் பக்கம் சிறு சுவர் மட்டும் எழுப்பப்பட்டு மூடப்படாமல் தொடர்கிறது, அதைதான் ஹதீம் என்கிறார்கள், யாரேனும் கஃபத்துல்லாஹ்வுக்கு உள்ளே சென்று தொழ ஆசைப்பட்டால் ஹதீமில் தொழுதால் போதும், அவருடைய ஆசை நிறைவேறிவிடும், கஃபத்துல்லாஹ் அதே கம்பீரத்தடன் மறுமை நாள் வரை நீடிக்கும், மறுமை நாளின் சமீபத்தில் கஃபத்துல்லாஹ் உயர்த்தப்பட்டுவிடும், இப்படி கஃபத்துல்லாஹ்வுடைய வரலாற்றை சொல்லிக்கொண்டே போகலாம் , அல்லாஹுத்தஆலா இந்த கஃபத்துல்லாஹ்வுக்கு மேலும் மேலும் கண்ணியத்தை அதிகரிப்பானாக, அதை ஹஜ் செய்தவர்கள் , உம்ரா செய்தவர்களுக்கும் அல்லாஹ் கண்ணியத்தை தருவானாக ,ஆமீன்.
இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க கஃபத்துல்லாஹ்வை முன்னோக்கித்தான் நாங்கள் நகர்ந்து கொண்டிருந்தோம் الى المطاف ، என்று அம்புக்குறியிட்ட பலகை எங்களுக்கு கஃபத்துல்லாஹ் அமைந்துள்ள திசையை காட்டிக்கொடுத்தது . இப்புனித பள்ளி ஓய்வென்பதையே கண்டிருக்காது , அப்து முனாபின் மக்களே ! இரவிலோ, பகலிலோ எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பைத்துல்லாஹ்விற்கு வந்து தவாப் செய்து , இறைவனை தொழ நினைக்கும் யாரையும் நீங்கள் தடுக்க வேண்டாம் (திர்மிதீ) என்று கஃபா ஆலயத்தின் நிர்வாகிகளுக்கு நபியவர்கள் பிறப்பித்த நிரந்தரமான கட்டளையின் காரணமாக இன்றளவிலும் இப்பள்ளி மூடப்படாமல் இரவு 11 .30 தாண்டியும் கூட வணக்கசாலிகளின் பெருங்கூட்டம் பள்ளியில் நிரம்பி இருந்தது, அக்கூட்டத்தை கடந்து நானும், எனது தாயாரும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்கொண்டிருந்தோம் ,
முழுமையாக கஃபத்துல்லாஹ் தெரியும் வரை கீழே குனிந்து கொண்டே செல்ல முயற்சித்தேன் . ஆனால் அது சாத்தியப்படவில்லை, ஓரக்கண்கள் கஃபத்துல்லாவை அவசரப்பட்டு பார்த்து விட்டன, எனது தாயாரை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டு சென்றதால் மதாபிலே போடப்பட்டிருந்த பாலத்தின் மீதுதான் நாங்கள் நின்றிருந்தோம் , இப்போது கஃபத்துல்லாஹ் முழுமையாக கண்களுக்கு தென்பட்டது , பாவங்களால் நிரம்பிய இந்த கண்களால் கஃபத்துல்லாஹ்வை காண்பதற்கு வெட்கமாக இருந்தது, .கஃபத்துல்லாஹ்வை காணுவது என்ன சாதாரண பாக்கியமா ? இந்த கஃபா எத்தனை வரலாறுகளை கண்டிருக்கும் ? காலத்தில் மோசமான மனிதர்களையும் கஃபா பார்த்துள்ளது , புனித ஆத்மாக்களையும் கஃபா கண்டுள்ளது , ஓர் உயர்வுமிக்க நபி கட்டியது , ஓர் உன்னதமான நபி இதை கட்டியதில் பங்கெடுத்தது ஆகிய அம்சங்களே கஃபாவின் சிறப்பை கூற போதுமானது , அதையும் தாண்டி உலகின் வேறு எந்த பகுதியில் தொழுதாலும் கிடைக்கப்பெறாத ஆயிரக்கணக்கான நன்மைகளை இங்கே தொழுபவர்கள் அடைவதற்கு இது காரணமாக இருக்கிறது என்றால் அதை காணுவது என்ன சாதாரணமானதா ? , அத்தகைய கஃபதுல்லாஹ் எனும் இப்புனித வீட்டை பார்ப்பதற்கு , பாவியாகிய எனக்கும் கூட அல்லாஹ் தவ்பீக் செய்தானே என்ற நினைப்பு கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்தது , தொழும் போதெல்லாம் காணாத கஃபாவை முன்னோக்கி தொழுவதாக நிய்யத் வைத்துக்கொண்டிருந்தேன், அந்த கஃபாவை கண்ணுக்கு முன் கண்ட பின் ஏற்பட்ட மன நிறைவுக்கு எல்லையே இல்லை , எங்களின் பிரயாண சிரமங்கள் , அலுப்புகள் யாவும் கஃபாவை பார்த்த வினாடியே மறந்து போயின, மகத்தான இறையில்லத்தை கண்டு ஸ்தம்பித்து நின்றேன் , பின்னர் கஃபத்துல்லாஹ்வை பார்த்து இறைவனிடத்தில் என்னுடைய நாட்டங்களையெல்லாம் முடிந்தவரை கேட்டேன், நான் பணிபுரியும் மதரஸா மாணவர்கள் தம் தம் நாட்டங்களை துண்டு சீட்டுகளில் எழுதிதந்திருந்தார்கள், அவற்றையும் முடிந்த வரை கேட்டேன்,இவ்வாறு நீண்ட நேரம் நானும் எனது தாயாரும் துஆவில் ஈடுபட்டிருந்தோம் , துஆவை முடித்து விட்டு உம்ராவை நிறைவேற்ற ஆரம்பித்தோம் ,
ஹஜ்ருல் அஸ்வதை தூரத்திலிருந்தே சைகை செய்து விட்டு தாயாரின் வண்டியை தள்ளுவதோடு என்னுடைய உம்ராவுடைய தவாபையும் நிய்யத் செய்து தவாபை துவங்கினேன் ,
உம்ராவுடைய தவாபிலே....
நாங்கள் பள்ளியில் பஹ்து மன்னர் வாசல் வழியாகத்தான் நுழைவோம், அவ்வாறு நுழையும் போது கஃபாவின் மேற்குப்பகுதி அதாவது ருக்னு ஷாமிக்கும், ருக்னு எமானிக்கும் மத்தியிலுள்ள பகுதியைத்தான் அடைய முடியும், ஆனால் தவாபை ஹஜ்ருல் அஸ்வது பதிக்கப்பட்டுள்ள மூலையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் , எனவே ஹஜ்ரதுல் அஸ்வது வரை சென்று அங்கிருந்து தவாபை ஆரம்பித்தேன் , தவாபிலே வருந்தத்தக்க ஒரு செய்தி என்னவென்றால் நான் என்னுடைய தாயாரை வண்டியில் வைத்துக் கொண்டு தள்ளும் போது அந்த வண்டியின் முன் பாகம் முந்தியுள்ளவரின் பின்னங்காலில் பட்டு அவர் வலியால் துடித்துப் போவார் , அவ்வாறு இடித்தில் ஓர் ஹாஜியுடைய காலிலிருந்து இரத்தம் வடிவதை கூட பார்த்தேன், இவ்வாறு என்னால் சில ஹாஜிகளுக்கு சிரமம் ஏற்பட்டு விட்டதை எண்ணும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது, ஏனெனில் ஒரு முஸ்லிமுக்கு நோவினை தருவது என்பது மிகப் பெரிய குற்றம் , அதுவும் ஹரம் ஷரீபிலே என்பது இன்னும் பெரிய குற்றமாகும் , இருப்பினும் அது என்னை அறியாமல் நடந்து விட்டது என்பதால் இறைவனிடம் மன்னிப்பை ஆதரவு வைக்கிறேன், அடுத்தடுத்த தவாபிலே அத்தவறு நடக்காமல் கவனமாக இருந்தேன் , தவாபிலே அந்த நடு நிசியிலும் கூட கூட்டம் அலை மோதியது , குரூப் குரூப்பாக, உம்ராவுக்கு வந்தவர்கள் குரூப்பாகவே தவாப் செய்ய முயற்சிக்கிறார்கள் , அவர்களின் வழிகாட்டி அவர்களுக்கு உரக்க சப்தமிட்டு துஆக்களை சொல்லிக் கொடுக்கிறார், அவர்கள் அதை கூறிக்கொண்டே தவாப் செய்கிறார்கள், சிலர் மௌனமாகவே தவாப் செய்கிறார்கள் , நான் மனனம் செய்து வைத்திருந்த துஆக்களெல்லாம் அந்நேரத்தில் ஞாபகத்திற்கு வரவில்லை , கிதாபுகளிலும் தவாபுக்கென தனி துஆ எதுவுமில்லை என்று படித்திருந்ததால் நான் அத்துஆக்களை நினைவு படுத்திக்கொள்ள முயற்சிக்க வில்லை , அமைதியாகவே தவாப் செய்தேன் , பாலத்திலே தவாப் செய்யும் போது அவ்வளவு நெருக்கடி இருப்பதில்லை , மதாபிலே செய்யும் போது நெருக்கடி ஏற்படுகிறது , பிறகு மதாபிலே தவாப் செய்யும் சந்தர்ப்பம் அமைந்த போது பிற முஸ்லிம்களை இடித்துக்கொண்டு செல்லக்கூடாது என்ற நபிமொழியின் கருத்துக்கிணங்க என் கைகளை பிறரை தள்ளுவது போல உயர்த்தாமல் தொங்க போட்டுக் கொள்ளவே முயற்சி செய்தேன் . பலர் தவாபிலும் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதற்காக கைகளால் பிறர்களை தள்ளி நகர்த்தி விட்டு செல்கிறார்கள் , இது தவறான போக்கு என்பதை அவர்கள் உணர்வதில்லை , சில சமயம் முன்னே செல்வது பெண்களாக இருக்கும் போது இன்னும் தவறாகிப்போகிறது , இதில் ஹாஜிகள் கவனமாக இருக்க வேண்டும் ,
இதே போல ஹஜ்ருல் அஸ்வதை தொடுவதற்கும் முண்டியடித்துக்கொண்டு , அதிலே தன்னுடைய வீரத்தையெல்லாம் வெளிப்படுத்தி பிறர்களை தள்ளிக்கொண்டு செல்வதிலும் எனக்கு விருப்பமில்லை , அதை பாவம் என கருதினேன் , இதனால் அதை தொடுவதற்கு முயற்சி செய்த போதெல்லாம் பிறர்களை தள்ளிக்கொண்டுதான் செல்ல வேண்டும் என்பதால் அம்முயற்சியை கை விட்டுவிட்டேன் . இன்ஷா அல்லாஹ் அதை தொடுவதால் என்ன நன்மை கிடைக்குமோ , இதே போல ஹதீமிலே தொழுவதால் என்ன நன்மை கிடைக்குமோ அதை விட அதிகமாக, ஒரு முஸ்லிக்கு நோவினை தருவதை விட்டு தவிர்வதில் முனைப்பு காட்டியதால் கிடைக்கும் என இறைவனிடம் நான் ஆதரவு வைக்கிறேன்,ஆனால் ஹஜ்ருல் அஸ்வதுக்கு பக்கத்தில் இந்தியா , பாகிஸ்தான் நாட்டவர்களைப்போல தெரிந்த சிலர் மிகவும் ஆக்ரோஷத்துடனும் ,மூர்க்கத்துடனும் ஹஜ்ருல் அஸ்வதை தொட முயற்சித்துக்கொண்டிருந்த காட்சி கஃபத்துல்லாஹ்வுடயை கண்ணியத்தையே குலைப்பதாக அமைந்திருந்தது ,ஹஜ்ருல் அஸ்வதை தொடுவது ஒரு சுன்னத்தான அமல்,பிற முஸ்லிம்களுக்கு நோவினை தராமல் இருப்பதோ கடமையான அமல் , ஒரு சுன்னத்தை செய்வதற்காக ஒரு கடமையை பாழ்படுத்துவது யார் கற்றுத்தந்த மார்க்கமோ தெரியவில்லை, மனிதன் உணர்ச்சி வசப்பட்டு விட்டால் அவனது அறிவு வேலை செய்வதில்லை என்பதற்கு அக்காட்சிகள் சாட்சி .
தவாபை கணக்கிடுவதற்காக ஏழு மணிகள் கொண்ட தஸ்பீஹை டிராவல்ஸ் காரர்கள் தந்திருந்தார்கள், ஆரம்பத்தில் அதையே பயன்படுத்தினேன் , அடுத்தடுத்த தவாப்களில் ஒவ்வொரு தவாபிலும் ஒரு ஜுஸ்வு ஆரம்பித்து அது நிறைவடைவதற்குள் அடுத்த சுற்று ஆரம்பித்து விட்டால் அதிலே இரண்டாவது ஜுஸ்வு என ஏழு தவாபிலும் குர்ஆனுடைய ஜுஸ்வைக் கொண்டு தவாபை கணக்கிட்டேன் . அது எளிமையாகவும் இருந்தது , சும்மா அமைதியாக தவாப் செய்வதை விட குர்ஆன் ஓதிக் கொண்டு தவாப் செய்வது நன்மைக்குறியதாகவும் தெரிந்தது . சில நேரங்களில் நான் துஆ செய்ய கடமைப்பட்டவர்களை ஏழு வகையினர்களாக பிரித்து ஒவ்வொரு தவாபிலும் ஒரு வகையினர்களுக்கு துஆ செய்வது என்பதன் மூலமும் தவாபை கணக்கிட்டேன் , ஆக நாங்கள் தவாபை முடித்து விட்டு இரண்டு ரக்அத் பாலத்திலேயே தொழுது விட்டு ஸம் ஸம் நீரை அருந்தி தாகம் தீர்த்தோம் , உம்ராவுடைய தவாப் முடிந்து விட்டது ,
உம்ராவுடைய மற்றொரு அமல் ஸபா , மர்வாக்கிடையே தொங்கோட்டம் ஓடுவது , அதை நிறைவேற்றுவதற்காக தாயாருடன் ஸபா , மர்வாவுக்கு வந்தேன் .
ஸபா , மர்வா தொங்கோட்டம்
ஸபா , மர்வாவிலும் கூட்டம் அலை மோதியது ,ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது , உடலும் இதுவரை இது போன்ற அமல்களுக்கு பழக்கப்பட்டதில்லை என்பதால் மிகவும் சோர்ந்து விட்டது , ஹோட்டலுக்கு வந்ததும் ஓய்வெடுத்து விட்டு நிம்மதியாக காலையில் வந்து உம்ரா செய்திருக்கலாமோ , அவசரப்பட்டு விட்டோமோ என எனக்கு எண்ணத்தோன்றியது , அதனால் அந்த அமலில் இருக்க வேண்டிய இன்பம் கூட பாதிக்கப்பட்டது , ஸபாவில் துஆ செய்வது , மர்வாவில் துஆ செய்வதெல்லாம் விடுபட்டு போனது , இறுதியில் இந்த ஏழு சுற்றுகள் எப்போது முடியும் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு நிலைமை போய் விட்டது , வாழ்க்கையில் முதன் முறையாக செய்த அந்த அமலை இத்தனை பரபரப்புடன் செய்ததை எண்ணி பின்னாளில் மிகவும் வருந்தினேன், இனி உம்ராவுக்கு வரும் ஹாஜிகள் என்னைப்போல வருந்தும் நிலை அவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக இதை இங்கே எழுதியுள்ளேன் , எனவே அவர்கள் நடுநிசியில் , அல்லது களைத்த நிலையில் ஹரமை அடைந்தால் முதலில் ஓய்வெடுத்து விட்டு பின்னர் இப்பிரியமான அமல்களில் ஈடுபட்டால் இன்ஷா அல்லாஹ் அது தவறாக இருக்காது , யாருக்கேனும் உடனடியாக உம்ரா வில் ஈடுபடும் அளவுக்கு மிகுந்த ஆர்வமும் , கடைசி வரை குன்றிப்போகாத உற்சாகமும் , உடல் பலமும் இருந்தால் முதலில் அவற்றை செய்து முடிப்பதே நல்லது.
இங்கேயும் முஅல்லிம்கள் தாம் அழைத்து வந்த குரூப்புக்கு நீண்ட நீண்ட துஆக்களை சொல்லிக்கொடுத்துக் கொண்டு வந்தார்கள் ,நான் தவாபின் போது நடந்து கொண்டதைப்போலவே இங்கேயும் நடந்து கொண்டேன் , மூன்றாவது , நான்காவது ஓட்டங்களில் உடல் மிகவும் சோர்ந்துவிட்டது , இறைவனின் உதவிமட்டும் இருந்திருக்காவிட்டால் அந்த அமலை நிறைவு செய்வது சாத்தியமாகி இருக்காது . அல்ஹம்துலில்லாஹ் .அதை முடித்த பின் நாங்கள் எங்கள் அறைக்கு திரும்பலானோம் .
அறையை நோக்கி ....
ஸபா , மர்வா இரண்டும் கஃபத்துல்லாவின் கிழக்குப் புறத்தில் அமைந்துள்ளது , ஆனால் எங்களின் ஹோட்டல் கஃபத்துல்லாவின் மேற்குத்திசையில் உள்ளது . ஸபா மர்வா ஓட்டத்தை முடித்து விட்டு அந்த திசையில் அமைந்துள்ள வாசல் வழியாக வெளியே வந்தோம் . எங்கே செல்லவேண்டும் என தெரியாமல் தத்தளித்தோம் , இயற்கை உபாதைகளுக்கான தேவையும் எங்களை அலைக்கழித்தது , எங்கள் குழுவினர்கள் ஹோட்டலிலிருந்து புறப்படும் போதே பிரிந்துவிட்டார்கள் . எனவே நானும் எனது தாயாரும் மட்டும்தான் எப்படி வெளியேறுவது என தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தோம், நான் என்னுடைய தாயாரை தள்ளிக்கொண்டு மீண்டும் ஸபா மர்வா வாசல் வழியாக புனித பள்ளியில் புகுந்து பஹ்து மன்னர் வாசல் எங்குள்ளது ? என விசாரித்தும் , அம்புக்குறிகாட்டிய திசையில் நடந்தும் ஒரு வழியாக வெளியே வந்தேன் .
பள்ளியை விட்டு இறங்கி ஒரு தெருவில் நடந்த போது அது வித்தியாசமாக தெரிந்தது , நல்லவேளையாக அறையை விட்டு புறப்படும்போது ஹோட்டல் விசிட்டிங்கார்ட்டை உடன் எடுத்து வந்திருந்தோம், ஒரு போலீஸ் வேன் நின்று கொண்டிருந்தது . அதனுள் இருந்த ஒரு போலீஸிடம் கார்டை காட்டி வழி கேட்டபோது அவர் நாங்கள் செல்லும் பாதை தவறு என்றும் அடுத்த தெருவில் செல்லும் படியும் கூறினார் , அவர் காட்டிய திசையை நோக்கி மீண்டும் நடந்தோம் , ஹரமை விட்டு வெளியே வரும் போதே என்னுடைய கோலத்தை பார்த்து விளங்கிக் கொண்டவராக முடிவெட்ட வேண்டுமா? என்று ஒரு பாகிஸ்தான் சலூன் காரர் கேட்டார், முதலில் சுய தேவையை நிறைவேற்றி நிம்மதி பெற வேண்டும், எல்லாவிற்றிற்கும் மேலாக என்னுடைய தாயார் மிகவும் சோர்ந்திருந்தார் , அவரை அறையில் கொண்டு சேர்ப்பது மிக மிக்கிய தேவையாக இருந்தது , எனவே முடிவெட்டுவதை தள்ளிப் போட்டு விட்டு சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டு ஒரு வழியாக ஹோட்டலை வந்து அடைந்தோம் .
கடிகாரம் இரவு 3 மணி என காட்டிக் கொண்டிருந்தது , உடலில் கடுமையாக சோர்வு தெரிந்தது , தூங்குவது மட்டுமே இப்போதைய அவசரதேவை , படுக்கையை நெருங்கிய போது திடீரென மனதில் வந்தது, நாங்கள் ஜித்தா வந்த செய்தியோ , மக்கா வந்த தகவலையோ இது வரை வீட்டினர்களுக்கு தெரிவிக்க வில்லை , சிம் கார்டு இல்லாததனாலும் , அடுத்தடுத்த பிரயாணம் மற்றும் அமல்களினாலும் போன் செய்யும் சந்தர்ப்பம் அமைய வில்லை, அவர்கள் பதட்டப்பட்டிருக்கக் கூடும் , எனவே வைபியை ஆன் செய்து கிடைத்த சிறு சிக்னலை வைத்து வாட்ஸ் அப் வழியாக நாங்கள் வந்து சேர்ந்து விட்டோம் என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு உறங்கச் சென்றேன் , சிறிது நேரமாவது உறங்கி எழுந்தால் மட்டுமே உடலை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும் என்பதால் 4 மணிக்கு விழிக்கலாம் என்ற எண்ணத்தோடுதான் படுத்தேன் . அது போல சிறிது நேரத்தில் விழித்தும் விட்டேன் . ஆனால் மணியைப்பார்த்தால் அது காலை 9 தை காட்டிக்கொண்டிருந்தது , பதறிப்போனேன் , இந்த புனிதமான இடத்தில் வந்துமா தொழுகை தவறிப் போக வேண்டும்? இது பாவமில்லையா ? என்ற சிந்தனை உள்ளத்தை உறுத்திக் கொண்டிருந்த போதே இன்னொரு எண்ணமும் மனதில் ஈட்டியாய் பாய்ந்தது,
மக்காவில் ஒரு அலைச்சல்...
என்னுடைய சிறியதந்தையின் மகன், தம்பி சாதிக் தமாமில் பணிபுரிகிறான் , அவனும் எங்களுடன் உம்ரா செய்வதற்காக தமாமிலிருந்து பஸ்ஸிலே புறப்படுவதாகவும் , வியாழன் காலை சுப்ஹுக்கு மக்கா வந்து விடுவதாக கூறியிருந்தான் , மணியோ இப்போது காலை 9.30 தை தாண்டிக்கொண்டிருந்தது. இவ்வளவு நேரம் வரை முன்பின் தெரியாத இந்நகரத்தில் , மக்கள் வெள்ளத்திற்கிடையே அவன் எங்கே தத்தளித்துக் கொண்டிருக்கிறானோ ? எங்களை எங்கே தேடுகிறானோ ? தெரியவில்லை, எனவே இப்போதைய அவசரதேவை சிம்கார்டு மட்டுமே , அதை வைத்தே அவனையும் தேடிப்பிடிக்கமுடியும், நாங்கள் பத்திரமாக வந்த தகவலை வீட்டினர்களுக்கும் உறுதியாக தர முடியும் , ஹோட்டலை விட்டு புறப்பட்டேன் , நம் ஊரைப்போல சிம்கார்டுகளை கடைக்கு கடை வைத்திருப்பார்கள், எளிதாக வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடுதான் ரோட்டிலே இறங்கினேன், ஆனால் அந்த எண்ணம் தவறு என்பதை பின்புதான் உணர்ந்தேன் , சிம் கார்டு வாங்க கடை கடையாக அலைந்தேன், உம்ராவின் கடைசி கடமையான முடிசிரைத்தலை இன்னும் செய்யாததால் இஹ்ராமுடைய கோலத்தையும் கலைய முடியாமல் அதே ஆடைகளோடு திரிந்தேன், ஒரு சந்தினுள் கடை இருக்கும் என்ற எண்ணத்தில் உள்ளே புகுந்தால் அங்கே சலூன் கடைதான் இருந்தது, சரி, வந்த இடத்தில் கடைசி கடமையையாவது முடிப்போம் என கடையினுள் புகுந்தேன், ஐந்து, ஏழு நிமிடத்தில் தலை மழிக்கப்பட்டு வெளியே வந்தேன், கூலியாக 10 ரியால், இந்திய பணமதிப்பு படி பார்த்தால் 180 ரூபாய் , ஒருமொட்டைக்கு என் வாழ்க்கையில் 180 ரூபாய் கொடுத்தது அப்போது மட்டும்தான், ஆனால் மனம் எங்கே கஞ்சத்தனம் செய்யக்கூடாதோ அங்கேதான் கஞ்சத்தனம் செய்கிறது , 10 ரியாலை செலுத்தி விட்டு அங்கேயே பார்க்க மிருதுவானவராக தெரிந்த ஒருவரிடம் சிம் கார்ட் எங்கே கிடைக்கும் ? என விசாரித்தேன், அவர் ஹரமிற்கு அருகில் மட்டுமே கடையுண்டு என கூறினார்,
அவர் சுட்டிக்காட்டிய இடத்தை அடைந்த போது ஹரமுக்கு அருகில் உயரமான கட்டிடத்தின் கீழ்தளத்தில் சவூதியின் பிரபல நெட்வொர்க்கான s.t.c ஷோரூம் இருந்தது , அதனுள் புகுந்தேன் , அங்கே பலர் எனக்கு முன்பே காத்திருந்தார்கள், அவர்களோடு அவர்களாக உட்கார்ந்திருந்தேன், ஒவ்வொருவரின் கைரேகையை பதியவைத்தார்கள், அவர்களின் அடையாள அட்டையின் ஜெராக்ஸையும் வாங்கினார்கள், நான் முன்னே செல்ல எத்தனித்த போது ஒரு மெஷினை காட்டி அங்கே டோக்கன் பெறவேண்டும், டோக்கன் எண் படிதான் வர வேண்டும் என கூறினார்கள் , நானும் சென்று அதிலிருந்து டோக்கனை பெற்றேன்,
மணி காலை 11 னை நெருங்கிக்கொண்டிருந்தது ,எனது கலக்கமும் அதிகரித்தது , எனது டோக்கன் எண் வர சுமார் 20 டோக்கன்கள் இருந்தன , இங்கே காத்திருந்தால் இன்றைய நாளே ஓடிவிடும் என்ற விரக்தியில் வெளியில் வந்தேன், காலை உணவருந்தவில்லை, பசியும் வயிற்றை பிசைந்தது, அங்கிருந்து நடந்து ஹோட்டலின் உணவறைக்கு வந்து உணவு சாப்பிட்டேன். அங்கே தமிழ் நாட்டு பணியாளர் ஒருவர் இருந்தார் , அவரிடம் சற்று போனை வாங்கி எனது தம்பிக்கு போன் செய்தேன், யாரிடமும் கையேந்தக்கூடாது, தேவையாகக் கூடாது என்பதற்காகத்தான் இது வரை யாரிடமும் போனை கேட்டு பேச முன் வர வில்லை, இனி இதை விட்டால் வழியில்லை, போனில் அவனை தொடர்பு கொண்டு பேசிய போது அவனும் நான் நினைத்தபடியே எங்களை தேடி அலைந்து கொண்டிருப்பதாக பதட்டத்துடன் தெரிவித்தான், அவன் நிற்கும் இடத்தை கேட்டுக்கொண்டு போன் தந்தவருக்கு நன்றி கூறி விட்டு மீண்டும் ஹரமைநோக்கி ஓடி வந்தேன்,
நான் அவனை தேடிச்செல்வதற்கு பதிலாக அந்த போனிலேயே ஹோட்டலின் பெயரை கூறி அவன் எங்களை தேடி வரும்படி கூறியிருக்கலாம் , அந்தளவுக்கு எனக்கு நிதானம் இல்லை , அவன் சொன்ன இடத்திற்கு வந்து பார்த்த போது அங்கே அவன் இல்லை, மீண்டும் மெஸ்ஸுக்கு சென்று போனை வாங்கி அவனை தொடர்பு கொள்வதற்கும் கால்கள் மறுத்தன, ஹரமுக்கு அருகில் நான் நின்று கொண்டிருந்ததால் மீண்டும் s t c ஷோ ரூமுக்குள் நுழைந்து சிம் கார்ட் பெறலாம் என்ற எண்ணத்தில் சென்றேன், என்னுடைய டோக்கன் நம்பரை விட ஒரு நம்பர் முந்திவிட்டிருந்தது, நான் என்னுடைய டோக்கனை காட்டி மேஜையின் முன்னே அமர்ந்தேன் மிகுந்த ஆவலோடு... ஆனால் சிறிது நேரத்தில் அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது, என்னிடமிருந்த பிற புரூப்களை நிராகரித்து விட்டு என்னுடைய பாஸ்போர்ட் ஜெராக்ஸ் கேட்டார்கள், அதை என்னுடன் கொண்டுவரவில்லை, அது டிராவல்ஸ்காரர்களிடம் இருந்தது , உங்களின் கைரேகை மட்டுமே போதும் , நீங்கள் சிம்மை பெறலாம் என்ற விளம்பரத்தை பார்த்துதான் அங்கே நம்பிக்கையுடன் அமர்ந்திருந்தேன் , பாஸ்போர்ட் ஜெராக்ஸ் வேண்டும் என்று கடையில் இருந்த அரபி என்னிடம் கூறி , என்னை திருப்பி அனுப்பியதும் , பிறகு இந்த விளம்பரத்திற்கு என்னத்தான் அர்த்தம் ? என்ற விடை தெரியாத கேள்வியோடு அங்கிருந்து நான் வெளியேறினேன் , பெரும்பாலும் விளம்பரங்கள் ஏமாற்றுகின்றன , அதிலிருந்து இப்புனித பூமியும் தப்பவில்லையே என்ற வருத்தமும் என்னுடன் சேர்ந்து கொண்டது ,
உச்சி வெயில் மண்டையை பிளந்தது, தேடியது எதுவும் கிடைக்காததில் வெகுவாக சோர்ந்து போனேன் , அப்புனிதமான பூமி எனக்கு அந்நியமாக தெரிந்தது , தியாகமும் , கஷ்டமும் இந்த பூமியிலிருந்து பிரிக்க முடியாத அம்சங்கள் போலும், சுத்தமான இடத்தில் அசுத்தத்திற்கு இடமில்லை என்பது போல ஏமாற்றம் என்னை அப்பிக்கொண்டது , ஹோட்டலும் குறிப்பிட்டு சொல்லும் தூரத்தில் இல்லை , விரக்தியோடு என்ன செய்வதென்று தெரியாமல் , எங்களைத்தேடி எங்கோ திரிந்து கொண்டிருக்கும் தம்பியின் மீதும் பரிதாபம் மட்டுமே என்னால் பட முடிந்தது , 9 மணிக்கு துவங்கிய அலைச்சல் , மணி 12 ஆகியும் முடியவில்லை . என்ன செய்வதென்று புரியாமல் ஹோட்டலுக்கு நடந்தேன், ஹோட்டலுக்குள் சென்று எனது தாயாரின் அறைக்கு சென்றால் அங்கே என்னுடைய தம்பி இருந்தான், உணவு , நீர் எல்லாம் வைத்திருந்த ஒட்டகத்தை தொலைத்து விட்டு அதை தேடி தேடி பாலைவனத்தில் திரிந்து, அசந்து போய் நான் என்னுடைய இருப்பிடத்திற்கே சென்று உயிரை விட்டு விடுகிறேன் என்று திரும்பிய பயணி , தன் இருப்பிடத்தில் அந்த ஒட்டகம் இருக்கக்கண்டால் எத்தனை ஆனந்தப்படுவான் ? என்பதை நபி மேனி ( ஸல்) அவர்கள் ஒரு அடியான் பாவமன்னிப்பு கோரும் போது அல்லாஹ் அடையும் மகிழ்ச்சிக்கு உதாரணமாக சொல்வார்கள் , அதே உதாரணம் என்னுடைய நிலமைக்கு மிகவும் பொருந்தி போனது ,
அவன் என்னை காண முடியாது போனதும் மீண்டும் நான் அவனை தொடர்பு கொண்ட எண்ணுக்கே அவன் தொடர்பு கொண்டு ஹோட்டல் பெயரை விசாரித்து ஒரு வழியாக ஹோட்டல் வந்து சேர்ந்ததை பிறகு அவன் எனக்கு தெரிவித்தான் , இவ்வாறாக வாழ்க்கையில் , எனது உம்ராவுடைய பிரயாணத்தில் மறக்க முடியாத அந்த அலைச்சல் முடிவுக்கு வந்தது , அல்ஹம்துலில்லாஹ் .
தம்பி உம்ராவுடைய இஹ்ராம் அணிந்திருந்தான், அவனுடன் சென்று அவன் உம்ராவை பூர்த்தி செய்யும் வரை நாங்கள் ஹரமிலேயே இருந்து விட்டு அஸர் தொழுதுவிட்டுத்தான் அறைக்கு திரும்பினோம், மாலையில் மக்ரிப் தொழுகைக்கு பின் பஹ்து மன்னர் வாசலுக்கு நேர் எதிரே உள்ள முற்றத்தில் தாயார் , நான் , தம்பி மூவரும் அமர்ந்திருந்தோம் .
ஹரமுடைய முற்றம்
மக்ரிப் முதல் இஷா வரை ஹரமை சுற்றி அமைக்கப்பட்டுள்ள திறந்த பகுதியில் அமர்ந்து கொண்டு ஹரமுடைய இனிமையான பாங்கொலியை கேட்டுக்கொண்டும் , சுதைசி போன்ற கம்பீரமான குரல் வளம் கொண்ட இமாம்களின் கிராஅத்தை தொழுகையில் ரசித்துக்கொண்டும் , நான் ஹரமிலே உள்ளேன் , பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் புனித பகுதியில் அமர்ந்துள்ளேன் என்ற மன நிறைவுடன் துஆவிலும் , தொழுகையிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அந்த இன்பத்திற்கு அளவே இல்லை , ஹரம் என்பதன் பொருளையே அந்த சூழலை அடைந்த பின்னர்தான் முழுமையாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது , உலகின் வேறெந்த பகுதியிலும் அடைந்த கொள்ள முடியாத ஓர் தனி மன அமைதியை அச்சூழல் யாவருக்கும் அள்ளித்தருகிறது , மனைவியோடு , சிறு குழந்தைகளோடு , குடும்பத்தார்களோடு அங்கே அமர்ந்திருக்கும் புனிதர்களை காணும் போது அச்சுவன வாழ்வே உலகிற்கு இறங்கி வந்து விட்டதைப்போல உணர்வு பிறக்கிறது , புழுக்கமான நேரங்களில் நுண்ணிய நீர்த்துளிகளை தெளிக்கும் ஏராளமான சுழல் மின் விசிறிகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன , அவை அச்சூழலை மேலும் இன்பமயமாக்குகிறன . அதில் நறுமணங்களும் கலக்கப்படுவதாக நான் எண்ணுகிறேன், அச்சூழலின் இன்பம் இப்போதும் மனதில் பசுமையாகவே இருக்கிறது , நான் பல முறை எனது தாயாருடன் அம்முற்றத்தில் அமர்ந்திருக்கும் வாய்ப்பு அமைய பெற்றேன் ,
உறவினருடன் சந்திப்பு
ஆக அந்த குழுமையான சூழலில் நாங்கள் அன்று அமர்ந்திருந்தபோது என்னுடைய மாமி மகன் மஹ்பூப் அலி அவர்கள் எங்களை சந்தித்தார் , அவர் ஜித்தாவில் பல வருடங்களாக பணியாற்றுகிறார் , எங்களை சந்திப்பதற்காக ஜித்தாவிலிருந்து வந்திருந்தார் , அவரை சந்தித்ததில் எங்களின் மகிழ்ச்சி மேலும் கூடியது , ஒரு சிரமத்திற்குப்பின் இரண்டு சந்தோசம் வரும் என்று குர்ஆன் கூறியது என் பிரயாணத்தில் இவ்வாறு நிறைவேறுகிறதோ என நான் எண்ணிக்கொண்டேன் ,
இஷாதொழுது விட்டு தாயாரை ஹோட்டல் அறையில் கொண்டு சென்று விட்டு விட்டு நான் , மச்சான் , தம்பி மூவரும் மீண்டும் ஹரமிற்கு திரும்பி வந்து தவாபில் ஈடுபட்டோம் , அப்போதுதான் மதாபில் இறங்கி நிம்மதியாக கஃபதுல்லாஹ்வுக்கு அருகாமையில் சென்று தவாப் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது , கஃபாவின் பிற பகுதியை தொட முடிந்ததே தவிர ,ஹஜ்ருல் அஸ்வதை அப்போதும் தொடமுடியவில்லை,
தவாபை முடித்து விட்டு மச்சானிடம் என்னுடைய சிம் பிரச்சனையை சொல்ல அவர் அப்போதே s t c ஷோரூம் செல்ல முயன்றார், அப்போதும் டோக்கன் நம்பர் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்பதை உணர்த்தியது, எனவே நேராக ஹரமிற்குள் வந்து மூவரும் தூங்கிவிட்டோம் , காலையில் எழுந்து சுப்ஹு தொழுகையை முடித்து விட்டு அறைக்கு திரும்பினோம் ,
இன்று ஜூம்ஆ நாள் . நாங்கள் குளிப்பதற்காக சென்றோம், மச்சான் அப்போதே ஷோரூம் சென்று ஒரு மணிநேரம் வரையாவது காத்திருந்து தன்னுடைய குடியுரிமை அட்டையை பயன் படுத்தி எனக்காக சிம்வாங்கி தந்தார், காலை 10 .40 மணியளவில் எங்கள் அறையிலிருந்து தாயாரை அழைத்துக் கொண்டு நாங்கள் மூவரும் ஹரமிற்கு புறப்பட்டோம், தம்பியும் , மச்சானும் தாயாரின் வீல் சேரை தள்ளுவதில் உதவி செய்தார்கள் , காலை 11 மணிக்கே ஹரம் நிரம்பியிருந்தது , ஒவ்வொரு வாசலாக பூட்டப்பட்டு புதிதாத கட்டப்பட்ட பள்ளியினுள்தான் எங்களுக்கு இடம் கிடைத்தது . தம்பி ஜூம்ஆ தொழுததும் புறப்பட்டாக வேண்டும் , எனவே அவனை பஸ் ஏற்றி விட அவனுடன் மச்சானும் சென்று விட்டார் , ஆதலால் நாங்கள் ஜும்ஆவுக்கு முன்னரே பிரிந்துவிட்டோம் . இருப்பினும் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் மச்சான் வந்து செய்த உதவியும் , இரவிலே ஹரமுக்கு வந்து செய்த தவாபும் நினைவிலேயே நின்று விட்டது . அல்லாஹ் அவர்களுக்கு சிறந்த கூலியை இருலோகத்திலும் தந்திடுவானாக , ஆமீன் .
மஸ்ஜித் ஆயிஷாவை நோக்கி..
சனிக்கிழமை காலை எங்களின் வழிகாட்டி 8 மணியளவில் எல்லோரும் ஹோட்டலின் கீழ் தளத்தில் ஒன்று சேரும்படியும், ஆயிஷா பள்ளிசெல்லலாம் என்றும் அறிவிப்பு செய்தார் , உம்ராவுக்கு செல்வதாக இருந்தால் இங்கேயே குளித்து ஆடை மாற்றிக் கொள்ளவும் என்று கூறினார், என்னுடைய பொடு போக்கின் காரணமாகவும் ,குளியலில் பிறர்களுக்கு முன்னுரிமை தந்ததன் காரணமாகவும் நான் குளித்து தயாராகுவதில் தாமதமாகி விட்டது, எங்களை எதிர்பார்த்து உடன் வந்தவர்கள் ரொம்ப நேரம் காத்திருந்திருப்பார்கள் என நினைக்கிறேன் , இவ்வாறு என்னால் அவர்களுக்கு ஏற்பட்டதாமத்திற்கும் , இடைஞ்சலுக்கும் இன்றளவிலும் மனதில் வருந்துகிறேன் , யா அல்லாஹ் என்னுடைய அத்தவறை மன்னிப்பாயாக,
ஹஜ், உம்ராவுடைய பயணங்களில் தன்னால் பிறருக்கு இடைஞ்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மிக மிக அவசியமான ஒன்றாகும் , நான் உட்பட அதில் பெரும்பாலானவர்கள் கவனம் செலுத்துவதில்லை என்பது வருத்தத்திற்குறிய செய்தியாகும் ,
நான் என்னுடைய தாயாருக்கு உணவு தந்து விட்டு அவரை வீல்சேரில் அமர வைத்து இருவரும் ஹோட்டலை விட்டு கீழே இறங்கினோம் , பிற ஹாஜிகள் முன்னே செல்ல , நான் அவர்களை தொடர்வதற்குள் பஸ் ஒன்று என்னை முந்தி சென்றது . நான் பஸ்ஸுக்கு இடம்விட்டு சற்று பின் வாங்கினேன் . அது நெரிசலான பகுதி என்பதால் பஸ் அந்த இடத்தை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை , நான் சிலரின் துணையுடன் தாயாரை வண்டியோடு தூக்கி பஸ்ஸை கடந்து வருவதற்குள் எங்களுடன் வந்த ஹாஜிகள் எங்களை விட்டு முந்தி கண்களை விட்டு மறைந்து விட்டார்கள், வடக்கே செல்வதா , தெற்கே செல்வதா தெரியவில்லை , அருகிலிருந்த கடையில் விசாரித்ததில் ஆயிஷா பள்ளி செல்ல ஹரமுக்கு அருகில் செல்ல வேண்டும் என்று கடைக்காரர் கூறினார் , பொதுவாக அங்குள்ள அரபு பொதுமக்கள் பேசும் அரபு மொழியை என் போன்ற மாணவனால் புரிந்து கொள்ள இயல வில்லை , ஆனால் அங்கே பணி புரியும் இந்திய சகோதரர்கள் புரிந்து கொள்கிறார்கள் , குத்பாவில் கூறப்படும் பயானையோ என் போன்றவர்களால் விளங்கிக்கொள்ள முடிகிறது , அச்சகோதரர்களால் அது முடிய வில்லை , இந்த வித்தியாசத்தை என்னால் பல நேரங்களில் உணர முடிந்தது , ஆதலால் அக்கடைக்காரர் கூறியதை ஓரளவு விளங்கிக்கொண்டு நான் ஹரமுக்கு வண்டியை நகர்த்தினேன் , கிட்டத்திட்ட ஹரமுக்கு அருகாமை வரை சென்ற பிறகும் கூட எங்கள் டிராவல்ஸின் அடையாளமான மஞ்ச நிற மக்கன்னா கண்களுக்கு தெரியவில்லை , ஆகவே அவர்கள் இந்த திசையில் வந்திருக்க வாய்ப்பில்லை என்பது உறுதியானது, எனவே வந்த பாதையிலேயே மீண்டும் வந்து எதிர்திசையில் பார்த்தபோதுதான் அங்கே மஞ்சள் நிற மக்கன்னா அணிந்த தாய்மார்கள் கண்களில் பட்டார்கள், எங்களின் வழிகாட்டி மௌலானா இல்யாஸ் அவர்கள் கோபத்தின் விளிம்புக்கே சென்று விட்டார் . அவர் அந்தளவிற்கு என்னை தேடி ஹோட்டலுக்கும் நடையாய் நடந்ததாக சொன்னார் , என்ன செய்வது ? சிலதவறுகள் நாம் அறிந்து செய்வது , சில நாம் அறியாமல் நடப்பது , அறிந்து நடக்கும் தவறுகளை தவிர்க்கலாம் , அறியாமல் நடக்கும் தவறுகளுக்கு யாரை குற்றம் சொல்வது ? ஆக வேறு வாகனத்தில் எங்கள் குழுவில் வந்தவர்கள் சென்று விட்டார்கள் , ஒரு தனிவாகனத்தில் நான், என்னுடைய தாயார் , மெளலவி இல்யாஸ் இன்னொரு ஹாஜி என நான்கு பேர் பயணித்தோம் , வாகனம் ஆயிஷா பள்ளியை நோக்கி விரைந்தது ,
ஹரமை விட்டு வெளியே செல்ல நேரிட்டால் என் நினைவுகள் முழுவதையும் நபியின் வரலாறும் , நபித்தோழர்களின் சரித்திரங்களும் ஆக்கிரமித்துக்கொள்கின்றன , இப்புனிதமான பூமியில் எத்தனை நல்லடியார்கள் பிரயாணித்திருப்பார்கள் ? ஸஹாபாக்களின் காலடிகள் இங்கு எங்குதான் பட வில்லை ? என்னுடைய மனக்கண் அப்புனிதர்களை தேடியது , சத்திய இஸ்லாத்தை ஏற்ற குற்றத்திற்காக சுடு மணலில் படுக்க வைக்கப்படுவதும் , எதிரிகளால் சித்திரவதை செய்யப்படுவதும் , மறைந்து மறைந்து இறைத்தூதரை காண வருவதும் , மக்கா முஸ்லிம்கள் வாழ தகுதியற்ற பூமி என்று புலம் பெயர்ந்து செல்ல நிர்பந்திக்கப்பட்டவர்கள் அதே மக்காவில் நபியுடன் வெற்றி வீரர்களாக நுழைவதும் , இஸ்லாத்தை ஏந்திக்கொண்டு அவர்கள் ஒட்டகங்களில் பயணிப்பதும் , நபியுடன் வருவதும் , போவதும் என சரித்திரத்தின் பக்கங்களெல்லாம் ஒவ்வொன்றாக என் மனதிலே புரண்டு கொண்டே வந்தன , ஸஹாபாக்களை சுமந்து செல்லும் ஒட்டகங்களில் ஒன்றாவது கண்களுக்கு தென்படாதா என மனம் ஏங்கியது . முடியாது , இங்கே நான் காலம் கடந்து வந்துள்ளேன் , இப்போது அவர்களின் ஒட்டகங்கள் மட்டுமல்ல , அவைகளினால் கிளம்பிய தூசி கூட அடங்கி வெகு காலமாகி விட்டது . இப்போது எங்கு தேடினாலும் அவர்கள் தெரியப்போவதில்லை , ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் , உண்மையிலேயே அந்த நபித்தோழர்கள் மீது அன்பிருக்குமானால், அதனால்தான் அவர்களின் அடிச்சுவடுகளை காண உள்ளம் ஏங்குகிறது என்றால் அவர்கள் சென்ற பாதையில் அடி பிறழாமல் நடப்பதன் மூலம் சுவனத்தில் அவர்களுடனேயே குடியிருக்கலாம் என எனக்கு நானே கூறிக்கொண்டேன் , எங்களுடைய கார் ஆயிஷா பள்ளி நோக்கி விரைந்து கொண்டிருந்தது ,
வரலாற்றில் ஆயிஷா பள்ளி இடம் பிடித்துள்ள சில பக்கங்களை உங்களுடன் பகிர்கிறேன் ,
மஸ்ஜிது ஆயிஷா எனும் தன்யீம் பள்ளிவாசல், இது மஸ்ஜிது ஹராமிற்கு வடக்கே மக்கா , மதீனா செல்லும் பாதையில் 7.5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது , இதுதான் ஹரமுடைய எல்லையிலேயே குறைந்த தூரம் கொண்டது, ஹிஜ்ரி 9 ஆண்டு நபி (ஸல்)அவர்கள் இறுதி ஹஜ் செய்தபோது அவர்களுடன் ஹஜ்ஜுக்கு வந்த ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ்ஜுடைய எல்லா அமலையும் செய்துவிட்டார்கள் , மாத விலக்கின் காரணமாக பைத்துல்லாஹ்வுடைய தவாப் மட்டும் செய்யவில்லை , சுத்தமான பின் தவாப் செய்து முடித்தார்கள், நபியும் , நபி தோழர்களும் மதீனா புறப்பட எத்தனித்த போது ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) நபியிடம் சொன்னார்கள், யா ரஸுலல்லாஹ் ! நீங்களெல்லாம் ஹஜ் , உம்ரா இரண்டையும் செய்து விட்டு திரும்புகிறீர்கள், நானோ ஹஜ் மட்டும்தான் செய்துள்ளேன் என்று ஓர் ஏக்கத்துடன் கூறியதும் அவர்களின் சகோதரர் ஹஜ்ரத் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களுடன், ஹஜ்ரத் ஆயிஷா ரலி அவர்களை தன்யீமுக்கு அனுப்பிவைத்து அங்கிருந்து இஹ்ராம் கட்டி உம்ரா செய்ய அனுப்பி வைத்தார்கள் (بخارى 1785)
ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) உம்ராவுக்கு இஹ்ராம் அணிந்த அந்த நினைவுக்காகத்தான் இந்த இடத்தில் ஆயிஷா பள்ளி கட்டப்பட்டுள்ளது ,
(اخبار مكة للازرقى 2|209 )
குபைப் இப்னு அதீ எனும் நபித்தோழரின் சம்பவம்
தன்யீம் பள்ளிக்கு வடக்கே ஹில் பகுதியின் திசையிலுள்ள மலைக்கு அருகாமையில் ஒரு வரலாற்று சம்பவம் கிதாபுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது , அதாவது இவ்விடத்தில்தான் குபைப் இப்னு அதீ (ரலி) என்ற ஸஹாபி கொலை செய்யப்பட்டார்கள் , ஹிஜ்ரி 4 ம் ஆண்டு ரஜீஃ படையால் கைது செய்யப்பட்டவர்களில் இவரும் ஒருவர். நபி (ஸல்) தீனுடைய கல்வியை கற்றுக்கொடுக்க பனூ லிஹ்யானைச் சார்ந்த சிலருடன் தன்னுடைய ஏழு தோழர்களை அனுப்பி வைத்தார்கள், ரஜீஃ என்ற இடத்தை அடைந்தபோது அவர்கள் தன் சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்தார்கள் , உடன் அழைத்து வந்தவர்கள் யாவரையும் கொலைசெய்து விட்டு குபைப் இப்னு அதீஃ , ஜைது இப்னு தஸ்னா என்ற இரு ஸஹாபிகளை மட்டும் கைது செய்து மக்காவாசிகளிடம் விற்றுவிட்டார்கள் , பத்ரு போரில் கொல்லப்பட்ட தன் உறவினர்களுக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக இவ்விரு ஸஹாபிகளையும் மக்கா வாசிகள் கொலை செய்தார்கள் ,
அவர்களில் ஹஜ்ரத் குபைப் இப்னு அதீஃ (ரலி) அவர்கள் குறித்து புஹாரி ஷரீபில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு நிகழ்ச்சி நம் ஈமானிய உணர்வை தூண்டக்கூடியதாக அமைந்துள்ளது மட்டுமின்றி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு செய்தியாகும் , அவர்கள் தூக்கில் ஏற்றப்படுவதற்கு ஒரு நாள் முன்பு தன் ரோமங்களை சரி செய்ய தான் சிறை வைக்கப்பட்டிருந்த வீட்டின் பெண்மனியிடம் கத்தி இரவல் கேட்கின்றார்கள் , அப்பெண்மனியும் கத்தியை தந்தார் , கத்தியை வாங்கிய ஹஜ்ரத் குபைப் (ரலி) தன் ரோமங்களை சரி செய்வதில் ஈடு பட்டிருந்த போது அவ்வீட்டிலுள்ள சிறு குழந்தை தவழ்ந்து தவழ்ந்து ஹஜ்ரத் குபைப் (ரலி) அவர்களிடம் சென்று விட்டது , அப்பெண்மனி சுதாரித்துக்கொண்டு குழந்தையை தேடிய போது குழந்தை ஹஜ்ரத் குபைப் (ரலி) மடி மீது அமர்ந்திருந்தது , அவர்களின் கையிலோ தான் கொடுத்த கத்தி , அக்காட்சியை கண்டு அப்பெண் திடுக்கிட்டு விட்டாள் , அப்போது ஹஜ்ரத் குபைப் (ரலி) பதறாதீர்கள் , நான் குழந்தையை ஒன்றும் செய்ய மாட்டேன் , (புஹாரி 3045) ஏனெனில் எங்களுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் குழந்தைகளை கொல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்கள் , என்று கூறி அந்த குழந்தையை தன் தாயிடம் அனுப்பி விட்டார்கள் , தான் ஆபத்தில் சிக்கி இருக்கும் போது கூட அக்குழந்தையை பணயமாக வைத்துத் தான் தப்பித்துக்கொள்ள முயலவில்லை , அந்தளவிற்கு மனிதாபிமான மிக்க , நற்பண்புகள் நிறைந்த ஒரு சமுதாயத்தை நபியவர்கள் தன் அயராத உழைப்பினால் உருவாக்கியிருந்தார்கள் , அப்பண்புகளே உலக அரங்கில் இஸ்லாமிய சமுதாயத்தை தலை நிமிர வைத்தது , ஆனால் இன்றோ சில அறிவிலிகள் ஜிஹாத் என்ற பெயரில் மனிதத்தையே உறைய வைக்கின்ற மிகக் கொட்டூரமான குற்றச்செயல்களை அரங்கேற்றி விட்டு அதற்கு இஸ்லாத்தை காரணமாக்குகிறார்கள் என்பது முழு இஸ்லாமிய சமுதாயத்தையும் உலக அரங்கிலே தலை குனியச்செய்யும் மிகவும் வருத்தமான செய்தியாகும்,
மேலும் அவர்களை கொலை செய்யப்படுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது மக்கா வாசிகள் அவரிடம் கேட்டார்கள் , உம் இடத்தில் முஹம்மது இருந்து உனக்கு பதிலாக அவருடைய கழுத்தை வெட்ட நீர் விரும்புவீரா ? அதற்கு அவர் சொன்னார், “ அல்லாஹ் மீது சத்தியமாக ! நான் என்னுடைய வீட்டில் இருக்க, நபியவர்களோ இந்த இடத்தில் இருந்து அவர்களின் பாதத்திலே ஒரு முள் குத்துவதைக்கூட நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் ,, என்று பதில் கூறினார் , இதை செவியுற்ற அபூ சுப்யான் “ முஹம்மதுடைய தோழர்கள் முஹம்மதை நேசிப்பதுபோல மக்களில் வேறு யாரும் நேசிக்கப்பட நான் பார்த்தில்லை ,, என்று நபித்தோழர்கள் நபியின் மீது வைத்திருந்த அன்பை கண்டு வியந்து போய் கூறினார் , பின்னர் ஹபீப் ரலி அவர்கள் தான் கொல்லப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத் தொழ அனுமதி கேட்டார் , சுருக்கமாக தொழுது விட்டு , அல்லாஹ் மீது சத்தியமாக , உயிர்போவதை பயந்துதான் நான் நீளமாக தொழுகிறேன் என்று மட்டும் நீங்கள் நினைக்கமாட்டீர்கள் என்றால் நான் என் தொழுகையை நீட்டி இருப்பேன் என்று அங்கிருந்தவர்களிடம் மிக தைரியமாக கூறினார் , முஸ்லிம்கள் கொலை செய்யப்படும்போது இந்த இரண்டு ரக்அத் தொழும் பழக்கத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர் இவர்தான், பின்னர் சில கவிதைகளை படித்தார்.
فَلَسْتُ أُبَالِي حِينَ أُقْتَلُ مُسْلِمًا ... عَلَى أَيِّ جَنْبٍ كَانَ فِي اللهِ مَصْرَعِي
وَذَلِكَ فِي ذَاتِ الْإِلَهِ وَإِنْ يَشَأْ ... .. يُبَارِكْ عَلَى أَوْصَالِ شِلْوٍ مُمَزَّعِ
நான் முஸ்லிமாக கொலை செய்யப்படுகிறேன் எனவே நான் என்னுடைய இறப்பை எண்ணி வருத்தப்பட வில்லை , நான் எங்கே வீழ்ந்தாலும் நான் வீழ்வது அல்லாஹ்வுக்காகத்தான் இருக்கும் , நான் மரணமாவதும் அல்லாஹ்வுக்காகவே , அவன் நாடினால் சல்லைடை சல்லடையாக ஆக்கப்பட்ட எனது உடல் பாகங்களிலும் அபிவிருத்தி செய்வான்,நான் வீழ்ந்து போக மாட்டேன் , என் போன்று பலர் உருவெடுப்பார்கள் .
இது அந்த கவிதைகளின் சாரம்சமாகும் . இதை பாடி முடித்ததும் எதிரிகள் அவரை கொலை செய்து பழி தீர்த்துக்கொண்டார்கள் ,அவர் இங்குதான் கொலை செய்யப்பட்டார், அவர் கொலை செய்யப்பட்ட இடத்தில் முன்பு ஓர் மிஹ்ராபு போல இருந்தது,ஆனால் பிறகு அகற்றப்பட்டு விட்டது , இப்போது அங்கு எதுவும் இல்லை.
( تاريخ مكة المكرمة قديما وحديثا, محمد الياس عبد الغني 18, 19 )
இவ்வாறான இஸ்லாமிய சரித்திரங்கள் நிறைந்த இடங்களின் அடையாளங்களையெல்லாம் மக்கள் பித்அத்தான அனுஷ்டானங்களை அங்கே செய்யக்கூடும் என்ற காரணத்தை முன் வைத்து இல்லாமல் செய்தததில் சவூதி அரசாங்கத்தை நினைத்து சில சமயம் ஆத்திரமும் வந்தது , பித்அத்களை ஒழிக்க வேறு நடவடிக்கைகளை கையாண்டிருக்கலாம் , அதற்காக அவ் அடையாளங்களையே நீக்கியது எனக்கு முறையாக பட வில்லை . இது மேலோட்டமான தேடலில் நம் கண்களுக்கு கிடைத்த தகவலாகும், இவ்வாறு இஸ்லாத்தின் காரணமாக நபித்தோழர்கள் துன்புறுத்தப்பட்ட பல்வேறு வரலாறுகளை மக்காவின் ஒவ்வொரு பகுதியும் சுமந்துள்ளது . இது போன்ற வரலாற்று நினைவுகளோடு சுமார் அரைமணிக்கும் குறைவான நேரத்தில் நாங்கள் மஸ்ஜித் ஆயிஷாவை தொட்டிருந்தோம் , பிரயாணத்தில் பர்ஸை பாது காப்பது பெரிய வேலை , என்னுடைய பர்ஸ் இருந்த பெல்ட் காரிலிருந்து இறங்கும் போது அவிழ்ந்து கொண்டது , காரிலிருந்து இறங்கும் பரபரப்பில் இருந்ததால் அதனை கட்டுவதற்கு முயற்சிக்காமல் அப்படியே அதனை என்னுடைய தாயாரின் வண்டியில் வைத்து விட்டு அவர்களை தள்ளிக் கொண்டு பள்ளியின் முற்றத்தை அடைந்து விட்டேன் , ஓரளவு அமைதியான பின் நான் என்னுடைய தாயாரிடம் என்னுடைய பெல்டை கேட்டேன் , அது வண்டியில் இல்லை , பகீரென்று தூக்கி வாரிப்போட்டது . அதில் தான் நான் ஊரில் இருந்து கொண்டு வந்த மொத்த ரியால்களும் , போன் , பர்ஸ் எல்லாம் இருந்தது . பட படத்த நெஞ்சத்தோடு நான் வண்டியிலிருந்து இறங்கிய இடத்திற்கு விரைந்து வந்தேன், அங்கே சில பணியாளர்கள் அந்த பெல்டை எடுத்து யாருடையதாக இருக்கும் ? என அதை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தார்கள் , நான் உடனடியாக சென்று அது என்னுடையதுதான் என்று கூறி அதை அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டேன், அவர்கள் என்னை எச்சரித்து அனுப்பினார்கள் , அது புனித தேசம் எனவே என் பர்ஸ் தப்பித்தது , இல்லாது போனால் தவறிய நேரத்திலேயே காணாமல் போயிருக்கும் , அல்லாவுக்கு நன்றி செலுத்தியவனாக திரும்பினேன் ,
பல உம்ராக்கள் உண்டா ?
நீண்ட பிரயாணம் செய்து மக்காவுக்கு சென்ற ஒருவர் அங்கே தங்கியிருக்கும் போது மீண்டும் ,மீண்டும் உம்ரா செய்யலாமா என்பது நீண்ட காலமாக அறிஞர்களுக்கு மத்தியில் சர்ச்சையாகவே இருந்து வருகிறது ,இரு விதமான கருத்துக்கள் கூறப்படுகிறது .
1, சில அறிஞர்கள் அவ்வாறு பல உம்ரா ஒரு பிரயாணத்தில் செய்வதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று அதற்கு தடை விதிக்கிறார்கள் ,
2, மற்றும் சில அறிஞர்கள் மக்காவில் தங்கியிருக்கும் போது அதிகமாக நபில் தவாப் செய்வது , குர்ஆன் ஓதுவது, திக்ரில் ஈடுபட்டிருப்பது ஆகியவை செய்வதே சிறந்தது, இருப்பினும் ஒருவர் மீண்டும் உம்ரா செய்வதற்காக மஸ்ஜிதே ஆயிஷா சென்று உம்ரா நிய்யத் வைத்து அங்கிருந்து வந்து உம்ரா செய்தாலும் அதை தவறாக கருத முடியாது , ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களை தன்யீம் சென்று இஹ்ராம் நிய்யத் வைத்து உம்ராவை நிறைவேற்றிக்கொள்வதற்கு அனுமதி தந்தார்கள் , நபியவர்களின் இந்த அனுமதியே ஒரு செயலை கூடும் என நிரூபிப்பதற்கு போதுமான சான்றாகும் , என்ற கருத்தை கொண்டுள்ளார்கள் . இக்கருத்துப்படிதான் நான் மஸ்ஜிதே ஆயிஷா வந்தேன்.
ஒரு பிரயாணத்தில் பல உம்ரா கூடாது என கருத்து கொண்டுள்ள அறிஞர்களும் கூட தூரமான நாட்டிலிருந்து , பல ஆயிரங்கள் செலவளித்து உம்ராவுக்கு வந்துள்ள ஒருவர் தன்னுடைய உம்ராவை நிறைவு செய்து விட்டு தனது வயதான , அல்லது இறந்து விட்ட பெற்றோர்களுக்காக , உறவினர்களுக்காக உம்ரா செய்வதாக நிய்யத் செய்து அதற்காக தன்யீம் சென்று இஹ்ராம் கட்டி உம்ரா செய்தால் அதற்கு அனுமதி உண்டு என கூறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும் , அல்லாஹ்வே மிக அறிந்தவன் .
மஸ்ஜித் ஆயிஷாவுக்குள் நுழைந்து இஹ்ராமுடைய இரண்டு ரக்அத் தொழுது விட்டு , உம்ராவுடைய நிய்யத் வைத்தவனாக வெளியே வந்தேன் , வெளியில் மிஸ்வாக் விற்றுக்கு கொண்டிருக்கும் ஒரு முதியவரை பார்த்தேன் , அவரிடம் மிஸ்வாக் விலை கேட்டதற்கு 10 ரியால் என்றார் , அங்கே எதையும் நம்மூர் காசுக்கு மாற்றி பார்க்கவே மனம் கூறுகிறது , 180 ரூபாய் , ஒரு மிஸ்வாக் 180 ரூபாய்க்கு யார் வாங்குவார் ? என்று சற்று தயங்கினேன் . ஆனால் மிஸ்வாக் என்ற உயர்ந்த சுன்னத்தை கடைபிடிக்க இதை விட உயர்ந்த விலையை கொடுத்தாலும் தகும் என்ற எண்ணம் வரவே நான் வாங்கிக் கொண்டேன் .
ஹரமுடைய எல்லைகள்
ஆயிஷா பள்ளியை விட்டு சாலையில் இறங்கியதும் அதன் ஓரத்தில் ஹரமுடைய எல்லை முடிவு என்ற போர்ட் தொங்கியது , இவ்வாறு ஹரமுடைய எல்லைகளை முதன் முதலாக வகுத்தது ஹஜ்ரத் ஜிப்ரியீல் அலை அவர்கள்தான், அவர்கள் ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ஹரமுடைய எல்லையை காட்டிதந்து அங்கே அடையாளத்திற்கு ஒரு கல்லை நட்டி வைக்க கூறினார்கள் , பின்பு மக்கா வெற்றிக்கு பிறகு நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர் தமீம் இப்னு அஸத் அல்குஸாயீ (ரலி) அவர்களை அனுப்பி அவ்வடையாளங்களை புதுப்பிக்கச்செய்தார்கள், இவ்வாறு பின்னர் வந்த கலீஃபாக்களும் செய்தார்கள் , ஹரமைச் சுற்றி 947 அடையாளக்கற்கள் இவ்வாறு நடப்பட்டு இருந்தன, இப்போது பெரும்பாலும் அவை இல்லாமல் போய்விட்டன, ஹரமுடைய எல்லைகளை ஒரு கோட்டால் இணைத்தால் அது 127 கி.மீ போகின்றது, ஹரமுடைய பரப்பளவு 550 கி.மீ (تاريخ مكة قولا وحديثا 15 ) தன்யீம் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து 7.5 கி.மீ தொலைவிலும் , நக்லா 45 கி.மீ தொலைவிலும் , அழாது லபன் 16 கி.மீ தொலைவிலும் , ஜியிர்ரானா 24 கி.மீ தொலைவிலும் , ஹுதைபியா 24 கி.மீ தொலைவிலும் ,அரபா மலை 22 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன. (تاريخ مكة قولا وحديثا )
மக்காவில் ஹரமை விட்டு எந்த பகுதிக்கு சென்றாலும் எப்போது திரும்பி வந்து ஹரமை காணப்போகிறோம் என மனம் ஏங்குகிறுது , ஹரமை பார்த்ததும் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஓர் மன அமைதி கிடைக்கிறது , அந்த அளவிற்கு அல்லாஹ் அதில் ஈர்ப்பை வைத்துள்ளான், மஸ்ஜிது ஆயிஷாவிலிருந்து ஹரம் திரும்பிவந்து உம்ராவை ஆரம்பித்தோம் , மதாபிலேயே தாயாரை வைத்து சுற்றினேன் , எங்களுடன் ஆயிஷா பள்ளிக்கு வாகனத்தில் வந்தவர் புதுசு என்பதால் அவருக்கு வழிகாட்டியாக இருக்கும் படி மெளலவி இல்யாஸ் என்னிடம் கூறியிருந்தார் , அதனால் அவரும் எங்களுடன் தான் தவாபை ஆரம்பித்தார் . ஆனால் கூட்டத்தில் கண்களை விட்டு காணாமல் போய் விட்டார் , அவருடைய செருப்பு மட்டும் எங்களோடு இருந்து விட்டது, தவாபை முடித்து ஸபா , மர்வா சென்றோம், லுஹர் தொழுகைக்குள் தொங்கோட்டமும் முடிந்து விட்டது ,
லுஹர் தொழுகையை ஸபா , மர்வாக்கிடையே தொழுதோம் , தொழுத பின் நான் என் தாயாருடன் மர்வா பக்கம் உள்ள வாசல் வழியாக வெளியேறினோம் , வெயில் உக்கிரத்துடன் கொழுத்தியது . மர்வா பக்கமாக கூட வெளியேறி எங்களின் ஹோட்டல்களை அடையலாம் என தவறாக எண்ணிக் கொண்டேன் . ஆனால் கொளுத்தும் அவ்வெயிலில் தாயாரை வண்டியில் அமரவைத்து வெகுவாக சுற்றியது தான் மிச்சம் , அது மட்டுமல்லாமல் ஒரு இடத்தில் கம்பி பாலம் போட்டு மூடி இருந்தார்கள் , அதில் வண்டியை வேகமாக தள்ளியதில் எனது தாயார் முன் பக்கமாக சரிந்து விட்டார் , அதுவும், அதே போல தாயாரோடு வீல் சேரை எஸ்கலேட்டரில் பின்பக்கமாக இறக்கியது இவ்விரண்டும் எனது பயணத்தில் மிகவும் ஆபத்து நிறைந்த கட்டங்கள் , இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் சிறு அசம்பாவிதம் நடந்திருந்தால் கூட என்ன ஆகியிருக்கும் ? என்பதை இப்போது நினைத்து பார்த்தாலும் உள்ளம் பதைபதைக்கிறது , ஆக ஒருவாராக ஹரமை விட்டு வெளியேறி ஹோட்டலை அடைந்து ஓய்வெடுத்தோம்,
மக்காவில் தங்கியிருந்தவரை காலை சுப்ஹுதொழுகைக்கு நான் மட்டும் தனியே செல்வேன் , தாயாரை அழைத்து செல்வதில்லை , சில தினங்கள் தஹஜ்ஜத்துக்கே சென்றிருக்கிறேன் , சில தினங்கள் பாங்கு கூறப்பட்ட பின்னரே ஹரமை அடைய முடிந்துள்ளது , சுப்ஹுக்கு பின்பு அறை திரும்பி உணவு , குளியல் தேவைகளை முடித்து விட்டு 11 மணியளவில் தாயாரையும் அழைத்துக் கொண்டு முடிந்த வரை முன்னால் சென்று இடம்பிடித்து லுஹர் தொழுத பின்னரே ஹோட்டலுக்கு திரும்புவோம் ,
சாப்பிட்டு ஓய்வுக்காக படுத்தால் பாங்கு கூறும்போது விழித்தாலும் ஒழு செய்து ஹோட்டலை விட்டு கிளம்பி ஹரமை அடைவதற்குள் தொழுகை ஆரம்பித்திருக்கும், ஆதலால் பெரும்பாலும் அஸர் தொழுகையை ரோட்டில் தான் தொழுதிருக்கிறேன் , சில நேரங்களில் ஹோட்டல் வாசல் வரை ஸப்கள் வந்து விடும் , ஹோட்டல் வாசலிலேயே கூட பல நேரங்களில் தொழுதுள்ளேன் , அஸர் தொழுகைக்கு பின் டீ ஏதும் சாப்பிட்டு விட்டு உடனேயே தாயாரையும் அழைத்துக் கொண்டு ஹரமிற்கு செல்வேன், ஹரமின் திறந்த வெளிப்பகுதியில் ரம்மியமான அந்த சூழலில் இஷா வரை அமர்ந்திருப்போம் ,
சில நேரங்களில் தாயாரை அழைத்துக் கொண்டு மதாபிலுள்ள பாலத்தில் நபில் தவாப் செய்து விட்டு கஃபத்துல்லாஹ் பார்வைக்கு தெரியும்படி அந்த பாலத்திலேயே இஷா வரை கூட அமர்ந்திருக்கிறோம் . இவ்வாறாகவே மக்காவில் நாங்கள் தங்கியிருந்த நாட்கள் கழிந்தன, வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள் அவை . மீண்டும் அப்படியொரு சந்தர்ப்பத்தை அல்லாஹ் தரவேண்டும் என உள்ளம் ஏங்குகிறது .
மஸ்ஜிதுல் ஹராமின் பாட வகுப்புகள்
மஸ்ஜிதுல் ஹராமில் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் பாடங்கள் நடைபெறுகின்றன. சில நேரங்களில் காலை 11 மணிக்கே செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தபோது தொழுகை வரை உள்ள அந்நேரத்தை அவ்வகுப்புகளில் கலந்துகொள்வதில் செலவிட்டேன் , மஸ்ஜிதுல் ஹராமுடைய வகுப்புகள் மிகவும் பரக்கத்தானது , இது போன்ற வகுப்புகளில்தான் இமாம் ஷாபிஈ போன்ற பெரும் பெரும் அறிஞர்கள் உருவாகியிருக்கிறார்கள், அத்தகைய மேலான ஒரு சபையில் சிறிது நேரமாவது கலந்து கொண்டு அதன் பரகத்தை பெற வேண்டும் என விரும்பினேன் , ஆனால் தொடர்ந்து அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்க வில்லை. குறிப்பிட்ட ஒரு கிதாபை, குறிப்பிட்ட ஒரு தலைப்பை முழுமையாக படிக்கும் சந்தர்ப்பமும் அமைய வில்லை.
இதே போல மஸ்ஜிதுல் ஹராமில் குர்ஆன் திருத்த வகுப்புகளும் நடை பெறுகின்றன, இரவு நேரங்களில் கூட அவை நடக்க நான் பார்த்துள்ளேன், இந்தியாவிலிருந்து செல்லும் அன்பர்கள் தம் நேரத்தை பிரயோஜனமாக கழிக்க அவ்வகுப்புகளில் பங்கெடுக்க வேண்டும் , இது நான் அவர்களுக்கு கூறும் பணிவான ஆலோசனையாகும் ,
மஸ்ஜிதுல் ஹராமின் நூலகம்
மஸ்ஜிதுல் ஹராமில் மலிக் பஹ்த் வாசல் வழியாக நுழைந்தால் வலப்புறம் மூன்றாவது மாடியில் ஒரு நூலகம் இயங்குகிறது , சிலபொழுது அங்கும் சென்று பயனுள்ள சில நூல்களை புரட்டி பார்க்கும் பாக்கியம் கிடைத்ததை நினைத்து நான் சந்தோசப்படுகிறேன் . அல்ஹம்து லில்லாஹ்,
சொற்பொழிவும் , ஹோட்டல் மாற்றமும்
ஞாயிற்றுக்கிழமை , நாங்கள் ஹரம் வந்து நான்காவது நாள் காலை 9 மணியளவில் ஹோட்டலின் உணவுப்பகுதியில் வைத்து பயான் நடக்க இருப்பதாக மௌலவி இல்யாஸ் அறிவித்தார் , அதன் படி காலை 9 மணியளவில் ஹாஜிகள் , ஹாஜியாக்கள் யாவரும் உணவுப் பகுதியில் கூடியிருந்தார்கள் ,
முதலில் மெளலானா அவர்கள், ஹாஜிகளின் ஒழுங்குகளைப் பற்றியும் , ஹஜ்ஜுக்குப்பிறகு ஊர் திரும்பிய பின் மேற் கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றியும் ஹாஜிகளுக்கு எடுத்து வைத்தார் . பின்னர் அடியேனையும் பேசும்படி கூறினார் , நான் அங்கே பேசியது ,
1, அல்லாஹூத்தஆலா நமக்கு இப்பரிசுத்தமான தேசத்தை தரிசிப்பதற்கான பெரும் வாய்ப்பை தந்துள்ளான் , எத்தனையோ பேர் முயற்சித்தும் ஆசைப்பட்டும் கிடைக்கவில்லை , இதை நாம் பாக்கியமாக கருதவேண்டும் .குறிப்பாக மஸ்ஜிதுல் ஹராமில் தொழுதால் கிடைக்கும் ஒரு இலட்ச நன்மை உலகில் வேறு எந்த பகுதியில் தொழுதாலும் இத்தகைய நன்மையை நாம் பெற முடியாது , எனவே ஹரமில் தங்கியிருக்கும் வரை ஐந்து நேர தொழுகைகளையும் ஹரமில் சென்று தொழுவதற்கு முயற்சிக்க வேண்டும் .
2, நாம் புனிதம் நிறைந்த தேசத்தில் உள்ளோம் , இங்குள்ள சட்டங்களை விளங்கவேண்டும் , பிற இடங்களில் புரியும் நன்மைகளை விட இப்பிரதேசத்தில் புரியும் நன்மைகள் அதிகரிப்பது போல பிற இடங்களில் நிகழும் பாவங்களை விட இவ்விடங்களில் நிகழும் பாவங்களும் தான் அதிகரிக்கின்றன . பிற இடங்களில் பாவங்கள் புரிய வேண்டும் என எண்ணுவதால் பாவம் எழுதப்படுவதில்லை . ஆனால் இப்பிரதேசத்திலோ பாவம் செய்ய வேண்டும் என நினைத்தாலே பாவத்திற்கான குற்றம் பதிவு செய்யப்படுகிறது . அல்லாஹூத்தஆலா குர்ஆனில் எவர் ஹரமிலே அநியாயமான ஒரு குற்றத்தை செய்ய நாடுவாரோ அவருக்கு கடுமையான வேதனையை நாம் சுவைக்கச்செய்வோம் என கூறுகிறான் என்ற வசனத்தையும் எடுத்து வைத்தேன்
3, நம்முடைய உம்ராவின் காரணமாக நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன , ஒரு விலை உயர்ந்த ஆடை அது கறைபட்டு விட்டது . மிகுந்த முயற்சிக்குப் பிறகு அக்கறைகள் போக்கப்பட்டு விடுகின்றன என்றால் இனி எதிர்காலத்தில் நம்முடைய முயற்சி அவ்வாடையில் கறை படியாமல் பார்த்துக் கொள்வதுதான் , அது போல நாம் ஒரு பெரும் செலவு செய்து , சிரமப்பட்டு உம்ரா கடமையை நிறைவேற்றியதன் மூலம் நம்முடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு தூய்மை அடைந்துள்ளோம் , இனி எதிர்காலத்தில் ஊர் திரும்பிய பிறகும் கூட நாம் பாவத்தை விட்டு நம்மை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும் .
4 , மப்ரூரான ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலியில்லை என நபியவர்கள் கூறியுள்ளார்கள் , மப்ரூரான ஹஜ் என்றால் அதற்கு இரு அடையாளங்களை உலமாக்கள் கூறியுள்ளார்கள் 1 , வெளிப்படையானது , அதாவது ஹஜ்ஜில் கூறப்பட்ட எல்லாவகையான நிபந்தனைகள் , ஒழுக்கங்களை பேணுவது . 2 , வது உள்ரங்கமான அடையாளம் , அதாவது அவருடைய வாழ்க்கையில் மாற்றம் வருவது , ஹஜ்ஜுக்கு முன்புள்ள வாழ்க்கைக்கும் , பிறகுள்ள வாழ்க்கைக்கும் வித்தியாசம் இருப்பது .
ஆக இந்த நான்கு பாயிண்ட்களை எடுத்து வைத்து பேசினேன் . சுமார் ஒரு மணி நேரத்திற்குள் பேச்சு முடிவடைந்து அறை திரும்பினோம் . அன்று வழமையான அமல்களை செய்தோம்,
அன்று மாலை எங்களுக்கு ஹரமின் சற்று அருகிலுள்ள ஹோட்டல் மாற்றி தரப்பட்டது ,ஹோட்டல் பெயர் அதன் அறைகள் முந்திய ஹோட்டலை விட சற்று நெருக்கடியாக இருந்தாலும் ஹரமுக்கு அருகாமை என்பது நாங்கள் வருவது போவதில் இருந்த சிரமங்களை வெகுவாக குறைத்து விட்டது , அந்த ஹோட்டலுக்கு சாமான்களை எடுத்துக்கொண்டு செல்வதிலும் , அங்கு எங்களுக்கான அறைகளை சென்று அடைவதிலும் பெரும் சிரமத்தை நாங்கள் மேற்கொண்டோம் .
மக்காவின் நூலகம்
ஒரு நாள் காலைப்பொழுதில் சீக்கிரமே மஸ்ஜிதுல் ஹராம் வந்து விட்டேன், அங்கிருந்து மர்வா வாசல் வழியாக வெளியே வந்தால் அங்கே ஓர் ஓரத்தில் மக்தபா மக்கத்துல் முகர்ரமா என்ற பெயர் பலகை மங்களாக தெரிகிறது , அது குறித்து பிரபல்யமான கருத்து அங்குதான் நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள் என நம்பப்படுகிறது ,காரணம் இங்குதான் ஷுஅபே அபீதாலிப் அமைந்துள்ளது , நபியவர்களையும், அவர்களை ஏற்ற முஸ்லிம்களையும் , அவர்களின் குடும்பத்தார்களையும் அபூதாலிப் கணவாயில்தான் மூன்று வருடம் வரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருந்தார்கள் , அபூதாலிப் குடும்பத்தார்களின் வீடுகளெல்லாம் இந்த கணவாயில்தான் அமைந்திருந்தன, அக்கணவாயின் நுழைவாயிலில்தான் அபூதாலிபுடைய வீடு இருந்தது,அங்கேதான் நபியவர்கள் பிறந்தார்கள் , நூலகம் அமைந்துள்ள இடமும் கணவாயின் துவக்கத்தை போலவே தெரிகிறது , அப்பாஸிய மன்னர் ஹாரூம் ரஷீத்வுடைய தாயார் கைஸரான் அந்த வீடு இருந்த இடத்தில் ஒரு பள்ளியை கட்டினார் . நாளடைவில் அது இடிந்துவிட்டது . பிறகு அந்த இடத்தில் அப்பாஸ் கத்தான் என்பவர் 1950 ம் ஆண்டு தன் சொந்த செலவில் பொது நூலகம் ஒன்றை கட்டினார் .அதுதான் இன்று நாம் காணும் வடிவில் உள்ளது என்று (تاريخ مكة قولا وحديثا 123 ) எனும் நூலில் உள்ளது , எனவே அதை காணும் நோக்கில் அங்கே சென்றேன், மக்தபா பூட்டி இருந்தது, ஆனால் அதன் வாசலிலேயே ஒரு போர்ட் ஒன்று நட்டிவைக்கப்பட்டுள்ளது , அதில் நபி (ஸல்) இங்குதான் பிறந்தார்கள் என்பதற்கான உறுதிமிக்க ஆதாரம் ஏதும் இல்லை, எனவே இதை கவனத்தில் வைக்காதீர்கள் என்ற கருத்தில் அதன் வாசகம் அமைந்திருந்தது .
ஒருவேளை மக்களின் பித்அத்தான செயல்களைக்கண்டு அதை தடுப்பதற்காக இவ்வாறு மறைக்கலாம் , உண்மை நிலை அல்லாஹ்வுக்கே வெளிச்சம் , நான் அதை படித்தவனாக சற்று முன்னேறிச் சென்றேன், நூலக வாயிலின் வலப்புறத்திலே இருந்த ஓர் ஜன்னல் வைத்த அறையில் இலவச புத்தகம் விநியோகம் செய்யும் ஓர் அரபி தென்பட்டார், நன்கு நீண்ட தாடி , நீண்ட அங்கி , தலையில் துண்டு போட்டிருந்தார் , அங்கே நபி(ஸல்) அவர்கள் பிறந்துள்ளார்கள் என்ற நம்பிக்கை கொண்டு அங்கே ஜியாரத் செய்ய வரும் மக்களிடம் நீங்கள் உண்மைலேயே நபி மீதுள்ள பாசத்தில் இவ்விடத்தை பார்க்க வருகிறீர்கள் என்றால் அந்த அன்பை நபியை பின்பற்றுவதில் காட்டுங்கள், தாடி வைய்யுங்கள், கரண்டைக்கு மேலே ஆடையை உயர்த்தி கட்டுங்கள், இதுதான் உண்மையான அன்பு . அவ்வாறான பின்பற்றுதலை விட்டு விட்டு இங்கே வந்து சுவற்றை தடவுவது, முத்தம் கொடுப்பது, இவைகள் பலனளிக்காது என்று அரேபிய மொழியில் ஒருவொருவருக்கும் விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார்,
நான் அவர் முன்னே சென்றதும் எனது நாட்டை விசாரித்து விட்டு உருது மொழியில் குர்ஆனின் விளக்கவுரை அடங்கிய ஒரு புத்தகத்தை தந்தார் , நான் நூலகத்துக்கு செல்லவேண்டும் என கூறியபோது , இங்கே எல்லோரும் வர அனுமதியில்லை, புரபஸர்கள், ஆய்வாளர்கள் , அரபி அறிந்தவர்கள் மட்டுமே வரமுடியும் என்றார் , நானும் ஒரு அரபி மாணவன்தான் என்று என்னை அறிமுகப்படுத்தியபோது அரபியில் சில கேள்விகள் கேட்டு சோதித்துப்பார்த்தார், பின்னர் இப்போது நூலகம் பூட்டப்பட்டுள்ளது , அஸருக்குப் பிறகு வரும்படியும், வந்து நான் நூலகத்தை பார்ப்பது மட்டும் நோக்கம், அங்கே சென்று சுவற்றை முத்தமிடுவதோ, கைகளால் தடவிப்பார்ப்பதோ நோக்கமில்லை என்று கூறுங்கள், உங்களுக்கு உள்ளே செல்ல அனுமதி கிடைக்கும் என்றார் . ஆக அதை கேட்டு விட்டு நான் திரும்பி விட்டேன், அவர் கூறிய நேரத்தில் அங்கு செல்வது சாத்தியமில்லை , எனவே அந்நூலகத்திற்கு உள்ளே செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
மக்காவின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள்
ஹரமிற்கு வந்து ஐந்தாவது நாள் திங்கள் காலையில் எங்களின் வழிகாட்டி முன்னமே அறிவிப்பு செய்திருந்தார்,காலை 7 மணிக்குள் யாவரும் தயாராகும்படியும் நாம் மக்காவின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை காண போகிறோம் என்றும் தெரிவித்திருந்தார் , அவற்றில் இறுதியாக ஜியிர்ரானா செல்வோம் , யாருக்கும் உம்ராவுடைய நாட்டம் இருந்தால் ஹோட்டல் அறையிலேயே குளித்து உடைமாற்றுக்கொள்ளும் படியும் கூறியிருந்தார் ,
ஆயிஷா பள்ளி செல்வதில் தாமதம் செய்து ஒரு அனுபவம் பெற்றிருந்ததால் இன்று முன்னமே தயாராகிவிட்டேன் , எனது தாயாரும் தயாராக இருந்தார்,காலை உணவை முடித்து எல்லா தோழர்களும் 8.30 மணியளவில் ஹோட்டலின் கீழ்தளத்திற்கு வந்து விட்டோம்,
ஸவ்ர் குகை
ஹோட்டலிலிருந்து புறப்பட்டு மக்காவின் பிரதான சாலைகளில் ஓடி எங்களின் வாகனம் முதலாவதாக பிரசித்திப் பெற்ற ஸவ்ர் குகை அமைந்துள்ள மலைக்கு அருகாமையில் சென்று நின்றது , ஸவ்ர் குகை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து 4 கி . மீ தொலைவில் தெற்கே அமைந்துள்ளது , அதன் உயரம் கடல்மட்டத்திலிருந்து 748 மீ , இந்த குகை சிறிய படகைப் போன்று அமைந்த உள் காலியான பாறையாகும் , அதற்கு இரண்டு வாசல்கள் உள்ளன, ஒன்று மேற்குப்புறம் , அதன் வழியாகத்தான் நபி (ஸல்) நுழைந்தார்கள் , ஒருவர் வயிற்றால் தவழ்ந்து கொண்டுதான் உள்ளே நுழைய முடியும் , மற்றொரு வாசல் கிழக்குப்பக்கம் இருக்கிறது . இருவாசலுக்குமிடையே 3.50 மீட்டர் இருக்கிறது நபி( ஸல்) அவர்களும் அபூபக்ர்( ரலி) அவர்களும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த போது வழியில் இந்த குகையில்தான் தஞ்சம் புகுந்திருந்தார்கள், (تاريخ مكة قولا وحديثا 128 ) ஹிஜ்ரத்வுடைய சம்பவத்தை ஹிஜ்ரத்வுடைய இடம் வரும் போது பார்க்கலாம் ,
மலையின் உயரத்தை கண்டபோது யாவரும் அதிசயித்து நின்றோம் , எறும்புகள் ஊருவதை போல வெள்ளை நிறத்தில் ஏதோ ஒன்று மலை ஏற்றத்தில் அசைந்து கொண்டிருந்தது, எங்களின் வழிகாட்டி கூறினார், அது ஒன்றுமில்லை , மலைகளில் ஏறிக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டம்தான் எறும்பு போல தெரிகிறது . அதை கேட்டு ஒரு நிமிடம் நான் திகைத்து போனேன் , நபி (ஸல்) அவர்கள் இந்த மலையில் எப்படி ஏறி இருப்பார்கள், அவர்களின் வாழ்க்கையில் இனி யாராலும் ஏற முடியாத உச்சத்தில் நிற்கிறார்கள் என்பதற்கு தத்ரூபமான காட்சியாக அந்த உயரமான மலையின் உச்சம் அமைந்திருந்தது , கூடவே ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களின் தியாகமும் சிந்தனையில் பெருக்கெடுத்து ஓடியது . தீராத அறிவு தாகத்துடன் அங்கிருந்து விடை பெற்றோம்.
அரஃபா நோக்கி...
இப்போது எங்களின் வாகனம் அரஃபாவை நோக்கி விரைந்தது, ஹஜ்ஜுக்கு வந்தால் மக்களுக்கு ஹஜ்ஜுடைய இடங்கள் முன்பே அறிமுகமாகி இருக்கும் போது ஹஜ் செய்வது இலகுவாக இருக்கும் என்ற நோக்கிலே உம்ராவுக்கு வந்த பயணிகளுக்கு ஹஜ்ஜுடைய இடங்களை பெரும்பாலான டிராவல்ஸ்காரர்கள் அழைத்துச்சென்று காட்டுகிறார்கள் . அவற்றில் முதலாவதாக அரபாவுக்கு வந்தோம் ,
அரபா , பரந்து விரிந்த மைதானம், மக்காவிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது . நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்கள் போன்ற நல்லோர்களெல்லாம் இந்த பெருவெளியில் தங்கியுள்ளார்கள் , அத்தகைய சிறப்புமிக்க மைதானம் இது , வருடத்தில் 354 நாட்களும் காலியாக கிடக்கின்றது , துல்ஹஜ் 9 ம் நாள் மட்டும் அதுவும் சுமார் பத்து மணி நேரத்திற்காக மட்டுமே பொலிவு பெரும் , காலையில் பொழிவு பெற்று மாலை சூரியன் மறைந்ததும் மீண்டும் பழைய நிலமைக்கு போய் விடும் , அரபாவில் தங்குவதுதான் ஹஜ்ஜுடைய முக்கியமான அமலாகும் , அரஃபாவில் இறங்கி சிறிது நேரம் நின்றோம் , அங்கே மஸ்ஜிதே நமிராவை பார்த்தோம், நபி (ஸல்) அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜின் போது மதிய நேரம் இங்குதான் ஒரு கூடாரத்தில் ஓய்வெடுத்தார்கள்,பின்னர் சற்று பொழுது சாய்ந்ததும் முன்னால் இருந்த ஜபலே ரஹ்மத்தின் மீது ஏறி கஸ்வா எனும் தனது ஒட்டகையின் மீது அமர்ந்தவாறு ஓர் லட்சம் மக்களுக்கு முன்னிலையிலே வரலாற்று சிறப்புமிக்க தனது இறுதி பேருறையை நிகழ்த்தினார்கள் , மலையில் பேருறை நிகழ்த்திய அந்த இடத்தில்தான் வெள்ளை நிற தூண் நட்டிவைக்கப்பட்டுள்ளது , நபி (ஸல்) அவர்கள் நின்ற அந்த இடத்தை பார்ப்பதும் கூட பெரும்பாக்கியமாக கருதுகிறேன் , லட்சக்கணக்கான மக்களுக்கு முன்னால், தனது 23 வருடகால இடை விடாத உழைப்பின் பலனாக கண்ட வெற்றி கூட்டத்திற்கு முன்னால் நபியவர்கள் பேருறை நிகழ்த்துகிறார்கள் , ஆனால் எந்த ஆர்ப்பரிப்பும் இல்லை, பெருமையும் இல்லை,இறையச்சமும் , பணிவும்தான் அந்த உரையில் பிரதிபலித்தது, நபியவர்களை இவ்விடத்தில் பார்ப்பது இதுதான் கடைசி என்று தெரியாமலேயே அவர்களின் உரையில் சொக்கிப்போய் நிற்கின்றது நபியின் ஒப்பற்ற தோழர் கூட்டம். அந்நிகழ்வுகளெல்லாம் மனத்திரையில் விரிந்தன , என்ன ஒரு அசத்தலான வாழ்க்கை நபியுடைய வாழ்க்கை ? என உலகையே பிரமிக்க வைத்த நிகழ்வு அது.அவ்விடத்தை கண்டதும் சிறிது நேரம் என்னை மறந்து அசைவற்று நின்றேன்.
. எங்களின் வாகனம் அரஃபாவில் ஜபலே ரஹ்மத்திற்கு முன்னே நிறுத்தப்பட்டிருந்தது , ஹஜ்ஜிலே இந்த மலையை நெருங்க முடியுமா என்று தெரிய வில்லை, சுற்றுலா பயணிகளின் பெரும் கூட்டம் அம்மலையில் ஏறியும் ஏறமுயற்சித்தும் கொண்டிருந்தது , படிப்பினை பெற வேண்டிய இப்பிரதேசத்தை மக்கள் சுற்றுலா மையமாகவே ஆக்கி விட்டதுதான் பெரும் வருத்தத்தை தந்தது . ஆம், கூடி நின்று புகைப்படம் பிடிப்பது, துஆ செய்வது போல புகைப்படம் பிடிப்பது போன்ற செயல்கள் முகம் சுளிக்க வைத்தன , இஸ்லாமியர்கள் இஸ்லாமிய கலாச்சாரத்தை விட்டு இத்தனை விலகி சென்று விட்டார்களே என்ற வருத்தமும் மேலிட்டது, படிப்பினைக்கும், வணக்கத்திற்கும் உரிய இடங்கள் புகைப்படத்திற்கான இடங்களாக மாறிப்போனதில் இஸ்லாத்தின் பின்னடைவு அப்பட்டமாக தெரிந்தது . கஃபத்துல்லாஹ் உட்பட நாம் போன எல்லா இடங்களிலும் புகைப்படக்காரர்கள்தான் ஆக்கிரமித்திருந்தார்கள். திகைப்பும், வருத்தமும் கலந்த சிந்தனையோடு அங்கிருந்து விடை பெற்றோம் , யா அல்லாஹ், இந்த இடங்களுக்கு மீண்டும் வந்து ஹஜ் செய்யும் பாக்கியத்தை எம் எல்லோருக்கும் தருவாயாக. ஆமீன்.
. முஸ்தலிபா, மினாவுக்கு...
அங்கிருந்து புறப்பட்டு முஸ்தலிபாவிற்கு வந்தோம் , வழியில் மலை மீது நீண்ட தூரத்திற்கு அணை போன்ற சுவர் எழுப்பப்பட்டு இருந்தது , எங்களின் வழிகாட்டி அதை சுபைதா ஊற்று என அறிமுகப்படுத்தினார் , ஜுபைதா ஊற்று என்பது அப்பாஸிய மன்னர் ஹாரூன் ரஷீதுடைய மனைவி சுபைதா அம்மையார் 791 ம் ஆண்டு ஓடச்செய்தார் , இது ஹுனைனில்வுள்ள நுஃமான் எனும் கணவாயில் பிறந்து அரபா வழியாக வந்து , உர்னா கணவாயை கிழித்துக்கொண்டு மினா, மக்காவரை ஓடியது , இதுவே 1200 வருடங்களாக மக்கா வாசிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொண்டிருந்தது. (تاريخ مكة قولا وحديثا 140)
அதை கடந்து எங்களின் வாகனம் முஸ்தலிபாவில் புகுந்தது , அங்கே மஷ்அருல் ஹராம் பள்ளியை வாகனத்தில் இருந்தவாறுதான் காணமுடிந்தது , அங்கே இறங்குவதற்கு அனுமதி இல்லை போலும் , சிறிது நிதானிப்பதற்குள் வாகனம் மினா பகுதியில் நுழைந்து ஓடிக்கொண்டிருந்தது , கூடாரங்களின் நகரம் என மினா அழைக்கப்படுவது ஏன் என்ற கேள்வி மினாவை பார்த்த பின் மறைந்து போகிறது , அந்தளவிற்கு கண்களுக்கு எட்டிய தூரம் வரை கூடாரங்களே தெரிந்தன , இலட்சக்கணக்கான மக்கள் தல்பியா சொல்லியவர்களாக கல்லெறிய விரையும் காட்சி மனத்திரையிலே ஓடியது , ஓரிடத்தில் எங்களின் வழிகாட்டி எங்களின் இடப்புறத்தில் சிறிய மிஹ்ராப் வடிவில் இருந்த ஓரிடத்தை சுட்டிக்காட்டி இதுதான் ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுப்பதற்காக ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) முயற்சித்த இடம் என்று கூறினார் . அதன் உண்மை நிலை அல்லாஹ்வுக்கே வெளிச்சம், அதிசயித்த கண்களோடு அவற்றையெல்லாம் வாகனத்தில் இருந்தவாறு மட்டுமே பார்க்க முடிந்தது , வாகனம் அங்கே நிற்பதற்கு அனுமதியில்லை.போகிற போக்கில் பார்த்துக்கொண்டோம் , அவ்வளவுதான்.
ஜியிர்ரானாவை நோக்கி
பின்பு எங்களின் வாகனம் ஜியிர்ரானாவை நோக்கி வேகமெடுத்தது , பாதையின் இருதரப்பு இடங்களை காணும்போதெல்லாம் நபியின் காலத்து நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன, ஜியிர்ரானா என்பது அவ்விடத்தில் வசித்த ஒரு குரைஷிப்பெண்மணியின் பெயர் , ஆனால் இப்போதோ அது மஸ்ஜிதுல் ஹராமிற்கு வடகிழக்குத்திசையில் 24 கி.மீ தொலைவில் ஸரப் கணவாயின் நடுவிலுள்ள ஒரு ஊரின் பெயராகும், அங்குள்ள நீர், சுவைக்கு பெயர் போனது , இங்கு ஓர் வரலாறு இருக்கின்றது ,
ஹிஜ்ரி 8, மக்கா வெற்றி கொள்ளப்பட்ட வருடம், ஹுனைன் யுத்தம் நடந்தது , நபி (ஸல்) அவர்கள் ஹுனைன் யுத்தம் முடிந்து அவ்யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட கைதிகளையும், கனீமத் பொருட்களையும் பிரித்துக்கொடுக்காமல் ஹவாஸின் கூட்டத்தினர் மனந்திருந்தி தம்மிடம் வருவதை எதிர்பார்த்து காத்திருந்தார்கள் , அதற்காக ஜியிர்ரானாவிலேயே கனீமத் பொருட்கள் மற்றும் கைதிகளோடு சில நாட்கள் தங்கியிருந்தார்கள்,
பல நாட்கள் காத்திருந்தும் அவர்கள் வருவதாக தெரியவில்லை எனவே கைதிகளையும், கனீமத் பொருட்களையும் ஸஹாபாக்களுக்கு மத்தியில் பிரித்து கொடுத்து விட்டார்கள் , பொருட்களை பிரித்து கொடுத்ததில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது , புதிதாக இஸ்லாத்தில் வந்த, இஸ்லாத்தின் பால் உள்ளம் ஈர்க்கப்படவேண்டியவர்களுக்கு மட்டுமே நபியவர்கள் அப்பொருட்களை தந்தார்கள் , அன்சாரி தோழர்களுக்கு எதுவும் தரவில்லை, இது குறித்து அவர்கள் தமக்கிடையே அதிருப்தியுடன் பேசிக்கொண்ட செய்தி நபியவர்களின் காதுக்கு வந்தது , நபியவர்கள் அன்சாரிகளையெல்லாம் ஓரிடத்தில் ஒன்று திரட்டினார்கள் , ஒரு உருக்கமான உரையொன்றை நிகழ்த்தினார்கள், அதில் அன்சாரிகளின் சிறப்புகளை எடுத்துக்கூறி விட்டு சொன்னார்கள் “ தோழர்களே ! கனீமத் பொருளை உங்களுக்கு தராமல் புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு கொடுத்த விஷயத்தில் நீங்கள் அதிருப்தி பட்டுக்கொண்டது எனக்கு தெரிய வந்தது , தோழர்களே ! பிற மக்கள் ஆட்டையும், ஒட்டகத்தையும் கொண்டுபோக , நீங்களோ உங்களுடன் நபியை கொண்டுபோவது உங்களுக்கு பிரியமில்லையா ? என நபியவர்கள் கேட்ட கேள்வியும் , உருக்கமான உரையும் அந்த ஸஹாபிகளை அழ வைத்து விட்டது , எல்லோரும் அழுதுவிட்டார்கள் , நாங்கள் அல்லாஹ்வின் தூதரை எங்களின் பங்காக பொருந்திக்கொண்டோம் என்று கூறினார்கள் ,
நபியவர்களின் ஆளுமைத்திறனையும், அன்சாரிகள் நபியவர்கள் மீது கொண்ட அன்பையும் வெளிப்படுத்தும் நிகழ்வுகள் இவை , இவ்வாறு நபியவர்கள் கைதிகளை பிரித்து கொடுத்த பிறகுதான் ஹவாஸின்காரர்கள் மனமாற்றம் ஏற்பட்டு நபியிடம் மன்னிப்பு கேட்டு வந்தார்கள் , வந்தவர்கள் தம் ஆட்களையும், செல்வங்களையும் திருப்பி தரும்படி கேட்க, நபியவர்கள் அவை எல்லாம் பிரித்து கொடுத்தாகி விட்டது , எனவே ஆட்கள், பொருட்கள் இரண்டில் ஒன்றை கேளுங்கள் ,இரண்டையுமே திரும்ப தர இயலாது என்றதும் அவர்கள் கைதிகளாக பிடிக்கப்பட்ட தமது ஆட்களை திருப்பி தரும்படி வேண்டினார்கள், நபியவர்கள் முஸ்லிம்களிடம் தமது கைதிகளை மனமுவந்து திருப்பிதரும்படி பரிந்துரைத்ததும் எல்லோரும் திருப்பிதந்துவிட்டார்கள்,
பின்பு இரவோடு இரவாக அங்கிருந்து இஹ்ராம் கட்டிக்கொண்டு பைத்துல்லாஹ் வந்து அதே இரவில் உம்ராவை முடித்துக்கொண்டு மதீனாவுக்கு திரும்பினார்கள் , மக்காவை வெற்றி கொள்வதற்காக மதீனாவிலிருந்து வந்த முஸ்லிம்களின் படை மீண்டும் மதீனாவுக்கு திரும்பியது , இவ்வாறான நபித்தோழர்களின் ஈமானிய உணர்வை வெளிப்படுத்திய இடங்கள் இவை , இந்த நினைவுகளில் மூழ்கி நான் ஜியிர்ரானாவில் நின்றிருந்தேன்,அவ்விடங்களில் நபி மற்றும் நபித்தோழர்கள் இல்லாவிட்டாலும் அவர்களின் பிம்பங்களை அங்கே பொருத்திப்பார்க்க மனம் எண்ணுகிறது , அதன் மூலமாவது நபித்தோழர்களை காண வேண்டுமென்ற வேட்கை தனியாதா என ஏங்கினேன்.
ஜியிர்ரானாதான் தொலைவில் உள்ள ஹில் பகுதியாகும் , நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து இஹ்ராம் அணிந்து ஹரம் வந்து உம்ரா செய்தார்கள் என்ற இந்த சுன்னத்தை நடைமுறைப்படுத்தலாம் என்ற எண்ணத்தோடுதான் நான் ஜியிர்ரானா சென்றேன்,
இன்று அங்கே மிக அழகான பள்ளி கட்டப்பட்டுள்ளது. உழுவுடைய தேவைகளை முடித்துக்கொண்டு பள்ளிக்குள் புகுந்தேன், இஹ்ராமுடைய இரண்டு ரக்அத் தொழுது விட்டு உம்ராவை நிய்யத் வைத்துக்கொண்டேன், இங்கேயும் ஹாஜிகளின் பெருங்கூட்டம் நின்றது, உச்சி வெயிலில் கால்கள் சுட்டன,
வாகனம் ஜியிர்ரானாவிலிருந்து புறப்பட்டது , மஸ்ஜிதுல் ஹராமை நோக்கி விரைந்தது , என்னுடைய கண்கள் இஸ்லாத்திற்காக வாள்கள் ஏந்திய ஸஹாபாக்களை தேடியது , நபியின் ஒட்டகம் முன்னே போக அதனை பின்தொடரும் நபித்தோழர்களின் ஒட்டக கூட்டங்களை காண ஏங்கியது , நபியின் வருகையைக்கண்டு ஸலாம் உரைத்த பாறைகளை பார்க்க பார்வைகள் பரிதவித்தன , மக்காவின் வெளிப்பகுதிகளுக்கு செல்லும் போதெல்லாம் இது போன்ற தேடல்கள்தான் என்னை ஆட்கொண்டன , அதே சிந்தனைகளில் திளைத்திருந்தேன் ,
வாகனம் வேகமாக ஹரமை நோக்கி விரைந்து கொண்டிருந்தது, எங்களின் வழிகாட்டி வலப்புறம் தெரிந்த செங்குத்தான மலையை காட்டி கூறினார் , இதுதான் ஜபலே நூர் இதன் உச்சியில்தான் முதன் முதலாக வஹீ வந்த ஹிரா குகை அமைந்துள்ளது என்று விளக்கினார் , பார்த்ததும் பிரமித்து போனோம் ,
ஹிரா மலை
ஹிரா மலை மக்காவுக்கு கிழக்கே சுமார் 4 ½ கிலோ மீட்டர் தூரத்தில் , கடல் மட்டத்திலிருந்து 639 மீட்டர் உயரத்தில் மக்காவிலிருந்து தாயிப் செல்லும் சாலையில் சுமார் 200 மீட்டர் தள்ளி அமைந்துள்ளது , இந்த மலையில் தான் சிறப்புமிக்க ஹிரா குகை அமைந்துள்ளது , மழை மீதேறி 60 செ. மீ இடை வெளியுள்ள இரு கற்களுக்கிடையே நுழைந்து அதை கடந்தபின்தான் குகையை அடையமுடியும் , 3 மீட்டர் நீளமும் , 1. 30 மீட்டர் அகலமும் , 2 மீட்டர் உயரமும் கொண்ட குகை அது , அதிலே இரண்டு மனிதர் ஒருவர் பின் ஒருவர் என்றுதான் தொழ இயலும் , நபியவர்கள் நபியாகுவதற்கு முன் நாற்பதாவது வயதில் இக்குகைக்கு வந்து தனிமையில் வணக்கத்தில் ஈடுபட்டார்கள், செல்லும் போது உணவையும் உடன் கொண்டு செல்வார்கள், அவ்வாறு வணக்கத்தில் திழைத்திருந்த போதுதான் ஹஜ்ரத் ஜிப்ரியீல் (அலை) நபியவர்கள் முன் தோன்றி முதன் முதலாக வஹியையை கொண்டு வந்தார்கள் , நபியவர்களிடம் ஓதுங்கள் என்றார்கள், நபியவர்கள் தான் ஓதத்தெரிந்தவர் அல்லர் என்றதும் , ஹஜ்ரத் ஜிப்ரியீல் (அலை) நபியவர்களை நெஞ்சோடு கட்டியணைத்து இப்போது ஓதுங்கள் என்றார்கள், நபியவர்கள் அதே பதிலை சொல்ல , இவ்வாறு மூன்று முறை நடந்ததற்குப்பின்னர்தான் நபியவர்கள் ஓதுவதற்கு ஆயத்தமானார்கள்,
அலக் சூராவின் ஆரம்ப ஐந்து வசனங்கள் அருளப்பட்டன, இந்நிகழ்வுக்குப்பின் நபி (ஸல்) அவர்கள் நடுங்கிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தார்கள், தனது அருமை துணைவியார் ஹஜ்ரத் ஹதீஜா (ரலி) அவர்களிடம் தனக்கு போர்வை போர்த்திவிட கூறினார்கள், பதட்டம் தணிந்து அவர்களிடம் நடந்ததை கூறியதும் அவர்களை தம் சிறிய தந்தை மகனான , அன்றைய காலத்தில் தவ்ராத், இன்ஜீல் வேதத்தை நன்கறிந்திருந்த வரகா இப்னு நவ்பல் என்பவரிடம் அழைத்து சென்றார்கள் ,
வரகா நபியிடம் நடந்ததை கேட்டறிந்த பின் சொன்னார் , நீங்கள் கூறுவது நபி மூஸாவிடம் வந்த வானவர், அவர்தான் உங்களிடம் வந்துள்ளார், நீங்கள்தான் இறைவனின் இறுதி தூதர், உங்கள் சமுதாயம் உங்களை ஊரை விட்டே வெளியேற்றும் , அந்த சந்தர்ப்பத்தில் நான் உயிரோடு இருக்கனுமே என்றார்,உடனே நபியவர்கள் இந்த தெய்வீக வார்த்தையை கூறியதற்காக மக்கள் என்னை ஊரை விட்டு வெளியேற்றுவார்களா , ஆம், உம் போன்று இச்செய்திகளை கொண்டுவந்த தூதர்களோடு இவ்வாறுதான் நடந்து கொள்ளப்பட்டுள்ளது என்று பதில் கூறினார் ,ஆக நபியவர்களிடம் முதன் முதலாக ஹஜ்ரத் ஜிப்ரியீல் (அலை) வந்து நபியவர்கள் நபியாக தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை இந்த குகையில் வைத்துதான் கூறினார்கள் ,
இத்தகைய சிறப்பான ஓர் நிகழ்வு இங்குதான் நடந்தேறியுள்ளது , இது முன்னர் பார்த்த ஸவ்ர் குகையை விட உயரமாக தெரிந்தது , இவ்வளவு உயரத்தில் நபி (ஸல்) எவ்வாறு ஏறி இருப்பார்கள், எத்தனை பாசமும், அன்பும் கணவர் மீது கொண்ட மனைவியாக இருந்திருந்தால் ஹஜ்ரத் ஹதீஜா (ரலி) உணவை எடுத்துக்கொண்டு கணவனிடம் கொடுத்து வந்திருப்பார்கள் ? நினைத்து பார்க்கவே பிரமிப்பாக இருந்தது ,
எங்களின் கண்கள் அம்மலையை விட்டு அகல மறுத்தன, சிறிது நேரம் அங்கே இறங்கி ஹிரா குகை அமைந்துள்ள அம்மலையை, நபியவர்கள் தவமிருந்த அப்புனித பகுதியை , முதன் முதலாக குர்ஆன் இறங்கிய அப்பிரதேசத்தை கண்கள் குளிர பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என மனம் விரும்பியது , ஆனால் அது ஒரு குரூப்புடன் செல்லும் போது சாத்தியமில்லை , ஏக்கத்தோடு அம்மலை பார்வையை விட்டு மறையும் வரை அதையே உற்று நோக்கிக்கொண்டிருந்தோம் ,
ஹரமை நெருங்கி எங்களின் வேன் ஓடிக்கொண்டிருந்தது, ஹரம் பக்கத்தில் வந்த போது எங்களின் வழிகாட்டி ஜன்னத்துல் முஅல்லாவை காட்டினார் , அதே வலது புறத்தில் மஸ்ஜிதுல் ஜின்னை காட்டினார், சிறிது தூரம் சென்றதும் இடது புறத்தில் மஸ்ஜிதுல் ஸஜரா உள்ள இடத்தை காட்டினார் , இவற்றையெல்லாம் வேனில் இருந்தபடியே நாங்கள் பார்த்தோம் , இவற்றையெல்லாம் மேலோட்டமாகவே எங்களால் காண முடிந்தது ,
வேனிலிருந்து இறங்கி எங்களின் அறையை சென்று அடைந்தபோது மணி பகல் 12.45 ஆக இருந்தது , தாயாரை ஹோட்டலில் விட்டு விட்டு நான் மட்டும் தனியாக சென்று லுஹர் தொழுது வந்தேன் , உடலில் சோர்வு இருந்ததால் உம்ராவுடைய தவாபை செய்யாமல் அறைக்கு வந்துவிட்டேன் , அஸருக்கு பிறகு தவாபையும், மக்ரிபுக்கு பிறகு ஸயீயையும் செய்து உம்ராவை முடித்தேன் , அல்ஹம்துலில்லாஹ்.
ஜன்னத்துல் முஅல்லாவில்..
ஹரமிற்கு வந்து ஆறாவது நாள், செவ்வாய் கிழமை காலை சுப்ஹுத்தொழுகைக்கு செல்லும்போதே என்னுடைய தாயாரிடம் நான் சற்று தாமதமாகத்தான் திரும்புவேன் என கூறிவிட்டு சுப்ஹுத்தொழுகைக்கு சென்றேன் . சுப்ஹு தொழுகைக்குப்பின் ஜன்னத்துல் முஅல்லா செல்ல வேண்டும் என்பது எனது எண்ணம் , ஏனெனில் நேற்றைய தினம் குறிப்பிட்ட இடங்களை காண சென்ற போது மக்காவின் கப்ருஸ்தானை வேனில் இருந்தபடியே காட்டினார்கள் , அதில் நம்முடைய அன்னை ஹதீஜா (ரலி) அவர்கள் அடக்கப்பட்ட இடத்தையும் எங்களின் வழிகாட்டி காட்டினார் , ஆனால் அதை என்னால் விளங்க முடியவில்லை , எனவே அந்த புனித கப்ருஸ்தானை ஜியாரத் செய்வதற்காக புறப்பட்டேன், என்னுடன் யாரும் இல்லை , மர்வா வாசல் வழியாக வெளியே வந்தபோது எதிரே ஜபலே அபில் குபைஸ் தெரிந்தது, அதற்கு அருகாமையில் மற்றொரு மலை ஹரமை நோக்கி திரும்பியுள்ளது . அம்மலையை குடைந்து சுரங்கம் ஏற்படுத்தப்பட்டு சாலைகள் போடப்பட்டுள்ளன , ஏனோ மக்காவின் மலைகள் மீது கூட அன்பு வருகிறது , அவற்றை குடைவதில் எனக்கு வலித்தது போல உணர்வு ஏற்பட்டது, மக்காவில் ஆங்காங்கே செல்லும்போது ஏதேனும் மலைகளை உடைக்கவோ, குடையவோ பார்த்தால் அவர்களின் பாதங்கள் தொட்டு தயவு செய்து மலைகளை உடைக்காதீர்கள் என கெஞ்சத்தோன்றியது , ஏனெனில் பழமையின் சின்னங்களாக நபியை, நபித்தோழர்களை பார்த்த சாட்சிகளாக எஞ்சி இருப்பது அம்மலைகள் மட்டுமே. அத்துடன் ஹரமை சுற்றிலும் அமைந்துள்ள மலைகள் ஹரமுக்கு ஓர் வலுவான அரணைப்போல அமைந்திருந்தது , அந்த அரண் பாதிக்கப்படக்கூடாதே என்பதற்காகவும் இவ்வாறு எண்ண தோன்றியது , ஆக இந்த சிந்தைனைகளோடு நான் ஒரு பாதையில் நடக்க ஆரம்பித்தேன்,
அங்குள்ள டிரைவரிடம் வழிகேட்டபோது அவர் வேறொரு பாதையை காட்டினார் , பின்னர் சற்று நகர்ந்து ஒரு பாகிஸ்தான் வியாபாரி ஒருவரிடம் வழிகேட்டபோது அவர் சற்று தூரமாக இருப்பது போல கூறினார் , அவர் கூறிய படி நான் நடந்தேன், நடந்தேன், நடந்துகொண்டே இருந்தேன். மக்காவின் ஒவ்வொரு தெருக்களிலும் இவ்வாறு நடந்து திரிந்து அங்கு புதைந்திருக்கும் இஸ்லாமிய சரித்திரங்களை ஒவ்வொன்றாக கண்டறியவேண்டும் என்று மனம் விரும்பியது , நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது இந்த திசையில்தான் ஹரமில் நுழைந்தார்கள், நபி,மற்றும் நபித்தோழர்களின் புனித பாதங்கள் பட்ட இடங்களில் நடப்பது கூட மனதிற்கு ஓர் வகையான அமைதியை தந்தது, ஆனால் சற்று வெயில் ஏற தொடங்கியதும் கலைக்க ஆரம்பித்தது , நீண்ட தூரம் நடந்த பிறகு இரண்டு ரோடுகள் பிரிந்தன, நான் ஏதோ வழிமாறி வந்துவிட்டேனோ என்ற சந்தேகம் ஏற்பட்டது , ஒருவரிடம் விசாரித்தபோது அவர் ஜன்னத்துல் முஅல்லா செல்ல நான் வந்த பாதையிலேயே திரும்ப நடக்க கூறினார் ,அதாவது நான் ஜன்னத்துல் முஅல்லாவை தாண்டி நடந்துள்ளேன், வந்த பாதையிலேயே மீண்டும் நடந்தேன், அந்த சாலையில்தான் இந்தியன் ஹஜ்கமிட்டி அலுவலகம் இருக்க கண்டேன், சற்று தூரம் நடந்த பிறகு வலது புறத்தில் மக்காவின் கப்ருஸ்தான் இருந்தது ,
முஅல்லா கப்ருஸ்தான் மக்காவின் பழைய கப்ருஸ்தானில் ஒன்று , அது மஸ்ஜிதுல் ஹராமிற்கு கிழக்கு திசையில் அமைந்துள்ளது. அங்கே செக்யூரிட்டி இருந்தார், நான் தயக்கத்தோடு அவரிடம் உள்ளே செல்ல அனுமதி கேட்டேன் , அவர் சைகையிலேயே உள்பக்கம் செல்ல கூறினார் , ஆர்வத்தோடு உள்ளே நுழைந்தேன், இங்கே பல நல்லடியார்கள் அடங்கப்பட்டுள்ளார்கள் , பல நபித்தோழர்களும் இங்கே துயில் கொண்டுள்ளார்கள், அவர்களில் முக்கியமானவர்கள் அன்னை ஹஜ்ரத் ஹதீஜா (ரலி) அவர்கள்,
அன்னை ஹதீஜா (ரலி)
அன்னை ஹதீஜா ரலி அவர்கள் மக்காவின் உயர் கோத்திரத்தைச்சார்ந்த ஓர் பணக்கார குடும்பத்தில் பிறந்தார்கள் , பல்வேறு பாவங்களும், அநாச்சாரங்களும் நிரம்பி காணப்பட்ட அந்த அறியாமை காலத்தில் கூட தாஹிரா தூய்மையானவள் என மக்களால் அழைக்கப்பட்டார்கள்,
இவர்கள் தன் வியாபார சரக்குகளை ஆண் வியாபாரிகளிடம் கொடுத்து ஷாம் தேசத்திற்கு அனுப்பி வைத்து வணிகம் செய்து வந்தார்கள் , அந்த சந்தர்ப்பத்தில்தான் நபி மேனி (ஸ)ல் அவர்களின் நேர்மை , உண்மையை பற்றி கேள்விப்பட்டு நபியவர்களை தம்மிடம் வரச்செய்து அவர்களை வியாபாரத்திற்காக ஷாம் தேசத்திற்கு அனுப்பி வைத்தார்கள் , அந்த பிரயாணத்தில் நபியவர்கள் பெரும் லாபமீட்டி ஊர் திரும்பினார்கள் , ஹஜ்ரத் ஹதீஜா (ரலி) அவர்களின் அடிமை மைஸரா வும் அப்பிரயாணத்தில் நபியவர்களுடன் இருந்தார், ஊர் திரும்பியதும் பிரயாணத்தில் தான் காண நேரிட்ட நபியவர்களின் பண்புகளையும், குணங்களையும் ஹஜ்ரத் ஹதீஜா (ரலி) அவர்களுக்கு அவர் தெரிவித்தார், இதனால் நபியவர்களை மணமுடிக்க வேண்டுமென்ற எண்ணம் ஹஜ்ரத் ஹதீஜா (ரலி) அவர்களின் மனதில் எழுந்தது , நபியவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்கள் , அதுதான் நபியவர்களுக்கு முதல் திருமணம் , அப்போது நபியவர்களுக்கு 25 வயதாகவும் ஹஜ்ரத் ஹதீஜா (ரலி) அவர்களின் வயது 40 தாகவும் இருந்தது ,
தன்னுடைய தாயுடைய வயதை ஒத்த , இரு கணவர்களுடன் வாழ்ந்த ஓர் விதவை பெண்மனியுடன் நபியவர்களின் இல்லறவு வாழ்வு துவங்கியது , நபியவர்களின் மனைவியர்களிலேயே நீண்ட காலம் நபியுடன் வாழ்ந்த பெருமை ஹஜ்ரத் ஹதீஜா (ரலி) அவர்களை மட்டுமே சேரும், சுமார் 25 வருட காலம் அவர்கள் ஒருவருடன் மட்டுமே நபியவர்கள் இல்லற வாழ்க்கையை மேற்கொண்டார்கள் , அவர்கள் ஹயாத்தாக இருந்தவரை நபியவர்கள் வேறு எந்த பெண்ணையும் மணக்க வில்லை , அது மட்டுமின்றி இப்ராஹிம் என்ற மகனைத்தவிர நபியவர்களுக்கு பிறந்த அத்தனை ஆண், பெண் குழந்தைகளும் ஹஜ்ரத் ஹதீஜா (ரலி) மூலமே பிறந்தன, அவர்கள் காசிம், அப்துல்லாஹ், ஜைனப்,ருகையா ,உம்மு குல்ஸும், பாத்திமா (ரலி) ஆகியவர்களாவார்கள்.
40 வது வயதில் நபியவர்கள் நபிப்பட்டம் தரப்பட்டார்கள், ஹிரா குகையில் ஹஜ்ரத் ஜிப்ரியீல் (அலை) அவர்களை பார்த்தது , குர்ஆனின் முதன் முதலான வசனங்கள் அருளப்பட்டது ஆகிய புதுமையான சம்பவங்கள் நபியவர்களுக்கு பெரும் திடுக்கத்தை தந்தன , நடுநடுங்கிய உடலுடன் வீட்டுக்கு வந்து ஹஜ்ரத் ஹதீஜா (ரலி) அவர்களிடம் தனக்கு போர்வை போர்த்தி விடுமாறு கூறினார்கள், சிறிது பதட்டம் தணிந்ததும் தான் கண்ட காட்சியை ஹஜ்ரத் ஹதீஜா (ரலி) அவர்களிடம் நபியவர்கள் விவரித்தார்கள், அதற்கு ஹஜ்ரத் ஹதீஜா (ரலி) அவர்கள் நீங்கள் கவலைப்படாதீர்கள் , நீங்கள் சொந்தங்களை ஆதரிக்கிறீர்கள், சிரமத்தில் சிக்குண்டவர்களுக்கு உதவுகிறீர்கள், விருந்தாளிகளை உபசரிக்கிறீர்கள் , உண்மை பேசுகிறீர்கள் , இல்லாத பட்டவர்களுக்காக உழைக்கிறீர்கள் எனவே இறைவன் உங்களை கைவிட மாட்டான், ஒரு போதும் உங்களை அவன் இழிவு படுத்த மாட்டான் என நபியவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்,
அதன்பின் தொடர்ந்த நபியவர்களின் வாழ்க்கை போராட்டத்தில் நபியவர்களுக்கு மிகவும் பக்க பலமாக ஹதீஜா (ரலி) திகழ்ந்தார்கள் , நபியவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை ஏற்ற முதல் பெண்மனியும் இவர்கள்தான், தனது செல்வம் யாவற்றையும் நபியவர்களின் அழைப்பு பணிக்காக அர்ப்பனித்தார்கள் , சுக வாழ்வுக்கும், செல்வ செழிப்பான வசதிகளுக்கும் பழக்கப்பட்டவர்கள் தனது கணவருக்காக யாவற்றையும் மாற்றிக்கொண்டார்கள் , அழைப்புப்பணியில் நபியவர்கள் சொல்லெனா பல சிரமங்கள் பட்டு , தளர்ந்து போய் வீட்டுக்கு வந்து ஹஜ்ரத் ஹதீஜா (ரலி) அவர்களின் முகத்தை பார்த்து விட்டால் அச்சிரமங்களெல்லாம் நபியவர்களுக்கு ஒன்றுமில்லாமல் போய் விடும், அவர்களின் பேச்சிலும் , தன் கணவருக்கு அவர் தரும் அணுசரனையிலும் புதிய உத்வேகம் பிறக்கும் , கணவனை நிந்திக்கும் பெண்களுக்கு மத்தியில் ஹஜ்ரத் ஹதீஜா ரலி அவர்களின் இல்லற வாழ்வு ஓர் மணி மகுடம் , மக்காவாசிகள் மூன்று வருட காலம் நபியவர்களையும் , அவர்தம் குடும்பத்தினர்களையும் ஊரை விட்டு விலக்கி வைத்த போது ஷுஅபே அபீதாலிப் கணவாயில் நேரிட்ட சிரமங்களை சகிப்பதிலும் ஹஜ்ரத் ஹதீஜா (ரலி) அவர்கள் பின் வாங்க வில்லை ,
இத்தனை பெருமைக்கு உரிய பெண்மனியான ஹஜ்ரத் ஹதீஜா ரலி அவர்களுக்கு ஒரு தடவை அல்லாஹுத்தஆலா ஜிப்ரியீல் அலை மூலம் சலாம் சொல்லி அனுப்பினான் ,இது அவர்களின் சிறப்பை மேலும் கூட்டியது ,
இவ்வாறு தன்னை முழுமையாக இஸ்லாத்திற்கு அர்ப்பணித்த , பெண்களுக்கெல்லாம் சிறந்த முன் மாதிரி வாழ்க்கை வாழ்ந்த அன்னை ஹதீஜா (ரலி) அவர்கள் ஹிஜ்ரத்திற்கு மூன்று வருடம் முன்பு தனது 65 வது வயதில் மக்காவில் மரணமடைந்தார்கள் . அவர்களின் பிரிவு நபியவர்களை மிகவும் கவலைக்குள்ளாக்கியது , இதனாலேயே அவர்கள் இறப்பெய்திய அவ்வருடத்தை عام الحزن கவலை வருடம் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவார்கள் , ஹதீஜா ரலி அவர்களை நபியவர்கள் தமது பரக்கத்தான கரங்களால் ஜன்னத்துல் முஅல்லா கப்ரஸ்தானில் நல்லடக்கம் செய்தார்கள் .
அவர்களின் மரணத்திற்கு பின்னரும் கூட அதிகமாக ஹஜ்ரத் ஹதீஜா (ரலி) அவர்களை நபியவர்கள் நினைவு கூர்வார்கள் , நான் ஹஜ்ரத் ஹதீஜா (ரலி) அவர்களை நினைத்து ரோசப்பட்டதைப்போல வேறு யாரை நினைத்தும் ரோசப்பட்டது கிடையாது , அந்த அளவுக்கு நபியவர்கள் ஹதீஜா (ரலி) அவர்களை ப்பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள் என ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களே ஒரு முறை கூறினார்கள் , நபியவர்களின் வீட்டில் ஆடு அறுக்க நேரிட்டால் இறைச்சியில் ஒரு பங்கை ஹஜ்ரத் ஹதீஜா (ரலி) அவர்களின் தோழியர்களின் வீடுகளுக்கும் மறக்காமல் நபியவர்கள் கொடுத்து அனுப்பி வைப்பார்கள்,
அத்தகைய மாபெரும் சீமாட்டி இங்கேதான் அடங்கப்பட்டுள்ளார்கள், அவர்களின் பெயரை கேட்டதும் ஒருவகையான பிரமிப்பு உள்ளத்துக்குள் வருகிறது , அவர்களின் பல்வேறு சிறப்புகளில் என்னை மிகவும் கவர்ந்தது அவர்கள் தன் கணவருடன் நடந்து கொண்ட பண்பு . இவர்கள் ஹயாத்துடன் இருந்தவரை நபி (ஸல்) வேறொரு பெண்ணை மணமுடிக்க வில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள், எந்தளவுக்கு அவர்கள் சிறந்த மனைவியாக இருந்திருப்பார்கள், நான் என்னுடைய திருமணத்திற்கு முன்பு இறைவனிடத்தில் துஆ செய்தபோது கூட யா அல்லாஹ் ! ஹஜ்ரத் ஹதீஜா (ரலி) போன்று கணவர் மீது அன்புகொள்ளும் மனைவியை எனக்கு தருவாயாக என துஆ செய்துள்ளேன், அந்த அளவுக்கு மனதில் இடம் பிடித்த ஓர் உயர்ந்த பெண்மனி அவர்கள் , அவர்களின் கப்ரை காணவேண்டுமென்ற ஆர்வத்தோடு தேடித்தேடி பார்த்தேன், கப்ருகள் சமபகுதிகளில் இல்லாமல் சில கப்ருகள் மேட்டிலும் அமைந்திருந்தன, அங்கே கப்ருகளின் அடையாளங்களுக்கு தலைமாட்டிலும் , கால்பகுதியிலும் இரண்டு கற்கள் வைக்கப்பட்டுள்ளன , இதைத் தவிர்த்து வேறு எந்த அடையாளங்களும் , அது யாருடைய கப்ரு ? , எந்த வருடம் இறந்தவர் ? போன்ற எந்த தகவலும் இல்லை , நான் ஹஜ்ரத் ஹதீஜா (ரலி) கப்ரை தேடினேன் , ஒரு ஆலிம் போன்ற ஒருவரை அங்கே கண்டேன், அவரிடம் அவர்களின் கப்ரை பற்றி விசாரித்த போது தெரியவில்லை, இவர்கள் தெரிந்தாலும் சொல்லமாட்டார்கள் என்று அங்குள்ளவர்கள் குறித்து கூறிவிட்டு நகர்ந்தார் , எனக்கு நகர மனமில்லாமல் அங்கே கட்டப்பட்டிருந்த திண்டிலேயே அமர்ந்து யாசீன் ஓதி அவ்வம்மையாருக்கும், அங்கு நல்லடக்கம் செய்யப்பட்ட யாவருக்கும் ஈஸால் ஸவாப் செய்தேன் , ஏதேனும் அடையாளம் கிடைக்காதா? அங்கு அடக்கம் பெற்றுள்ள நபித்தோழர்களின் சரித்திரங்களை கூறும் யாரேனும் கண்ணுக்கு தெரியமாட்டாரா? என்று நாலாபுறங்களிலும் பார்த்துக்கொண்டே ஜன்னத்தில் முஅல்லாவை விட்டு விடைபெற்றேன்.
மஸ்ஜிதுல் ஜின்
வெளியே வந்து சில அடிகள் எடுத்து வைத்த பின் வலது புறத்தில் ஓர் மஸ்ஜித் வருகிறது , அங்கே சுற்றுலா பயணிகள் மஸ்ஜிதுக்கு அருகில் கூடி நின்றார்கள் , ஒரு வழிகாட்டி அவர்களுக்கு மஸ்ஜிதின் சரித்திரத்தை கூறிக்கொண்டிருந்தார் , நான் அவர்களை நெருங்கினேன், ஆனால் அவர்கள் பேசிக்கொண்டிருந்த மொழி எனக்கு புரியவில்லை, பள்ளியின் ஒரத்தில் مسجد الجن என்ற கல்வெட்டைப்பார்தேன், பள்ளி மூடப்பட்டிருந்தது , எனவே பள்ளியினுல் செல்ல வில்லை , நபி மேனி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த போது இவ்விடத்தில் வைத்துதான் ஜின்களிடம் பைஅத் வாங்கினார்கள் , நபியவர்களுடன் ஹஜ்ரத் இப்னு மஸ்வூத் ரலி அவர்களும் புறப்பட்டார்கள் , அவர்களே கூறுகிறார்கள் , இவ்விடம் வந்த்தும் நபியவர்கள் தனது காலால் வட்டமொன்று போட்டார்கள் , பின்னர் இப்னு மஸ்வூத் ரலி அவர்களிடம் அவ்வட்டத்தை விட்டு வெளி வர வேண்டாம் என உத்தரவிட்டார்கள் , பிறகு நபியவர்கள் குர்ஆன் ஓத ஆரம்பித்தார்கள் , சிறிது நேரத்தில் கருப்பு நிறங்களில் ஏதோ ஒன்று எக்கச்சக்கமாக நபியவர்களை சூழ ஆரம்பித்தன , நபியவர்கள் ஓதுவதை கூட என்னால் செவியுற முடியவில்லை, பின்னர் அவை மேகம் களைவது போல களைய ஆரம்பித்தன , பஜ்ர் உதயமாகும் நேரத்தில்தான் நபியவர்கள் தன்னிடம் வந்தார்கள் , பின்னர் நாங்கள் இருவரும் அங்கிருந்து திரும்பி விட்டோம்,أخبار مكة للازرقي 2/200 ) , ( ابن كثير 7/ 275 (تاريخ مكة قولا وحديثا 132 ) ஜின்களின் இந்நிகழ்ச்சி நடை பெற்ற இடத்தில்தான் இப்பள்ளி கட்டப்பட்டுள்ளது , இது ஹரமிலிருந்து முஅல்லாவின் பக்கம் உயர்ந்து செல்லும் சாலையின் இடது புறம் அமைந்துள்ளது , இந்நிகழ்வுடன் அப்பள்ளியை பார்க்கும் போது அழைப்புப்பணியின் மீது நபியவர்களுக்கிருந்த பேராசையும் , நபியவர்கள் மனிதர்கள் மட்டுமல்லாது ஜின் இனத்தவர்களுக்கும் தூதராக அனுப்ப்ப்பட்டவர்கள் என்று நபியவர்கள் குறித்த பிரமிப்பும் வெளிபடுகிறது , அப்பள்ளியை பார்த்து விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.
மஸ்ஜிதுஸ் ஸஜரா
மஸ்ஜிதுல் ஜின்னை அடுத்து சற்று முன்னே வந்தால் இடப்புறத்தில் மற்றொரு பள்ளி தெரிந்தது , அதனை மஸ்ஜிதுஸ் ஸஜரா என்கிறார்கள் , நபி (ஸல்) மக்காவில் அழைப்புப்பணியில் ஈடு பட்ட போது எதிரிகளால் பல வகைகளில் துன்புறுத்தப்பட்டார்கள், ஒரு கட்டத்தில் மிகவும் மன சஞ்சலமடைந்தவர்களாக யாஅல்லாஹ், இன்று எனக்கு ஒரு அற்புதத்தை காட்டு , அதை பார்த்த பின் என்னை பொய்ப்பிப்பவர்களை நான் பொருப்படுத்தவே கூடாது , அந்தளவிற்கு அது என் மனதில் நிற்க வேண்டும் என இறைவனிடம் இறைஞ்சினார்கள் , நபியவர்களின் வேண்டுதலுக்கிணங்க அல்லாஹ் ஒரு மரத்தை தன்னை நோக்கி அழைக்குமாறு உத்தரவிட்டான் , அவ்வாறு நபியவர்கள் தன் முன்னே இருந்த மரத்தை அழைத்ததும் அம்மரம் வேரோடு பிடுங்கிக்கொண்டு நபியவர்களிடம் வந்து ஸலாம் கூறி நின்றது , பின்னர் நபியவர்கள் உத்தரவிட்டதும் அது மீண்டும் தன் இடத்திற்கே சென்று விட்டது , இவ் அற்புதத்தை கண்ட நபியவர்கள் இனி என் சமுதாயத்தவர் யார் என்னை பொய்ப்பித்தாலும் அதை நான் பொருப்படுத்த மாட்டேன் என உறுதி பட கூறினார்கள் , (الطبقات الكبري لابن سعد 1/134) ( تاريخ مكة قديما وحديثا 134 )
இவ்வாறு நபியவர்களின் மனச்சோர்வை அல்லாஹ் இதன் மூலம் நீக்கினான்,அம்மரம் இருந்த இடத்தில்தான் இப்பள்ளி கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது , நான் அப்பள்ளியை பார்த்தேன் , ஆனால் அங்கே பெயர்ப்பலகை எதுவுமில்லை , அதுவும் பூட்டிதான் இருந்தது ,எனவே என்னால் அதனுள் செல்லும் பாக்கியமும் கிடைக்க வில்லை .
இவற்றையெல்லாம் பார்த்து விட்டு எங்களின் ஹோட்டலை அடைந்தபோது மணி 8.30 தை கடந்திருந்தது , பின்பு வழமையாக அமல்கள் செய்வதைப்போல அமல்கள் செய்து கொண்டு அந்த நாளும் கடந்தது.
ஹுதைபிய்யா
மக்காவில் எங்களின் ஏழாவது நாள் புதன் கிழமை, எங்கள் வழிகாட்டியாக வந்த மௌலானா இல்யாஸ் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் ஹுதைபிய்யா செல்லவேண்டும் என நான் முன்னமே கூறியிருந்தேன் , எங்கள் குரூப்பில் பத்துபேர் வரை எங்களுடன் வர தயாரானார்கள் , ஒரு நபருக்கு 25 ரியால் என்று வாடகை பேசி ஒரு வேனை எங்களுக்காக ஏற்பாடு செய்தோம் , காலை 9 மணியளவில் எங்களது வேன் ஹுதைபிய்யாவை நோக்கி வேகமெடுத்தது ,
மக்காவின் சாலைகளோ நபிமேனி (ஸல்) அவர்கள் பிரயாணித்த இடங்கள் , மக்காவின் பூமியோ நபியவர்கள் பிறந்து, வளர்ந்த, நபியாக ஆக்கப்பட்ட , நபியவர்கள் மிகவும் நேசித்த ஒரு புனித பூமி , எல்லாமே புனிதமானது , இங்கே இருப்பதில் , வருவதில் , போவதில் யாவற்றிலும் மனம் நிறைந்திருந்தாலும் உள்ளுக்குள் ஒரு பதட்டமும் இருந்தது , இப்புனித பூமிக்கு உரிய கண்ணியத்தை நாம் தந்தோமா ? என்பதுதான் அது ,யா அல்லாஹ் மக்கா நகரின் கண்ணியத்தை பேண நமக்கு நீ அருள் புரிவாயாக, என்ற துஆவே மக்கா மாநகரிலே ஒரு முஸ்லிம் கட்டாயம் செய்ய வேண்டிய துஆ என நான் கருதுகிறேன் , ஏனெனில் மக்கா மாநகரில் பார்ப்பதெல்லாம் புனிதர்களோடு தொடர்புடையதாக உள்ளது , ஹுதைபிய்யாவும் அப்படிப்பட்ட ஒரு பகுதிதான் , அங்கேதான் நாங்கள் போய்க்கொண்டிருந்தோம்.
மக்காவின் பிரதான நகரத்தை கடந்து வெளியே வந்துவிட்டால் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பாலைவனங்களும், மலைகளும்தான் பரந்து விரிந்து கிடக்கின்றன, அப்பாலைகள் எத்தனை பரிசுத்த மனிதர்களை பார்த்திருக்கும் ? , மக்காவின் மலைகள் என் கண்களுக்கு நபியிடமும், நபித்தோழர்களிடமுமிருந்த மலைப்போன்ற ஈமானுக்கு வாழும் உதாரணங்களாக தெரிந்தன , பரந்த பாலைகள் இறைவன் நினைத்தால் அதிலிருந்து ஸஹாபாக்கள் போன்ற முத்துக்களை கூட உருவாக்க முடியும் என்ற இறையாற்றலுக்கு சான்றுகளாக எனக்கு காட்சியளித்தன , ஏனோ மலைகளும், பாலைகளும் நிறைந்த பகுதிக்கு வந்துவிட்டால் அவை அமைதியாக இருந்து நாள்கணக்காக பேசும் பேச்சாளரை விட அதிக பாடங்களை மனிதர்களுக்கு கற்று தருவதை போல எனக்கு தோன்றியது,
எங்களின் வாகனம் மக்காவின் பிரதான சாலைகளை கடந்து ஹுதைபிய்யா செல்லும் சாலைக்கு வந்தது , ஹுதைபிய்யா எத்தனை சரித்திரம் நிறைந்த இடம் அது ,ஹுதைபிய்யா இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கித்துவம் வாய்ந்த பிரதேசம் , அல்லாஹ் இப்படிப்பட்ட பிரதேசத்தில் இஸ்லாத்திற்கு அப்படியொரு வெற்றியை வைத்திருந்தான் , நபியவர்களின் அழைப்புப்பணி நான்கு கால் பாய்ச்சலில் அரபகத்தை விட்டு வெளியுலகம் வரை நீண்டதற்கும் ஹுதைபிய்யாவிற்கும் நெருங்கிய தொடர்புண்டு , அதுசார்ந்த வரலாறுகளை நினைவுபடுத்திக்கொண்டே எங்களின் வழிகாட்டி வந்தார், நானும் நண்பர்களுக்கு சில வார்த்தைகளை கூறினேன். வாகனம் ஒரு சாலையில் புகுந்து வெகுதூரம் சென்று யுடர்ன் அடித்து திரும்பியது, சிறிது நேரத்தில் ஹுதைபிய்யா வந்துவிட்டது என்று எங்களின் வழிகாட்டி அறிவிப்பு செய்தார் , நாங்கள் அங்கே ஆர்வத்தோடு இறங்கினோம்,
நபி (ஸல்) தன்னுடைய தோழர்களுடன் இங்கே தங்கியுள்ளார்கள் என்ற ஒரு செய்தியே அவ்விடத்தோடு அன்பையும், ஈர்ப்பையும் ஏற்படுத்த போதுமானது, இப்போது அங்கே அழகான பள்ளி கட்டப்பட்டுள்ளது , அதற்கு அருகாமையில் சிதிலமடைந்த பழைய பள்ளியின் சுவடுகள்தான் எஞ்சியுள்ளன, அங்கேயும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது , அங்கே பார்த்தேன் , வழிகாட்டி ஒருவர் ஹுதைபிய்யாவின் சரித்திரத்தை தன் தோழர்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தார், வாருங்கள் நாமும் அவர்களுடன் ஹுதைபிய்யா வரலாற்றில் பயணிப்போம்
ஹுதைபிய்யா , ஹரமுடைய எல்லைக்கு வெளியே அமைந்துள்ளது , இது அங்குள்ள கிணற்றின் பெயரைக்கொண்டு அறியப்பட்டது, ஆனால் இப்போது அங்குள்ள சுமைஷி கிணற்றை வைத்து சுமைஷி என இவ்விடம் அறியப்படுகிறது, இப்போது அங்கே புதிய பள்ளியொன்று கட்டப்பட்டுள்ளது, மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து 24 கி.மீரும் ஹரமுடைய எல்லையிலிருந்து 2 கி.மீ தொலைவிலும் அது அமைந்துள்ளது , அதற்கு அருகாமையில் கருப்பு கல் மற்றும் சுண்ணாம்பைக் கொண்டு கட்டப்பட்ட பழைய பள்ளியின் சுவடுகள் இன்னும் இருக்கின்றன, அதைதான் நாங்கள் பார்த்தோம் ,
ஹிஜ்ரி 6 ம் ஆண்டு ஹுதைபிய்யாவில்தான் வரலாற்று சிறப்பு மிக்க ரிழ்வான் ஒப்பந்தம் கையெழுத்தானது , அதன் விபரமாவது நபி (ஸல்) ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு தன் தோழர்களுடன் உம்ரா செய்வதற்காக மக்காவிற்கு புறப்பட்டார்கள் . தன் சொந்த ஊரை காணப்போகிறோம் என்ற பெரும் மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் நபியுடன் உம்ரா செய்ய போகிறோம் எனும் உணர்வு அப்பிரயாணத்தின் மீதிருந்த அவர்களின் ஆர்வத்தை பல மடங்கு அதிகரிக்கச்செய்திருந்தது , எனவே பெரும் எதிர்பார்ப்போடு முஸ்லிம்கள் மக்காவுக்கு புறப்பட்டார்கள் , மக்காவுக்கு இன்னும் பத்து கி.மீ தூரமே எஞ்சியிருந்த நிலையில் ஹுதைபிய்யாவில் வைத்து குரைஷிகள் முஸ்லிம்களை மக்காவிற்குள் நுழைய தடைவிதித்தார்கள்,
கஃபத்துல்லாஹ் என்பது பொது வணக்கஸ்தலம் , அங்கே யாரும் யாரையும் தடுக்க முடியாது , வழிபாட்டு உரிமையும் , மத சுதந்திரமும் அங்கே தரப்பட வேண்டும் , ஆனாலும் இந்த பொது விதியை மீறி அவர்கள் முஸ்லிம்களை தடுத்தார்கள் , ஒரு வேலை முஸ்லிம்கள் யுத்தம் புரிய வந்துள்ளார்கள் என்று தவறாக எடுத்துக்கொண்டு மக்காவில் நுழைவதற்கு அவர்கள் தடை விதித்திருக்க கூடும் , ஆதலால் முஸ்லிம்கள் மக்கா வருவதன் நோக்கமென்ன என்பது குறித்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக நபியவர்கள் , உஸ்மான் (ரலி) அவர்களை மக்காவுக்கு தூதராக அனுப்பிவைத்தார்கள், அவர்கள் திரும்பி வர தாமதமானபோது அவர்கள் கொலைசெய்யப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி முஸ்லிம்களுக்குள் பரவியது , ஒரு கூட்டத்தாரின் தூதரை கொலை செய்வது என்பது பகிரங்கமான போர் பிரகடனத்திற்கு சமம், யுத்த விதிமீறலில் உள்ளது , எனவே முஸ்லிம்கள் உம்ராவுக்கு வந்த இடத்தில் போர் செய்ய நிர்பந்திக்கப்பட்டார்கள் , குரைஷிகளுடன் போர் செய்யவேண்டும் , அதற்கு மரணிக்கவும் தயாராக இருக்கவேண்டும், புற முதுகு காட்டக்கூடாது என்று எல்லோரிடமும் நபியவர்கள் உறுதி மொழி வாங்கினார்கள் , அப்போதுதான் அவ்வொப்பந்தத்தில் கலந்து கொண்ட நபித்தோழர்களை புகழ்ந்து குர்ஆன் வசனங்கள் இறங்கின, அவ்வசனங்களின் காரணமாகவே இந்த ஒப்பந்தம் பைஅத்துர் ரிழ்வான் என அறியப்பட்டது,
முஸ்லிம்களின் இந்த ஒப்பந்தம் எதிரிகளுக்கு பீதியை கிளப்பியது , ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் எவ்வித அசம்பாவிதமுமில்லாமல் திரும்பி வந்தார்கள் , பின்பு குரைஷிகளின் தூதர்கள் ஹுதைபியா வந்தார்கள் , இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை துவங்கியது . இவ்வாறு பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப்பின் குரைஷிகள் ஒப்பந்தத்திற்கு தயாரானார்கள், ஒப்பந்தமும் கையெழுத்தானது , இந்த இடத்தை முன்னிறுத்திதான் ஹுதைபிய்யா உடன்படிக்கை என இது அறியப்பட்டது . இவ்வுடன்படிக்கைகுப்பின்னரே , மதீனா சென்றது முதல் ஓயாமல் யுத்தம் திணிக்கப்பட்ட நிலையிலிருந்து முஸ்லிம்கள் மீண்டார்கள் , அதனால் இஸ்லாம் ஹிஜாஸ் மாகாணத்தை கடந்து வெளி மாகாணங்களிலும் பரவுவதற்கான வழி பிறந்தது , இதையே வெற்றி என குர்ஆன் பிரகடனம் செய்து பத்ஹ் சூரா இறங்கியது ,
மதீனாவிலிருந்து இவ்வளவு நீண்ட தூரம் பிரயாணம் செய்து வந்து மக்காவுக்கு வெகு அருகாமையில் நீங்கள் மக்காவுக்குள் நுழைய முடியாது என்ற செய்தி நம்மவர்களுக்கு இந்தியாவிலிருந்து ஜித்தா வந்த பிறகு நீங்கள் மக்கா செல்ல முடியாது என மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கு சமம் , அந்த செய்தியை நம்மால் தாங்க முடியுமா ? ஆனாலும் இம்முடிவை கேட்டு நபியின் ஒரு வார்த்தைக்கு தன் உயிரை விடவும் தயாராக இருக்கும் அத்தியாகிகள் ஒரு கணம் திகைத்துதான் போனார்கள் , நபியவர்கள் தன் தோழர்களை இஹ்ராமை இங்கேயே களைய உத்தரவிட்டும் நபித்தோழர்கள் உம்ராவை நிறைவேற்றாமல் இஹ்ராமை களைவதில் மிகவும் தயக்கம் காட்டினார்கள் , திரு நபி (ஸல்) அவர்கள் இந்நிலையை கண்டு அதிருப்தியோடு தன் கூடாரத்திற்கு வந்த போது நபியின் அருமை உம்மு ஸலமா ரலி யாரசூலல்லாஹ் நீங்கள் முதலில் தன் பிராணியை குர்பானி கொடுப்பதுடன் தன் தலையை மழித்து விடுங்கள் , அதன் பின் அவர்கள் தானாக இஹ்ராமை கழைந்து விடுவார்கள் என யோசனை கூறினார், அதன்படி நபி ஸல் அவர்கள் ஹுதைபிய்யாவிலேயே தன் இஹ்ராமை களைய ஆரம்பித்ததும் எதுவும் பேசாமல் நபித்தோழர்களும் தம் இஹ்ராமை களைய ஆரம்பித்து விட்டார்கள் , கட்டுப்படுவதன் பொருளே அவர்களின் வாழ்க்கையிலிருந்துதான் பெற முடிய முடியும் .ஆக இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ஓர் சம்பவம் நடந்த இடத்தில்தான் நாங்கள் நின்றிருந்தோம் , அங்கே கட்டப்பட்டிருந்த பள்ளியினுள் நுழைந்து தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுதோம் , அங்கே பணியில் இருந்த ஓர் அறிஞர் சற்று தள்ளி மக்பரா இருப்பதாகவும் , அருகிலுள்ள மலைமீதுதான் ஹுதைபிய்யா ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும் கூறினார், நான் இப்பக்கம் அப்பக்கம் ஓடிச்சென்று பார்தேன் , எனக்கு மக்பரா தெரியவில்லை . ஒருவேலை அவர் கூறியதை நான் விளங்கவில்லைபோலும் , அங்குள்ள தகவல்களை மேலும் அறிய ஆவலாயிருந்தேன், அதற்குள் எங்கள் வழிகாட்டி வாகனத்தில் ஏற கூறிவிட்டார் , எனவே அந்த பள்ளியிலிருந்து சில நிமிடங்களில் விடை பெற்றோம்.
சுமார் 20 அடி ஹுதைபிய்யாவை விட்டு நகர்ந்திருப்போம் , எங்களின் வாகன ஓட்டி வலப்பக்கத்தில் தெரிந்த ஓர் கிணறை சுட்டி காட்டி இதுதான் நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் தங்கியிருந்தபோது ஸஹாபாக்களுக்கு தண்ணீர் தேவை ஏற்பட்ட நேரத்தில் தன் பரக்கத்தான கையை வைத்து நீர் பெருக்கெடுக்கச்செய்த கிணறு என்று கூறினார், ஆம் , இக்கிணறு குறித்து ஹதீஸ் நூல்களில் வருகிறது , ஹஜ்ரத் பரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நாங்கள் ஹுதைபிய்யாவில் 1400 பேர் இருந்தோம் , ஹுதைபிய்யாவில் ஒரு கிணறு ஒன்று இருந்தது , அதை நாங்கள் எங்களின் தேவைக்காக இரைக்க ஆரம்பித்ததில் ஒரு சொட்டு கூட அதில் தண்ணீர் இல்லாமல் போய் விட்டது , நபி (ஸல்) அவர்கள் கிணற்றின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு ஸஹாபாக்களிடம் சிறிது தண்ணீரை வரவழைத்து அதில் தன் முபாரக்கான வாயை கொப்பளித்து அக்கிணற்றில் உமிழ்ந்தார்கள் , சிறிது நேரம்தான் கடந்திருக்கும் , அக்கிணற்றிலிருந்து தண்ணீர் ஊற ஆரம்பித்தது, நாங்கள் அக்கிணற்றிலிருந்து நீர் இறைத்து நாங்களும் தாகம் தீர குடித்தோம் , எங்களின் பிராணிகளுக்கும் தாகம் தீரச்செய்தோம். (புஹாரி , மனாகிப் 3577)
பிரிதொரு ஹதீஸில் நபியவர்களின் விரல் இடுக்குகளிலிருந்து தண்ணீர் பீறிட்டதாகவும் வருகிறது ,எதுவாக இருந்தாலும் அக்கிணறும் , அதன் தண்ணீரும் எம் போன்ற பாவிகளுக்கு பார்க்க கிடைத்து விட்டாலே அது எவ்வளவு பெரிய பாக்கியம ? அந்த பாக்கியத்தை முழுமையாக எங்களால் பெற முடியவில்லை என்ற வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும் இனி வரக்கூடிய காலங்களில் இக்கிணறை நாங்கள் பார்த்த அளவுக்கு கூட யாராலும் பார்க்க முடியாதே என்ற எண்ணம் எங்களின் வருத்தத்தை மேலும் கூட்டியது.
அவர்காட்டிய கிணறை வாகனத்திலிருந்துதான் எங்களால் பார்க்க முடிந்தது , அவர் மேலும் தொடர்ந்தார் , இக்கிணறை முன்பு அடைத்து வைத்திருந்தார்கள் யாராலும் போகவும் முடியாது , பார்க்கவும் முடியாது, ஆனால் இப்போது அவ்விடத்தை ஒரு கம்பெனிக்கு கொடுத்து விட்டதால் அவ்விடம் திறந்து உள்ளது என்றார். அவர் கூறியது போலவே ஒரு கம்பெனி ஒன்று அங்கே தன் கட்டுமான பணியை ஆரம்பித்ததற்கான அடையாளமும் தெரிந்தன, ஆக நபியின் வாழ்க்கை வரலாற்றுடன் தொடர்பு கொண்ட அக்கிணறை தூரத்திலிருந்து பார்த்ததும் கூட இறைவன் எனக்கு தந்த பாக்கியமாக கருதுகிறேன் , பின்னர் அவ்விடத்தை விட்டு நகர்ந்தோம்.
கண்காட்சியகம்
ஹுதைபியாவை விட்டு புறப்பட்டு அதேசாலையில் உள்ள கண்காட்சியகத்துக்கு வந்தோம் , அங்கே சவூதி அரசாங்கம் சார்பாக இரு புனிதபள்ளிகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் கண்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுல் நபவீயின் முகப்பு , கஃபத்துல்லாஹ்வின் திரை, மகாமே இப்ராஹீமின் மாடல், ஜம் ஜம் கினற்றின் முந்தைய நிலை கஃபத்துல்லாஹ்வின் கதவு , கஃபத்துல்லாஹ்வின் உள்திரைக்காக இந்தியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட உள் சிகப்பு நிற திரை, ஹஜ்ருல் அஸ்வத் வைக்கப்பட்டிருந்த பழைய பிரேம் , கஃபத்துல்லாஹ்வின் சாவி, ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி)அவர்கள் கட்டிய கஃபத்துல்லாஹ்வின் ஒரு மரத்தூண் ஆகிய அபூர்வ பொருள்களெல்லாம் அங்கே வைக்கப்பட்டிருந்தன , அவற்றையும் மிகுந்த ஆர்வமிக்க கண்களோடு கண்டு களித்தோம், பின்பு அங்கிருந்து புறப்பட்டு ஹரமை அடைந்து லுஹர் தொழுகைக்கு ஹரம் வந்து விட்டோம்.
. தாயிஃபின் விருப்பமும், முயற்சியும்
இன்று வியாழக்கிழமை , மக்கா வந்து ஒரு வாரம் முடிந்து விட்டது , மக்காவில் இன்னும் ஒருநாள்தான் இருப்போம், கடைசி நாளான இந்த வியாழனை பயன்படுத்தி தாயிஃபிற்கு சென்றுவரலாம் என விரும்பினேன். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் மதீனா செல்வதற்கு முன் தாயிஃப் சென்றார்கள் , ஆனால் அங்குள்ள மக்கள் நபியவர்களுக்கு ஆதரவு தரவில்லை, மாறாக கற்களால் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் , நபியவர்கள் அங்கிருந்து அகன்று ஒரு தோட்டத்தில் வந்து அமர்ந்தார்கள் , அத்தோட்டம் இப்போதும் இருப்பதாகவும் , தாம் பார்த்து வந்ததாகவும் ஊரிலே ஹாஜி ஒருவர் கூறினார் , அதை கேட்டதிலிருந்து அங்கே செல்லவேண்டுமென்ற விருப்பம் இருந்து வந்தது , ஆனால் தாயிஃப் மக்காவிலிருந்து 110 கி.மீ .தொலைவில் அமைந்துள்ளது , அங்கே போய் வருவதில் ஒரு நாள் முழுக்க கழிந்துவிடும், உடன் செல்வதற்கு தோழர்கள் யாரும் தயாரில்லை , எங்களின் வழிகாட்டியோ தனியாக செல்லாதீர்கள் , அது பொருத்தமாக இருக்காது என எச்சரித்தார், அதையும் மீறி நான் ஒரு வேனை நிறுத்தி தாயிஃபிற்கு வாடகை எவ்வளவு என்றெல்லாம் விசாரித்தேன் . ஆனால் நான் தனி ஆளாக இருந்ததால் அவர் பஸ்ஸிலே செல்லும்படி சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார் ,
எல்லாவற்றிற்கும் மேலாக நான் தாயிப் சென்றால் எனது தாயாரை தனிமையில் விட்டுசெல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் , லுஹர் , அஸருக்குள் திரும்பிவிட முடிந்தால் சரி, ஆனால் அது சாத்தியமில்லை என்பதால் மனமில்லாமல் அவ்வெண்ணத்தை கைவிட்டேன் , இன்ஷா அல்லாஹ் ,அல்லாஹ் மீண்டும் மக்கா வர தவ்ஃபீக் செய்தால் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என என்னை நானே தேற்றிக்கொண்டேன் .அல்லாஹ் அந்த மண்ணை மீண்டும் மீண்டும் மிதிக்க தவ்பீக் செய்வானாக, ஆமீன்.
உம்ராவின் எண்ணமும், திடீர் பயணமும்
இன்று வெள்ளிக்கிழமை, மக்காவில் எங்களின் ஒன்பதாவது நாள், எனது தாயார், தனது மூதாதையர்கள் சார்பாக உம்ரா செய்யும்படி என்னை வலியுறுத்திக்கொண்டே இருந்தார் , நான் குறைந்தது எனது தந்தை சார்பாகவாவது உம்ரா செய்ய வேண்டும் , அதற்கு இன்றைய நாளை விட்டால் வேறுநாள் கிடைக்காது , காரணம் நாளை சனிக்கிழமை காலை 10 மணியளவில் மதீனா புறப்பட வேண்டும் என எங்களின் வழிகாட்டி அறிவிப்பு செய்திருந்தார் . எனவே காலை சீக்கரமாகவே குளித்து விட்டு ஆயிஷா பள்ளிக்கு சென்று இஹ்ராமுடைய நிய்யத் வைத்து விட்டு, ஹோட்டல் வந்து தாயாரை அழைத்துக்கொண்டு ஜும்ஆவுக்கு சென்றுவிடலாம் என எண்ணியிருந்தேன் , ஆனால் எதிர்பாராத விதமாக எங்களுடைய ஊரைச்சார்ந்த எங்களின் வீட்டு அருகாமையில் வசிக்கும் ஹாஜி E.B ஹுசைன், அவர்களின் சகலை , எனது நண்பர் பாதுஷா , அவருடைய தம்பி அஸீஸ் ஆகியோர் எங்களை காண ஜித்தாவிலிருந்து வந்திருந்தார்கள் , வெள்ளிதான் அவர்களுக்கு விடுமுறை என்பதால் அன்று வந்திருந்தார்கள் , அவர்களுடன் உறையாடிவிட்டு அவர்களிடமிருந்து விடைபெற்ற பின்பு, நான் சென்று ஆடைகளை துவைத்து குளித்து விட்டு வருவதற்குள் மணி 10 தை நெருங்கிவிட்டது . இனி ஆயிஷா பள்ளிக்கு சென்று திரும்புவது என்பது சாலையில் ஜும்ஆ தொழவேண்டும் என்று முடிவு செய்வதற்கு சமம் என புரிந்து கொண்டேன் , அப்போது ஆயிஷா பள்ளி செல்வது எனும் முடிவை ஜும்ஆவுக்கு பின் தள்ளிப்போட்டு விட்டு ஜும்ஆவுக்கு செல்ல தயாரானேன் . எனது தாயார் குளித்து தயாராகுவதற்குள் மணி 10 .40 தை தாண்டிவிட்டது .
ஹோட்டலை விட்டு கீழே இறங்கினால் ஏதோ மணி 12.30 தை தாண்டி விட்டதை போலவும் , இமாம் குத்பா ஓத தயாராகி விட்டதை போலவும் மக்களின் கூட்டம் சாரை சாரையாக கடல் அலைகளைப் போல் ஹரமை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள் .அவர்களோடு கூட்டத்தில் நாங்களும் கரைந்தோம் , இப்போதே முன்பக்கமுள்ள வாசல்கள் அடைபட்டிருந்தன , நாங்கள் முன்னேற முன்னேற அடுத்த வாசல் , அடுத்த வாசல் என தள்ளிக்கொண்டே போனார்கள், இறுதியாக புதிய கட்டிடத்தில்தான் எங்களுக்கு இடம் கிடைத்தது , தொழுகைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் இருந்தது . சூரத்துல் கஹஃப் ஓதுவது , துஆ செய்வதில் நேரம் கடந்தது . சரியாக 12 .30 மணியளவில் இமாமுடைய குத்பா ஆரம்பமானது, தொழுகை இனிதே முடிந்தது , ஹரம் ஷரீஃபில் நாங்கள் நிறைவேற்றும் கடைசி தொழுகை அதுதான் என்பது எங்களுக்கு தெரியாமல் போனது , தெரிந்திருந்தால் இன்னும் சற்று தொழுகை துஆவில் லயித்திருக்கலாம் , என்ன செய்வது நற்காரியங்கள் செய்வதை நாளை நாளை என தள்ளி போடுவது மனிதனுக்குள்ள நோய் , எதையும் அடுத்த சந்தர்ப்பம் கிடைக்காது , அதுதான் தனக்கு கிடைத்த கடைசி சந்தர்ப்பம் என செயல்படுவதுதான் புத்திசாலித்தனம் ,ஆனால் மனிதனோ நல்ல சந்தர்ப்பங்களையெல்லாம் தவற விட்டு விட்டு மரணம் திடீரென வாசலில் வந்து நிற்கும்போதுதான் சந்தர்ப்பங்கள் தவறியதையெண்ணி வருத்தப்படுவான் . கிட்டத்தட்ட அதே நிலைமைதான் எங்களுக்கும் ஏற்பட்டது .
ஜும்ஆ முடிந்து நாங்கள் உணவருந்திக் கொண்டிருந்தோம், அப்போது திடீரென எங்களின் வழிகாட்டி மாலை 4 மணிக்கு மதீனா புறப்படுகிறோம் என்று அறிவித்தார், ஹாஜிகள் சற்று அதிருப்தி தெரிவித்தாலும் அந்த அறிவிப்பு எங்களின் வழிகாட்டியே எதிர்பார்க்காததுதான் , என்ன செய்வது ? சவூதியில் இப்போதெல்லாம் ரொம்பவும் கெடுபிடி , புறப்படும் நேரம் முதல் முஅல்லிம்கள் பதிவு செய்து கொள்கிறார்கள் , அந்த நேரத்திற்கு சரியாக வந்து ஹாஜிகளை கிளப்பி விடுகிறார்கள் ,அதன் பின் ஒரு நிமிடம் கூட மக்காவில் இருப்பதற்கு அனுமதிப்பதில்லை, எனவே இனி ஹரம் செல்வது , இறுதி தவாஃப் செய்வது ஆகியவற்றெற்கெல்லாம் சந்தர்ப்பமே இல்லை , எனவே அறிவிப்பு வந்தவுடன் சாமான்களை தயார் செய்வது , கட்டுவது, இறக்குவது போன்றவைகளில் மும்முரமானோம் . அதற்குள் அஸர் தொழுகை பாங்கு சொல்லப்பட்டு தொழுகை ஆரம்பித்திருந்தது , ஹோட்டல் வாசலிலேயே நான் தொழுது கொண்டேன் ,
மாலை ஐந்து மணியளவில் எங்களின் ஹோட்டலுக்கு எதிரில் எங்களுக்கான பஸ் வந்து நின்றது , மக்காவில் இருந்த பாக்கியமான இந்த நாட்களை முறையாக கழிக்கமுடியவில்லையே என்ற வருத்தத்தோடும் , கவலையோடும் மதீனா அழைத்துச்செல்ல வந்திருந்த வாகனத்தில் ஏறி அமர்ந்து மக்கா செல்லும் பாதையை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே மக்காவிலிருந்து விடைபெற்றோம் , யா அல்லாஹ் ! எங்களின் மக்கா பயணத்தை இறுதி பயணமாக ஆக்கிவிடாதே , மீண்டும் மீண்டும் இப்புனித பூமியை முறையாக தரிசித்துக்கொண்டே இருக்க நீ கிருபை செய்வாயாக.
மதீனாவை நோக்கி…
. மக்காவை பிரிகிறோமே என்ற ஏக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், மதீனாவை காணபோகிறோம் என்ற சந்தோசம் மிகைத்திருந்தது , எனக்கு பஸ்ஸுடைய முன் இருக்கையில் அமரும் வாய்ப்பு கிடைத்தது, மௌலவி இல்யாஸ் அவர்கள் பயான் செய்து கொண்டே வந்தார் , மதீனாவுக்கு செல்லபோகிறோம் , எனவே நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தை அதிகப்படுத்துங்கள் என கூறினார், 5.30 மணியளவில் எங்களின் வாகனம் புறப்பட்டது , மக்காவின் பிரதான சாலைகளில் ஓடி மதீனா செல்லும் பாதையில் புகுந்தது, கிதாபிலே ஹிஜ்ரத்வுடைய பாதையையை ஒட்டியே சாலைபோடப்பட்டதாக படித்திருந்தேன், நான் ஓட்டுநரிடம் இதுதான் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த பாதையா ? என கேட்டபோது அவரும் ஆம் , என பதிலளித்தார், ஹிஜ்ரத்வுடைய நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக சிந்தனையில் வந்துபோனது ,
நபி (ஸல்) அவர்களும் ,ஹஜ்ரத் அபூபக்ர் ரலி அவர்களும் எத்தனை பெரும் சோகத்தோடு மக்காவை பிரிந்திருப்பார்கள், சில நாட்கள் தங்கியிருந்த நமக்கே மக்காவை விட்டு செல்கிறோம் என்ற செய்தி கவலையை தருகிறது என்றால் மக்காவிலேயே பிறந்து வளர்ந்து 53 வருடங்கள் வரை வாழ்ந்த நபி (ஸல்) அவர்களுக்கு மக்காவுடைய பிரிவு எத்தனை வருத்தத்தை தந்திருக்கும் ! , இறைமார்க்கத்தை நிலைநாட்ட எத்தகைய தியாகத்தையும் செய்ய முன்வரவேண்டும் என்ற பாடத்தை இந்த ஹிஜ்ரத் சமுதாயத்திற்கு தந்தது , அது மட்டுமின்றி முஸ்லிம் சமுதாயம் தன் வாழ்வில் ஓர் நதியைபோல நடை போட வேண்டும் , நதி அதன் ஆழம் வெளியே தெரியாது , ஆனால் எவ்வித ஆர்ப்பரிப்பும் இல்லாமல் அமைதியாக ஓடிக்கொண்டே இருக்கும் , தன் பாதையில் மலை குறுக்கிட்டாலும் கூட அதனுடன் மோதிக்கொண்டு நிற்காமல் தான் ஒதுங்கி தனக்கான பாதையை தேடிக்கொள்ளும் , இதே போல நபியவர்களும் ஆரம்பத்தில் மக்காவில் அழைப்பு பணி மேற்கொண்டார்கள் , எதிர்ப்பு அதிகரித்ததும் தாயிபிற்கு சென்றார்கள் , அங்கும் பலனில்லை என்று ஆனதற்கு பிறகும் கூட தளர வில்லை , மதீனாவுக்கு சென்றார்கள் , அதன் மூலம் அல்லாஹ் மகத்தான வெற்றியை இஸ்லாத்திற்கு தந்தான் ,முஸ்லிம் சமுதாயமும் இதே போல எத்தகைய எதிர்ப்புகளை தனது பாதையில் சந்தித்தாலும் துவண்டு விடாமல் தொடர்ந்து தனது இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும் நபியவர்களின் ஹிஜ்ரத் போல என்ற மிக உன்னதமான பாடத்தையும் ஹிஜ்ரத் சமுதாயத்திற்கு சொல்லியது , இங்கே ஹிஜ்ரத்துடைய சம்பவத்தை நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும்.
ஹிஜ்ரத்
முஸ்லிம்களுக்கு ஹிஜ்ரத்வுடைய அனுமதி கிடைத்தவுடன் கொஞ்ச கொஞ்சமாக முஸ்லிம்கள் மக்காவை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள், மக்காவாசிகளுக்கு எதிராக மதீனாவில் ஓர் கூட்டம் உருவாகிவிட்டது, முஸ்லிம்கள் கொஞ்சம் கொஞ்சமாக மதீனாவில் சேர்ந்து கொண்டுள்ளார்கள் , அவர்களை இனியும் வளர விட்டால் நமக்கு நல்லதில்லை, இனி விரைவில் நபியும் ஹிஜ்ரத் செய்து மதீனா செல்வதற்கு பலமான வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்த கொண்ட மக்கா வாசிகள் நபியவர்களை என்ன செய்வது ? தாருந் நத்வாவில் ஒன்று கூடி ஆலோசித்தார்கள் , இறுதியில் இன்று இரவே முஹம்மதை கொன்றுவிடுவது என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள், நபி (ஸல்) அவர்கள் மதியநேரம் ஹஜ்ரத் அபூ பக்ர் (ரலி) வீட்டுக்கு வந்து ஹிஜ்ரத் செய்ய அனுமதி கிடைத்து விட்டது , நாளை அதிகாலை புறப்பட வேண்டும் , தயாராக இருங்கள் என்று அவர்களிடம் கூறிச்சென்றார்கள் , அபூபக்ர் (ரலி) நான்கு மாதமாக இரு ஒட்டகங்களை இந்த சந்தர்ப்பதித்திற்காகவே வளர்த்துவந்தார்கள், குரைஷிகளின் ஆலோசனை குறித்து நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ மூலம் தெரிவிக்கப்பட்டு இரவோடு இரவாக நபியவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டார்கள், இரவு வந்தது, விரோதிகள் நபியின் வீட்டை முற்றுகையிட ஆரம்பித்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் அமானித பொருட்களை ஒப்படைத்து வைத்திருந்தார்கள், அவற்றை உரியவரிடம் கொண்டு சேர்க்கும் ஒரு வேலை மட்டும் இருந்தது , ஆதலால் ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்களை தனது படுக்கையில் படுக்கச் செய்து விட்டு, தான் வெளியேறினார்கள்,
வீட்டைச்சுற்றி விரோதிகள் நிற்க நபி (ஸல்) ஒரு கைபிடி மண்ணை எடுத்து யாசீன் சூராவின் ஆரம்ப சில வசனங்களை ஓதி எதிரிகளை நோக்கி வீசினார்கள், அதனால் அவர்களின் கண்களின் மீது திரை விழுந்துவிட்டது , இதனால் நபி (ஸல்) வீட்டை விட்டு வெளியேறியது யாருடைய கண்களுக்கும் தெரியவில்லை. (உயூனுல் அஸர் 1,179) வீட்டை விட்டு புறப்பட்டவர்கள் நேரே அபூபக்ர் (ரலி) இல்லம் வந்து அவர்களுடன் புறப்பட்டு ஸவ்ர் குகையை அடைந்தார்கள்,
மக்காவின் ஒரு திட்டின் மீது ஏறி நின்று மக்கா நகரை பார்த்து , மக்காவே ! என்ன ஒரு அழகான ஊர் நீ ! , எனக்கு மிகவும் பிரியமான ஊர் நீ ! , என் கூட்டத்தார் மட்டும் என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வேறு எங்கும் குடியிருக்க விரும்பியிருக்கமாட்டேன் என்று மனவருத்தத்தோடு கூறிவிட்டு மக்காவை விட்டு புறப்பட்டார்கள், மக்காவிலிருந்து புறப்பட்டு வழியில் ஸவ்ர் குகைக்கு நபியவர்கள் வந்தார்கள், முதலில் ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) குகைக்குள் நுழைந்து ஏதேனும் விஷ ஜந்தோ, பாம்போ உள்ளதா என தன் கைகளால் தடவிப்பார்த்தார்கள், பின்னர் நபி (ஸல்) அவர்களை உள்ளே வர கூறினார்கள். இந்த குகையைப்பற்றியே அல்லாஹ் குர்ஆனில் ஓர் இடத்தில் اذهما فى الغار என சுட்டிக்காட்டுகிறான், பாதுகாப்பு கருதி வழக்கத்திற்கு மாற்றமான பாதையில் அழைத்துச்செல்வதற்கு வழிகாட்டியாக அப்துல்லாஹ் இப்னு அரீகத் என்பவரை கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள், தம் ஒட்டகங்களை அவரிடம் ஒப்படைத்து மூன்றாவது நாள் ஸவ்ர் மலைக்கு வந்து விடும்படி கூறி அனுப்பிவைத்தார்கள், அப்துல்லாஹ் இப்னு அபூ பக்ர் (ரலி) இரவிலே இவர்களுடன் தங்குவார்கள், காலையில் திரும்பி குரைஷிகளுடன் மக்காவில் பகலை கழித்து அவர்களிடமிருந்து தகவல்களை கொண்டு வருவார்கள், அபூபக்ர்(ரலி) அவர்களின் அடிமை ஆமிர் இப்னு புஹைரா என்பவர் அப்துல்லாஹ் சென்றதற்குப்பிறகு அந்த சுவடுகளை அழிப்பதற்காக தன் ஆடுகளை எடுத்துக்கொண்டு அவரின் பின்னால் செல்வார், (புஹாரி, மனாகிபுல் அன்ஸார், 3905)
இவ்வாறு வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய மூன்று இரவுகள் கடந்தன, ஸவ்ர் குகையில் மூன்று நாட்கள் ஏன் தங்கினார்கள் என்றால் நபி (ஸல்) வெளியேறிவிட்டார்கள் என்ற தகவல் உறுதியானவுடன் மக்காவிலிருந்து செல்லும் எல்லா வழிகளிலும் ஆட்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள் , நபியை பிடித்து வருபவர்களுக்கு நூறு ஒட்டகங்கள் பரிசு என அறிவிப்பு செய்யப்பட்டது, எனவே தேடும் படலம் விரிவாக இருந்தது ,சிலர் அடிச்சுவடுகளை பார்த்து குகையின் வாயில் வரை கூட வந்துவிட்டார்கள், இருவரும் குகையில் இருக்க வெளியில் விரோதிகளின் நடமாட்டம் தெரிந்தது, ஹஜ்ரத் அபூ பக்ர் (ரலி) கூறினார்கள் “ யா ரஸுலல்லாஹ் ! அவர்கள் தம் பாதங்களை பார்த்தாலே போதும், நாம் குகைக்குள் இருப்பது தெரிந்து விடும்” என்று கூற நபியவர்கள் சொன்னார்கள். “கவலை படாதீர் அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் ” .அதே போல அல்லாஹ்வின் ஏற்பாடும் உதவியும் இருந்தது, சிலந்தி ஒன்று அங்கே வலை கட்ட ஆரம்பித்தது , அது அங்கே யாரும் இல்லை என்பதற்கு அடையாளமாகிப்போனது , இந்தளவு எதிரிகளால் அவர்கள் தேடப்பட்டார்கள், அந்த தேடும் வேட்டை ஓரளவு அடங்கட்டும் என்பதற்குத்தான் நபி (ஸல்) மூன்று இரவுகள் வரை அந்த குகையில் இருந்தார்கள்.
மூன்றாம் நாள் காலையில் அப்துல்லாஹ் இப்னு அரீகத் இரு ஒட்டகைகளுடன் வந்து விட்டார், ஒரு ஒட்டகத்தில் நபியும் மற்றொரு ஒட்டகத்தில் அபூ பக்ர் (ரலி) அவர்களும் அவர்களின் அடிமை ஆமிர் இப்னு புஹைராவும் அமர்ந்துகொண்டார்கள், மொத்தம் மூன்று ஒட்டகங்கள் மதீனாவை நோக்கி தன் பயணத்தை ஆரம்பித்தன , வழமையான பாதையில் செல்வது ஆபத்து என்பதால் கடற்கரையை ஒட்டிச் சென்ற பாதையில் அப்துல்லாஹ் இப்னு அரீகத் , அவர்களை அழைத்துச் சென்றார், இன்னொரு புறம் நபியை தேடும்படலும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது ,சுராகத்துப்னு மாலிக் என்பவர் , ஒருவர் கடற்கரை சாலையில் சிலரை பார்த்த செய்தியை கூற கேட்டதும் அது நபியாகத்தான் இருக்க வேண்டுமென ஈட்டியோடு குதிரை மீதேறி விரைந்து வந்தார், இந்த கூட்டத்தை நெருங்கியும் விட்டார், நபி (ஸல்) பத்துஆ செய்தார்கள் , அதனால் அவருடைய குதிரையின் முன்னங்கால்கள் பூமியில் சொருகிக்கொண்டன, அவர் மன்றாடி நபியிடம் மன்னிப்பு கேட்டார், நபியவர்கள் மீண்டும் துஆ செய்ததும் குதிரையின் கால் வெளிபட்டது , பின்னர் அவர் மக்காவுக்கே திரும்பி சென்று விட்டார் , நபியவர்களின் பயணம் தொடர்ந்தது,
இடையில் உம்மு மஃபத் எனும் பெண்மனியை சந்தித்தார்கள், அவர்களிடன் கூடாரமருகே ஓர் மெலிந்த ஆடு ஒன்று நின்று கொண்டிருந்தது, நபியவர்கள் அப்பெண்மனியிடம் ஆட்டு பால் கேட்க அவர் அந்த மெலிந்த ஆட்டில் எப்படி பால் கறக்க முடியும் ? என்று கேட்டார் , நபி (ஸல்) அவரிடம் அனுமதி பெற்று அதன் மடுவை இழுத்தார்கள், 7, 8 பேர் வரை பால் அருந்தும் அளவுக்கு ஓர் பாத்திரம் நிரம்ப பால் வந்தது. அங்கிருந்த யாவரும் அப்பாலை வயிறு நிரம்ப அருந்தினார்கள், பின்பு மீண்டும் அப்பாத்திரம் நிரம்ப பால் கறந்து அப்பெண்மனியிடம் தந்துவிட்டு பிரயாணத்தை தொடர்ந்தார்கள்,
இறுதியாக இக்கூட்டம் மதீனாவின் எல்லையை அடைந்த போது புரைதா என்பவர் 70 பேருடன் நபியை பிடிக்க வந்தார், ஆனால் அவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு நபியுடன் சேர்ந்து மதீனாவுக்குள் நுழைந்தார், நபி(ஸல்) இன்னும் சில நாட்களில் மதீனா வரயிருக்கிறார்கள் எனும் செய்தி கேட்டு மதீனா வாசிகள் தினமும் மதீனா வரும் பாதையில் காத்து நிற்பார்கள், மதியமானதும் திரும்பிவிடுவார்கள், இவ்வாறு ஒரு நாள் காத்திருந்து திரும்ப எண்ணியபோது ஓர் யூதர் இதோ , நீங்கள் எதிர்பார்த்தவர் வந்துவிட்டார், என சப்தமிட்டார், ரபீவுல் அவ்வல் 8 ந்தேதி இந்த கூட்டம் குபா சென்றடைந்தது,
மதீனாவிலிருந்து 3 கி.மீ தொலைவில் குபா அமைந்துள்ளது, அங்கே தனது புனித கரங்களால் ஓர் பள்ளிக்கு நபியவர்கள் அடிகல் நாட்டினார்கள், அங்கே 14 நாட்கள் நபியவர்கள் தங்கினார்கள், குபாவிலிருந்து புறப்பட்ட போது வழியில் ஜும்ஆவுடைய நேரம் வந்து விட்டது , எனவே அங்கே ரானூனா எனும் பள்ளத்தாக்கில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினார்கள் , அங்கேயும் ஓர் பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார்கள், அதுவே பிற்காலத்தில் மஸ்ஜிது ஜும்ஆ என அழைக்கப்பட்டது , பின்பு நபி (ஸல்) மதீனாவுக்கு பயணப்பட்டார்கள். மதீனாவில் யாவரும் நபி (ஸல்) தன் வீட்டில் தங்குவார்கள் என எதிர்பார்த்தார்கள்,ஆனால் நபியவர்கள் தன் ஒட்டகம் எங்கே சென்று அமருமோ அதுவே தான் தங்கபோகும் இடம் என்றார்கள்.ஒட்டகம் ஹஜ்ரத் அபூ அய்யூப் அன்சாரி (ரலி) வீட்டில் சென்று அமர்ந்தது, மஸ்ஜிதுந்நபவீயும், நபியவர்களின் மனைவியர்களுக்கான அறைகளும் கட்டப்படும் வரை நபியவர்கள் அவர்களிடமே தங்கியிருந்தார்கள் , பின்னர் அங்கே தம் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார்கள், இவ்வாறாக நபியவர்கள் மக்காவை விட்டு வந்து மதீனாவில் தம் புனித பணியை துவங்கினார்கள் ,
இத்தகைய ஹிஜ்ரத்தின் காரணமாக இஸ்லாமிய வரலாற்றில் முக்கியமான சில மாற்றங்கள் நிகழ்ந்தன, முஸ்லிம்கள் தம்மை தற்காத்துக்கொள்வதற்கான ஓர் இடத்தை தகவமைத்துக்கொண்டார்கள் , இஸ்லாத்தை பகிரங்கமாக கூறுவதற்கான வாய்ப்பு அமைந்து விட்டது , முதல் இஸ்லாமிய அரசு உருவாகி விட்டது , ஷாமுக்கு வியாபாரத்திற்காக செல்லும் குரைஷி கூட்டங்களுக்கு முஸ்லிம்களால் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுப்போனது , இத்தகைய மாபெரும் நிகழ்வுகள் நடந்தேறிய ஒரு பயணம்தான் ஹிஜ்ரத்துடைய பயணம் , என் நினைவுகள் முழுக்க இந்த நிகழ்வுகளே சுற்றி சுற்றி வந்தன,
சிறிது நேரத்திலேயே பாலைவனங்கள் எங்களை எதிர்கொண்டன, சாலைகள் அமைக்கும் பாதையில் எதிரிலே மலைகளே வந்தாலும் அவற்றையும் துளையிட்டு பாதைகள் அமைத்திருந்தார்கள், வாழ்க்கையில் எத்தனை பெரிய தடைகள் வந்தாலும் அதை நெஞ்சுரத்தோடு எதிர் கொள்ள வேண்டும் என்ற நபியவர்களின் வாழ்வுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அது எனக்கு விளங்கியது , இப்போது உலகத்தரம் வாய்ந்த மூன்று வழி சாலைகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் மின்னலைப்போன்று விரைந்து கொண்டுள்ளன, ஆனால் அன்று சரியான பாதை இல்லை, பாதையின் இருமருங்கிலும் இன்றிருப்பது போல மின் விளக்குகளின் வெளிச்சம் இல்லை, உயிருக்கும் , உடமைக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை , நபியின் ஹிஜ்ரத்துடைய பயணம் இவைகளுக்கு மத்தியில்தான் நடந்தேறியது , மார்க்கத்தை பாதுகாப்பதற்காக இத்தகு தியாகங்களை நபியவர்கள் மேற்கொண்டார்கள் ,யாஅல்லாஹ் அவர்களின் மீது எல்லையில்லாமல் உனது அருளை பொழிவாயாக.
பஸ்ஸை வழியில் நிறுத்துவது பிறவாகனங்களுக்காக ஒதுங்குவது, ஸ்பீடுபிரேகருக்காக பிரேக் போடுவது என்று எதுவும் இல்லாமல் , புறப்பட்டது முதல் 100 கி.மீ வேகத்தை விட குறையாமல் பஸ் ஓடிக்கொண்டே இருந்தது , மக்காவிலிருந்து மதீனா செல்லும் பாதையில் ஆங்காங்கே ஊர்களின் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன ,
நபியின் தாய் , தந்தையரின் அடக்கஸ்தலங்கள்
அவற்றில் ஒன்று ஜுஹ்பா என்ற ஊர் அடுத்து வருவதாக கூறியது , ஜுஹ்பா என்றதும் இங்கிருந்து 23 மைல் தொலைவில் உள்ள அப்வா எனும் இடம்தான் நினைவுக்கு வந்தது , இன்று அதை ( خريبة ) கரீபா என்றும் கூறப்படுகிறது, அப்வாவில் நுழைந்ததுமே வலது திசையில் உள்ள ஒரு சிறிய மலை மீது பெருமானார் (ஸல்) அவர்களின் தாயார் ஆமினா அம்மையாரின் கப்ரு இருக்கிறது ,(ஆதாரம் ,அட்லஸ் சீரத்துன்னபவீ , டாக்டர் ஷவ்கீ அபூ கலீல் , பக்கம் 84) அதன் நான்கு புறமும் கற்கள் வைக்கப்பட்டிருப்பதால் தூரத்திலிருந்தே அதை காண முடிகிறது , நபியவர்கள் ஆறு வயது சிறுவராக இருந்த போது அம்மையார் நபியை தூக்கிக்கொண்டு மதீனாவிலுள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார், அங்கிருந்து மக்கா திரும்பும் போதுதான் மரணம் அவர்களை தழுவுகிறது , அப்போது அவர்களின் வயது 30 தான், அங்கேயே அடக்கம் செய்யப்படுகிறார்கள் , பின்னர் அவர்களுடன் இருந்த அடிமை உம்மு அய்மன் ( ரலி) நபியவர்களை தூக்கிக்கொண்டு மக்கா வந்து சேருகின்றார்,ஆறு வயது சிறுவராக இருந்தபோது தன் தாயாரை யாருமில்லாத இந்த இடத்தில் இழந்து அங்கேயே தாயாரை அடக்கம் செய்து விட்டு நகரும் நபியவர்கள் சிறு பிராயத்திலேயே எத்தனை பெரும் துன்பங்களை சந்தித்துள்ளார்கள் ? என்பதை நினைக்கும் போது இப்போதும் கண்களில் கண்ணீர் சொறிகின்றது ,
இதே போல நபியவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது அவர்களின் தந்தை அப்துல்லாஹ் வியாபாரத்திற்காக ஷாம் புறப்பட்டு செல்கிறார் , மக்கா திரும்புகின்ற வழியில் மதீனாவில் வந்து தங்குகின்றார், உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார், செய்தி கேள்விப்பட்டு மக்காவிலிருந்து அப்துல் முத்தலிப் தனது மூத்த மகன் ஹாரிஸை மதீனா அனுப்பி வைக்கிறார், ஹாரிஸ் மதீனா வருவதற்குள் அப்துல்லாஹ் மரணமடைந்து விடுகிறார், அவரின் உடல் தாருந்நாபிகா எனும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது , ,(ஆதாரம் ,அட்லஸ் சீரத்துன்னபவீ , டாக்டர் ஷவ்கீ அபூ கலீல் , பக்கம் 84) அந்நேரத்தில் அவருக்கு வெறும் 25 வயதுதான் ஆகியிருந்தது,இன்னும் சிலர் 28 வயது என குறிப்பிட்டுள்ளார்கள் , அப்போது நபியவர்கள் தாயின் வயிற்றில் இரண்டு மாத சிசுவாக இருந்தார்கள் , இவ்வாறு சிறு பிராயத்திலேயே தாயையும், தந்தையையும் இழந்த ஓர் அநாதை சிறுவர்தான் பிற்காலத்தில் உலகமே கண்டு வியக்கும் பெரும் வெற்றியை அடைந்த மாமனிதராக திகழ்ந்தார்,
இடையில் மக்ரிப் தொழுகைக்காக சாலையோரம் அமைந்த ஓர் பள்ளியை ஒட்டி பஸ்ஸை ஓட்டுனர் நிறுத்தினார், நாங்கள் யாவரும் இறங்கி ஒழுசெய்து விட்டு மக்ரிப் தொழுதோம், பள்ளியில் தொழுகை முடிந்திருந்தது, இரண்டாவதாக நடந்துகொண்டிருந்த ஒரு ஜமாஅத்தில்தான் நாங்கள் கலந்து கொண்டோம், பெண்களுக்காக தொழுமிடமும் தனியாக இருந்தது, தொழுததும் தேநீர் அருந்துவதற்கு வாய்ப்புள்ளதா என தேடினோம், தூரத்தில் ஒரு கடை இருப்பது போல் தெரிந்தது, அருகில் நெருங்கியதும்தான் அது பூட்டப்பட்டிருப்பது தெரிந்தது, எனவே எங்களின் பிரயாணம் தொடர்ந்தது ,
மணி 7.30 தை நெருங்கிக்கொண்டிருந்தது , மதீனாவை அடையும் வரை தூங்கக்கூடாது என முயற்சித்தேன், ஆனால் என்னை மீறி தூக்கம் என்னை ஆட்கொண்டது, விழித்துப்பார்த்த போது மதீனாவின் எல்லைகள் ஆரம்பித்ததை உணர்ந்தேன்,
மதீனா மாநகரம்
மதீனா எத்தனை பிரியமான பெயர் இது , இதன் முழு பெயர் மதீனத்துன்னபீ நபியின் நகரம் என்பதாகும் , இப்பெயரை சுருக்கித்தான் மதீனா என்கிறார்கள், உலகின் வேறு எந்த ஊரையும் ஒரு நபியின் பெயரோடு இணைத்து கூற நான் கேள்விப்பட்டதில்லை, இதன் ஆரம்ப பெயர் யஸ்ரிப் என்று இருந்தது, நபியின் வருகைக்குப்பின் அதன் பெயரே மாறிப்போனது , இது மக்காவிலிருந்து 300 மைல் தொலைவில் உள்ளது, நபியவர்களின் வருகைக்கு முன் இங்கே யூத கூட்டங்களும் , கிறிஸ்தவர்களும், அவ்ஸ்,கஸ்ரஜ் எனும் இரு பெரும் கோத்திரத்தார்களும் வசித்து வந்தார்கள், நபியவர்கள் மதீனா வந்தவுடன் இக்கூட்டங்களுக்கிடையே அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டார்கள், மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்த முஸ்லிம்களை முஹாஜிர்கள் என்றும் , மதீனாவில் இருந்த முஸ்லிம்களை அன்ஸாரிகள் என்றும் கூறப்படும் , குடும்பம், கோத்திரம் , வீடு , வாசல் யாவற்றையும் இழந்து வந்த முஹாஜிர்களுக்கும் , அன்ஸாரிகளுக்கும் மத்தியில் நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை ஏற்படுத்திக்கொடுத்தார்கள் , மதீனா வந்த பின் ஜமாத்துடன் தொழுகை , மற்றும் பாங்குடைய கட்டளை வந்தது , இங்கு நபியவர்கள் கட்டிய பள்ளியையே மஸ்ஜிதுந்நபவீ என்று அறியப்படுகிறது , மதீனாவில் இஸ்லாத்திற்கு உயர்வும், மதிப்பும் ஏற்பட்டது , ஜிஹாதிற்கான அனுமதி கிடைத்தது , நோன்பு, ஜகாத், ஹஜ், திருமணம், விவாகரத்து, அடிமைகள், கைதிகள், குற்றவியல் சட்டங்கள், குறித்த சட்டங்களெல்லாம் இறங்கின,தீனுல் இஸ்லாம் அதன் உச்சத்தை அடைந்ததுஇங்குதான், இங்கேதான் பத்ரு, உஹத், கன்தக்வுடைய யுத்தங்கள் நடைபெற்றன, இங்கிருந்துதான் நபி (ஸல்) அவர்கள் அப்போதைய அரசர்களுக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார்கள் , மதீனாவிலிருந்துதான் நபித்தோழர்கள் ஜிஹாதுடைய துடிப்பில் , வீர மரணத்தின் ஆர்வத்தில் உலகையே வெற்றி கொள்ள நாலா திசைகளிலும் புறப்பட்டார்கள் ,
நபியவர்கள் உலகை விட்டு விடை பெற்ற பின் ஹிஜ்ரி 11 லிருந்து ஹிஜ்ரி 36 வரை மதீனாவே இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் தலைநகராக விளங்கியது , ஹஜ்ரத் உமர் (ரலி) இங்கே பைத்துல் மாலை ஸ்தாபனம் செய்தார்கள், மஸ்ஜிதுந்நபவீயை விஸ்தீரணம் செய்தார்கள், மக்காவிலிருந்து மதீனா வரை கடைவீதிகள், நீர்தடாகங்களை அமைத்தார்கள், ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களும் மஸ்ஜிதுந்நபவீயை அழகுபடுத்தியதோடு ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் காலத்தில் திரட்டப்பட்ட குர்ஆனை பிரதி எடுத்து மதீனாவிலிருந்து பிற இஸ்லாமிய தேசங்களுக்கு அனுப்பி வைத்தார்கள்,
ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் ஜமல் யுத்தத்திலிருந்து திரும்பிய பின் மதீனாவிலிருந்த தலைநகரை கூபாவுக்கு மாற்றிக்கொண்டார்கள், ஹஜ்ரத் அலீ (ரலி) மறைவுக்குப்பின் ஹஜ்ரத் ஹசன் (ரலி) அவர்கள் ஹஜ்ரத் அமீர் முஆவியா (ரலி) அவர்களுடன் சமாதானம் செய்து கொண்டு தனது பதவியை விட்டு விலகினார்கள், இதனால் ஹஜ்ரத் முஆவியா (ரலி) இருந்து வந்த திமிஷ்க் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் மூன்றாவது தலை நகராக மாறியது , இவ்வாறாக மதீனா அரசின் தலைநகர் எனும் பெயரை இழந்தது, என்றாலும் இன்றளவிலும் இல்முடைய தலை நகராக மதீனாவே திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது , பதவியை விட்டு விலகிய பின் ஹஜ்ரத் ஹஸன் (ரலி) அவர்கள் மதீனா வந்துவிட்டார்கள், மதீனாவில்தான் நபி (ஸல்) , முதல் மூன்று கலீபாக்கள் , மற்றும் அதிகமான ஸஹாபாக்கள், ஸஹாபி பெண்மனிகள், இமாம் மாலிக் (ரஹ்) போன்ற தாபிஈன்கள், தபவுத்தாபியீன்களின் அடக்கஸ்தலங்களெல்லாம் அமைந்துள்ளன , ,(ஆதாரம் ,அட்லஸ் சீரத்துன்னபவீ , டாக்டர் ஷவ்கீ அபூ கலீல் , பக்கம் 157 )
இவ்வாறாக மதீனா குறித்த பல்வேறு நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக உள்ளத்திலே வந்து சென்றன , பிரியமான மதீனாவை காணப்போகிறேன் என்ற குதூகலம் தூக்கத்தை பறக்கடித்தது , கடிகாரம் இரவு 10 மணி என காட்டியது, எனவே இனி இஷா தொழுகை மஸ்ஜிதுந்நபவீயில் தொழுவது சாத்தியமில்லை , ஆதலால் ஹோட்டல் அறைகளிலேயே தொழுதுகொள்ளுங்கள் என்று எங்களின் வழிகாட்டி பஸ்ஸிலேயே அறிவிப்பு செய்துவிட்டார்,
இதோ மதீனாவை அடைந்து விட்டோம் , தூரத்திலிருந்தே மஸ்ஜிதுந்நபவீயின் ஒளிமயமான மினாராக்கள் ஜொலிப்பது தெரிகிறது , புகைப்படங்களில் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த மினாராக்கள் கண்களுக்கு முன்னால் தெரிவது ஏதோ கனவு போல் தோன்றியது , சிறிது நேரத்தில் எங்களின் வாகனம் நாங்கள் தங்கப்போகும் ஹோட்டல் வாசல் முன்னே கொண்டு சென்று எங்களை நிறுத்தியது ,
நாங்கள் இறங்கி ஹோட்டலை அடைந்தபோது இரவு உணவு தயாராக இருந்தது , உணவருந்தி விட்டு அறைக்கு வந்தோம் ,நாங்கள் மதீனாவில் தங்கியிருந்த ஹோட்டலின் பெயர் மஸ்ஜிதுந் நபவியை பார்ப்பதற்காக காலை வரை காத்திருக்கும் பொறுமை என்னிடம் இல்லை, எனவே மஸ்ஜிதுந் நபவியை நோக்கி கால்கள் தானாக நகர்ந்தன. மதீன மண்ணிலே முதன் முதலாக காலடி எடுத்து வைத்தேன் , மதீனா என்ற பெயரை கேட்டதுமே உள்ளத்தில் அச்சம் கலந்த மரியாதை பரவுகிறது, மக்காவின் சலசலப்பு இங்கே இல்லை, நபியவர்கள் உரங்குகிறார்கள்,ஓசை எழுப்பாதீர்கள் என்பதைபோல அதன் அமைதி அமைந்திருந்தது ,நடக்கையில் கால்களில் செருப்பு அணிந்திருந்தேன் , இங்கே எத்தனை மகான்களின் காலடித்தடங்கள் பட்டிருக்கும் ? அவ்விடங்களை செருப்பால் மிதிப்பதா என்ற சிந்தனை கால்களை விட்டு என்னை செருப்பை கழற்றச்செய்தது , ஓர் புது வகையான அச்சத்தோடு பள்ளியில் புகுந்தேன் ,
மஸ்ஜிதுந் நபவியில்...
மஸ்ஜிதுந்நபவீ , நபியின் பள்ளி என்ற பெயரே எத்தனை இனிமையானது , உலகிலுள்ள எல்லா பள்ளிகளும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளன, ஆனால் மஸ்ஜிதுந்நபவீ அளவுக்கு வேறு எந்த பள்ளியும் பங்காற்றியிருப்பதாக எனக்கு தெரிய வில்லை, வேறு எந்த தூதருக்கும் வாய்க்கப்பெறாத முத்தான தோழர்கள் நம்முடைய நபியவர்களுக்கு வாய்க்கப்பெற்றார்கள் , அவர்களை உலக அரங்கிலே வைரமாக ஜொலிக்கச்செய்ய, அவர்களை பட்டை தீட்டுவதற்காக நபியவர்கள் பயன்படுத்திய இடம் மஸ்ஜிதுந்நபவீயாகும் , இறைவனின் தூதரே தன் சொந்த பணத்தில் இடம் வாங்கி , தானே முன் நின்று கட்டிய மாபெரும் சிறப்பு மஸ்ஜிதுந்நபவீக்கு மட்டுமே உண்டு , மஸ்ஜிதுல்ஹராமிற்கு பிறகு அதிக நன்மைகளை தொழுபவர்களுக்கு தேடித்தரும் பள்ளி மஸ்ஜிதுந்நபவீயாகும், எல்லாவற்றிற்கும் மேல் நபியவர்களின் புனித உடல் அடங்கப்பட்டுள்ள இடத்தின் அருகாமை உலகிலேயே மஸ்ஜிதுந்நபவீக்கு மட்டுமே வாய்க்கப் பெற்றுள்ளது , அட்லஸ் சீரத்துன்னபீ வுடைய ஆசிரியர் கூறுகிறார் , நபி (ஸல்) அவர்கள் கைபர் யுத்தத்திற்குப்பின் மஸ்ஜிதுந் நபவீயையை விரிவாக்கம் செய்தார்கள், அதன் மொத்த பரப்பளவு 2500 சதுர மீட்டர் என தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள் , நபியவர்களைத்தொடர்ந்து இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் பதவியில் அமர்ந்த ஆட்சியாளர்கள் தம் தம் காலத்தில் மஸ்ஜிதுந்நபவீயை தேவைக்கு தகுந்தாற்போல் விரிவாக்கம் செய்து கொண்டே இருந்தார்கள்,
ஹிஜ்ரி 13 ம் நூற்றாண்டில் துருக்கி உஸ்மானிய பேரரசர்கள் மஸ்ஜிதுந்நபவீயை விரிவாக்கம் செய்ததில் மேற்கொண்ட செயல்பாடுகள் ஈமானிய உணர்வை தூண்டுவதாக அமைந்தது ,அதன் விபரம் யாதெனில் மஸ்ஜிதுந்நபவீயை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்ததும் அதற்காக தன் சாம்ராஜ்ஜியத்தின் கீழ் உட்பட்ட பகுதிகளில் கட்டிட கலையில் கைதேர்ந்த நிபுணர்கள் தேவை என பொது அறிவிப்பு செய்தார்கள் , அறிவிப்பு வந்ததுதான் தாமதம் பல கட்டிட கலை நிபுணர்கள் அரசிடம் குவிந்தார்கள் , அவர்கள் யாவரையும் , அவர்களின் குடும்பத்தார்களோடு குஸ்துன்துனியாவுக்கு வெளியே ஓர் நகரை உருவாக்கி அங்கே யாவரையும் தங்க வைக்கும் படி தன் அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டது , இதில் பல வருடங்கள் உருண்டோடின, அப்போதைய அரசர், உருவாக்கப்பட்ட அந்நகருக்கு வருகை தந்து அக்கலைஞர்களை திரட்டி அவர்கள் தம் குழந்தைகளில் புத்தி கூர்மையான குழந்தைக்கு தன் கலையை பயிற்றுவித்து அவர்களை அதில் மிளிர செய்ய வேண்டுமென வலியுறுத்தினார், அதற்கிடையில் துருக்கி பேரரசு அக்குழந்தைகளை குர்ஆன் மனனம் செய்ய வைத்து அவர்களை ஹாபிஸாகவும் உருவாக்கியது , குதிரையேற்றம் போன்ற திறமைகளையும் பயிற்றுவித்தது , உலகம் பார்த்திராத ஆச்சரியமிக்க இந்நடவடிக்கை பல வருடங்கள் தொடர்ந்தது, இதனால் சுமார் 25 வருடத்திற்குப்பிறகு தன் கலையில் கைதேர்ந்தவர்கள் என்பது மட்டுமல்லாது முழு குர்ஆனையும் மன்னம் செய்த , தீன் நெறி பட வாழும் ஆரோக்கியமிக்க ஓர் வாலிபர் கூட்டம் உருவாகியது , அவர்களின் எண்ணிக்கை சுமார் 500 க்கு நெருக்கமாக இருந்தது , இதற்கிடையில் துருக்கியர்கள் கற்களின் புதிய சுரங்கங்களை கண்டுபிடித்தார்கள், புதிய காடுகளிலிருந்து மரக்கட்டைகளை தயார் செய்தார்கள் , கட்டிட சாமான்கள் யாவும் மதீனாவுக்குள் கொண்டு செல்லப்படாமல் மதீனாவை விட்டு பல மைல் தூரத்தில் நகரம் ஒன்று உருவாக்கப்பட்டு அங்கே கொண்டு செல்லப்பட்டது , காரணம் கற்களை உடைப்பதில் , மரங்களை அறுப்பதில் ஏற்படும் ஓசை கூட நபியவர்கள் துயில் கொள்ளும் புனித பகுதியில் ஏற்படுத்தக்கூடாது என்பதுதான் , அதன் காரணமாக மரங்கள் அறுக்கப்பட்டு , கற்கள் செதுக்கப்பட்டு தயார் நிலையில் மஸ்ஜிதுந்நபவீக்கு கொண்டுவரப்படும் , அதில் மேலும் ஏதேனும் மாற்றங்கள் செய்ய நேரிட்டால் மீண்டும் அப்பகுதிக்கே திரும்ப கொண்டு செல்லப்பட்டு அங்கே வைத்துதான் அப்பணி மேற்கொள்ளப்படும் ,கலைஞர்கள் தம் பணியை துவங்கிய போது அவர்கள் தம் பணி நேரத்தில் ஒழுவுடன் இருக்க வேண்டுமெனவும், தொடர்ந்து குர்ஆனை ஓதிக்கொண்டிருக்கும் படியும் வலியுறுத்தப்பட்டார்கள், கட்டுமானம் மற்றும் விரிவாக்கப்பணி 15 வருடங்கள் தொடர்ந்தன , ஜமாத்தொழுகைக்கு இடைஞ்சல் ஏற்படாதவாறு பணி மேற்கொள்ளப்பட்டது , ரியாளுல் ஜன்னத்தை கட்டிய போது கட்டிடத்தை இடித்த தூசி கூட அப்பகுதியில் விழாதவாறு முகடுக்கும் , தரைக்கும் மத்தியில் தூண்களின் மீது மரக்கட்டைகள் பரப்பி வைக்கப்பட்டன, நபிமார்களின் தலைவர் துயில் கொள்ளும் அப்புனித பகுதி தூசிப்படாமல் இருப்பதற்காக அப்பகுதியை சுற்றிலும் துணி போர்த்தப்பட்டது , இத்தனை பேணுதலோடு அப்பணி மேற்கொள்ளப்பட்டது , இப்போதும் கூட பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள ஏர் கண்டிஷனின் பிளானட் பள்ளியை விட்டு ஏழு மைல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது அதன் காரணம் பள்ளியின் அமைதியும் , ரவ்ழாவின் கண்ணியமும் குலைந்து போகக்கூடாது என்பதினாலாகும் .(அட்லஸ் 162,163)
மஸ்ஜிதுந்நபவீயின் ஓர் சிறப்பு என்னவென்றால் அதிகமான ஸஹாபா பெருமக்களின் வீடுகளெல்லாம் இன்று மஸ்ஜிதுந்நபவீயின் எல்லைக்குள் வந்து விட்டன, நபியவர்களின் புனித அறைக்கு அருகே பள்ளியின் தென்கிழக்கு மூலையில் வெளி முற்றத்தில் நின்றால் அங்கேதான் நபியவர்கள் மதீனா வந்ததும் தங்கிய ஹஜ்ரத் அபூ ஐய்யூப் அன்ஸாரி (ரலி) அவர்களின் இல்லம் இருந்தது , ஹஜ்ரத் ஜஃபர் (ரலி) ,மற்றும் நபியவர்களின் சிறிய தந்தையான அப்பாஸ் (ரலி) அவர்களின் இல்லங்கள் பள்ளியின் தென் பகுதியில் இணைந்து விட்டன , ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களின் வீடு சவூதி அரசின் முதல் விரிவாக்கம் வரை விருந்தினர் பகுதியாக இருந்து வந்தது, அது இன்று கிழக்கு முற்றத்தின் பகுதியாகி விட்டது ,ஹஜ்ரத் அலீ (ரலி) , ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) ஆகியோரின் வீடுகளும் கிழக்கு பகுதியின் கீழ் வந்து விட்டன , ஹஜ்ரத் ஹாலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் வீடும் ரிபாத் ஹாலித் எனும் பெயருடன் சமீப காலம் வரை விருந்தினர் இல்லமாக இருந்து வந்தது , இப்போது அதுவும் கிழக்கு பகுதியில் சேர்ந்து விட்டன, ஹஜ்ரத் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்களின் வீடே தாரே குப்ரா பெரிய வீடு என்று கூறும் அளவுக்கு பெரிதாக இருந்தது , அதிலே நபியவர்கள் தம் விருந்தினர்களை தங்க வைப்பார்கள் , இப்போது அது பள்ளியின் வடக்கு பகுதியோடு சேர்ந்து விட்டது , பள்ளியின் மேற்கு பகுதியில் ஹஜ்ரத் உமர் (ரலி) , ஹஜ்ரத் ஜுபைர் இப்னு அவாம் (ரலி) , ஹஜ்ரத் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) , ஸகீனா பின்த் ஹுசைன் (ரலி) , ஹஜ்ரத் அம்மார் இப்னு யாஸிர் (ரலி) போன்ற பெரும் பெரும் நபித்தோழர்களின் வீடுகள் யாவும் வந்து விட்டன . مسجد نبوي كي بهار محمد اظهار الحق اردو د ايجست نومبر 2003
اطلس سيرة نبوي 163-165
பைருஹா கிணறு
இந்தளவுக்கு கண்ணியமும், மதிப்பும் நிறைந்த பள்ளியில், அப்பள்ளியின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இச்சிறியோனை அல்லாஹ் பிரவேசிக்கச்செய்தான் , அந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் .
யா அல்லாஹ் ! இத்தனை சிறப்புமிக்க கண்ணியம் நிறைந்த பள்ளியில் அசுத்ததின் மறு உருவான நான் என்னை சுத்தப்படுத்திக்கொள்வதற்காக நுழைகிறேன் ,இப்பள்ளியின் பொருட்டால் என்னை சுத்தப்படுத்துவாயாக, என்னுடைய அசுத்தம் இப்புனித பள்ளியின் புனிதத்தை சீர்குலைக்காமல் காப்பாயாக என்று அப்பள்ளி என்னை பிரார்த்திக்க வைத்தது,
அங்கேயே ஒழு செய்து விட்டு அதன் வராந்தாவில் நடந்தேன் , பள்ளி பூட்டப்பட்டிருந்தது , பள்ளியின் வராந்தாவில் இன்னும் மக்கள் தெரிந்தார்கள் , பள்ளியின் சுவரை ஒட்டி இஷா தொழுது விட்டு வெளியே வந்தேன், நபித்தோழர்கள் நெற்றி வைத்த இடத்தில் அல்லாஹ் எனது நெற்றியையும் வைக்கச்செய்தானே என்ற மன நிறைவு உள்ளத்தில் நிரம்பி இருந்தது .
ரவ்ழா எங்கே அமைந்துள்ளது என்பது எனக்கு தெரியாது , சற்று பள்ளியை சுற்றி வந்திருந்தால் தெரிந்திருக்க வாய்ப்பிருந்த போதும், ரவ்ழா எப்போதும் திறந்துதான் இருக்கும் என எங்களின் வழிகாட்டி கூறியிருந்தும், மதீனாவுக்கு வந்தபின் குளித்துவிட்டு சென்று , பள்ளி காணிக்கை தொழுது , பின்பு நபியவர்களின் புனித ரவ்ழாவுடைய ஜியாரத்திற்கு செல்லவேண்டும் என ஒழுக்கத்தில் படித்துள்ளேன், மணி இரவு 11.30 தை தாண்டி விட்டதால் குளிக்க சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை, கசங்கிய, அழுக்கான, களைத்த, உடலுடன் ரவ்ழாவுக்கு செல்ல தயங்கினேன் , ரவ்ழாவுக்கு செல்வதற்கான மேற்கண்ட ஒழுக்கங்களை மீறவும் என் மனம் முன் வரவில்லை , எனவே அறைக்கே திரும்பிவிட்டேன்.
ரவ்ழா ஷரீஃபில்…
காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து விட்டு புத்தாடை அணிந்து, என்னுடைய தாயாரையும் அழைத்துக்கொண்டு சுப்ஹு தொழுகைக்கு சென்றேன், நாங்கள் ஹரம் ஷரீஃபை அடைவதற்குள் ஹரமில் தொழுகை ஆரம்பித்து விட்டது , பெண்கள் பகுதியில் எனது தாயாரை விட்டு விட்டு ஆண்களோடு ஸஃப்பில் சேர்ந்து கொண்டேன், தொழுகை முடிந்ததும் தாயாரை ஜியாரத்திற்கு அழைத்துச்செல்ல வில்லை , பெண்கள் ஜியாரத் செய்வதற்கென ஒரு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது , அந்நேரத்தில் தாயாரை அழைத்து செல்ல்லாம் என்ற நோக்கில் தாயாரை பெண்கள் பகுதியிலேயே காத்திருக்க சொல்லி விட்டு நான் மட்டும் பள்ளியினுள் புகுந்தேன் ,
பள்ளியின் தூண்கள் நேர்வரிசையில், அச்சு பிசகாமல் ஒரேமாதிரியாக அமைக்கப்பட்டிருந்த விதம் பள்ளியின் அழகை மேலும் கூட்டியது , வலப்புறமும், இடப்புறமும், கண்ணுக்கெட்டிய தூரம்வரை தூண்களின் வரிசைகள் நீண்டுக்கிடந்தன, நான் கிப்லாபக்கமாக சற்று முன்னேறியபோது பச்சை நிற சுவர்கள் கண்களுக்கு பட்டன , புகைப்படங்களில் ரவ்ழாவைப்பார்த்த காட்சி ஞாபகத்திற்கு வந்தது , நான் அதை நோக்கி முன்னேறியபோது ஓர் தடுப்பு மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது , உள்ளே செல்ல வழிதேடிய போது பள்ளியின் வெளிபுறத்திலிருந்து வலப்புறமாகத்தான் உள்ளே செல்ல வழியுண்டு என்பதை அறிந்து கொண்டேன் ,
ரவ்ழத்துல் ஜன்னாவில் செல்ல தனியாகவும், ஜியாரத்திற்கு செல்ல தனியாகவும் வரிசை நின்றது , இரண்டுக்கும் மத்தியிலும் வெள்ளை நிற பிளாஸ்டிக் தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது , சலாம் வாசல் வழியாக சென்றால் ஜியாரத்திற்கும் , சித்தீக் வாசல் வழியாக சென்றால் ரவ்ழாவுக்கும் செல்லலாம், ரவ்ழாவிற்கு செல்வதற்காக நின்ற வரிசையில் நான் சேர்ந்துக்கொண்டேன் , எனது கண்களில்
هذه خوخة ابى بكر صديق இது ஹஜ்ரத் அபூ பக்ர் (ரலி) அவர்களுக்காக உள்ள வாசல் என்ற வாசகம் பட்டது , இதற்கு ஒரு வரலாறே இருக்கிறது .
அபூபக்ர் ரலி வாசல்
நபி ஸல் அவர்கள் தனது மரண படுக்கையில் நோய் வாயப்பட்டிருந்த தருணம் அது , ஒரு நாள் தனது வீட்டை விட்டு வெளியே வந்தார்கள், நபியின் தலையில் கட்டு போடப்பட்டிருந்தது, வந்தவர்கள் மிம்பரின் மீது ஏறி அமர்ந்தார்கள் , அல்லாஹ்வை புகழ்ந்த பின் தனது உரையை ஆரம்பித்தார்கள் , அந்த உரையில் நபியவர்கள் சொன்ன ஓர் பொன் மொழி யாதெனில் தனது உயிராலும் , பொருளாலும் எனக்கு அதிகம் உபகாரம் புரிந்தவர் அபூபக்ரை விட வேறு யாரும் இருக்க முடியாது , நான் எனது நேசராக மனிதர்களில் யாரையேனும் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் அபூபக்ரை தேர்ந்தெடுத்திருப்பேன் என அபூபக்ர் (ரலி) அவர்களின் சிறப்பை வெளிப்படுத்திய நபியவர்கள் கியாமத் வரை அவர்களின் சிறப்பை உலகம் பேச வேண்டும் என்பதற்காக அடுத்து சொன்னார்கள் , பள்ளிக்குள் வருவதற்காக ஆங்காங்கே பல வாசல்கள் திறந்துள்ளன, அந்த எல்லா வாசல்களையும் அடைத்து விட்டு அபூ பக்ர் (ரலி) அவர்களின் வாசலை மட்டும் விட்டு வைய்யுங்கள் , அபூபக்ர் அந்தளவிற்கு மேன்மைக்குறியவர் என்பதை பிரகடப்படுத்தினார்கள், அதன் படி பள்ளி சீரமைக்கப்பட்ட போது எல்லா வாயில்களும் அடைக்கப்பட்டன, அபூபக்ர் (ரலி) அவர்கள் வரும் வாயில் மட்டும் விட்டு வைக்கப்பட்டது , இன்றளவிலும்
هذه خوخة ابى بكر صديق இது அபூபக்ர் (ரலி) அவர்களின் வாயில் என்ற பெயரோடு மஸ்ஜிதுந்நபவீயில் அந்த வாயில் தொடருகிறது , அபூபக்ர் (ரலி) அவர்களின் சிறப்பை கூறும் அந்த சரித்திரம் என் நினைவுக்கு வந்தது . அந்த வாசல் இதுதான் என்பதை எண்ணியபோது மெய் சிலிர்த்தது ,
இவ்வாறு மஸ்ஜிதுந்நபவீயில் பொறிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் வைத்து ஒவ்வொரு அடிக்கும் ஒரு சரித்திரத்தை கூறிக்கொண்டே போகலாம், அந்தளவிற்கு எண்ணிலடங்காத சரித்திரங்களை கொண்ட ஓர் புனித பள்ளியாகும் மஸ்ஜிதுந்நபவீ .
வரிசை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தது , நான் சில தூண்களை கடந்ததும் எனது பார்வை ஒரு தூண் மீது பட்டது , அதில் هذه حد مسجد النبى عليه وسلم இதுதான் நபி (ஸல் ) அவர்கள் கட்டிய பள்ளியின் எல்லை என்ற வாசகம் பொரிக்கப்பட்டிருந்தது, இவ்வாறு வடக்கு நோக்கி 10,11 தூண்கள்வரை இருந்ததைப்பார்த்தேன், நபியவர்களின் இப்பள்ளியின் எல்லை போக மீத பள்ளி கலீபாக்களாலும் , அரசர்களாலும் விரிவுப்படுத்தப்பட்டவையாகும், பின்னர் ஓர் சந்தர்ப்பத்தில் அங்குள்ள ஒரு ஆலிமிடம் கேட்டேன், நபியின் பள்ளி 100×100 என்ற அளவில் இருந்தது என தெரிவித்தார்,
பள்ளியின் அந்த குறிப்பிட்ட எல்லைக்குள் இறைவனின் நல்லடியார்கள் ஈசல்களைப்போல மொய்த்துக்கொண்டிருந்தார்கள் , சிலர் அதன் சுவர்களில் சாய்ந்து கொண்டும், சிலர் கிப்லாவை முன்னோக்கி அமர்ந்து குர்ஆன் ஓதிக்கொண்டும், திக்ர் செய்து கொண்டும் இருக்கக் கண்டேன், சிலர் குர்ஆனை கற்றுக்கொடுத்துக்கொண்டும், பிறர் ஓதுவதை கேட்டுக்கொண்டும் இருந்தார்கள், உள்ளத்திற்கு இதமளித்த உன்னதமான காட்சிகள் அவை , இச்சூழல்களை ஏற்படுத்துவதற்குத்தான் திருநபி (ஸல்) அவர்கள் தம் இருபத்துமூன்றாண்டு கால உழைப்பை விலையாக தந்தார்கள் , இதே சூழல்கள் உலகின் எல்லா பள்ளிகளுக்கும் ஏற்பட வேண்டும் என விரும்பினார்கள் , அல்லாஹுத்தஆலா இதே காட்சிகளை கியாமத் நாள் வரை நீடித்து இருக்கச்செய்வானாக, இக்காட்சிகளோடு எனது வரிசை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருந்தது,
நபியவர்களின் ரவ்ழாவை அடைவதற்கு முன் இரண்டு மிஹ்ராபுகள் வருகின்றன. இரண்டு மிஹ்ராபுகள் எதற்கு என எனக்கு புரியவில்லை. பிறகுதான் அங்குள்ள ஒரு ஆலிமிடம் கேட்டபோது அவர் சொன்னார் , முதலில் உள்ள மிஹ்ராப் உஸ்மானிய பேரரசின் ஓர் அரசர் வைத்தது என்றும், இரண்டாவது மிஹ்ராப்தான் நபி (ஸல்) அவர்களின் மிஹ்ராப், அதன் வலது புறத்தில் நபி (ஸல்) வுடைய மிம்பர் வைக்கப்பட்டிருந்தது, மேலும் இப்பகுதியின் கட்டிட கலையும் பிற பகுதிகளை விட்டு வித்தியாசப்பட்டிருந்தது , அது துருக்கியர்களின் காலத்து கட்டிடங்களாக இருக்கக்கூடும், அங்கே ஆங்காங்கே எழுதப்பட்டிருந்த அரபி வாசகங்களும் வித்தியாசமாக என்னால் படிக்க முடியாத அளவுக்கு ஒரு வடிவில் எழுதப்பட்டிருந்தன, அவற்றை நான் படிக்க முயற்சித்தும் என்னால் இயலவில்லை.
நான் ரவ்ழாவை நெருங்கிவிட்டேன், எனது நீண்ட பயணத்தின் இரண்டாவது முக்கிய நோக்கம் அது ,ஒவ்வொரு துஆக்களிலும் இடை விடாமல் இறைவனிடம் கேட்டுப்பெற்ற பாக்கியம் அது , ஒவ்வொரு முஸ்லிமும் இச்சந்தர்ப்பத்திற்காக எவ்வளவு ஏங்கியிருப்பார், ஒரு கவிஞரின் வரிகள் மனதில் வந்து போனது ,
ہم نے ما نا کہ جنت بہت ہے حسیں جھوڑ کر ہم مدینہ نہ جائین کہیں
يوں تو جنت میں سب ہے مدینہ نہيں اور جنت مدينہ ميں موجود ہے
சுவனம் அழகு நிறைந்த பிரதேசம் என்பது உண்மைதான் , இருப்பினும் மதீனாவை விட்டு நாங்கள் எங்கும் செல்ல தயாரில்லை , ஏனெனில் சுவனத்தில் எல்லாம் இருக்கிறது , மதீனா இல்லை , ஆனால் அந்த சுவர்க்கமே மதீனாவில்தான் இருக்கிறது ,
என்று இப்பகுதியை சுவனப்பிரதேசங்களோடு ஒப்பிட்டு அக்கவிஞர் படித்த வரிகள் மட்டுமே இப்போது நான் பார்த்த அந்த காட்சிகள் குறித்து கூற முடிகிறது , அதற்கு மேல் அதனை விவரிக்க வார்த்தைகள் இல்லை , இரு லோகத்தின் தலைவர் , இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவர், உலகத்தலைவர்கள் யாவரும் அவர்களின் உச்சத்தை அண்ணார்ந்து மட்டுமே பார்க்க முடிந்தவர்கள் , நற்குணத்தின் மொத்த உருவமாக உலகில் வந்து உதித்தவர்கள் , எல்லாம் வல்ல இறைவனுக்குப்பிறகு முழு உலக முஸ்லிம்களால் மதிக்கப்படுபவர்கள் , திருநபி முஹம்மதுர்ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் துயில் கொள்ளும் புனித இடம் இதோ என் கண்களுக்கு முன்னால் காண்கிறேன், என்னால் நிலை கொள்ள முடியவில்லை, ஒரு நிமிடம் என்னையே மறந்தேன் , யாராவது எனது கப்ருக்கருகில் வந்து எனக்கு ஸலாம் கூறினால் அவருக்கு நான் பதில் கூறுகிறேன் என்ற நபியவர்களின் பொன்மொழி நினைவுக்கு வர , பாவம் நிறைந்த கண்களோடும் , உறுப்புகளோடும் நின்று கொண்டிருந்த எனது ஸலாமுக்கு கூட நபியவர்கள் பதில் தருகிறார்களே , அதன் மூலம் நபியவர்களுடன் நான் பேசுகின்றேனா என்ற எண்ணம் என்னை நிலை தடுமாறச்செய்தது ,அப்போது
அண்ணல் நபி பொன் முகத்தை கண்கள் தேடுதே
அந்த ஆவலினால் காவலின்றி இதயம் வாடுதே
நீர் இருக்கும் தாமரை போல் நெஞ்சம் ததும்புதே
அண்ணல் நேசத்திற்கும் பாசத்திற்கும்
தாயிப் நகரின் கல்லடிகள் தந்த தலும்பிலே
இமைகள் தழுவதற்கும் அழுவதற்கும் கண்ணீர் பொங்குதே
கஸ்தூரி மனம் கமழும் தங்கள் மேனியை
இந்த கண்களாலே பருகுகின்ற ஆவல் ததும்புதே
புஷ்பங்களின் மகரந்தமாம் மதீனப் புழுதியில்
நான் புரள வேண்டும் உருள வேண்டும் போலிருக்கிறதே
என்ற இஸ்லாமிய கவிஞர் நாகூர் ஹனீபாவின் வார்த்தைகளே என் உள்ளத்தின் உணர்வுகளாக ஆர்ப்பரித்தன , இதுதான் அன்பின் வெளிபாடாக இருக்க முடியும் , ஆனால் மார்க்கத்தின் வரம்புகள் என்னை கட்டிப்போட்டன, நபியவர்களின் மீது கொண்டுள்ள பாசத்தை மேற்கண்ட வரிகளில் வெளிப்படுத்துவதை விட அவர்களின் மேலான சுன்னத்துகளை தீவிரமாக பின்பற்றுவதில்தான் வெளிப்படுத்த வேண்டும் என்பதே நபித்தோழர்களின் சரித்திரங்களிலிருந்து நான் பெற்ற பாடம் , அல்லாஹ் அப்படிப்பட்ட பாக்கியத்தை எனக்கு நஸீபாக்குவானாக , எனவே நான் அங்கே வரம்பேதும் மீற வில்லை,
الدرر الثمينة في اخبار المدينة என்ற நூலிலே நூலாசிரியர் குறிப்பிடுகிறார் , ஆரம்பத்தில் நபியவர்களின் புனித ரவ்ழா , பள்ளியின் எல்லைக்கு வெளியே இருந்த வரை முஸ்லிம்கள் அறையின் வாசலுக்கு அருகில் வந்து ஜியாரத் செய்வார்கள், நபியவர்களின் புனித கப்ரை பார்த்து ஜியாரத் செய்யும் நிலமையும் இருந்தது , நாளடைவில் மக்கள் அதிலே வரம்பு மீற ஆரம்பித்தார்கள் , நபியவர்களின் புனித கப்ருடைய மண்ணை எடுத்துச்செல்ல துவங்கினர் , எனவே ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) காலத்திலேயே புனித கப்ரை சுற்றி சுவர் எழுப்பப்பட்டு விட்டது , இப்போது அந்த சுவற்றை கூட பார்க்க முடியாதவாறு சுற்றிலும் துணியால் மூடப்பட்டுள்ளது , புனித ரவ்ழாவின் ஜாலிகள் வழியாக உற்று நோக்கினாலும் எதையும் கண்ட திருப்தி ஏற்படுவதில்லை , தாகம் தணியாத மனதுடன் அப்புனித இடத்தை விட்டு மக்கள் கூட்டத்தோடு நானும் நகர்த்தப்பட்டேன்,
حياة النبي
முதலில் நபி (ஸல்) அவர்களுக்கு, பின்னர் அபூ பக்ர் (ரலி) அவர்களுக்கு, பின்னர் உமர் (ரலி) அவர்களுக்கு சலாம் கூறினேன்,
இங்கே அந்நபித்தோழர்களின் சுருக்கமான வரலாறை கூறுவது பொருத்தமாக இருக்கும் ,
ஹஜ்ரத் அபூபக்ர், ஹஜ்ரத் உமர் ரலி
ஒவ்வொருவரின் தலை மாட்டிலும் நீண்ட நேரம் தலை சாய்த்து நின்று மனமுருக அவர்களுக்கு சலாமும் , ஷபாஅத்திற்கான துஆவும் செய்ய வேண்டும் என விரும்பினேன், ஆனால் அந்த நெரிசலில் அதற்கெல்லாம் சாத்தியமே இல்லை என்பதை உணர்ந்து அவ்விடத்தை விட்டு சீக்கிரமாகவே நகர்ந்தேன் , ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் அறையைத்தான் நபி (ஸல்) மற்றும் அவர்களின் இருதோழர்களின் உறங்குமிடமாக ஆக்கப்பட்டுள்ளது, துஹ்பதுல் அல்மயீ பாகம் 3, பக்கம் 422 லே நூலாசிரியர் குறிப்பிடுகின்றார் , நபியவர்கள் மரணமடைந்ததும் நபியவர்களை எங்கு அடக்கம் செய்வது என ஓர் சர்ச்சை எழும்பியது , சிலர் நபியவர்களின் சொந்த ஊரான மக்காவில் அடக்கம் செய்ய வேண்டும் என்றார்கள் , வேறு சிலர் நபிமார்களின் பூமியான பைத்துல் முகத்தஸுக்கு நபியவர்களின் புனித உடல் எடுத்துச்செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்றார்கள் , இவ்வாறு பலரும் பல கருத்து சொல்லிய போது ஹஜ்ரத் அபூபக்ர் )ரலி( அவர்கள் ஒரு நபி , தான் எங்கு அடக்கம் செய்யப்பட வேண்டுமென விரும்புகிறாரோ அங்கு வைத்துதான் அந்த நபியின் உயிரை அல்லாஹுத்தஆலா கைப்பற்றச்செய்கிறான், என்று தான் நபியிடமிருந்து செவியேற்ற ஒரு ஹதீஸை எடுத்துக்கூறி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள் , இவ்வாறு நபியவர்கள் தான் அடக்கம் செய்யப்பட வேண்டுமென தேர்ந்தெடுத்த உன்னதமான பூமி இது , நபியவர்களுக்கு ஜனாஸா தொழ வைக்கப்படுவதற்காக நபியவர்களின் புனித உடல் அந்த அறையை விட்டு வெளியே கொண்டு வரப்பட வில்லை, எங்கே நபியவர்களின் கட்டில் இருந்ததோ அந்த இடத்திற்கு நேர் கீழே கப்ர் தோண்டப்பட்டது , பின்னர் ஜனாஸா தொழ வைக்க வேண்டிய கட்டம் வந்த போது நபியவர்களுக்கு இமாமாக நின்று ஜனாஸா தொழ வைக்க யாருக்கும் தைரியம் வரவில்லை, எனவே ஒவ்வொருவராக அந்த அறைக்குள் நுழைந்து தனித்தனியாக ஜனாஸா தொழுகை தொழுது வந்தார்கள் , இதனாலேயே நபியவர்களை அடக்கம் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது , இவ்வாறு எத்தனையெத்தனை சரித்திரங்களை அவ்வறை கண்டிருக்கும், நபியவர்கள் ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) உடன் வாழ்ந்த ஈடிணையற்ற வாழ்க்கை இங்கேதானே, நபியவர்கள் பாங்கு கூறப்பட்டதும் தொழுகைக்கு வெளிபடுவதும் , அறையிலிருந்து வெளிபட்டு ஸஹாபா பெருமக்களுக்கு உரையாற்றுவதும் என எத்தனை சரித்திரம் கண்டிருக்கும் இந்த இடம் ? இறுதியாக நபியவர்கள் இறப்பெய்தியதும் இவ்வீட்டில்தானே ?, துயில் கொள்வதும் இங்கேதானே? இந்த மண் எத்தனை பாக்கியமுள்ளது? இந்த பிரமிப்புகள் என்னை முழுமையாக ஆட்கொண்டிருந்தன , நீண்ட நேரத்திற்கு இந்நினைவுகளிலிருந்து என்னால் மீள முடியவில்லை,
ஹஜ்ரத் ஈஸா அலை அடங்கப்பெறுதல்
ஜியாரத்தை முடித்து விட்டு மீண்டும் பள்ளியில் புகுந்து எனது தாயார் இருந்த இடத்திற்கு நடந்தேன்,
பள்ளியின் ஒவ்வொரு தூண்களிலும் ஒரு ஆலிமின் மூலம் குர்ஆனை சரிசெய்யும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன, இவ்வாறு நடந்து கொண்டிருந்த ஓர் வகுப்பை நான் கடந்து சென்ற போது அங்கிருந்த ஆலிம் ஒருவர் என்னை அமரும்படி கூறினார், என்னால் அதை மறுக்கமுடியவில்லை , மஸ்ஜிந் நபவில் அமர்ந்து குர்ஆனை சரிசெய்யும் பாக்கியத்தை நான் இழக்க விரும்பவில்லை ,அமர்ந்தேன் , என்னை சூரத்துல் ஃபாத்திஹா ஓத சொன்னார் , நான் ஓதியபோது அதில் எனக்கு ஒரு எழுத்தை திருத்தி தந்தார், இந்த வகுப்புகள் நபி (ஸல்) காலத்தில் மஸ்ஜிதுந் நபவியில் நடந்த அமல்களை நினைவூட்டின , இவ்வாறு ஒவ்வொரு பள்ளியும் ஆகவேண்டும் , அல்லாஹ் இந்த அமல்களை, வகுப்புகளை கியாமத்வரை நீடித்திருக்கச்செய்வானாக , அவர்கள் அழைத்தற்கு மறுப்பு தெரிவிக்க மனமில்லாமல் சிறிது நேரம் அமர்ந்து விட்டு பின்னர் எனது தாயார் காத்திருப்பதை அவர்களிடம் காரணமாக கூறி அங்கிருந்து விடைபெற்றேன். எதிர்பார்த்தது போல் எனது தாயாரும் என்னை எனது தாமதத்திற்காக கடிந்துகொண்டார், பின்பு அறைக்கு வந்து உணவு தேவையை முடித்த பின் சிறிது ஓய்வெடுத்து விட்டு அறையில் இருந்தாலும் உள்ளம் ஹரமையே சுற்றி வந்தது
பாக்கியமிக்க அந்த நேரங்கள் ஹரமில் கழிப்பதற்காகவே உள்ளவை , இத்தனை ஆயிரம் ரூபாய் செலவழித்து வந்தது அறைகளில் ஓய்வெடுப்பதற்காக அல்ல , எனவே காலை 11 மணியளவில் ஹரமுக்கு வந்துவிட்டேன் , அங்கே சிலர் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார்கள் , தொழுதுகொண்டிருந்தார்கள் , நான் ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன் , மக்காவில் ஒரு முறை , மதீனாவில் ஒரு முறை என இரண்டு குர்ஆன் முடிக்க வேண்டும் என நிய்யத் வைத்திருந்தேன் , எனது சோம்பேறித்தனத்தால் அது நிறைவேறாமல் போனது , பாக்கியமான அந்த தருணங்களை இப்போது எண்ணிப்பார்த்தாலும் கைசேதமாக உள்ளது , ஹஜ் , உம்ரா பாக்கியம் பெற்று ஹரமிலே உள்ளவர்களை நினைத்து பார்க்கும் போது பொறாமையுணர்ச்சி எழுகிறது . உண்மையிலேயே நபியின் பள்ளி வாசல் சுவனத்தின் பூங்காவனம்தான் என்பதை உணர்பூர்வமாக என்னால் அறிந்து கொள்ள முடிந்தது , சிறிது நேரம் பள்ளியில் அமர்ந்து குர்ஆன் ஓதி விட்டு பின்னர் லுஹருக்காக பாங்கு கூறப்பட்டபோது அறைக்கு திரும்பி எனது தாயாரை அழைத்துக்கொண்டு மீண்டும் பள்ளிக்கு வந்தேன் ,
இவ்வாறு ஹரம் ஷரீபுக்கு வந்து , சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நபி (ஸல்) அவர்களின் புனித கப்ரை ஜியாரத் செய்ய வேண்டுமென்ற ஆவல் இருந்தமையால் அதற்காக முயன்று கொண்டே இருந்தேன் , அவ்வாறு ஒரு முறை மக்ரிபிற்குப் பின் இஷா தொழுகையின் நெருக்கத்தில் பாபுஸ்ஸலாம் வழியாக உள்ளே நுழைந்தேன் , ஆனால் ரவ்ழாவை நெருங்கியதும் அங்கே இஷா தொழுகைக்காக மக்கள் அமர்த்தப்பட்டார்கள் , நானும் அதிலுள்ள ஒரு ஸஃப்பில் உட்கார்ந்து கொண்டேன், மஸ்ஜிதுந் நபவியில் நபி (ஸல்) அவர்களின் ரவ்ழாவுக்கு சற்று அருகில் நான்காவது ஸஃப்பில் இஷா தொழுதேன், நபி (ஸல்)அவர்களின் ரவ்ழாவை விட்டு மூன்று ஸப் முன்னே நீட்டப்பட்டு அங்கு மிஹ்ராப் ஏற்படுத்தப்பட்டு அங்குதான் இமாம் நிற்கின்றார், நான் இஷா தொழுகையை நிறைவேற்றிய பள்ளியான அந்த பகுதி மிகவும் பரகத் வாய்ந்ததாக இருக்கவேண்டும் , எத்தனை ஸஹாபாக்கள், எத்தனை நல்லடியார்களின் பாதங்கள் பட்ட பகுதியோ தெரியாது , எத்தகைய நல்லடியார்கள் ஸஜ்தா செய்த இடமோ தெரியவில்லை , அல்லாஹுத்தஆலா அத்தகைய இடத்தில் தொழுவதற்கான பாக்கியத்தை ஏற்படுத்தி தந்தான் , அந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் , எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத தொழுகைகளில் அதுவும் ஒன்று .
குபா பள்ளி நோக்கி...
நாங்கள் வெள்ளி இரவு மதீனாவுக்கு வந்தோம், சனிக்கிழமை ஜியாரத், மற்றும் மஸ்ஜிது நபவீயில் ஐந்து நேர தொழுகைகள் ஆகிய அமல்களை மட்டுமே செய்தோம், ஞாயிற்று கிழமை காலை 9 மணிக்கு தயாராக இருக்கும் படியும் குபா பள்ளி செல்கிறோம் என்றும் எங்களின் வழிகாட்டி அறிவித்தார். அதன் படி நாங்கள் தயாராக இருந்தோம், நீங்கள் காணப்போகும் இடங்களெல்லாம் நாங்கள் முன்பு மதீனா வந்தபோது பார்த்து விட்டோம், நீ மட்டும் போய் வா என எனது தாயார் எங்களுடன் வர மறுத்து ஹோட்டலிலே இருந்துவிட்டார், எனது தாயார் இன்னும் சில தாய்மார்களைத் தவிர்த்து மற்ற யாவரும் ஒரு பேருந்தில் புறப்பட்டோம், எங்களின் வழிகாட்டி குபா பள்ளியின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே வந்தார்,
மதீனாவின் சாலைகளில் பஸ் ஓடியது, மதீனாவின் ஒவ்வொரு பகுதிக்கும் , சாலைக்கும் சரித்திரம் உண்டு, ஒவ்வொன்றும் ஈமானிய உணர்வுகளை தூண்டும், ஆனால் அச்சரித்திரத்தை அவ்விடத்தோடு சேர்த்து கூறுவோர் யாரும் இல்லை. எனக்கு அப்பகுதிகள் கடந்து போகும் போதெல்லாம் விலை உயர்ந்த பொருளை பிடிக்க நினைத்தும் கைகளில் சிக்காமல் தவறிசெல்வதை போன்ற உணர்வு ஏற்பட்டது. மஸ்ஜிதுல் குபாவின் சாலையில் நுழைந்ததும் ஒரு பள்ளி வலப்புறம் தெரிகிறது , எங்களின் வழிகாட்டி இதுதான் مسجد الجمعة ஜும்ஆ பள்ளி என கூறினார், ஆம் இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக ஜும்ஆ தொழுகை இங்குதான் நடைபெற்றது , ஆனால் அங்கே வாகனம் நிறுத்தப்படவில்லை, இஸ்லாமிய வரலாற்றுடன் சம்பந்தப்பட்டுள்ள ஒவ்வொரு இடங்களையும் கட்டித்தழுவவேண்டும் போல் இருந்தது , ஆனால் ஒரு குரூப்புடன் வரும்போது அதற்கெல்லாம் சந்தர்ப்பம் இருப்பதில்லை, சட்டென அந்த பள்ளி எங்களின் பார்வையை விட்டு மறைந்தது , சிறிது நேரத்தில் மஸ்ஜிதுல் குபாவுக்கு அருகாமையில் கொண்டு சென்று பஸ் எங்களை இறக்கிவிட்டது ,
மஸ்ஜிது ளிரார் சம்பவம்
வரலாற்றில் குபா பள்ளி பல விதங்களில் நீங்காத இடத்தை பெற்றுள்ளது , மதீனாவில் வாழ்ந்த நயவஞ்கர்களும், யூதர்களும் முஸ்லிம்களை வேரறுப்பதற்கு பலவாராக முயற்சித்துக்கொண்டே இருந்தார்கள், என்னென்னவோ திட்டங்களை தீட்டிப்பார்த்தார்கள் , அவை யாவற்றையும் அல்லாஹுத்தஆலா முறியடித்தான் , அவற்றில் ஒன்றுதான் அவர்கள் கட்டிய மஸ்ஜிது ளிரார் , மதீனாவுக்கு வெளியே முஸ்லிம்களுக்கு எதிராக படை திரட்டிய போதும் மதீனாவுக்கு உள்ளே முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள் கூடுவதற்கு ஓர் பதுங்குமிடத்தை யோசித்தார்கள் , அவ்வாறு யோசித்தவர்களின் மூளையில் தோன்றியதுதான் ஒரு பள்ளியை கட்டினால் என்ன என்பது , தனியாக ஓர் கட்டிடத்தை கட்டினால் பிறருக்கு சந்தேகம் வர வாய்ப்புண்டு , எனவே பள்ளி என்ற பெயரிலேயே குபா பள்ளிக்கு அருகாமையில் ஓர் கட்டிடத்தை எழுப்பினார்கள் , அது மட்டுமின்றி அப்பள்ளி முஸ்லிம்களிடம் அங்கீகாரத்தை பெறுவதற்காக நபியவர்களிடம் வந்து யாரசூலல்லாஹ் குபா பள்ளி தூரமாக இருப்பதால் ஒவ்வொரு தொழுகைக்கும் அங்கு செல்வது மிக சிரமமாக உள்ளது , வயதானவர்கள் , நோயாளிகள் குபா பள்ளி வரை செல்ல முடிவதில்லை , ஆதலால் நாங்கள் எங்கள் பகுதியில் ஓர் பள்ளியை எழுப்பியுள்ளோம் , தாங்கள் அங்கு வந்து தொழுகையை ஆரம்பித்து வைக்க வேண்டும் என நபியிடம் வேண்டுதலும் வைத்தார்கள் , அதற்கு நபியவர்கள் தாம் தற்போது தபூக் வுடைய யுத்தத்திற்கு புறப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் , யுத்தத்திலிருந்து திரும்பிய பின் அப்பள்ளிக்கு வந்து தொழுகையை ஆரம்பித்து வைப்பதாகவும் வாக்கு தந்தார்கள்,
அது போலவே நபியவர்கள் தபூக் யுத்தத்திலிருந்து திரும்பிய போது அல்லாஹுத்தஆலா நயவஞ்கர்களின் சூழ்ச்சி குறித்து நபியவர்களுக்கு தெரிவித்து கொடுத்தான் , அத்துடன் அப்பள்ளி கட்டியதின் உள் நோக்கம் குறித்தும் குர்ஆனின் வசனங்களை இறக்கினான்
இடைஞ்சல் தருவதற்காகவும் , இறை மறுப்பில் ஈடுபட்டும், முஃமின்களுக்கு மத்தியில் பிளவை உண்டு பண்ணுவதற்காகவும் , முன்பே அல்லாஹ்வுடனும் , அல்லாஹ்வுடைய தூதருடனும் யுத்தம் செய்து கொண்டிருக்கும் எதிரிகளுக்கு உதவுவதற்காகவும் ஓர் பள்ளியை அந்நயவஞ்சகர்கள் எழுப்பியுள்ளார்கள் , அதன் மூலம் தாம் நலவையே நாடியதாக உம்மிடம் சத்தியமிட்டும் கூறுகிறார்கள் , ஆனால் அவர்கள் பொய்யர்கள் , அவர்கள் கூறுவது யாவும் பொய் என அல்லாஹ் சாட்சி சொல்கிறான் . எனவே ஒரு போதும் நீங்கள் அப்பள்ளிக்கு சென்று தொழாதீர்கள் ,
ஆரம்ப நாள் முதல் தக்வாவை அடிப்படையாக வைத்து எழுபப்பபட்ட குபா பள்ளியே நீங்கள் சென்று தொழுவதற்கு மிகவும் அருகதையுள்ள பள்ளி, ஏனெனில் குபா பள்ளியில் தூய்மையை விரும்பும் மனிதர்கள் உள்ளார்கள், அல்லாஹ்வும் தூய்மையானவர்களையே நேசிக்கிறான் , எனவே நீங்கள் குபா பள்ளிக்கே செல்லுங்கள் ,மஸ்ஜிது ளிராருக்கு போகாதீர்கள்.
இவ்வாறு குர்ஆன், மஸ்ஜிது ளிரார் உடைய சிறுமையையும் , அதைக்கட்டிய நயவஞ்சகர்களின் குரூர எண்ணத்தையும் தோலுரித்து காட்டியதோடு நில்லாமல் , தொடர்ந்து மஸ்ஜிது குபா உடைய பெருமையையும் , அதிலே தொழுது வந்தவர்களின் பெருமையையும் சேர்த்து உலகத்திற்கு பறை சாற்றியது ,
இதனாலேயே நபி ஸல் அடிக்கடி மஸ்ஜிது குபா வரும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தார்கள் , அது மட்டுமின்றி எவர் தன் வீட்டிலே ஒழு செய்து குபா பள்ளிக்கு வந்து இரண்டு ரக்அத் தொழுவாரோ அவருக்கு ஹஜ் , உம்ராவுடைய நன்மைக்கு சம்மாக நன்மை கிடைக்கும் என்று முஸ்லிம்களையும் குபா பள்ளி செல்ல ஆர்வமூட்டினார்கள் ,
ஆக மஸ்ஜிது ளிரார் குறித்து மேற்கண்ட வசனங்கள் இறங்கியதும் நபி ஸல் அவர்கள் சில சஹாபாக்களை , அப்பள்ளியை நெருப்பு மூட்டி இடித்து வரச்சொல்லி அனுப்பி வைத்தார்கள் , அப்பள்ளி நெருப்பு மூட்டப்பட்டு இருந்த இடம் தெரியாமல் தரை மட்டமாக்கப்பட்டது , பிற்காலத்தில் மதீனா நகரம் வளர்ந்த போது காலியாக கிடந்த அவ்விடத்தில் நபி ஸல் அவர்கள் ஒரு சஹாபியை வீடு கட்டிக்கொள்ள கூறினார்கள் , அவர் இன்னொரு சஹாபிக்கு அவ்விடத்தை தரும் படி பரிந்துரைக்க அது அந்த சஹாபிக்கு தரப்பட்டது , அவரும் அவ்விடத்திலே தனக்கு வீட்டை கட்டிக்கொண்டார் , ஆனால் அங்கே அவர் வசித்து வந்த வரை அவருக்கு குழந்தையே பிறக்க வில்லை, அது மட்டுமல்ல , கோழி ,குருவிகள் கூட அங்கே குஞ்சு பொறிப்பதில்லை என்று வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்துள்ளார்கள் , அன்றிலிருந்து இவ்விடம் எதற்கும் உதவாமல் காலி இடமாகவே இருந்து வருகிறது , அந்தளவிற்கு அல்லாஹ் மஸ்ஜிது ளிரார் இருந்த இடத்தை அபிவிருத்தி அற்றதாக , மனிதர்களின் படிப்பினைக்கு உரியதாக ஆக்கி விட்டான்,
அத்தகைய படிப்பினைக்குறிய இடமும் குபா பள்ளி அருகில்தான் இருக்கின்றது என்பதை மஆரிபுல் குர்ஆன் தப்ஸீரிலே படித்துள்ளேன் , ஆனால் அது இன்னும் படிப்பறிவாகவே உள்ளது , அனுபவ அறிவாக மாறும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்க வில்லை .
குபா பள்ளி
குபா பள்ளியில் ஓரளவு கூட்டம் இருந்தது , மதீனாவில் பார்க்கத்தக்க இடங்கள் என மஸ்ஜிதுந் நபவீ, மஸ்ஜிதுல் குபா, உஹதுடைய ஷுஹதாக்கள் ஆகிய மூன்று இடங்களை மட்டுமே அரபு உலமாக்கள் கூறுகிறார்கள், பிற இடங்களை பார்ப்பதற்கு நபி (ஸல்) வலியுறுத்தவும் இல்லை, அவற்றில் விஷேச நன்மையுமில்லை என அறிவிப்பு பலகையும் இடத்துக்கிடம் வைக்கப்பட்டுள்ளது , ஆக குபா பள்ளி அவர்களின் கருத்துப்படியும் பார்க்க வேண்டிய பள்ளி என்பதால் கூட்டத்திற்கு பஞ்சமில்லை, நபி (ஸல்) மக்காவிலிருந்து மதீனா ஹிஜ்ரத் வந்தபோது குபா வழியாகத்தான் மதீனாவுக்குள் புகுந்தார்கள், அப்போது இங்கே தங்கினார்கள், அப்போது கட்டப்பட்ட பள்ளிதான் இது, இப்போது புதிதாக கட்டப்பட்டுள்ளது , வாரத்தில் ஒரு முறை பெரும் பாலும் சனிக்கிழமை நபியவர்கள் இங்கு வரும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள், நபி (ஸல்) அவர்கள் பார்த்து கட்டிய அப்பள்ளியை காணுவதில் கண்கள் குளிர்ந்துவிட்டன, பள்ளியின் உள்பகுதி நான்கு பக்கம் கட்டடங்களாகவும் நடு பக்கம் திறந்தும் இருந்தது, பள்ளிக்குள் நுழைந்து தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுதேன். இங்கேயும் மக்கள் தொழுகிறார்களோ, இல்லையோ, கேமராவுடன் தெரிகிறார்கள். மிஹ்ராபில் நின்றபடி மிம்பரில் சாய்ந்த படி புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள், இறை இல்லங்களிலிருந்து எடுக்க வேண்டியதை எடுக்க தவறுகிறார்கள் என்பதே முஸ்லிம் சமுதாயத்தின் அவல நிலையாகும்.
அரீஸ் கிணறு
குபா பள்ளியிலிருந்து வட மேற்குத்திசையில் ஒரு தோட்டத்திற்கு நடுவே அரீஸ் என்ற கிணறு இருந்தது , அது குறித்து புஹாரி ஷரீபிலே ஹஜ்ரத் அபூ மூஸா ரலி அவர்களின் அறிவிப்பு வரும் , ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் இக்கிணற்றின் திண்டின் மீது காலை தொங்கப்போட்டு அமர்ந்திருந்தார்கள் , அப்போது ஹஜ்ரத் அபூபக்ர், ஹஜ்ரத் உமர் , ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) ஆகியோர் ஒன்றன் பின் ஒன்றாக அங்கே வந்தார்கள், நபி (ஸல்) அவர்கள் அம்மூவருக்கும் சுவனத்திற்கான சுபச்செய்தியை தெரிவித்தார்கள், இதே போல புஹாரியின் இன்னொரு அறிவிப்பில் நபி (ஸல்) அவர்களின் கைவிரலில் மோதிரமொன்று இருந்தது , அவர்களின் மரணத்திற்குப்பிறகு ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்திலும் , அவர்களுக்குப்பிறகு ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களிடத்திலும் , அவர்களுக்குப்பிறகு ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களிடத்திலும் அது இருந்து வந்தது , அந்த மோதிரம் ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களின் கையிலிருந்து இந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது , அதை கண்டுபிடிப்பதற்காக ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) எவ்வளவோ முயற்சித்தார்கள், இறுதி வரை அதை கண்டு பிடிக்க முடியவில்லை , அன்றிலிருந்துதான் முஸ்லிம்களுக்கிடையே உள்நாட்டு குழப்பங்கள் தோன்றலாயின.) وفاء الوفاء جلد 2 ( இந்தளவு வரலாற்றுடன் தொடர்புள்ள அரீஸ் என்ற அக்கிணறை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று நான் விரும்பினேன், இன்று நாம் குபாவுக்கு அருகாமையில் நின்று கொண்டிருந்தாலும் கூட நேரத்தின் நெருக்கடியால் அதை தேட முடியவில்லை , அப்படியே தேடிப்பார்த்தாலும் கிடைக்கப்போவதில்லை , ஏனெனில் சாலைகள் விரிவாக்கத்தின் போது அக்கிணறு இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டது என்பதுதான் ஓர் சோகமான செய்தி , ஆதாரம் முயீனுல் ஹுஜ்ஜாஜ் 488 , அட்லஸ் சீரத்துன்னபவீ ,169
கர்ஸ் கிணறு
அதல்லாமல் பள்ளியை விட்டு சுமார் பாதி மைல் தொலைவில் வட கிழக்கு திசையில் குர்பான் என்ற இடத்தில் غرس بئر கர்ஸ் என்ற கிணறு உள்ளது , நபி ஸல் அவர்கள் அக்கிணற்று தண்ணீரை குடித்துள்ளார்கள் , ஒழு செய்துள்ளார்கள் , அதன் தண்ணீரை வைத்துதான் நபியவர்களை இறுதியாக குளிப்பாட்டப்பாட்டவும் பட்டது, (தாரீகுல் மதீனத்துல் முனவ்வரா , அட்லஸ் சீரதுன்னபவீ , 169) , நபியின் சரித்திரத்துடன் தொடர்புள்ள இக்கிணறையும் பார்க்க கண்கள் துடிக்கின்றன , ஆனால் அதை எப்படி காண்பது என்பதற்கான வழிதான் தெரியவில்லை ,இதே ஏக்கத்துடன் என்னுடைய பிரயாணத்தின் பல நேரங்கள் கழிந்தன .
சுற்றியுள்ள பகுதிகளில் பேரித்தை தோட்டங்கள் நிரம்பி காணப்படுகின்றன , கிதாபில் படித்த மதீனாவின் தோட்டங்கள் இங்கே கண்களுக்கு முன்னே காணுகிறேன், முற்காலத்தில் எது எந்த ஸஹாபியுடைய தோட்டமாக இருந்ததோ ? யுத்தங்களுக்காக நபி (ஸல்) அவர்கள் உணவுப்பொருட்கள் சேகரித்தபோது இத்தோட்டங்களிலிருந்து எத்தனை கிலோ அப்புனித தேவைக்காக கொண்டு செல்லப்பட்டதோ? அடையாளம் சொல்பவரோ , அதை விளக்கிக்கூறுபவரோ யாரும் எங்களுக்கு கிடைக்கவில்லை , மதீனாவின் பேரித்த தோட்டங்கள் அப்போதுதான் அறுவடை பருவத்தை நெருங்கிக்கொண்டிருப்பதாக எங்களின் வழிகாட்டி கூறினார், இங்கே அதன் அழகு உள்ளங்களை கவர்கிறது, அதிலே கனிகள் வந்துவிட்டால் இன்னும் எத்தனை இரம்மியமாக இருந்திருக்கும், அதன் அழகிலே ஈர்க்கப்பட்டு நபி (ஸல்) அவர்களுடன் மிகக் கடுமையான வெயில்காலத்தில் தபூக் யுத்தத்திற்கு செல்லாமல் இருந்து விட்ட காரணத்திற்காக ஹஜ்ரத் கஃப் (ரலி) தண்டிக்கப்பட்ட பின்னர் அவர்களின் தவ்பா ஏற்றுக்கொள்ளப்பட்ட சரித்தரங்களெல்லாம் அடுக்கடுக்காக நினைவுக்கு வந்தன, உலக வஸ்துவின்பால் சிறிது ஈர்ப்பு வந்தாலும் இறைவனின் தரப்பிலிருந்து அவர்கள் கடுமையாக சோதிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டார்கள், அதனால்தான் அவர்கள் ஸஹாபிகளாக உயர்ந்து நிற்கிறார்கள் , இன்று நம் நிலையோ நம் உள்ளம் நிரம்ப உலக மோகமே பரவியுள்ளது என்ற எண்ணம் என்னை கூனிப்போகச் செய்தது,
பள்ளியின் எதிரிலே பூங்கா ஒன்று உள்ளது , பள்ளியின் இடதுபுறத்தில் நீர் வீழ்ச்சி போன்ற தோட்டம் உள்ளது , சக தோழர்களும் பள்ளியை விட்டு விடைபெறும் தருவாயில் நான் சற்று பள்ளியின் கிப்லா திசையில் நடந்தேன், அங்கே ஓர் கண்காட்சி கட்டடம் இருந்தது , பழங்காலத்தில் கிதாபுகளில் பயன்படுத்தப்படும் சில உணவுப்பொருட்களின் பெயர்களும் அவற்றிற்கான உதாரணங்களும் அங்கே வைக்கப்பட்டிருந்தன, இன்னும் உஹத் யுத்தத்தின் காட்சிகளும் திரையில் காட்டப்பட்டுக்கொண்டிருந்தது , இன்னும் சிறிது அவகாசம் கிடைத்தால் அங்கிருந்து பல அரிய தகவல்களை பெற்றிருக்கலாம், அதற்குள் என்னைத்தேடி மௌலவி இல்யாஸ் வந்துவிட்டார், சற்று என்னை கடிந்தும் கொண்டார், இனி பஸ் யாருக்காகவும் காத்திருக்காது. அவர்கள் தனிவாகனம் பிடித்து இருப்பிடத்திற்கு வந்துகொள்ள வேண்டிதுதான் என பொது எச்சரிக்கையும் செய்தார், எனவே எனது தாகம் தீராமலேயே நான் பஸ்ஸிலே ஏற நிர்பந்திக்கப்பட்டேன் ,
அங்கிருந்து பஸ்ஸை மதீனாவின் தெருக்களில் செலுத்தியதுபோல உணர்ந்தேன், ஆம் பேரித்த தோட்டங்கள் நிரம்பிய பகுதிகளுக்குள் எங்களின் பஸ் புகுந்து ஓடி ஓர் பேரித்தை மார்க்கெட்டில் கொண்டு ஓட்டுனர் நிறுத்தினார். பேரித்தை வாங்குவது அங்கு செல்பவர்களின் தவிர்க்க முடியாத தேவை, ஊர் திரும்பிய பின் ஜம் ஜம், பேரித்த பழமும்தான் ஹாஜிகளை சந்திக்க வருபவர்களுக்கு பரிமாறப்படும் பொருள் , அங்கே நாங்கள் இறங்கி பேரித்தம்பழம் வாங்கினோம், கிலோ 15 ரியால் என்ற விலை 10 கிலோ வாங்கினேன், அஜ்வா பேரித்தம்பழம் பிரசித்தி பெற்றது , ஒரு கிலோ 50 ரியால் என வாங்கினேன், பின்னர் அங்கிருந்து விடைபெற்றோம்.
உஹது மலையை நோக்கி....
அதற்கு பின் எங்களின் பஸ் உஹத் மலையை நோக்கி விரைந்தது ,மதீனாவின் சாலைகள் இப்போது விசாலமான தார் சாலைகள் போடப்பட்டு வளர்ந்த நாடுகளுக்கு சமமாக போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டுவிட்டன. நபியுடைய காலத்தில் மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த மலைப்பாதையில் எவ்வாறு அவர்கள் தம் ஒட்டகங்களிலும், வாகனங்களிலும் பயணித்திருப்பார்கள் ? என்பதை எண்ணிப்பார்க்கும் போது தியாகம் என்பதே அந்த சீலர்களோடு முடிந்து போனது, அவர்களை போன்று ஒரு தியாகத்தை சரித்திரத்தில் எங்கும் காணமுடியாது என்ற எண்ணமே ஓங்குகிறது , உஹத் பெயரை கேட்டதும் உடலின் அத்தனை வாசல்களும். அணுக்களும் விழித்துக்கொண்டதை போல உணர்ந்தேன், அதன் சரித்திரத்தை சொல்லி மாளாது. இஸ்லாத்தின் இரண்டாவது பெரிய யுத்தம் , ஸஹாபாக்களின் ஈமானை நாடிப்பிடித்து பார்த்த யுத்தம், நபி (ஸல்) அவர்களின் புனித பல் இங்குதான் ஷஹீதாக்கப்பட்டது, உஹத் யுத்தத்தை கூறாமல் இஸ்லாமிய வரலாறு முழுமை பெறாது.
உஹத் யுத்தம்
நாங்கள் ஜபலே ருமாத் சென்று ஓர் ஆசைக்கு அதில் ஏறியும் பார்த்தோம் , நபி (ஸல்) அவர்கள் சில வீரர்களை இம்மலையின் மீதுதான் நிறுத்தி வைத்திருந்தார்கள். அவர்கள் அவ்விடத்தை விட்டு நபியின் அனுமதியில்லாமல் அகன்றதுதான் பெரிய சோதனைக்கு காரணமாக மாறியது. உஹத் மலையிலும் மக்கள் ஏற முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். ருமாத் மலையின் வலப்பக்கம் ஒரு பிரமாண்டமான பள்ளி கட்டப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது , நாங்கள் பஸ்ஸை விட்டு இறங்கியதும் எங்களின் வழிகாட்டி எங்களை உஹத்வுடைய ஷுஹதாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிக்கு அழைத்து வந்தார் , நான்கு பக்கம் சுவர்கள் எழுப்பப்பட்டு கண்ணாடிபோடப்பட்டுள்ளது . கண்ணாடி கிரில்கள் வழியாக நாங்கள் அந்த தியாகிகளின் கப்ருகளை பார்த்தோம் , உள்ளம் வெருமையாகிப்போனதைப்போல இருந்தது , அந்த கப்ருகள் மிக சாதாரணமாக, மழைகளினால் மேடுகள் கூட சற்று சரிந்து தரையோடு நெருங்கி காணப்பட்டன, எது யாருடைய கப்ரு என்ற பெயர்பலகையோ ஆடம்பரமான கட்டடங்களோ , பூக்களோ எதுவும் இல்லை.
உஹதுடைய ஷுஹதாக்கள்
உஹதுடைய ஷுஹதாக்களில் நபியவர்களின் சிறிய தந்தை ஹஜ்ரத் ஹம்ஸா (ரலி) அவர்களுக்கு தனி இடமுண்டு, உஹது யுத்தம் முடிந்ததும் ஷஹீதாக்களை நோட்டமிட்ட போது ஹஜ்ரத் ஹம்ஸா (ரலி) அவர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருந்தது , எதிரிகள் அவர்களை கொலை செய்தது மட்டுமின்றி அவர்களின் உறுப்புகளை தனித்தனியாக அறுத்திருந்திருந்தார்கள் , அவர்களை வயிற்றை கிழித்து ஈரலை கைய்யோடு எடுத்துச்சென்றிருந்தார்கள், இந்தளவுக்கு அவர்களின் உடல் சிதைக்கப்பட்டிருந்தது , மொத்தம் எழுபது ஸஹாபாக்கள் ஷஹீதாக்கப்பட்டிருந்தார்கள், அவரவர்கள் கொண்டு வந்த சாமான்களில் இருந்த போர்வையை எடுத்து கபன் அணிவிக்கப்பட்டார்கள் , பல சஹாபாக்களுக்கு கபனிட போதுமான துணி இல்லை , தலையை மூடினால் கால்களும், கால்களை மூடினால் தலையும் திறந்து கொண்டது , பலருக்கு கபனிட துணியே கிடைக்க வில்லை , ஆதலால் ஒரு துணியில் இரண்டு உடல், மூன்று உடல் என வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது , எழுபது பேர்களுக்கு எழுபது கப்ர் தோண்டும் அளவுக்கு அரபகத்தின் கற்பாங்கான பூமியும் ஒத்துழைக்காது , நபியும் , நபித்தோழர்களும் காயப்பட்டிருந்ததால் இத்தனை கப்ர் தோண்டும் அளவுக்கு அவர்களின் உடல்களிலும் சக்தியில்லை , எனவே ஒரே கப்ர் கிழக்கு மேற்கு என அகலமாக தோண்டப்பட்டு யாவரும் அதிலே அடக்கம் செய்யப்பட்டார்கள், இஸ்லாத்திற்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த அந்த மாமனிதர்களின் கப்ருகளுக்கு அருகில் தான் நாங்கள் நின்று கொண்டிருந்தோம் .இன்று நாம் தீன் என்ற மர நிழலில் இளைப்பாறுகிறோம் என்றால் அம்மரம் செழிப்படைவதற்கு ஸஹாபாக்கள் தம்மையே உரமாக்கினார்கள் ,
வாழ்விலும் எளிமையானவர்கள் , மரணத்திலும் எளிமையானவர்களாக திகழ்கிறார்கள், கப்ரு என்னவோ சாதாரணமாக இருக்கலாம் , ஆனால் இறைவனின் தரப்பிலிருந்து அவர்களுக்கு தரப்படும் கூலி சாதாரணமானதல்ல, அங்கே சற்று நின்று சூராக்கள் ஓதி ஈஸால் ஸவாப் செய்தோம். என்னுடைய கண்கள் அந்த கப்ருகள் மீதே நிலை குத்தி நின்றன, உள்ளமோ உஹத்வுடைய யுத்தமைதானத்தை சுற்றி வந்தது. அந்த நான்கு சுவர்களுக்குள் சில கப்ருகள் தனித்தும் சில, சற்று தள்ளி அந்த பக்க ஓரத்திலும் காணப்பட்டன. பல்வேறு சரித்திர நினைவுகளோடு அவ்விடத்தை விட்டு விடைபெற்றோம்,
மஸ்ஜிதுல் கிப்லதைன்
இதை அடுத்து எங்களின் வாகனம் இரண்டு கிப்லா கொண்ட பள்ளியை நோக்கி விரைந்தது , நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுதார்கள், பின்பு சட்டம் மாறிய பின் பைத்துல்லாஹ்வை நோக்கி திரும்பிக்பொண்டார்கள், இந்த செய்தி அறியாத இந்த பள்ளிகாரர்கள் தொடர்ந்து அதை முன்நோக்கியே தொழுது வந்தார்கள் ,ஒரு முறை தொழுகை நடந்து கொண்டிருந்த போது அங்கே சென்ற ஒரு ஸஹாபி அம்மக்களுக்கு கிப்லா மாற்றப்பட்ட செய்தியை சொன்னதும் தொழுகையிலேயே அவர்கள் எதிர் திசையில் திரும்பிக் கொண் டார்கள், இந்நிகழ்வை ஞாபகப்படுத்தும் வண்ணம் இங்கே இரு பக்கம் மிஹ்ராப் இருந்தது , ஆனால் சில அறியாமக்கள் அந்த பக்கமும் திரும்பி நின்று தொழ ஆரம்பித்தபோது எதிர்புறத்திலுள்ள மிஹ்ராபை அகற்றிவிட்டார்கள், இரண்டு கிப்லா கொண்ட பள்ளி என்ற பெயர் மட்டுமே உள்ளது , மற்ற படி இப்போது எல்லா பள்ளிகளைப்போல அங்கேயும் ஒரு மிஹ்ராப் மட்டும்தான் இருக்கிறது, அங்கே சென்று தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழும் பாக்கியம் கிடைத்தது,
உஸ்மான் (ரலி) கிணறு
மஸ்ஜிது கிப்லதைனின் வட மேற்கிலே அகீக் என்ற பள்ளத்தாக்கு ஒன்று உள்ளது , அங்கே வசித்து வந்த யூதர்கள் ரூமா என்ற கிணறை அப்பகுதியில் வெட்டியிருந்தார்கள் , மதீனாவில் மக்களுக்கு தண்ணீர் தேவை அதிகரித்த போது ஹஜ்ரத் உஸ்மான் ரலி அவர்கள் முப்பத்தைந்தாயிரம் திர்ஹம் விலை கொடுத்து இக்கிணற்றினை யூதர்களிடமிருந்து வாங்கி முஸ்லிம்களுக்காக வக்ப் செய்தார்கள் , அன்றிலிருந்து இக்கிணறு உஸ்மான் ரலி கிணறு என அழைக்கப்பட்டது , இப்போது இக்கிணறு வரன்டு விட்டதாகவும் , அதன் அருகாமையில் மற்றொரு புதிய கிணறொன்று தோண்டப்பட்டு அதில் போர்வெல் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அட்லஸ் சீரத்துன்னபவீ நூலாசிரியர் குறிப்பிடுகிறார் , பக்கம் 169 , நாங்கள் ஹோட்டலை விட்டு புறப்படும் போது ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களின் கிணற்றை பார்த்து வருவதும் எங்களின் நோக்கத்தில் இருந்தது , ஆனால் நேரத்தின் சுருக்கம் எங்களுக்கு அக்கிணற்றை பார்க்கும் சந்தர்ப்பத்தை தரவில்லை.
மஸ்ஜிதுல் கன்தக்
அதை தொடர்ந்து நாங்கள் கன்தக் அருகில் கட்டப்பட்ட பள்ளியை பஸ்ஸில் இருந்தவாறே கண்டோம், லுஹர் தொழுகைக்கு நேரம் நெருங்கிவிட்டதால் உடனடியாக மஸ்ஜிதுந் நபவீ திரும்பும் கட்டாயத்தில் நாங்கள் இருந்தோம், கன்தக் யுத்தம் இஸ்லாமிய வரலாற்றில் பிரசித்துப்பெற்றது, இப்போது கன்தக் இருந்த இடமெல்லாம் சாலைகளாக மாறிப்போயிற்று, நபி (ஸல்) அவர்கள் காலத்திய யுத்த களத்தின் அமைப்பெல்லாம் வளர்ந்து விட்ட நகர அமைப்பிலே காணாமல் போய்விட்டன
. ஸகீபா பனீ ஸாயிதா
நாங்கள் மஸ்ஜிதுந் நபவியில் 15 ம் நம்பர் கேட்வழியாகத்தான் நுழைவோம் , என்னுடைய தாயாரை வீல் சேரில் வைத்து தள்ளிக்கொண்டு வரும்போது வழியில் இடதுபுறத்தில் பூங்கா ஒன்று கண்ணில் பட்டது, அப்பக்கமாகத்தான் நாங்கள் வருவதும் போவதும் இருந்துகொண்டிருந்தது , எதார்த்தமாக என்னுடைய பார்வை அங்கே வாயிலில் வைக்கப்பட்டிருந்த சிகப்பு பலகை மீது பட்டது , அதிலே இந்த பூங்காதான் வரலாற்றில் பிரசித்தி பெற்ற பனீ ஸாயிதா திண்ணை, காலப்போக்கில் கட்டிடங்களாக இருந்தவை பூங்காவாக மாறியுள்ளது , என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது, எனது நினைவுகள் நபி (ஸல்) மரண வேளைக்கு சென்றது , நபி (ஸல்) மரணமடைந்துவிட்டார்கள், இந்த இடத்தில் கூடிய தலைவர்கள் அடுத்த ஆட்சியாளர் குறித்து பேச ஆரம்பித்தனர் , அவ்விடத்திற்கு விரைந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் அங்கேதான் பதவி ஏற்றார்கள் , மறக்கமுடியாத சம்பவம் , காலம் எத்தனை வேகமாக சுழல்கிறது , அங்கு கூடியிருந்த ஸஹாபாக்களை கண்கள் தேடுகின்றன, அக்காட்சியின் சிறு நிழலாவது கண்களில் படாதா என ஏங்குகின்றன இன்று அவர்களில் ஒருவரும் இல்லை, இந்த நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டே கடக்கலானேன்.
அஸ்மாவுல் ஹுஸ்னா கண்காட்சி
நாங்கள் ஹரமுக்குள் புகும் 15 ம் நம்பர் கேட்டை ஒட்டி கிப்லா திசையில் மஸ்ஜிதுந் நபவியின் இடதுபுறத்தில் இரு கண்காட்சி கூடங்கள் இருக்கின்றன , ஒன்று அல்லாஹ்வின் திருநாமங்களின் கண்காட்சி கூடம், அதாவது தூய அல்லாஹ்வை அவனுடைய பண்புகளைக் கொண்டுதான் அறிந்து கொள்ள முடியும், அந்த பண்புகள்தான் அவனின் திருநாமங்களாக ஹதீஸிலே கூறப்பட்டுள்ளன, அத்திருநாமங்கள் ஒவ்வொன்றின் விளக்கத்தையும் அது சார்ந்த புகைப்பட காட்சிகளையோ, ஒளிப்படக்காட்சிகளோ காட்டப்படுகின்றன, குறிப்பாக இறைவன் சக்திகொண்டவன், விசாலமானவன், அவனுடைய விசாலத்திற்கு முன் நாம் ஒரு பொருட்டே அல்ல , நாம் வாழும் பிரமாண்டமான பூமி கூட சிறிய புள்ளி என்பதை ஒளிப்படகாட்சி மூலம் அங்கே காட்டப்படுகிறது , மனிதரிலிருந்து ஆரம்பித்து ஊர், நாடு, பூமி, சூரிய குடும்பம், பால்வெளி , அண்டம் என விரிந்து விரிந்து மனித அறிவை ஸ்தம்பிக்கச் செய்யும் அளவுக்கு கொண்டு சென்று அந்த குறும் படம் நம்மை பிரமிக்க வைக்கிறது , இதே போல அல்லாஹ் அடைக்கியாள்பவன், தண்டிப்பவன் என்ற பண்புகளை பிரதிபலிக்கும் விதமாக கடல் புயலில் சிக்கிக்கொள்ளும் ஒரு கப்பல் படும் பாட்டையும் , எரிமலைகள் சீற்றத்துடன் வெடித்து சிதறுவதையும் மிகவும் தத்ரூபமாகவும் அதிலே காட்டப்பட்டுள்ளது. அவை உண்மையிலேயே பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இதனை எனது தாயாருடன் சேர்ந்து பார்த்து வந்தேன்.
முஹம்மது (ஸல்) கண்காட்சி
இரண்டாவது கண்காட்சி முஹம்மது (ஸல்) கண்காட்சி , நபியவர்கள் ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டது, மதீனாவில் அவர்கள் தங்கிய இடங்கள், அவர்கள் சந்தித்த யுத்தங்கள், அவர்களின் வீட்டுடைய தோற்றம், போன்றவை வரை படங்களாகவும், புகைப்படங்களாகவும், மாதிரி வடிவங்களிலும் வைக்கப்பட்டிருந்தன, அவற்றை விளக்கி சொல்வதற்காக அரபு அறிஞர்கள் உள்ளார்கள், வழிகாட்டியாக வருபவர்களும் தம்முடைய குழுவினர்களுக்கு விளக்கி தருகிறார்கள் , அவற்றையும் கண்டு அலைந்து திரிந்து அதனதன் சரித்திரங்களை அறிந்து மனம் சந்தோசம் அடைய வேண்டுமென்ற பேராவல் ஏற்பட்டது . ஆனால் குறைந்த நாட்களும் தாயாரின் பணிவிடையும் அதற்கு அனுமதி தரவில்லை, இறைவன் அதற்கான இன்னொரு சந்தர்பத்தை ஏற்படுத்தி தருவான் என்ற ஆதரவோடு விடைபெற்றேன்.
மதீனாவின் கடை வீதிகளில்...
இன்று திங்கள் கிழமை , நாங்கள் நாளை ஊருக்கு திரும்ப வேண்டும் எனவே மதீனாவில் ஏதாவது வாங்கவேண்டும் என்ற எண்ணத்தோடு காலை 9 மணியளவில் நான் இல்யாஸ் மௌலானாவுடன் வெளியேறினேன் , குழந்தைகளுக்கு ஆடைகளும் எனக்கு அபாவும் போன்ற சுருக்கமான பொருள்களை வாங்குவதிலேயே லுஹர் நேரமாகிவிட்டது , எங்களின் வழிகாட்டி மௌலவி இல்யாஸ் மிகவும் உதவியாக இருந்தார், அல்லாஹ் அவருக்கு சிறந்த கூலி தருவானாக, மஸ்ஜிதுந் நபிவீயை சுற்றி உயர உயரமான ஹோட்டல்களும், பெரும் பெரும் மால்களும், நிரம்பி உள்ளன, சர்வேதேச நாடுகளிலிருந்து வந்து மக்கள் குவியும் இடங்களில் இவை இரண்டும் உருவாகுவது இயல்பானதே, இருப்பினும் கடைவீதிக்கென்றே இருக்கக் கூடிய இறைஞாபகத்தை மறக்கடிக்கும் பண்பு அங்கேயும் இருக்கத்தான் செய்தது, நேரம் சென்றதே தெரியவில்லை , லுஹர் தொழுகைக்குத்தான் எங்களால் திரும்ப முடிந்தது.
ஜன்னத்துல் பகீஃ...
அஸர் தொழுகைக்குப் பின் எனது தாயாரையும் அழைத்துக்கொண்டு ஹரமிற்கு வந்தேன், அஸர் தொழுகையை முடித்து விட்டு ஜன்னத்துல் பகீஃ செல்லலாம் என்ற எண்ணம் இருந்தது , ஜன்னத்துல் பகீஃ எத்தனை சரித்திர நாயகர்களின் உறங்குமிடம் , நபி(ஸல்) அவர்கள் அடிக்கடி ஜன்னத்துல் பகீஃ வருவார்கள்,அத்தகைய சிறப்பு வாய்ந்த ஓர் கப்ருஸ்தானை சென்று ஜியாரத் செய்வதும் உம்ரா பயணத்தின் முக்கியமான அம்சமாக இருக்கிறது ,
பொதுவாக ஜன்னத்துல் பகீஃ சுப்ஹுக்குப் பிறகும் அஸருக்குப் பிறகும் தான் திறக்கப்படுகிறது. அங்கே பெண்களுக்கு அனுமதியில்லை , எனவே எனது தாயாரை ஒரு தூண் பக்கம் நிறுத்தி விட்டு நான் மட்டும் ஜன்னத்துல் பகீஃயில் நுழைந்தேன் ,
ஜன்னத்துல் பகீஃ மண்ணறை வாசிகள்
உள்ளே நுழைந்ததும் பரந்து விரிந்த ஒரு பெரிய கப்ருஸ்தான் கண்ணுக்கு முன்னே விரிந்து கிடந்தது , கப்ருகளில் மிதிக்கக்கூடாது என்பதற்காக நடைபாதையும் சீராக அமைக்கப்பட்டிருந்தது , அங்குள்ள எந்த கப்ரைதான் விட்டுச்செல்வது , ஒவ்வொரு கப்ரிலும், சிறிதுநேரம் நிற்க வேண்டும் போலிருந்தது, கப்ருகளின் மீது அது யாருடைய கப்ர் என்பதாக மட்டும் எழுதப்பட்டிருக்குமானால் அங்கிருந்து அகள்வது மிகுந்த சிரமமாக இருந்திருக்கும், எல்லா கப்ருகளுமே சமமாக எவ்வித வித்தியாசமுமில்லாமல் தலை பக்கம் ஒரு கல், கால் பக்கம் ஒரு கல் நடப்பட்டிருந்தது. இதை தவிர்த்து வேறு எந்த அடையாளங்களும் அங்கே இல்லை , இறைவன் தந்த வாழ்க்கையை அவனுக்காகவே வாழ்ந்து விட்டு மட்டில்லா இன்பத்தில் மூழ்கியிருக்கும் அம்மண்ணறை வாசிகள் எத்தனை நபர்களின் கப்ருகள் வெளிச்சமாவதற்கு அவர்கள் காரணமானோர்களோ ?, சிந்தனையெல்லாம் அப்பெரியார்களின் வாழ்வை நினைப்பதிலேயே மூழ்கிக்கிடந்தது , உள்ளே சென்றபோதே யாஸீன் ஓதி அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள யாவருக்காகவும் ஈஸால் ஸவாப் செய்துவிட்டேன், என்னை மறந்து அந்நடைபாதையில் நடந்து கொண்டிருந்தேன், அந்நடைபாதைகளின் ஓரத்திலுள்ள திண்டுகளில் அமர்ந்து அல்ஜஸாயிர் நாட்டைச் சார்ந்த ஒரு குழு பேசிக்கொண்டிருந்தது . வழிகாட்டியாக வந்திருப்பவர் அநேகமாக அவர் ஒரு ஆலிமாக இருக்கக்கூடும், நபி(ஸல்) அவர்கள் வபாத்தானபோது ஏற்பட்ட சூழல்களையும் இரு தோழர்கள் அடக்கம் செய்யப்பட்ட விதங்களையும் பச்சை குப்பா குறித்த அறிய தகவல்களையும் கூறிக்கொண்டிருந்தார், நானும் அவர்களுடன் அமர்ந்து கேட்களானேன், ஜன்னத்துல் பகீஃ கண்ணுக்கெட்டிய தூரம் விரிந்து கிடந்தது , அதில் பாதி பகுதியே சென்றிருப்பேன், ஒரு ராணுவ சீருடை அணிந்த ஒருவர் தூரத்திலிருந்து மக்களை விரட்டிக்கொண்டு வந்தார், நான் புரிந்துகொண்டேன் ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது போல , இனி ஜன்னத்துல் பகீஃயை சாத்திவிடுவார்கள் என்று , பிரிய மனமில்லாமல் அவ்விடத்தை விட்டு பிரிந்தேன்,
அங்கிருந்து வெளியேறி எனது தாயார் இருந்த இடம் வந்தபோது தூக்கி வாறிப்போட்டது , எனது தாயார் அங்கே இல்லை. ஒரு வேளை பெண்கள் அனுமதியில்லாத இடத்தில் நான் நிறுத்தி சென்றதால் இராணுவத்தினர் வேறு எங்கும் கொண்டு சென்று விட்டார்களோ? அது ஆகியிருக்குமோ? இது ஆகிருக்குமோ? என்று ஒரு நிமிடம் ஆடிப்போனேன், நான் ஜன்னத்துல் பகீஃ உள்ளே இருந்தபோது எங்களுடைய வழிகாட்டி மௌலவி இல்யாஸ் போன் செய்திருந்தார், எங்கிருக்கிறீர்கள் ? என்று. நான் உள்ளே இருக்கிறேன் என்றும் எனது தாயாரை வெளியே உட்கார வைத்துள்ளேன் என்றும் கூறினேன், எனவே அவர் எனது தாயாரை பார்த்திருக்கலாம் என்பதால் நான் அவருக்கு போன் செய்தேன், . ஆம் , உங்கள் அம்மாவை நாங்கள் கூட்டிவந்துவிட்டோம் , எங்களோடுதான் அவர் இருக்கிறார், என்று சொன்னதும்தான் உயிரே வந்தது.
இன்று இரவு மதீனாவில் நாங்கள் கழிக்கும் கடைசி இரவு, எங்கள் ஊரைச்சார்ந்த ரஹ்மத்துல்லாஹ் அண்ணன் எங்களை சந்திக்க வந்திருந்தார். எனது தாயாருக்கு தேவையான சில பொருள் எடுக்க அவருடன் சென்றோம். மக்ரிப் நேரம் முடிந்ததும் சிறிதுர நேரம் அவருடன் கழித்து விட்டு எனக்கும் சில கிதாபுகள் வாங்க வேண்டிய தேவை இருந்தது, எனவே கிதாபுகள் வாங்குவதில் கடைவீதியில் சுற்றுவதில் மக்ரிபுடைய நேரம் ஓடிப்போனது. இஷாவுடைய பாங்கு சொல்லப்பட்டதும் கடைகள் சாத்தப்படுவதை அப்போதுதான் கண்கூடாக பார்த்தேன் , அல்லாஹ் இக்காட்சியை கியாமத் வரை நீடித்திருக்கச் செய்வானாக. ஆமீன்.
இஷா தொழுது விட்டு தாயாரை அறையில் விட்டு விட்டு நான் என்னுடைய சாமான்களை பேக்கிங் செய்வதற்கு தேவையான பொருள்கள் வாங்க மௌலவி இல்யாஸுடன் வெளியேறினேன், அவருக்கும் கடை வீதியில் சில தேவைகள் இருந்தன, அதற்காக கடைவீதிகளை சுற்றிவிட்டு ஹோட்டல் வந்தபோது மணி 12 டை தொட்டிருந்தது, காலையில் எந்த பரபரப்பும் இருக்கக்கூடாது என்பதற்காக இரவிலேயே பேக்கிங் வேலையை முடிக்கவேண்டி இருந்தது, மௌலவி இல்யாஸ் பேக்கிங் செய்வதற்கு மிகவும் உதவியாக இருந்தார் ,
உடல் கடுமையாக சோர்ந்திருந்தது, மதீனாவில் நான் கழிக்கப்போகும் கடைசி இரவு அது , அதை மஸ்ஜிதுந் நபவீயில் கழித்திருக்கலாம். அதை இப்போது எண்ணி வருந்துகிறேன், பல அறிய சந்தர்ப்பங்களை இழந்துவிட்டு பிறகு வருந்தும் குணம் எனது மாணவ காலத்திலிருந்து என்னிடம் தொடர்கிறது , இது எப்போது சரியாகுமோ தெரியவில்லை.
மதீனாவில் இறுதி நாள்
காலை 4.30 மணியளவில் கண் விழித்தேன் , எனது தாயாரையும் அழைத்துக்கொண்டு மஸ்ஜிதுந் நபவீக்கு வந்தேன், சுப்ஹு தொழுது விட்டு எனது தாயாருடன் ரவ்ழாவுக்கு அருகில் வந்து அங்கே ஒரு தூணுக்கு அருகாமையில் அவர்களை இருக்கச்செய்து விட்டு நான் இறுதி ஜியாரத்திற்காக பாபுஸ் ஸலாமில் புகுந்தேன், ரவ்ழத்துல் ஜன்னாவில் தொழும் சந்தர்ப்பம் கிடைக்க வில்லை, நேற்றைய இரவு முயற்சித்திருக்கலாம், தவறி விட்டதே என்ற ஏக்கத்தோடு அதைபார்த்துக்கொண்டு வரிசையில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தேன், ரவ்ழாவை ஒட்டி மக்கள் நின்றுகொண்டு நகர மறுத்தார்கள் . அதை விட்டு விலகி சற்று தள்ளி ஒரு வரிசை நின்றது அதில் சென்றால் சிரமமில்லாமல் செல்லலாம், ஆனால் ரவ்ழாவை இறுதியாக பார்க்கப்போகிறோம் என்ற உணர்வு , தாமதமானாலும் அவ்வரிசையை விட்டு நகர என்னை தடுத்தது , இறுதியாக கண்கள் நிரம்ப ரவ்ழாவை பார்த்து விட்டு ஸலாம் கூறிவிட்டு கனத்த நெஞ்சத்தோடு வெளிவந்தேன் , இருப்பினும் அவ்விடத்தை விட்டு நகர கால்கள் மறுத்தன , கண்கள் மீண்டும் மீண்டும் ரவ்ழாவையே சுற்றி வந்தன ,வெளியே நிற்பதற்கு அங்குள்ள ஆலிம்கள் தடை விதித்து விரட்டிய போதிலும் அதை பொருப்படுத்தாது ரவ்ழாவையே உற்று உற்று பார்த்துக்கொண்டிருந்தேன் , இனி ரவ்ழாவை காணும் வாய்ப்பு எப்போது வாய்க்கப்பெறுமோ தெரியாது என்ற நினைப்பு என் உள்ளத்தை ரவ்ழாவுடன் இறுக்கமாக கட்டிப்போட்டது , அங்கிருந்து விடை பெற முடியாமல் மனம் அழுதது , பிரிவதில்தான் எத்தனை வலி இருக்கிறது என்பதை அப்போதுதான் என்னால் முழுமையாக உணர முடிந்தது , இவ்வுலகிலே மனிதர்கள் பிரிவதற்கென்றே பிறக்கிறார்கள் , பிரிவு என்ற சோகத்தை ஒவ்வொருவரும் அனுபவித்தே தீர வேண்டும் , இப்பிரிவு மட்டும் உலகிலே இல்லாது போகுமானால் உலகமே சுவனமாகி விடும் , ஆம் , பிரிவின்மை சுவனத்தில் மட்டுமே சாத்தியம் , யாஅல்லாஹ் அந்த சுவனத்தில் எங்கள் யாவரையும் நபியவர்களுடன் இணைந்திருக்கச்செய்வாயாக , எனவே பிரிவதில் எத்தனை வேதனை இருந்தாலும் அதை ஏற்றே ஆக வேண்டும் , இது உலகின் இயல்பு, நீ யாரை வேண்டுமானாலும் நேசித்துக்கொள், இறுதியாக அவரை விட்டு நீ பிரிந்தே ஆக வேண்டும் ,அதிலிருந்து யாரும் விதி விலக்கல்ல , என்ற நபியவர்களின் பொன்மொழியே என்னை அவ்விடத்திலிருந்து வழி அனுப்பி வைத்தது ,
பின்னர் தாயாரை அழைத்துக்கொண்டு திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே ஹரமிலிருந்து விடைபெற்றேன். அதன்பின் ஹோட்டலுக்கு வந்து சாமான்களை தயார் செய்வதில் ஈடுபட்டேன், காலை 10 மணிக்கு ஜித்தா செல்லும் பஸ் வரும் என மௌலவி இல்யாஸ் கூறினார், ஆடைகளை மாற்றிக்கொண்டு சாமான்களையெல்லாம் கீழ் தளத்தில் கொண்டு வைத்துவிட்டு பஸ்ஸுக்காக காத்திருந்தோம்.நாங்கள் புறப்படுகிறோம் என்ற செய்தியை ஊருக்கும் கைபேசி மூலம் கூறியாகி விட்டது .
மதீனா கண்ணை விட்டும் மறைகிறது
சரியாக பத்துமணியளவில் எங்களுக்கான பஸ் வந்தது, நாங்கள் எங்கள் சாமான்களை ஏற்றி ,நாங்களும் ஏறி அமர்ந்து பஸ் புறப்பட்டபோது மணி 10.30 தை காட்டியது , பஸ் புறப்பட்டுவிட்டது , மதீனாவின் ஒளிமயமான மினாராக்கள் கையை உயர்த்தி விடைதருவது போல நான் உணர்ந்தேன் , பஸ் ஹோட்டல் வாசலை விட்டு நகர்ந்து மதீனாவின் சாலையில் ஓடி ஜித்தா செல்லும் பிரதான சாலையை அடைந்தது , பிரியமான மதீனாவை விட்டு பிரிகிறோம் , உலகெங்கிலும் இஸ்லாத்தை கொண்டு போய் சேர்த்த இஸ்லாமிய கோட்டையை விட்டு நாங்கள் புறப்படுகிறோம் , மாநபி ஸல் அவர்களின் புனித உடலை சுமந்துள்ள புனித பூமியிலிருந்து நாங்கள் விடை பெறுகிறோம் , எத்தனை முறை வந்தாலும் சலிப்பை தராத நபியின் புனித பள்ளி எங்களின் கண்களை விட்டு மறைகிறது , உலக சரித்திரத்தையே திரும்பி பார்க்க வைத்த உன்னத ஸஹாபாக்களின் மாநகரம் எங்களுக்கு விடை தருகிறது , தன் குழந்தையை விட்டு பிரியும் தாய் அடையும் வலிக்கு சமமாக இருந்தது அத்தருணத்தில் நான் பட்ட வேதனை. என்ன செய்வது ? உலகிலே தவிர்க்க முடியாதவைகளில் ஒன்று பிரிவு , ஒவ்வொருவரும் பிறரை விட்டு ஒருநாள் பிரிந்தே ஆக வேண்டும் , மதீனாவில் எங்களின் குதூகலமான நாட்கள் முடிவுக்கு வந்தன , வழியில் மதீனாவின் மீகாத்தான துல்ஹுலைபா கண்களுக்கு பட்டது ,
துல் ஹுலைபா
துல் ஹுலைபா என்பது , இதற்கு அப்யார் அலி என்றும் கூறப்படும், இது மதீனா வாசிகளுக்கும் அந்த வழியாக வருபவர்களுக்குமான மீகாத்தாகும், மக்காவுக்கு வடக்கே 410 கி.மீ தூரத்திலும் மஸ்ஜிதுந் நபவீயிலிருந்து 10 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது , அங்கே பள்ளியொன்று உள்ளது, மஸ்ஜிதுல் ஹுலைபா என்றும் மஸ்ஜிதுஸ் ஸஜரா என்றும் அதற்கு பெயருண்டு, நபி (ஸல்) மக்காவுக்கு புறப்பட்டால் மஸ்ஜிதுஸ் ஸஜராவில் தொழுவார்கள். இறுதி ஹஜ்ஜிற்காக பயணித்த போது நபி ஸல் அவர்கள் இங்கேதான் இஹ்ராமுடைய தொழுகையை தொழுது விட்டு வாகனத்தில் ஏறி அமர்ந்ததும் இஹ்ராமுடைய நிய்யத்தை மொழிந்தார்கள் , நபியவர்களுடன் ஹஜ்ஜுக்கு புறப்பட்ட ஆயிரக்கணக்கான ஸஹாபா பெருமக்களின் கூட்டம் நபியவர்களின் பயணித்துக்கொண்டிருந்த ஒட்டகத்தை அணி அணியாக பின் தொடர்ந்தன , அவர்களின் கண்களெல்லாம் நபியவர்களை , நபியவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் இமைக்காமல் பார்த்துக்கொண்டே வந்தன , இது நபியவர்களுடன் தாம் செய்யும் இறுதிப்பயணம் அல்லவா , இனி கியாமத் நாள் வரை வரக்கூடிய மக்களுக்கு ஹஜ்ஜுடைய முறையை சொல்லிக்கொடுக்கும் சன்மார்க்க சேவகர்களல்லவா இவர்கள் , அவர்கள் எப்படி நபியவர்களின் அசைவுகளை காணாமல் இருக்க முடியும் , தம் 23 ஆண்டு கால உழைப்பின் பயனாக அரபுலகு முழுக்க புரையோடிப்போயிருந்த சிலை வணக்கம் முற்றிலுமாக துடைத்தெரியப்பட்டு தூய இறைவனான அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் , அவனுக்கு எவ்வித இணையும் இல்லை என்ற இஸ்லாமிய சங்க நாதங்கள் தல்பியாவாக முழங்க அப்புனிதர்களின் புனிதமான அப்பயணத்தை கண்டு வானமும் , பூமியும் , சுற்றியிருந்த மலைகளும் சொக்கிப்போய் நின்றன , காற்று சங்கீதம் பாடியது , மரங்கள் ஆரவாரம் செய்தன , அப்புனிதர்களை சுமந்த பூமி தனது பிற பகுதிகளிடம் பெருமை பேசியது , பிற பகுதிகள் அவர்களின் பாத அடிகளுக்காக ஏங்கின , நபியவர்கள் பெற்ற மாபெரும் வெற்றியை உலகமே அண்ணார்ந்து பார்த்தது , இவ்வாறு நபியவர்களின் புகழை பேசினால் வார்த்தைகள் தீர்ந்து போகலாம் , ஆனால் புகழ்கள் சொல்லி முடிக்க முடியாது , இஸ்லாமிய சரித்திரம் பேசும் இந்நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே நாங்கள் வந்தோம் ,
மதீனாவை விட்டு புறப்பட்ட சிறிது நேரத்தில் சாலையின் இருபுறங்களிலும் பாலைவனமே பாலைவனம் என காட்சி அளிக்க ஆரம்பித்தன , பாலைவனமும், மலைகளும் வெறுமையாக காட்சியளித்தாலும் அவற்றை காண்பதில் மனதில் ஏதோ வகையான அமைதி ஏற்படுகிறது, இடையில் ஒட்டக கூட்டங்கள் கண்களில் பட்டாலும் அது ஸஹாபாக்களின் ஒட்டகங்களாக இருந்திருக்கக்கூடாதா என மீண்டும் மீண்டும் கண்களை விட்டு மறையும் வரை அவற்றையே பார்க்கத் தோன்றுகிறது, மூன்று வழி சாலைகள் என்பதால் பஸ்ஸை ஸ்டார்ட் செய்தது முதல் 100 கி.மீ க்கு குறையாத சீரான வேகத்திலேயே பஸ்களும், கார்களும் விரைந்து கொண்டிருந்தன, பாலைவன வெப்பத்தை தாங்கமுடியாது என்பதால் இரு சக்கர வாகனங்கள் ஒன்று கூட அச்சாலையில் கண்ணில் படவில்லை, கொத்து கொத்தாக கார்களும், குளிரூட்டப்பட்ட உயரமான பஸ்களும் கடும் வேகத்தில் ஓடிக்கொண்டே இருந்தன . நான் பஸ்ஸுடைய முன் இருக்கையில் அமர்ந்திருந்தேன் வேடிக்கைபார்ப்பதற்காக அல்ல, பொற்காலத்தின் சுவடுகளில் ஏதேனும் கண்களுக்கு பட்டுவிடாதா? என்ற ஏக்கத்தில் , இன்று வசதிகள் பெருகிவிட்டன, தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்டன ,மனிதன் அறிவியல் துணை கொண்டு புதுப்புது கருவிகளை கண்டு பிடித்து தன் வாழ்வை சொகுசுப்படுத்தி விட்டான் , வெளியில் அனல் பறந்துகொண்டிருந்தது , ஆனால் பஸ்ஸில் ஏசியின் தாக்கத்தால் குளிர ஆரம்பித்தது , ஆதலால் என் தலைக்கு மேலாக சுற்றிய மின்விசிறியை கூட டிரைவரிடம் நிறுத்துமாறு கேட்டுக்கொண்டேன், அந்தளவிற்கு பயண சூழல் சொகுசாக மாறி விட்டது , ஆனால் இந்த வசதிகள் எதுவொன்றுமில்லாமல் பாலை வெளியில், உக்கிர வெயிலில் சரியாக உண்ண உணவில்லாமல் மலைகளையும், காடுகளையும் தம் ஒட்டகத்தில் கடந்து அல்லாஹ்வுடைய மார்க்கம் உலகெங்கும் பரவிவிட பாடு பட்ட அந்த நபித்தோழர்களும், அவர்களை உருவாக்கிய சத்திய நபியும்தான் நினைவை விட்டு நீங்க மறுத்தார்கள்.
இடையில் லுஹர் தொழுகைக்காக பஸ் நிறுத்தப்பட்டது , லுஹரையும், அஸரையும் சேர்த்து தொழுதுவிட்டு 10,15 நிமிட இடைவெளியில் மீண்டும் பஸ்ஸில் ஏறிவிட்டோம், பஸ்ஸிலேயே எங்களுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது. பஸ்ஸிலேயே நாங்கள் சாப்பிட்டோம், வேறு எங்கும் வாகனம் நிறுத்தப்படவில்லை நாங்கள் மக்கா, மதீனாவை விட்டு இப்போது வெகுதூரம் வந்துவிட்டோம், இப்பாலைவெளியில் எதுவுமே இல்லை, ஆனால் அங்குதான் எல்லாமே இருக்கிறது, ஏதோ பூத்து குலுங்கும் பூங்கா வனத்தை விட்டு விலகுவதைபோல மனதில் வெறுமையுணர்வு தோன்றியது . இதோ ஜித்தா நகரின் சுவடுகள் தெரிய ஆரம்பித்து விட்டன , இரு சாலைகள் பல சாலைகளாகி விட்டன, இன்னும் சற்று நேரத்தில் ஜித்தாவில் இறங்கிடுவோம் என்பது உறுதியாக தெரிந்தது.
மீண்டும் ஜித்தா விமான நிலையத்தில்...
சரியாக 3.35 மணியளவில் ஜித்தா விமான நிலையத்தை அடைந்தோம் , அங்கே இறங்கியதும் மறுமை நாளில் ஏற்படும் சூழல் போன்ற பரபரப்பு எங்கள் யாவரையும் தொற்றிக்கொண்டது , அவரவர் தத்தமது சாமான்களை கரை சேர்ப்பதில் மும்முரமானார்கள், நான் எனது தாயாரை வீல் சேரில் உட்கார வைத்து விட்டு டிராலி ஒன்றை தேடிப்பிடித்து எனது சாமான்களை அதில் நிரப்பி விமான நிலையத்திற்குள் கொண்டு வந்தேன் , வீல் சேரை பேக்கிங் செய்வது மட்டும் எஞ்சியிருந்தது . எனது மச்சான் மஹ்பூப் அலி அவர்கள் ஜித்தாவுக்கு 100 கி.மீ இருக்கும்போதே என்னை போன் செய்ய சொன்னார் , நானும் போன் செய்திருந்தேன் , அவர் ஏர்போர்ட்டிற்கு வருவார் என எதிர்பார்த்திருந்தேன், விமான நிலையத்தில் வீல் சேரை இலவசமாகவே பேக்கிங் செய்து தந்தார்கள், எனவே பெரிய கவலை தீர்ந்தது , அதற்குள் மச்சானும் வந்துவிட்டார், ஏதோ பெரிய பாரம் குறைந்ததை போல உணர்ந்தேன், அவர் எனது தாயாரை ஒரு இருக்கை பார்த்து அமர வைத்து பார்த்துக் கொண்டார், நான் சாமான்களோடு போர்டிங் போடும் இடத்திற்கு சென்றேன், அப்போது மாலை 4.30 மணி இருக்கும். ஆனால் போர்டிங் முடித்து அவ்விடத்தை விட்டு நகரும்போது மணி இரவு 8 யை தாண்டியிருந்தது, அவ்வளவு நேரம் வரை மிக அலட்சியமாக விமான நிலைய அதிகாரிகள் வேலை செய்தார்கள் , பிறரோடு அரட்டை அடிப்பது , போன் பேசுவது, ஏதாவது ஒன்றை அசைபோடுவது , பெல்ட்வேலை செய்யவில்லை என்று கூறுவது என நேரத்தை கடத்திக்கொண்டிருந்தார்கள் , வயதான ஹாஜிகள் அதனால் மிகவும் இன்னலுக்குள்ளானார்கள் , நானும் எரிச்சலடைந்தேன் , அதை விட , பிரியமான நபியின் ஊரிலே வசிக்க பாக்கியம் பெற்றவர்கள் , மக்களுக்கு நிம்மதி தருவதில் பிறர்களுக்கெல்லாம் சிறந்த முன்மாதிரியாக திகழ வேண்டியவர்கள் அல்லாஹ்வின் விருந்தினர்களான ஹாஜிகளை முறையாக அனுசரிக்காமல் , அவர்கள் எரிச்சல் படும் அளவுக்கு நடந்து கொள்கிறார்களே என்ற வலிதான் மனதில் பெரிய காயத்தை ஏற்படுத்தியது , இதே போல நபியின் பிரியமான ஊருடன் தொடர்பு கொண்டுள்ள ஒவ்வொருவரும் அந்த தகுதியுடன், சிறந்த பண்புடன் இருக்க வேண்டும் என மனம் விரும்புகிறது , இதனாலேயே சவூதியில் பணிபுரிபவர்கள் விடுமுறையில் ஊர் திரும்பும் போது அவர்கள் ஐவேளை தொழுகையில் கூட அசட்டை செய்வதை காண நேரிட்டால் உள்ளம் மிகவும் துணுக்குறுகிறது , அதிலும் மக்காவில் பணி புரிபவர்கள் , ஹரமிற்கு அருகாமையில் இருக்கும் வாய்ப்பை பெற்றவர்கள் அல்லது ஹஜ் , உம்ரா செய்யும் பாக்கியத்தை பெற்றவர்கள் இஸ்லாமிய விழுமியங்களில் குறை செய்ய பார்க்கும் போது இவ்வடியான் படும் மன வேதனைக்கு அளவே இல்லை, ஒன்றுக்கும் தகுதியில்லாத எனக்கே இத்தனை எரிச்சல் உண்டாகிறது என்றால் இஸ்லாத்திற்காக உழைத்த , தன் இன்னுயிரையும் தியாகம் செய்து இஸ்லாத்தை வளர்த்துச்சென்ற நபி மற்றும் நபித்தோழர்களின் உள்ளங்கள் எத்தனை வேதனைப்படும் , அச்செயல்களைக்கண்டு அல்லாஹ் எத்தனை அதிருப்தி அடைவான், இதனை அவர்கள் யோசித்துப்பார்த்து தம்மை சரி செய்து கொள்ள வேண்டும் , ஆக , ஹாஜிகளெல்லாம் பற்களை கடித்துக்கொண்டு விமான நிலையத்தின் அச்சிரமங்களை சகித்துக்கொண்டிருந்தார்கள் , அந்த சந்தர்ப்பத்தில் எனது மச்சான் மிக உதவியாக இருந்தார் , டீ வாங்கி வருவது தாயாரை கவனித்து கொள்வது போன்ற உதவிகளில் ஈடுபட்டார், அல்லாஹ் அவர்களுக்கு சிறந்த கூலி தரவேண்டும், இது போலதான் எனது தாயார் முந்தி ஒரு தடவை கீழே விழுந்து காலெலும்பு முறிந்து மருத்துவமனையில் அவதிபட்டுக்கொண்டிருந்த போது மச்சான்தான் உடனிருந்து பார்த்துக் கொண்டார், இப்போதும் எங்கள் போர்டிங் யாவும் முடிந்து விமானத்தை அடைவதற்காக செல்லும் அந்த தருணம் வரை சுமார் 5 மணி நேரம் எங்கள் கூடவே இருந்தார் ,ஓடிக்கொண்டே இருக்கும் அவசரமான இவ்வுலகில் பிறர் நலனை பார்ப்பது , பிறருக்கு உதவுதல் என்பதெல்லாம் இன்று காணாமல் போய் விட்ட பண்புகள் , ஆனால் எனது மச்சான் அப்பண்புகளின் விலாசமாக திகழ்ந்தார் , அல்லாஹ் அவருக்கு சிறந்த கூலி தருவானாக , இறுதியாக அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு விமானத்தை நோக்கி விரைந்தோம் .
நேரம் கடந்து விட்டதால் அதற்காக மிகவும் பதட்டப்பட வேண்டியிருந்தது , இதற்கிடையில் விமானத்தில் செல்லும் குழுவினர்களுக்காக இரவு உணவு பொட்டலங்கள் எங்களில் சிலரிடம் தரப்பட்டிருந்தன, அவற்றை விமானம் வரை கொண்டு சேர்ப்பதற்காக மிகவும் சிரமப்பட்டு அவற்றை சுமந்துகொண்டு உள்ளே சென்றோம், சிறுநீர் தேவைக்குச்சென்று வெகு நேரமாகி விட்டது , மதியம் லுஹர் தொழுகையின்போது சென்றது , இப்போது எனக்கும் தேவை ஏற்பட்டது, எனது தாயாரும் அதே தேவையை கூறினார், என்னுடைய பேக்கை ஒரிடத்தில் குழுமியிருந்த எங்களின் குழுவினர்களிடம் ஒப்படைத்து விட்டு பாத்ரூம் தேடி சென்றோம், எனது தாயாரை பெண்கள் பகுதிக்கு கொண்டு சென்று விட்டேன் , தேவையை முடித்து ஒழு செய்த பின் நாங்கள் எங்களது பேக்கை விட்டுச்சென்ற இடத்திற்கு வந்து பார்த்தால் எங்களின் பேக் அனாதையாக விடப்பட்டிருந்தன , உணவு பொட்டலங்களும் குவிந்து கிடந்தன . எனக்கு மறுமைதான் நினைவுக்கு வந்தது , விசாரனையின் போது தான் தப்பித்தால் போதுமானது , பிறரை எதிர்பார்ப்பது , விட்டுக்கொடுப்பதெல்லாம் அங்கே காணமுடியாது , அவ்வாறு நடந்து கொண்டவர்கள் மீது மனதில் சிறு கோபம் கூட ஏற்பட்டது , பேக்கை விட உணவு பொட்டளங்கள் கனத்தன , இனி உணவு பொட்டளங்களையும் சுமந்து கொண்டு தாயாரையும் பிடித்துக்கொண்டு முன்னேறுவது எனக்கு சாத்தியமாக படவில்லை , மணி 8.40 தை தாண்டிக்கொண்டிருந்தது, விமான நேரம் 9.10 என பார்த்திருந்தேன், ஒரு விதமான பதற்றம் என்னை தொற்றிக்கொண்டது, எனவே உணவுப்பொட்டளங்களை அங்கேயே விட்டு விட்டு தாயாருடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன் , நாங்கள் மேல் தளத்திலிருந்து கீழ் தளத்திற்கு செல்ல வேண்டும் , எஸ்கலேட்டரில் நான் இறங்கிவிட்டாலும் எனது தாயார் அதில் இறங்க தயங்கினார் , ஆதலால் அத்தனை படிகளிலும் அவர்களை மெதுமெதுவாக இறக்கி கீழே வந்தபோது இறுதி பரிசோதனையாக எங்களின் பாஸ்போர்டை பரிசோதித்தார்கள், அங்கே பஸ் ஒன்று புறப்பட தயாராக இருந்தது , அதன் கதவு சாத்தப்படுவதற்குள் பஸ்ஸிலே நானும் எனது தாயாரும் ஏற வேண்டும் , ஜம் ஜம் நீர் ஒருவருக்கு 5 லிட்டர் வீதம் இருவருக்கு 10 லிட்டர் தந்திருந்தார்கள், இது அல்லாமல் சிறு சிறு பாட்டிலில் ஜம்ஜமை பிடித்து பேக்கில் நாங்கள் நிரப்பி வைத்திருந்ததால் பேக் கடுமையான கனம் கனத்தது , அவற்றை சுமந்து கொண்டு எனது தாயாரையும் அழைத்து பஸ்ஸில் வந்து ஏறியதும்தான் நிம்மதி வந்தது ,
அப்போதுதான் கவனித்தேன் , வாசலில் ஒரு பெண்மனி உட்கார்ந்திருந்தார், அவர் எங்களின் குரூப்பில் வந்தவர் , எங்கள் குரூப்பில் இறுதியாக செல்வது நானும் எனது தாயாரும்தான், அப்படியிருக்க இவர் யாருக்காக காத்திருக்கிறார் ? தெரியவில்லை, ஏதோ பிரச்சனை என்பதை விளங்கிக்கொண்டேன், பஸ்ஸை விட்டு இறங்கி அவரிடம் சென்று ஏன் இங்கே உட்காந்துள்ளீர்கள் ? என கேட்டபோது குரூப்பில் வந்த இன்னொரு அம்மா இவர்களின் பாஸ்போர்ட்டை கொண்டு சென்று விட்டார்கள், பாஸ்போர்ட் இல்லாமல் உள்ளே அனுமதிப்பதில்லை என்ற விமான நிலைய விதியின் காரணமாக அதிகாரிகளால் அங்கே அவர் அமர வைக்கப்பட்டிருக்கிறார் , அங்கே நின்று கொண்டிருந்த இன்னொரு ஆபிசரும் தமிழ் பேசினார். அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியோடு பேசி விமானத்தில் இருக்கும் அந்த அம்மாவிடம் பாஸ்போர்ட்டை வாங்க கூறியிருப்பதாக என்னிடம் தெரிவித்தார் , சரி, அவ்வாறெனில் பிரச்சினை இல்லை என்ற நிம்மதியுடன் பஸ்ஸில் ஏறினேன், மணி 9 தாகிவிட்டது, பஸ் எங்களை ஏற்றிக்கொண்டு விமானத்தின் ஏணிப்படி வரை கொண்டு சென்று விட்டது ,
விமானம் இருட்டில்தான் நின்று கொண்டிருந்தது, சுற்றிலும் இருட்டின் ஆதிக்கம்தான் இருந்தது , இறுதியாக சவூதி மண்ணிலிருந்து விடைபெற்று விமானம் ஏறினோம், வரும்போதும் ஜன்னல் ஓரமில்லாமல் நடுவில்தான் சீட் கிடைத்தது, செல்லும்போதும் நடுப்பக்கம்தான் சீட் இருந்தது, தத்தமது இருக்கைகளை தேடிப்பிடித்து அவற்றில் அமர்ந்த பிறகும் 9.10 க்கு புறப்படவேண்டிய விமானம் புறப்படவில்லை, 10 மணியளவில்தான் பிரயாண துஆ திரையில் ஓட ஆரம்பித்தது, இருட்டிலே சில வெளிச்ச புள்ளிகளைத் தவிர வேறு எதுவும் ஜித்தா நகரில் தெரியவில்லை, பஸ் சிறிது சிறிதாக நகர்வதை போல நகர்ந்து நகர்ந்து ஒரு தளத்திற்கு வந்த பின் விமானத்தின் சப்தம் கூடியது , தன்னுடைய வேகத்தை அதிகமாக்கி சில வினாடிகளில் விமானம் விண்ணில் ஏறியது , தன்னுடைய வேகத்தை சிறிது சிறிதாக 36,000 அடியில் கொண்டு நிலைநிறுத்தியது, பகல் 9 மணிக்கு ஆரம்பித்த பரபரப்பு இப்போதுதான் முடிவுக்கு வந்தது.
விமானம் பறக்க ஆரம்பித்ததும் சில நிமிடங்களில் விமானத்திலேயே இரவு உணவு பரிமாறினார்கள், வரும்போது விமான உணவை ருசித்த அனுபவம் இருந்ததால் அதை வாங்கி வீண் விரயம் செய்ய மனம் வரவில்லை. எங்களுடன் எஞ்சியிருந்த ஒரு உணவு பொட்டலத்தை திறந்து அதிலுள்ள உணவுகளை உண்டு பசியாறினோம். , உண்டதும் சிறிது நேரத்தில் தூக்கத்தின் கையில் நாங்கள் சிக்கினோம் . எங்களின் விமானம் ஜித்தாவில் புறப்பட்டு 1.30 மணிநேரத்தில் தம்மாமை அடைந்து அங்கிருந்துதான் சென்னைக்கு பறக்க துவங்கும் , ஆனால் விமானம் தம்மாமில் இறங்கியது , பிறகு ஏறியது யாவும் தூக்கத்தில் கண்ட கனவு போலத்தான் இப்போது நினைவில் இருக்கிறது , அந்தளவு நாங்கள் களைத்திருந்தோம், இரவு 3 மணியளவில் மீண்டும் உணவு பரிமாறப்பட்டது, அதன் காரணம் என்ன வென்று தெரியவில்லை,5 மணி நேரத்தில் இரண்டு முறை உணவு பரிமாறப்படவேண்டும் என்று ஏதேனும் விதிமுறையிருக்கும் போல என நான் எண்ணிக்கொண்டேன், அப்போதும் நாங்கள் உணவேதும் பெறவில்லை , அந்த பரபரப்புக்குப் பின் மீண்டும் தூக்கம் எங்களை தொற்றிக்கொண்டது ,
சென்னை வரவேற்கிறது...
எங்களின் முகத்தில் சூரிய ஒளிபட்டுத்தான் நாங்கள் விழித்தெழுந்தோம், அதற்குள் விடிந்துவிட்டதா என கடிகாரத்தை பார்த்தால் நேரம் காலை 4.00 என காட்டியது , எப்படி நான்கு மணிக்கே சூரியன் உதித்து விட்டது என நான் சற்று குழம்பிய போது பின்னர் தெளிவு ஏற்பட்டது , ஆம் நாம் சூரியனோடு பயணம் செய்து 2 ½ மணிநேரம் முந்திவிட்டோம், இன்னும் சில மணிநேரத்தில் விமானம் சென்னையை அடைந்துவிடும், நாம் இந்தியாவுக்கு வந்துவிட்டோம் என்பதை உணர்ந்தேன், இப்போது விமானம் தன்னுடைய உயரத்தை குறைக்க ஆரம்பித்தது , பார்த்துக்கொண்டிருக்கும் போதே இன்னும் தாளப்பறந்ததில் சென்னையின் கட்டிடங்கள் அடுக்கி வைத்த செங்கள்களைப்போல தெரிந்தன , இப்போது மரங்களும் தெரிகின்றது , அல்ஹம்து லில்லாஹ் விமானம் தரை இறங்கிவிட்டது. மனதார அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்தோம். தரையிரங்கிய விமானம் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அடைந்து அமைதியானது,
மணி இந்திய நேரப்படி காலை 7.35 தை தொட்டிருந்தது , விமான வாயிலுடன் இணைக்கப்பட்ட பாலம் வழியாக நாங்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தோம், முடியாதவர்களை கொண்டு செல்ல ரோப்கார் வந்தது , அதில் எனது தாயாரை அமர வைத்தேன் , காரில் இடமிருந்ததால் என்னையும் சேர்த்தே அந்த காரில் அதன் டிரைவர் உட்கார வைத்துக்கொண்டார் , பின்னர் இமிக்ரேஷனுக்காக நீண்ட வரிசை நின்றது, அதில் சுமார் அரைமணி நேரம் காத்திருந்து பின்னர் லிப்ட் உதவியுடன் கீழ்தளத்திற்கு வந்து சாமான்களை அடைவதற்காக 15 நிமிடங்கள் வரை காத்திருந்து பிறகு யாவரிடமும் விடைபெற்றுக்கொண்டு தாயாரை அழைத்துக்கொண்டு சாமான்களோடு விமான நிலயத்தை விட்டு வெளியேறியபோது மணி 9.20 தாகி விட்டது.
வெளியே எங்களை அழைத்துச் செல்ல எனது மூத்த சகோதரர், இளைய சகோதரர் எனது சிறிய தந்தை, அண்ணன் மகன் ஆகியோர் வந்திருந்தனர், அவர்களுடன் முஸாபஹா, முஆனகாவிற்குப் பிறகு காரில் ஏறினோம், சென்னையின் வழமையான போக்குவரத்து காரணமாக 2 மணி நேரம் கழித்து 11 மணிக்கே வீட்டை அடைந்தோம், அன்று மாலையே நெல்லை எக்ஸ் பிரஸ் மூலம் புறப்பட்டு காலை 9 மணிக்கு ஊர் வந்து சேர்ந்தோம்.والحمد لله على ذلك
பாடங்கள்
1, இப்பயணத்தில் நான் என்ன பெற்றுக்கொண்டேன் என்பதை
இப்போது என்னால் உறுதியாக கூற முடியாது , அது மறுமையில் அல்லாஹ் தரும் கூலியை பொருத்துதான் அமையும் , இருப்பினும் ஒன்று மட்டும் உறுதி , நான் மஸ்ஜிது ஆயிஷாவில் பர்ஸை தொலைத்தேன், அது கிடைத்து விட்டது , மஸ்ஜிதுந்நபவீயில் செருப்பை தொலைத்தேன் ,அது அடுத்த நாள் சென்று தேடிய போது அதுவும் கிடைத்து விட்டது , மதீனாவிலிருந்து புறப்படும் போது பரபரப்பில் அதன் ஹோட்டலிலேயே எனது புதிய ஜிப்பா ஒன்றை விட்டு வந்தாக வருத்தப்பட்டேன், ஆனால் ஊர் திரும்பிய பின் எனது பேக்கை திறந்த போது அந்த ஜிப்பாவும் இருந்தது ,இவ்வாறு எனது கவனக்குறைவால் நான் இழந்திருக்க வேண்டிய பொருள்களைக்கூட தனது அருளால் எதையும் இழக்காமல் என்னை பாதுகாத்த இறைவன் உம்ரா பயணத்தின் மூலம் நான் பெற வேண்டிய நன்மைகளையும் , சிறப்புகளையும் கண்டிப்பாக என்னை இழக்கச்செய்ய மாட்டான் என்ற பரிபூரண நம்பிக்கை உள்ளது ,அல்லாஹ் அவ்வாறே ஆக்குவானாக ,
2, மக்கா,மதீனாவில் இருந்த போது நான் கண்டு மிகவும் மனம் வருந்திய காட்சிகள் என இரண்டு விஷயத்தை குறிப்பிட எண்ணுகிறேன் , ஒன்று ,அரபுகள் அதிலும் அரபு அறிஞர்கள் தன் ஆடைகளை கரண்டைக்கு கீழாக உடுத்துகிறார்கள் , யாரை அல்லாஹ் மறுமையில் பார்க்கவும் மாட்டான் , பேசவும் மாட்டான்,அவர்களை சுத்தப்படுத்தவும் மாட்டான் , அந்தளவிற்கு அல்லாஹ் அவர்கள் மீது வெறுப்பு கொண்டிருப்பான் என ஹதீஸில் கூறப்படும் நபர்களில் தம் ஆடையை கரண்டைக்கு கீழாக உடுத்துபவரும் ஒருவர் , அப்படியிருக்க அந்த அடையாளத்தை நபியவர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் வாழும் அரபு மக்கள் கொண்டிருக்கும் போது மனம் மிகவும் வேதனைப்படுகிறது ,நான் இதற்கு அவர்கள் ஏதேனும் விளக்கம் வைத்திருப்பார்கள் என்ற எண்ணத்தோடு மதீனாவில் நான் ஒரு அறிஞரை சந்தித்து இது குறித்து கேட்ட போது அவர் ஹதீஸில் உள்ளதுதான் சரி , மக்களைப்பார்க்காதீர்கள் , மக்களின் நடை முறை தவறு என்பதை எனக்கு தெளிவு படுத்தினார் . இரண்டாவது மக்கா மதீனாவில் ஹோட்டல்களில் தங்கியிருக்கும் போது உணவுப்பொருட்கள் வீணாகுவதை கண்ட போது மிகவும் வருத்தம் உண்டாகியது ,எந்த மதீனாவில் நபி ஸல் அவர்கள் தன் அயராத உழைப்பினால் தூய்மையான முன்மாதிரி சமுதாயத்தை உருவாக்கினார்களோ , எந்த மதீனாவில் நபியும் , நபித்தோழர்களும் தம் வயிற்றில் கற்களை கட்டிக்கொண்டு இஸ்லாத்தை பாதுகாப்பதற்காக உழைத்தார்களோ , அல்லாஹ்வின் சிறு அருளை கூட துட்சமாக கருதக்கூடாது அது ஒரு பருக்கையாக இருந்தாலும் சரி என வீண் விரயத்தைப்பற்றி உலகத்திற்கே பாடம் நடத்தினார்களோ அந்த மதீனாவில் உணவுப்பொருட்கள் டன் கணக்கில் குப்பையில் கொட்டப்படுவது கண்டு யார்தான் வருத்தப்படாமல் இருக்க முடியும் ,அதையெல்லாம் தடுக்க முடியாது ,அதை கண்டு கொள்ளக்கூடாது என்ற அளவிற்கு மக்களின் மன நிலை மாறி விட்டதுதான் மிகவும் சோகமான செய்தி.